எனது மொழிபெயர்ப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எனது மொழிபெயர்ப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 மே, 2021

அர்ச்சுன மனக்குவியல் (பகுதி: 1)

அர்ச்சுன மனக்குவியல்' (Arjuna Focus) கைவரப்பெற்றால் காரியம் யாவும் கைகூடும்.  அது என்ன 'அர்ச்சுன மனக்குவியல்'?  மகாபாரதக் கதையொன்று.... பாண்டவர், கௌரவர்களின் போர் பயிற்றுவிப்பாளரான துரோணாச்சியார் ஒருமுறை தன்னிடம் பயிற்சிபெறும் இளவரசர்கள் அனைவரையும் அழைத்தார்.  அவர்களது வில்லாண்மையையும், மனக்குவியலையும் சோதிக்கும் முகமாக மரத்திலாலான ஒரு பறவையை கிளையொன்றில் வைத்து அவர்களை வில்லேந்தி  பறவையின் கண்ணை குறிபார்க்கச் சொன்னார்.  குறிபார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொறுவரிடமும் 'என்ன தெரிகிறது' என்று கேட்டார்.

"வானம், மேகம், மலை, மரம், கிளை, இலைகள், பறவை" - ஒருவர் சொன்னார்.

"மலை, மரம், கிளை, இலைகள், பறவை" - இன்னொருவர் சொன்னார்.

"மரம், கிளை, இலைகள், பறவை" - மற்றொருவர் சொன்னார்.

இப்படி ஒவ்வொறுவராக சொல்லி வர, அவர்கள் பதில்களில் திருப்தியுறாத துரோணாச்சியார்  "உங்களில் ஒருவராலும் அந்த பறவையை வீழ்த்த முடியாது" என்று கூறிவிட்டு  இறுதியாக அர்ச்சுனனிடம் கேட்டார்:

"உனக்கு என்ன தெரிகிறது?"

"கருமை குருவே... கருமை மட்டுமே தெரிகிறது"

"வேறு என்ன தெரிகிறது?"

"வேறு எதுவும் தெரியவில்லை, கருமை மட்டுமே தெரிகிறது"

"என்ன கருமை அது?"

"பறவையின் கண்மணியின் கருமை குருவே... எனக்கு வேறெதுவும் தெரியவில்லை"

"அம்பை எய்து"  அடுத்த கணம் அம்பு பறவையின் கண்களை துளைத்தது.

தன்னிகரற்ற வில்லாளியான அர்ச்சுனனின் மனக்குவியல் அத்தகையது.  நமக்கும் அத்தகைய மனக்குவியல் கைவரப்பெற்றால் எல்லாச் செயல்களும் வெற்றிச்சிகரத்தை தொட்டு நிற்கும். அதை அடைவது எப்படி? (தொடரும்...)

- சுப்ரமண்ய செல்வா -    #செல்வாசகம்


திங்கள், 21 ஜனவரி, 2019

எண்ணிய வண்ணம் வாழ்வு: பகுதி-4 - எண்ணமும் குறிக்கோளும்

மூலம்:  As a Man Thinketh by James Allen         தமிழில்: சுப்ரமண்ய செல்வா

குறிக்கோளானது எண்ணத்தோடு இணைக்கப்படாதவரை எவ்வித அறிவார்ந்த சாதனையும் சாத்தியமில்லை.  பலர் தங்கள் வாழ்க்கை என்னும் கடலினில் எண்ணம் என்கிற பாய்மரக் கப்பலை வெறுமனே அலைய விட்டு விடுகிறார்கள்.  இலக்கில்லாமை என்பது ஒரு பெருங்குறையாகும்.  இடரினை, அழிவினை தவிர்த்து பயணிக்க விரும்புகிறவனின் வாழ்வில் இத்தகைய அலைக்கழிப்புகள் தொடரக் கூடாது.

தங்கள் வாழ்வில் எவ்வித மைய நோக்கமும் இல்லாதவர்கள்தான் எளிதில் அற்பமான கவலைகள், அச்சங்கள், பிரச்சினைகள் மற்றும் சுயபச்சாதாபத்திற்கு இரையாகிறார்கள்.  இவை அவர்களை -  திட்டமிட்டு செய்த பாவங்கள் போன்றே - பிறிதொரு வழியில் நிச்சயமாக தோல்வி, வருத்தம், இழப்பை நோக்கி இட்டுச் செல்கின்றன.  ஏனெனில் ஆற்றல் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும் இப்பிரபஞ்சத்தில் பலவீனம் நிலைத்திருக்க முடியாது.

மனிதன் தனது இதயத்தில் நியாயமான குறிக்கோள் ஒன்றினை சிருஷ்டிக்க வேண்டும்.  அக்குறிக்கோளினை நிறைவேற்ற புறப்பட வேண்டும்.  அந்த அக்குறிக்கோளினை தனது எண்ணங்களின் மையப் புள்ளியாக ஆக்க வேண்டும்.  அந்தக் குறிக்கோளானது அவனது தற்போதைய நிலமைக்கு ஏற்ப, ஆன்மீக இலட்சியமாக இருக்கலாம் அல்லது லௌகீக இலட்சியமாகவும் இருக்கலாம்.  அது எவ்வாறெனினும் அவன் தனது முழு எண்ண ஆற்றலையும் அந்த இலட்சியத்தின் மீது நிலையாக குவிக்க வேண்டும்.  தனது எண்ணங்களை நிலையற்ற மாயைகளிலும், ஆசைகளிலும், கற்பனைகளிலும் அலைய விடாமல், அந்தக் குறிக்கோளை தனது உயரிய கடமையாக ஆக்கி அதனை அடைவதற்கு தன்னை அர்பணிக்க வேண்டும்.  இதுவே சுயக்கட்டுப்பாட்டுக்கும் எண்ண ஒருமுகத்திற்குமான உன்னத வழியாகும்.  அந்த குறிக்கோளினை அடைவதில் அவன் மீண்டும் மீண்டும் தோல்வி அடையினும் (பலகீனத்தை வெற்றிக்கொள்ளும் வரை தோல்வி என்பது இயல்பானதே) அதனிலிருந்த அவன் பெற்ற ஆளுமையின் வலிமை என்பதே அவன் அடைந்துள்ள உண்மையான வெற்றியின் அளவுகோலாகும்.  அது அவனது எதிர்கால பலத்திற்கும் மிகப்பெரிய வெற்றிகளுக்குமான ஆரம்பப் புள்ளியாக அமையும்.

உயர்ந்த குறிக்கோள் மீதான அச்சத்தினால் அதற்கு தயாராய் இல்லாதவர்கள் தங்கள் கடமையை (அது எத்துனை சிறிய பணியாயினும்) குறையின்றி ஆற்றுவதில் தங்கள் எண்ணங்களை நிலைக்கச் செய்தல் வேண்டும்.  இதன் மூலம் மட்டுமே எண்ணங்களை ஒருங்கிணைத்து ஒருமுகப்படுத்த முடியும்; மன உறுதியையும், ஆற்றலையும் மேம்படுத்த முடியும்.  இதனை செய்யும்விடத்து சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.

ஆற்றலை முயற்சியினாலும் பயிற்சியினாலும் மட்டுமே மேம்படுத்த முடியும்.  தனது பலகீனத்தை அறிந்த மிகவும் பலகீனமான ஆன்மா கூட இந்த உண்மையை ஒப்புக் கொண்டு சிறிது சிறிதாக முயற்சியை, பொறுமையை, ஆற்றலை அதிகரிக்கும்போது, மேம்பாடும், இறுதியில் தெய்வீகமான ஆற்றலும் பெற்று உயரும்.

எப்படி ஒரு பலகீனமான உடலை உடையவன் கவனமும் பொறுமையுடனான பயிற்சியின் மூலம் தன்னை வலுப்படுத்திக் கொள்ள முடியுமோ, அதுபோலவே பலகீனமான எண்ணங்களை கொண்ட ஒருவன் சரியான எண்ணங்களைக் கொண்ட பயிற்சியினால் அவற்றை வலுப்படுத்திக் கொள்ள முடியும்.

வலியவர்கள் தோல்வியை தங்கள் இலக்கை அடைவதற்கான ஒரு பாதையாக மட்டுமே காண்கிறார்கள்.  எல்லா நிலைமைகளையும் தங்களுக்கு  சாதகமாக்கிக் கொள்கிறார்கள்.  உறுதியாக சிந்தித்து, அச்சமின்றி முயன்று அற்புதமாக சாதிக்கிறார்கள்.  பலகீனத்தையும், குறிக்கோளின்மையையும் ஓரங்கட்டி தனது குறிக்கோளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கும் ஒருவன் இவர்களில் ஒருவன் ஆகிறான்.

குறிக்கோளை சிருஷ்டித்தவுடன் மனிதன் அதனை அடைவதற்கான நேரான பாதை ஒன்றினை மனதினில் உருவாக்கிக் கொள்ளல் வேண்டும்.  வலமோ இடமோ நோக்காமல் அவ்வழியில் பயணிக்கத் தொடங்க வேண்டும்.  ஐயங்களும் அச்சங்களும் கண்டிப்புடன் களையப்படல் வேண்டும்.  ஏனெனில் அவை முயற்சி என்கிற நேர்க்கோட்டினை சிதைத்து அதனை வளைவான, வீணான, பயனற்றதாக ஆக்கி விடும்.  ஐயமும் அச்சமுமான எண்ணங்களால் எதனையும் சாதிக்க முடியாது.  அவை எப்போதும் தோல்வியை நோக்கியே இட்டுச் செல்லும்.  அவை உட்புகுந்தவுடன் நோக்கம், ஆற்றல், சாதிப்பதற்கான பலம் மற்றும் அனைத்து வலிமையான எண்ணங்களும் நின்று விடும்.

சாதிக்க வேண்டும் என்கிற மனவுறுதி சாதிக்க முடியும் என்கிற ஞானத்தின் மூலமே மேல் எழுகிறது.  ஐயமும் அச்சமும் அந்த ஞானத்தின் பரம எதிரிகள்.  அவற்றை அடிமைபடுத்தாமல் ஊக்குவிக்கின்ற ஒருவன் ஒவ்வொறு அடியிலும் இடையூறுகளை எதிர்கொள்வான்.

ஐயத்தையும் அச்சத்தையும் வெற்றிக் கொண்டவன் தோல்வியை வெற்றிக் கொள்கிறான்.  அவனதும் ஒவ்வொறு எண்ணமும் ஆற்றலோடு ஒன்றிணைந்து இருக்கும்.  எல்லா கஷ்டங்களும் தைரியமாய் எதிர்கொள்ளப்பட்டு விவேகமாய் வெற்றிக் கொள்ளப்படும்.  அவனது குறிகோள்கள் உரிய காலத்தில் பயிரிடப்பட்டு, மலர்ந்து, பருவத்தின் முன் வீழாத கனியைத் தரும்.

குறிக்கோளுடன் அச்சமின்றி ஒன்றிணைக்கப்பட்ட எண்ணமானது ஆக்கச் சக்தியாக மாறுகின்றது.  இதனை அறிந்த ஒருவன் வெறும் நிலையற்ற எண்ணங்களை, அலைபாயும் உணர்ச்சிகளைக் கடந்து உயர்ந்தவனாய், வலிமையானவனாய் ஆகத் தயாராகிறான்.  இதனை செயல்படுத்துகின்ற ஒருவன் தனது மனோ வலிமையை உணர்வுப் பூர்வமாக, புத்திசாலித்தனமாக கையாள்கிறவன் ஆகிறான்.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (21.01.2019)

திங்கள், 10 டிசம்பர், 2018

எண்ணிய வண்ணம் வாழ்வு: பகுதி-3 - எண்ணமும் உடல் நலமும்

மூலம்:  As a Man Thinketh by James Allen        தமிழில்: சுப்ரமண்ய செல்வா

உடல் எனப்படுவது மனதின் அடிமை.  அது மனதின் இயக்கங்களுக்கு அடிபணிகிறது; அந்த இயக்கங்கள் திட்டமிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவையாக இருக்கலாம் அல்லது தானாகவே வெளிப்படுத்தப்பட்டவையாகவும் இருக்கலாம்.  தீய எண்ணங்கள் உடலை துரிதமாக நோயையும் அழிவையும் நோக்கி இட்டுச் செல்கின்றன.  அதேபோல்  தூய்மையான அழகான எண்ணங்கள் உடலை இளமையாக அழகுபடுத்துகின்றன.

சூழ்நிலைகளைப் போலவே நோயும் உடல் நலமும் எண்ணத்தில் ஆழ வேரூன்றி இருக்கின்றது.  தீய எண்ணங்கள் நோயுற்ற உடல் மூலம் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன.  அச்சமிக்க எண்ணங்கள் தோட்டாக்களைப் போல்வே துரிதமாக மனிதரை கொல்வதை நாம் அறிவோம்.  நோயைப்பற்றி பயந்து வாழ்பவர்களே சீக்கிரம் நோய்வாய்ப்படுகிறார்கள்.  பதற்றம் முழு உடலையும் நிலைகுலைத்து அதனுள் நோய் உட்புக உறுதுணையாகிறது.  அதுபோலவே தூய்மையற்ற எண்ணங்கள் - அவை உடலால் அனுபவிக்கப்படாவிட்டாலும்கூட - வெகு விரைவில் நரம்பு மண்டலத்தை தகர்த்துவிடும்.

திடமான, தூய, இன்பமான எண்ணங்கள் உடலை சுறுசுறுப்பு மிக்கதாக, வசீகரமானதாக கட்டி எழுப்புகின்றன.  உடல் ஒரு மென்மையான நெகிழ்வான கருவி.  ஆகவே அது எண்ணங்களின் பதிவுகளை உடனடியாக பிரதிபலிக்கின்றது.  நல்லதும் தீயதுமான எண்ணப் பழக்கங்கள் அவற்றுக்கு ஒத்த விளைவுகளை அதன் மீது உண்டாக்குகின்றன.

மனிதர் அழுக்கான எண்ணங்களை பரப்பும் வரையில் அவர்களுக்குள் அசுத்தமான நஞ்சான இரத்தம் ஓடிக்கொண்டேதான் இருக்கும். தூய இதயத்தில் இருந்து வருவதே தூய வாழ்வும் தூய உடலும். மாசுமிக்க மனதின் வெளிப்பாடே மாசுமிக்க வாழ்வும் சீரழிந்த உடலும்.  எண்ணமே செயலின், வாழ்வின், சகல வெளிப்பாட்டினதும் ஊற்று.  ஊற்றினைத் தூய்மைப்படுத்துங்கள்; அனைத்தும் தூய்மையாகும்.

ஒருவன் தனது எண்ணங்களை மாற்றாதவரை வெறும் உணவுப் பழக்கங்களை மாற்றுவதினால் அவனக்கு எவ்வித நன்மையும் வந்துவிடப் போவதில்லை.  தனது எண்ணங்களை தூய்மைப்படுத்திய ஒருவன் தூய்மையற்ற உணவினை நாடுவதும் இல்லை.

தூய எண்ணங்கள் தூய பழக்க வழக்கங்களை ஏற்படுத்துகின்றன.  தனது உடலினைத் தூய்மைப்படுத்தாத ஒரு துறவி உண்மையில் துறவியல்ல.  தனது எண்ணங்களை திடப்படுத்திய, தூய்மைப்படுத்திய ஒருவன் தீய கிருமிகளைப்பற்றி கவலைப்பட தேவையில்லை.

உங்கள் உடல் பூரண நலத்துடன் இருக்க வேண்டுமெனில், உங்கள் மனதினை காத்திடுவீர்.  உங்கள் உடலினை புதுப்பிக்க வேண்டுமெனில், உங்கள் மனதினை அழகுபடுத்துவீர்.  வன்மம்மிக்க, பொறாமைமிக்க, ஏமாற்றமிகு, மனச்சோர்வுமிக்க எண்ணங்கள் உடலின் நலத்தையும் வசீகரத்தையும் கொள்ளையிடும்.  சிடுசிடுப்பான முகம் என்பது தற்செயலாய் வருவதல்ல.  அது வெறுப்பான எண்ணங்களின் வெளிப்பாடு.

அழகை கெடுக்கும் சுருக்கங்கள் மடமை, இச்சை, கர்வம் என்பவற்றால் உண்டானவையே.

பிரகாசமான, களங்கமற்ற சிறுமி ஒருத்தியின் முகம் கொண்ட தொண்ணூற்றாறு வயதான மூதாட்டி ஒருவரை நான் அறிவேன்.  அதேபோன்று தன் வயதிற்கு சிறிதும் பொறுத்தமற்ற முகம் கொண்ட நடுத்தர வயதிற்கும் குறைவான ஒருவனையும் நான் அறிவேன்.  முன்னையது இனிமையான, மகிழ்வான மனநிலையின் வெளிப்பாடு.  பின்னையது இச்சைமிகுந்த, அமைதியிழந்த மனதின் விளைவு.

காற்றையும் சூரிய ஒளியையும் தாராளமாக உட்புக விட்டாலன்றி உங்களால் இனிமையான முழுமையான உறைவிடத்தை பெற முடியாது.  அது போல மனதினுள் ஆனந்தம், நல்லெண்ணம், அமைதி என்பனவற்றை தாராளமாக உட்புக விட்டால் மட்டுமே, திடமான உடலினையும் பிரகாசமான, மகிழ்வான, அமைதியான முகத்தோற்றத்தினையும் பெற முடியும்.

முதியவர்களின் முகங்களில் முகச்சுருக்கங்களைக் காண்கிறோம்.  சிலருக்கு அவை பரிவினால் எற்பட்டிருக்கும்.  சிலருக்கு அவை திடமான, தூய்மையான எண்ணங்களினால் உண்டாகியிருக்கும்.  இன்னும் சிலருக்கோ அவை இச்சையினால் செதுக்கப்பட்டிருக்கும்.  யாரால் அதனை பிரித்தறிய முடியாது?  நேர்மையாய் நன்னெறியில் வாழ்ந்தவர்களுக்கு, முதுமை என்பது சூரிய அஸ்தமனத்தைப் போன்று சலனமற்ற, அமைதியான, மென்மையாய் கனிந்த ஒரு நிலை.  அண்மையில் நான் தத்துவஞானி ஒருவரை அவரது மரணப்படுக்கையில் பார்த்திருக்கிறேன்.  வயதில் மட்டுமே அவர் முதுமை அடைந்திருந்தார்.  அவர் தான் வாழ்ந்தது போல்வே இனிமையாய், அமைதியாய் மரணித்தார்.

உடல்நோய்களை விரட்ட உற்சாகமான எண்ணங்களை விட சிறந்த மருத்துவர் வேறு எவரும் இல்லை.  துயரம், கவலை எனும் இருள் கவியும் போது அதனை கலைக்க நல்லெண்ணத்திற்கும் மேலான ஆறுதல் அளிப்பவர் வேறு எவரும் இல்லை.  பகைமை, வெறுப்பு, சந்தேகம், பொறாமை போன்ற எண்ணங்களுடன் தொடர்ந்து வாழ்வது என்பது தனது சொந்த சிறைக்குள் வாழ்வதற்கு ஒப்பானதாகும்.  பிறரைப் பற்றி நல்லதையே எண்ணுவது, எல்லோருடனும் உற்சாகமாக இருப்பது, பொறுமையாக மற்றவரிடத்தில் நல்லதையே காண்பது போன்ற தன்னலமற்ற எண்ணங்கள் சுவர்கத்தின் வாயில்களாகும்.  நாளுக்கு நாள் எல்லா உயிர்கள் மீதும் அமைதியான எண்ணங்களுடன் வாழ்வோருக்கு அது அபரிமிதமான அமைதியைக் கொண்டு வரும்.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (09.12..2018)

வியாழன், 29 நவம்பர், 2018

எண்ணிய வண்ணம் வாழ்வு: பகுதி-2 எண்ணமும் சூழ்நிலைகளும் (தொடர்ச்சி...)

மூலம்:  As a Man Thinketh by James Allen        தமிழில்: சுப்ரமண்ய செல்வா

துன்பம் என்பது எப்போதும் ஏதோ ஒரு வழியில் தவறான எண்ணத்தின் விளைவே.  அது ஒருவன் தன்னோடும், தன் இருப்பின் மூலமான நியதியோடும் இசைவாய் இல்லை என்பதன் அறிகுறியாகும்.  துன்பத்தின் ஒரே உன்னத நோக்கம் தூய்மைப்படுத்துவதாகும்.  தூய்மையான பின்பு துன்பம் தொடர்வதில்லை.  அழுக்கை அகற்றியபின் தங்கத்தை மேலும் எரிப்பதில் அர்த்தமில்லை; முற்றிலும் தூய்மையான ஒருவன் துன்பப்பட முடியாது.

ஒரு மனிதன் எதிர்கொள்ளும் துன்பம் மிக்க சூழ்நிலைகள் என்பன அவன் தன் அகத்தோடு இசைவற்று இருப்பதன் விளைவே.  அதேபோல் ஒருவன் எதிர்கொள்ளும் இன்பகரமான சூழ்நிலகள் என்பன அவன் தன் அகத்தோடு ஒத்திசைவாய் இருப்பதன் விளைவே.  இன்பம் என்பது சரியான எண்ணத்தினதும், துன்பம் என்பது தவறான எண்ணத்தினதும் சரிசமமான பங்காகும்.  அங்கே உள்ளவன் இல்லாதவன் என்ற பாகுபாட்டுக்கு இடமில்லை.  ஒருவன் செல்வந்தனாக ஆனால் சபிக்கப்பட்டவனாக இருக்கலாம்.  இன்னொருவன் ஏழையாக ஆனால் ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருக்கலாம்.  செல்வமும் மகிழ்ச்சியும் ஒன்றாயிருப்பது அந்த செல்வமானது நேர்மையான விவேவகமான முறையில் பயன்படுத்தப்படும் போது மட்டுமே.  அதேபோல் ஏழை துன்பக்குழியின் கீழே போவது அந்த துன்பமானது தன் மீது அநியாயமாக சுமத்தப்பட்டு இருக்கிறது என்று கருதும்போதே.

வறுமையும் மிதமிஞ்சிய அனுபோகமும் இழிநிலையின் இரு எல்லைகளாகும்.  இவை இரண்டும் இயற்கைக்கு மாறானதும், மனநோயின் விளைவும் ஆகும்.  ஒருவனின் சரியான, இயல்பான நிலை என்பது இன்பமாய், ஆரோக்கியமாய், செழுமையாய் இருத்தலே.  அத்தகைய உன்னத நிலையை அடைவது என்பது அவன் தனது அகத்தோடும் புறத்தோடும், தன்னுள்ளும் தன் புற சூழலோடும் இசைவிணக்கமாய் இருத்தலின் விளைவே.

ஒருவன் உண்மையான மனிதன் ஆகத் தொடங்குவது புலம்பலையும், நிந்தித்தலையும் நிறுத்தி, தன் வாழ்வை ஒழுங்குபடுத்துகின்ற அந்த மறைந்துள்ள மாறாத நியதியை தேட ஆரம்பிக்கும்போது மட்டுமே.  அப்படி அவன் தன் மனதை அந்த ஒழுங்கமைப்போடு இணைக்கும்போது, தனது நிலைமைக்கு மற்றவர்களே காரணம் எனக் குற்றஞ்சாற்றுதலை நிறுத்துகிறான்.  உயரிய எண்ணங்களால் தன்னை கட்டி எழுப்புகின்றான்.  புறச்சூழலோடு போரிடுவதை நிறுத்தி, அச்சூழ்நிலைகளையே தனது துரித முன்னேற்றத்திற்கும், தன்னுள் மறைந்திருக்கும் அற்புதமான ஆற்றல்களையும், சாத்தியங்களையும் கண்டறிய உபயோகப்படுத்திக் கொள்கின்றான்.

குழப்பங்கள் அல்ல, ஒழுங்கமைப்பே பிரபஞ்சத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற அடிப்படைக் கோட்பாடு.  அநீதி அல்ல, நீதியே வாழ்வின் சாரமும், ஆன்மாவும் ஆகும்.  ஒழுக்கக் கேடல்ல, நேர்மையே நம்மை  வடிவமைக்கின்ற, முன்னோக்கித் தள்ளுகின்ற ஆற்றல்.  இந்நியதிக்கொப்ப, பிரபஞ்சம் சரியாக இருக்க வேண்டுமெனில் ஒருவன் தன்னை சரிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.  அப்படி தன்னை சரிப்படுத் கொள்கின்ற இந்நிகழ்வின் போது, ஒருவன் பிற பொருட்களை, பிற மனிதர்களை நோக்கிய தனது எண்ணங்களை மாற்றும்போது, அதற்கொப்ப தன்னை நோக்கிய பிற பொருட்களின், பிற மனிதர்களின் எண்ணங்கள் மாற்றம் அடைவதை அறிந்துக் கொள்வான்.

இந்த உண்மையின் சான்று ஒவ்வொரு மனிதருள்ளும் இருக்கின்றது.  அதனை அறிந்துக்கொள்ள தேவை முறையான சுய ஆய்வும்  சுய பகுப்பாய்வுமே.  ஒருவன் தனது எண்ணங்களை தீவிரமாக மாற்றிப் பார்க்கட்டும்.  அது அவன் வாழ்வில் ஏற்படுத்தும் சடுதியான மாற்றங்களைக் கண்டு வியப்படைவான்.  மனிதர்கள் எண்ணங்களை இரகசியமாக வைத்திருக்க முடியும் என்று எண்ணுகிறார்கள்.  ஆனால் அது சாத்தியமன்று.  எண்ணம் பழக்கமாக வெளிப்படுகின்றது.  பழக்கம் அதற்கொத்த சூழ்நிலையை உருவாக்குகின்றது.  கீழ்த்தரமான எண்ணங்கள் குடி, சிற்றின்பம் முதலிய பழக்கங்கள் ஆகின்றன.  அவை நோய், அழிவு மிகுந்த சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  ஒவ்வொறு விதமான தூய்மையற்ற எண்ணங்களும், வலிமையற்ற குழப்பம் மிகுந்த பழக்கங்கள் ஆகின்றன.  அவை திசை மாற்றுகின்ற, தீமை விளைவிக்கின்ற சூழ்நிலைகளை உருவாக்கின்றன.  அச்சமிக்க, தடுமாற்றமான, உறுதியற்ற எண்ணங்கள் பலவீனமான, கோழைத்தனமான, உறுதியற்ற பழக்கங்கள் ஆகின்றன.  அவை அதற்கு ஒத்த தோல்வி, வறுமை, அடிமைப்பட்ட சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  சோம்பேறித்தனமான எண்ணங்கள், அசுத்தமான, நேர்மையற்ற பழக்கங்கள் ஆகின்றன.  அவை முறைதவறுகின்ற, கொடுவறுமை விளைவிக்கின்ற சூழ்நிலைகள உருவாக்குகின்றன.  பிறரை வெறுக்கின்ற, கண்டிக்கின்ற எண்ணங்கள், வீண் பழி சுமத்துகின்ற, அடவடித்தனமான (வன்முறை) பழக்கங்கள் ஆகின்றன.  அவை மற்றவர்களை காயப்படுத்துகின்ற, துன்புறுத்துகின்ற சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  எல்லாவிதமான சுயநல எண்ணங்களும் தன்னலமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை அதற்கொத்த துயரமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  அதேபோல் எல்லாவிதமான அழகான எண்ணங்களும், தயை மிகுந்த, கருணைமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை அதற்கொத்த அன்பான, பிரகாசமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  தூய்மையான எண்ணங்கள், இச்சை அடக்கிய, சுயகட்டுப்பாடுமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை சாந்தமான, அமைதியான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  தைரியமான, தன்னம்பிக்கைமிக்க மற்றும் தீர்மானமான எண்ணங்கள் வீறுமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை அதற்கொத்த வெற்றிமிக்க, அபரிமிதமான, சுதந்திரமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  ஆற்றல்மிக்க எண்ணங்கள் தூய்மையான, செயலூக்கமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை ரம்மியமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  மென்மையான, பிழை பொறுக்கின்ற எண்ணங்கள், சாந்தமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை பாதுகாப்பான, இதமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  அன்பு மிகுந்த, சுயநலமற்ற எண்ணங்கள், தன்னலமற்ற பழக்கங்கள் ஆகின்றன.  அவை நிச்சயமான நிலையான சுபீட்சம் மற்றும் உண்மையான செழிப்புமிக்க சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.

நன்மையானதோ தீமையானதோ, விடாப்பிடியாக தொடர்கின்ற ஒரு எண்ணம், அதற்கொத்த விளைவுகளை ஒருவருடைய குணத்திலும் சூழ்நிலையிலும் கொடுக்கத் தவறுவதில்லை.  ஒருவன் தன்னுடைய சூழ்நிலைகளை நேரடியாக தேர்ந்தெடுக்க முடியாது.  ஆனால் அவனால் தன் எண்ணங்களை தேர்ந்தெடுக்க முடியும்.  அதன் மூலம் மறைமுகமாக, ஆனால் நிச்சயமாக, தனது சூழ்நிலைகளை வடிவமைக்க முடியும்.

இயற்கையானது ஒருவன் தன்னுள் அதிகமாக ஊக்குவிக்கின்ற எண்ணங்களை ஈடேற்ற உதவுகிறது.  நல்லதும் கெட்டதுமான எண்ணங்களை விரைவில் வெளிக்கொணர்வதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன.

ஒருவன் தனது பாவமிக்க எண்ணங்களை நிறுத்தட்டும்.  முழு உலகமும் அவனை நோக்கி கனிவோடு திரும்பும்.  அவனுக்கு உதவத் தயாராகும்.  அவன் தனது நலிந்த, ஆரோக்கியமற்ற எண்ணங்களை தூர விலக்கட்டும்.  ஆஹா.. அவனது உறுதியான முடிவுக்கு உதவுவதற்கு ஒவ்வொரு கரங்களிலிருந்தும் வாய்ப்புகள் பூக்கும்.  அவன் தன்னுள் நல்ல எண்ணங்களை ஊக்குவிக்கட்டும்.  எந்தத் தலைவிதியும் அவனை துர்பாக்கிய குழியினுள் தள்ளாது.  உலகம் என்பது ஒரு பல்வண்ணக் காட்சிக் கருவி.  அது அடுத்தடுத்து நகர்கின்ற கணங்களில் காட்டுகின்ற மாறுபட்ட பல வண்ணங்களின் கூட்டு என்பது வேறு எதுவுமன்று.  அவை சதா ஓடுகின்ற உங்கள் எண்ணங்களைக் கொண்டு மிக நேர்த்தியாக ஒழுங்குப்படுத்தப்பட்ட படங்களே.

ஆவாய் நீ நின் சித்தம்படி.
தோல்வி திருப்திபட்டுக்கொள்ளட்டும்
சூழ்நிலை எனும் அந்த மாய உலகில்.
ஆன்மா அதனை வெறுக்கின்றது.
ஏனெனில்அது சுதந்திரமானது.

அது
காலத்தை ஆள்கின்றது;  பரவெளியை வெற்றிகொள்கிறது.
சந்தர்ப்பம் எனும் வஞ்சகனை அடக்கியாள்கின்றது.
சூழ்நிலை எனும் கொடுங்கோலனை
வீழ்த்தி அடிமையாக்குகின்றது.

மனித சித்தம்
அந்த
பார்வைக்கு புலப்படா(த) பேராற்றல்
அழிவற்ற ஆன்மாவின் ஆசைக் குழந்தை
எந்த இலக்கை நோக்கியும்
எந்த தடையையும் தகர்த்துச் செல்லும்

எனவே
காலதாமத்தினால் கலங்காதீர் - (யாவும்)
அறிந்தவராய் காத்திருப்பீர்
ஆன்மா எழுந்து ஆணையிடும்போது
அனைத்து கடவுளரும்
பணிவிடைபுரிய பார்த்திருப்பர்.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (25.11..2018)

திங்கள், 12 நவம்பர், 2018

எண்ணிய வண்ணம் வாழ்வு: பகுதி-2 எண்ணமும் சூழ்நிலைகளும் (தொடர்ச்சி...)

மூலம்:  As a Man Thinketh by James Allen        தமிழில்: சுப்ரமண்ய செல்வா

மனிதர்கள் தங்கள் சூழ்நிலைகளை மேம்படுத்த ஆவல் கொள்கிறார்கள்.  ஆனால் தங்களை மேம்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை.  ஆகவே அவர்கள் தொடர்ந்து கட்டுண்டு  கிடக்கின்றார்கள்.  தன்னைத் தானே சிலுவையிலிட்டு வலி வேதனையோடு தன் குறைகளை போக்குகின்ற மனிதன் தன் இதயத்தின் தேடலை அடையத் தவறுவதில்லை.  இந்த உண்மை மண்ணுலக மட்டுமல்ல விண்ணுலக விடயங்களுக்கும் பொருந்தும்.  வெறும் செல்வம் மட்டுமே சேர்க்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவன் கூட, அதனை அடைவதற்கு மிகப்பெரிய தனிப்பட்ட தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கின்றது. அவ்வாறெனின், அமைதியான வாழ்வை பெறுவதற்கு அவன் எத்துணை தியாகம் செய்ய வேண்டும்?

இதோ ஒரு மிக மிக ஏழ்மையான மனிதன்.   தனது சூழலும் வாழ்க்கைத் தரமும் உயர வேண்டுமென்று மிகவும் ஆவல் கொள்கின்றான்.  ஆனால் எப்பொழுதும் தனது வேலைகளை சரியாக செய்யாமல் தனது எஜமானனை ஏமாற்றுகின்றான்.  தனக்கு கிடைக்கும் ஊதியம் குறைவென்று தனது தவறை நியாயப்படுத்துகின்றான்.  உண்மையான சுபீட்சத்திற்கான அடிப்படை எதுவென்று அவனுக்கு புரியவில்லை.  தனது ஏழ்மையிலிருந்து வெளிவர அவன் அருகதையற்றவன்.  அதுமட்டுமன்றி தனது சோம்பேறித்தனமான, ஏமாற்றுகிற, கோழைத்தனமான எண்ணங்களால், ஏழ்மை என்னும் படுகுழியின் ஆழத்திற்கு அவன் தன்னை இழுத்துச் செல்கின்றான்.

இதோ சாப்பாட்டு பிரியரான ஒரு பணக்காரன்.  கட்டுபாடற்ற உணவு பழக்கத்தின் காரணமாக வலி வேதனைமிக்க நீண்ட நோயுற்றவன்.  அவன் தனது நோயிலிருந்து விடுபட எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் செல்வழிக்கத் தயாராயிருக்கிறான்.  ஆனால் உணவு மீதான தனது அபரிமிதமான ஆசையத் துறக்க தயாராயில்லை.  அவனுக்கு விதம்விதமான சுவையான உணவும் வேண்டும்; அதேவேளை உடலும் நலமாக இருக்க வேண்டும்.  அத்தகையவன் ஆரோக்கியமாக இருக்க அருகதையற்றவன்.  அவன் இன்னும் உண்மையான ஆரோக்கிய வாழ்வின் அரிச்சுவடி அறியாதவன்.

இதோ ஒரு எஜமானன்.  குறுக்கு வழிகளை கையாண்டு குறைந்த சம்பளம் கொடுப்பதன் மூலம் அதிக இலாபம் சம்பாதிக்கிறான்.  அத்தகையவன் உண்மையான சுபீட்சத்திற்கு அருகதையற்றவன்.  ஒரு நாள் தனது பெயரையும், பணத்தையும் இழக்கும்போது, சூழ்நிலைகள் மீது குறை கூறுகின்றான்.  தானே அந்த சூழ்நிலையின் காரணகர்த்தா என்பதை அவன் அறியவில்லை.

மேல் குறிப்பிட்ட மூன்று உதாரணங்களையும் நான் குறிப்பிட்டது, மனிதன், தானே தனது சூழ்நிலைகளின் கர்த்தாவாக (பல நேரங்களில் அவனையறியாமலேயே) இருக்கின்றான் என்பதனை எடுத்துக் காட்டவே.  நல்லதையே அடைய வேண்டும் என்று முயற்சிக்கின்ற மனிதன், அந்த முயற்சிக்குத் தடையாக இருக்கக் கூடிய எண்ணங்களையும் ஆசைகளையும் தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டே இருக்கின்றான்.  இத்தகைய உதாரணங்களை முடிவற்று பெருக்கிக் கொண்டே போகலாம்.  அது அவசியமற்றது.  ஏனெனில் ஒருவர் முயற்சித்தால் தனது மனதின்,  வாழ்வின் சுவட்டிலேயே எண்ணங்கள் என்னும் நியதியின் செயல்பாட்டைக் காணலாம்.  அப்படி அறியும் வரை வெறும் வெளிப்புறத் தோற்றங்கள் மூலம் எட்டப்படுகின்ற முடிவானது விவேகமற்றதாகும்.

ஆனால், சூழ்நிலைகள் மிக குழப்பமானவை.  எண்ணங்கள் ஆழ வேரூன்றியவை.  மகிழ்ச்சி என்பதோ மனிதருக்கு மனிதர் மிக வேறுபடுபவை.  ஆகவே ஒரு மனிதனின் முழுமையான உண்மைத் தன்மையை (அது அவனுக்குத் தெரிந்திருப்பினும்) அவனது வெளிப்புறத் தோற்றத்தின் மூலம் இன்னொருவரால் தீர்மானஞ்செய்ய இயலாது.  ஒருவன் சில வழிகளில் நேர்மையானவனாக இருக்கலாம்.  இருந்தும் ஏழ்மையில் கஷ்டப்படலாம்.  இன்னொருவன் சில வழிகளில் நேர்மையற்றவனாக இருக்கலாம்.  இருந்தும் செல்வந்தனாக இருக்கலாம்.  ஆனால் ஒருவன் தோற்றுப் போவது அவனது குறிப்பிட்ட நேர்மையினால் என்றும், மற்றவன் வளமாய் வாழ்வது அவனது குறிப்பிட்ட நேர்மையற்ற தன்மையினால் என்றும் எட்டப்படுகின்ற முடிவானது வெறும் மேலோட்டமானதாகும்.  இதற்கு காரணம் நேர்மையற்றவன் முற்று முழுதாய் அயோக்கியன்; நேர்மையானவன் முழுமையான உத்தமன் என்கிற அனுமானம் ஆகும்.  ஆழ்ந்த அறிவின் மற்றும் பரந்த அனுபவம் மூலம் அம்முடிவானது தவறு என புலப்படும்.  நேர்மையற்றவனிடம் மற்றவனிடம் இல்லாத சில உன்னத பண்புகள் இருந்திருக்கலாம்.  அதேபோல் நேர்மையானவனிடம் மற்றவனிடம் இல்லாத சில தீய குணங்கள் இருந்திருக்கலாம்.  நேர்மையானவன் தனது நல்ல குணங்களின், செயல்களினால் பெறக்கூடிய நற்பலன்களை அனுபவிப்பது போலவே தனது தீய குணங்களினால் வரக்கூடிய துன்பங்களையும் அனுபவிக்கிறான்.  அதுபோலவே நேர்மையற்றவன் தனது துன்பங்களையும் இன்பங்களையும் சேகரிக்கிறான்.

ஒருவன் நல்லவனாய் இருப்பதால்தான் துன்பங்ளை அனுபக்கிறான் என்று வழமையாக நம்புவது அறியாமையின் வெளிப்பாடே.  தனது மனதிலிருந்து ஒவ்வொறு ஆரோக்கியமற்ற, கசப்பான, தூய்மையற்ற எண்ணத்தையும் நிர்மூலமாக்குகின்ற வரையிலும்; தனது ஆன்மாவிலிருந்து பாவக் களங்கங்கள் அனைத்தையும் கழுவிப் போக்குகின்ற வரையிலும், ஒருவன் தனது துயரங்களுக்கு எல்லாம் காரணம் தனது நல்ல தன்மையே என்று பறைசாற்றக் கூடிய தகுதியைப் பெறுவதில்லை.   அத்தகைய ஒப்புயர்வற்ற முழுமையை நோக்கிப் பயணிக்கின்ற வழியில் - அதனை அடையும் முன்பே - பாரபட்சமற்ற அந்த உன்னத இயற்கை நியதியை அறிந்து கொள்கின்றான்.  அது எப்போதும் நன்மைக்குத் தீமையையும், தீமைக்கு நன்மையையும் விளைவாகக் கொடுப்பதில்லை.  அத்தைகைய மேலான அறிவோடு ஒருவன் தனது கடந்த கால வாழ்க்கையை பின்னோக்கிப் பார்க்கும்போது, அது எப்போதும் சரியான ஒழுங்கமைப்போடு இருந்திருப்பதையும், நல்லதும், தீதுமானது தனது எல்லா கடந்த கால அனுபவங்களும் தனது அகத்தின் சரியான வெளிப்பாடு என்பதனையும் அறிகிறான்.

நல்ல எண்ணங்களும் செயல்களும் எப்போதும் தீய விளைவுகளைத் தருவதில்லை; தீய எண்ணங்களும் செயல்களும் எப்போதும் நல்ல விளைவுகளைத் தருவதில்லை.  சோளத்திலிருந்து சோளத்தைத் தவிர, நெருஞ்சியிலிருந்து நெருஞ்சியைத் தவிர வேறு எதுவும் வருவதில்லை.  மனிதர்கள் புற உலகத்தில் இந்த நியதியை நன்கு புரிந்து கொள்கிறார்கள்.  அதனோடு ஒத்துப் போகிறார்கள்.  புற உலகத்தைப் போன்றே அக உலகத்திலும் (அற உலகத்திலும்) அந்த நியதியின் சீரான ஒழுங்கமைப்பு மாறாதது.  எனினும் வெகு சிலரே அதனை புரிந்து கொள்கிறார்கள்.  பலர் அதனை புரிந்து கொள்ளாததால் அதனுடன் ஒத்துப் போவதில்லை.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (11.11..2018)

எண்ணிய வண்ணம் வாழ்வு: பகுதி-2 எண்ணமும் சூழ்நிலைகளும்

மூலம்:  As a Man Thinketh by James Allen        தமிழில்: சுப்ரமண்ய செல்வா

மனித மனம் என்பது ஒரு தோட்டத்தைப் போன்றது.  எதையும் பயிரிட்டாலும் பயிரிடாவிட்டாலும் அங்கு ஏதாவதொன்று முளைத்துக்கொண்டே இருக்கும்.  பயனுள்ள விதைகளை விதைக்கத் தவறினால் பயனற்ற களைகளின் விதைகள் அங்கு விழுந்து தங்களை பெருக்கிக்கொண்டே இருக்கும்.

களைகளை அகற்றி தனக்கு தேவையான கனிகளையும் மலர்களையும் பயிரிடும் ஒரு நல்ல தோட்டக்காரனைப் போல, மனிதன் மனம் என்கின்ற தனது தோட்டத்தில் தவறான, பயனற்ற, தூய்மையற்ற எண்ணங்கள் என்னும் களைகளை அகற்றி, சரியான, பயனுள்ள, தூய்மையான கனிகளையும் மலர்களையும் நிறைவாக பயிரிட்டு வர, தானே தனது ஆன்மாவின் மிகச் சிறந்த தோட்டக்காரன் என்பதையும், தானே தனது வாழ்வை இயக்குபவன் என்பதையும் நன்றாக கண்டு கொள்கின்றான். தனது எண்ணங்களின் குறைகளை உள்ளார்ந்து உணர்கின்றான்.  எப்படி எண்ணங்களும் மனமும் குணத்தை, சூழ்நிலைகளை, தலைவிதியை உருமாற்றுகின்றன என்பதனை துல்லியமாக புரிந்து கொள்கின்றான்.

எண்ணமும் குணமும் ஒன்றே. ஒருவன் தனது குணத்தை அடையாளம் கண்டு கொள்வதும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதும் சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் வழியாகவே. எனவே ஒருவனது வாழ்வின் புறச்சூழ்நிலைக்கும் அவனது அகத்தின் தன்மைக்கும் ஒரு இணக்கமான தொடர்பு இருப்பதைக் காணலாம்.  இதன் அர்த்தம் ஒருவனது குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையானது அவனது மொத்த குணத்தின் வெளிப்பாடாக இருக்கும் என்பதல்ல.  ஆனால் அந்த குறிப்பிட்ட சூழ்நிலையானது அவனுள் இருக்கும் ஏதோ ஒரு ஆழ்ந்த எண்ணத்தோடு தொடர்புடையாதாக இருக்கும்.  அந்தத் தொடர்பின் நெருக்கம் எத்தகையதெனில் அது அந்தச் சூழ்நிலயில் அவனது வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருக்கும்.

ஒவ்வொறு மனிதனதும் தற்போதைய நிலை என்பது அவனது இருப்பின் நியதிக்கு உட்பட்டதே.  அவனது குணத்தை கட்டமைத்த அவனது எண்ணங்களே அவனை அங்கு கொண்டு வந்திருக்கின்றன.  அவனது வாழ்க்கை அமைப்பிலே தற்செயல் என்பதற்கு இடமேயில்லை.  அனைத்தும் எப்போதும் தவற முடியாத ஒரு நியதிக்கு உட்பட்டதே.  இது தங்கள் சூழ்நிலையோடு இணக்கமின்றி இருப்பவர்களுக்கும் மற்றும்  தங்கள் சூழ்நிலையோடு மனநிறைவோடு ஒத்து இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

இடையறாத தன்மாற்றத்துடன் முற்போக்குப் பாதையில் பயணிக்கின்ற மனிதன், தான் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் தரும் பாடங்களை கற்றுக் கொள்ளும்போது தன்னை மேலும் மேலும் உயர்த்திக் கொள்ள முடியும்.  ஒவ்வொறு சூழ்நிலையும் அதனகத்தே அவனுக்காக வைத்திருக்கும் ஆன்ம பாடத்தை அவன் கற்றுத் தேறும்போது, புதிய சூழ்நிலைகள் புதிய பாடங்களோடு அவனுக்காக காத்திருக்கின்றன.

தான் புறச்சூழ்நிலைகளின் உருவாக்கம்  என்று நம்புகின்ற வரையில் மனிதன் சூழ்நிலைகளின் தாக்கத்திற்கு உட்பட்டே இருப்பான்.  ஆனால் தானே படைக்கும் சக்தி என்று உணருபோது; தானே சூழ்நிலைகள் வளர்கின்ற மறைந்திருக்கும் மண்ணையும் விதைகளையும் ஆள்கின்றவன் என்று உணரும்போது, அவன் தனக்குத் தானே சரியான எஜமானன் ஆகின்றான்.

நீண்ட காலம் சுயக்கட்டுப்பாட்டுடன் தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டும் வரும் ஒவ்வொறு மனிதனாலும் சூழ்நிலைகள் என்பன எண்ணங்களிலிருந்து வளர்வதை நன்கு உணர முடியும்.   ஏனெனில் தனது சூழ்நிலைகளின் மாற்றங்களின் அளவானது அவனது மனதின் மாற்ற அளவுக்கு சரியாக ஒத்திருப்பதை அவன் அறிந்திருப்பான்.  அதேபோல் ஒருவன் மனப்பூர்வமாக முயற்சித்து தனது குணங்களில் உள்ள குறைகளை களையும்போது, அவன் இன்பம் துன்பம் என மாறி மாறி வரும் வாழ்க்கைச் சக்கரத்திலிருந்து விரைவாக வெளியே வருகின்றான்.

ஆன்மா தான் விரும்புகின்ற, பயப்படுகின்ற, இரகசியமாய் காக்கின்ற விடயங்களையே தன்னுள் ஈர்க்கின்றது.  அது தனது உயர்வான விருப்பங்கள் என்னும் உச்சியையும் அடைகின்றது.  கட்டுப்படுத்தப்படாதஆசைகள் என்னும் பாதாளத்தையும் தொடுகின்றது.  சூழ்நிலைகள் மூலமே அது தனக்கு ஒத்தவற்றைப் பெறுகின்றது.

மனதிலே விதைக்கப்பட்ட அல்லது விழ அனுமதிக்கப்பட்ட ஒவ்வொறு எண்ண விதையும் வேரூன்றி தனது விளைச்சளைத் தருகின்றது.  அது இன்றோ நாளையோ செயலாக மலர்ந்து, அதற்கு ஒத்த வாய்ப்புகளையும் சூழ்நிலைகளையும் விளைவாக தருகின்றது.  நல்ல எண்ணங்கள் நல்ல கனிகளையும், தீய எண்ணங்கள் தீய கனிகளையும் தருகின்றன.

சூழ்நிலை எனும் புற உலகம் எண்ணம் எனும் அக உலகத்திற்கு எற்ப தன்னை வடிவமைத்துக் கொள்கின்றது.  இனிமையும் கசப்புமான புறச்சூழ்நிலைகளே ஒருவனின் இறுதியான தகைமையை நோக்கி இட்டுச்செல்லும் காரணிகளாக அமைகின்றன.  தனது விளைச்சலை தானே அறுவடை செய்யும் மனிதன் துன்பத்திலிருந்தும் பேரின்பத்திலிருந்தும் படிப்பினை பெறுகின்றான்.

தன்னை ஆட்கொள்ள அனுமதித்த உள்ளார்ந்த ஆசைகளை, விருப்பங்களை, எண்ணங்களை தொடர்வதன் மூலம் மனிதன் இறுதியாக அவற்றின் விளைவுகளை அவனது வாழ்வின் புறச்சூழ்நிலையில் காண்கின்றான்.

ஒருவன் பிச்சை புகுவதோ சிறைக்கு வந்தடைவதோ சந்தர்ப்பத்தின் அல்லது விதியின் கொடுமையினால் அல்ல. அதற்கு அவன் தேர்ந்தெடுத்த மிகத் தாழ்ந்த எண்ணங்களும் கீழ்த்தரமான ஆசைகளும் மிக்க பாதையே காரணம்.  அதே போன்று தூய்மையான மனம் கொண்ட ஒருவன் திடீரென பாவத்தில் வீழ்வது வெறும் புறக்காரணங்களால் அல்ல.  பாவ எண்ணம் நீண்ட காலமாக அவன் இதயத்தினுள்ளே இரகசியமாக ஊட்டி வளர்க்கப்பட்டிருந்தது.  சரியான வாய்ப்பு அதன் ஒன்றுதிரண்ட சக்தியை வெளிப்படுத்தியது.  சூழ்நிலை ஒருவனை உருவாக்குவது இல்லை.  அது அவனை அவனுக்கு வெளிப்படுத்துகிறது.  கீழ்த்தரமான எண்ணங்களின் இணக்கத்தால் அன்றி வேறு எவ்வழியிலும் தீய செயலோ அதனால் விளையக்கூடிய துன்பங்களோ ஏற்படுவதில்லை.  அதேபோன்று நீண்ட நல்லொழுக்கத்தின் விளைவால் அன்றி வேறு எவ்வழியிலும் நற்பண்புகளும் அதனால் ஏற்படக்கூடிய தூய இன்பமும் கிட்டுவதில்லை.  எனவே எண்ணத்தின் எஜமானனான மனிதன் தன்னை உருவாக்குபவனும் உருமாற்றுவனும், தன் புறச்கூழலின் கர்த்தாவும் ஆகிறான்.  பிறப்பிலேயே ஆன்மா தனது தனித்தன்மையோடு வந்து விடுகிறது.  இந்த பூமியில் அது மேற்கொள்ளும் யாத்திரையின் ஒவ்வொறு அடியிலும் தம்மை வெளிப்படுத்துகின்ற சூழ்நிலைகளை அது தன்னை நோக்கி ஈர்க்கின்றது.  அவை அதன் சொந்த தூய்மையும், அழுக்கையும், பலத்தையும், பலவீனத்தையும் பிரதிபலிக்கின்றன.

மனிதர் தாம் விருப்புவதை தம்மை நோக்கி ஈர்த்துக் கொள்வதில்லை.  அவர்கள் எதுவாக இருக்கிறார்களோ அவற்றையே தம்மை நோக்கி ஈர்த்துக் கொள்கிறார்கள்.  அவர்களின் விருப்பங்களும், கற்பனகளும், இலட்சியங்களும் ஒவ்வொறு அடியிலும் தடைபடுகின்றன.  நல்லதும் தீயதுமான அவர்களின் உள்ளார்ந்த எண்ணங்களும் ஆசைகளும் தமக்குத் தாமே உணவாகி பெருகுகின்றன.  நம்மை உருமாற்றுகின்ற தெய்வீகம் நமக்குள்ளேதான் இருக்கின்றது.  அது வேறு யாருமல்ல.  நாமேதான்.  மனிதன் விலங்கிடப்படுவது அவனாலேயேதான்.  எண்ணமும் செயலும் விதியெனும் சிறையின் காவலர்கள்.  அவை கீழ்த்தரமாக இருக்கும்போது அவர்கள் சிறைப்படுத்துகிறார்கள்.  அவை உயர்வாக இருக்கும்போது அவர்களே நம்மை விடுவிக்கின்ற சுதந்திர தேவதைகளாகவும் இருக்கின்றார்கள்.

மனிதனுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதன்றி, அவன் விரும்புவதும் பிரார்த்திப்பதும் அவனுக்கு கிட்டுவதில்லை.   அவனது விருப்பங்கள் ஈடேறுவதும், பிரார்த்தனைகள் பலிப்பதும் அவை அவனது எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் இசைவாக இருக்கும்போது மட்டுமே.

இந்த உண்மையின் ஒளியில் சூழ்நிலைகளுக்கு எதிராக போரிடுதல் என்பதன் அர்த்தம் என்ன? அதன் அர்த்தம் என்னவெனில் மனிதன் எல்லா நேரங்களிலும் விளைவுக்கான காரணத்தை தன்னுள் போஷித்து காத்துக் கொண்டே, விளைவுக்கு எதிராக தொடர்ந்து போரிடுகிறான்.

அந்தக் காரணமானது அவன் அறிந்த இழிச்செயலாகவும் இருக்கலாம்.  அவனுக்கே தெரியாத பலவீனமாகவும் இருக்கலாம்.  எவ்வாறெனினும் கொண்டவனின் முயற்சிகளை அது விடாப்பிடியாக தடுக்கிறது.  எனவே காரணங்களை களைவது அவசியமாகிறது.

(நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் - 04.11.2018)

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

எண்ணிய வண்ணம் வாழ்வு: பகுதி-1 எண்ணமும் குணமும்

மூலம்:  As a Man Thinketh by James Allen        தமிழில்: சுப்ரமண்ய செல்வா

மனிதன் எதை எண்ணுகின்றானோ அதுவாகவே ஆகின்றான் என்பது முதுமொழி.  இந்தக் கூற்று மனித இருப்பின் சகல பரிமாணங்களையும் தழுவி நிற்கின்றது.  அவன் வாழ்வின் ஒவ்வொறு நிலைக்கும் சந்தர்ப்பத்திற்கும் பொருந்தி நிற்கிறது.  மனிதன் என்பவன் உண்மையிலேயே அவனது எண்ணங்களே.  குணம் என்பது அவனது எல்லா எண்ணங்களினதும் மொத்தக் கூட்டலே.

விதை இன்றி செடி இல்லை.  விதையிலிருந்தே செடி எழுச்சி பெறுகிறது. அவ்வாறே மனிதனின் ஒவ்வொறு செயலும் அவனுள் மறைந்திருக்கும் எண்ணம் என்னும் விதைகளிருந்து எழுச்சி பெறுகிறது.  இது தற்செயலான செயல்களுக்கு மட்டுமன்றி திட்டமிட்டு செய்யும் செயல்களுக்கும் சமமாக பொருந்தும்.

செயல் என்பது எண்ணத்தின் மலர்ச்சி.  இன்பமும் துன்பமும் அதன் கனிகள். ஆக மனிதன் சேகரிக்கும் சுவையானதும் மற்றும் கசப்பானதுமான அத்தனை கனிகளும் அவனால் பயிரிடப்பட்டவையே.

எண்ணமே எம்மை உருவாக்கியது
எண்ணமே எம்மை வார்த்தது
கள்ள மனமுடையோனை துன்பம் தொடர்கிறது
காளைதனை தொடரும் சக்கரம் போல்
நல்ல மனமுடையோனை இன்பம் தொடர்கிறது
அவனது சொந்த நிழலைப் போல்... சர்வநிச்சயமாய்.

மனிதன் என்பவன் இயற்கை நியதிக்குட்பட்ட பரிணாமமே தவிர, அவன் சிறப்பான சிருஷ்டி ஏதும் அல்ல.  காரணமும் விளைவும் என்பது நாம் கண்ணால் காண்கின்ற பொருள்மயமான இந்த உலகில் எவ்வளவு சாசுவதமானதோ, எண்ணங்கள் என்னும் மறைந்திருக்கும் உலகிலும் அது சாசுவதமானதே.  ஆக, உயர்ந்த தெய்வீக குணம் என்பது அதிர்ஷ்டவசமாக கிடைத்த சலுகை அன்று.  அது உயர்ந்த தெய்வீக எண்ணங்களுடனான நீண்ட உறவின் இயற்கையான வெளிப்பாடே.  அது போன்றே இழிவான, மிருகத்தனமான குணம் என்பது தொடர்ந்து கீழான எண்ணங்களுக்கு அடைக்கலம் கொடுத்ததன் பிரதிபலனே.

மனிதன் ஆவதும் அழிவதும் அவனாலேயே. எண்ணம் என்னும் பட்டறையில் அவன் தன்னையே அழித்துக்கொள்ளும் ஆயுதங்களை படைக்கின்றான்; அதே பட்டறையில் அவன் உவகை, ஊக்கம், அமைதி என்னும் சுவர்க மாளிகைகளை உருவாக்கக் கூடிய கருவிகளையும் படைக்கின்றான். சரியான எண்ணத் தேர்வினாலும் செயல்பாட்டினாலும் அவன் தெய்வீக பூரணத்துவம் அடைகின்றான்.  அதேபோல் தவறான எண்ணத் தேர்வினாலும் செயல்பாட்டினாலும் அவன் மிருகத்தைவிட கீழான நிலைக்குப் தள்ளப்படுகின்றான். இந்த இரண்டு எல்லைகளுக்கும் இடைப்பட்டதுதான் எல்லா விதமான குணங்களும்.  மனிதனே அவை அனைத்தினதும் படைப்பாளனும் எஜமானனும் ஆவான்.

ஆன்மாவைப் பற்றிய பழமையான ஆனால் இன்று மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள அற்புதமான உண்மைகளில் உன்னதமானது எதுவெனில் மனிதனே அவனது எண்ணத்தின் எஜமான். அவனது குணத்தின் கர்த்தா. அவனே அவனது சொந்த நிலையை, சூழ்நிலையை, தலைவிதியை உருவாக்குபவனும் உருமாற்றுபனும் ஆவான்.

அற்புத ஆற்றலும், அறிவும், அன்பும், கருணையும் படைத்தவனும் தனது எண்ணங்களின் எஜமானனும் ஆன மனிதன் எல்லா சூழ்நிலைகளுக்கான பதில்களை மட்டுமன்றி தான் விரும்பியவாரெல்லாம் தன்னை மாற்றிக் கொள்ளவும் புதுப்பித்துக் கொள்ளவும் தேவையான அருமருந்தினை தன்னகத்தே கொண்டுள்ளான்.

மனிதனே எப்பொழுதும் அவனின் எஜமான் - அவன் எவ்வளவு பலஹீனனாய், எவ்வளவு கைவிடப்பட்ட நிலையில் இருப்பினும்.  ஆனால் பலஹீனமான நிலையில், கீழான நிலையில் அவன் தன்னை ஆளத் தெரியாத முட்டாள் எஜமானனாய் இருக்கிறான்.  தனது படைப்பின் நியதி பற்றியும்  இருப்பின் மகிமை பற்றியும் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கும்போது, அவன் புத்திசாலி எஜமானன் ஆகிறான். அப்போது ஆக்கப்பூர்வமான எண்ணங்களுக்காக தனது ஆற்றலை புத்திசாலித்தனமாக பயன்படுத்துகின்றான்.   எண்ணங்களின் நியதியை மனிதன் தன்னுள்ளே கண்டுபிடிக்கும்போதே அவன் தன்னை முற்றும் உணர்ந்த எஜமானன் ஆகின்றான். இந்த கண்டுபிடிப்பு என்பது  முற்றிலும் சுய ஆராய்ச்சி, பிரயோகம், அனுபவம் சார்ந்ததே. 

தங்கமும் வைரமும் எப்படி நீண்ட தேடுதலும் தோண்டுதலுக்கும் பின்பே கிடைக்கின்றதோ  அப்படியே மனிதன் தன்னைப் பற்றிய ஒவ்வொரு உண்மையையும் தன் ஆன்மா என்னும் சுரங்கத்தை ஆழத் தோண்டும்போது அறிந்து கொள்கின்றான்.  தனது குணங்களை, வாழ்க்கையை, தலைவிதியை  தானே உருவாக்குகின்ற வல்லமை படைத்த மனிதன், தனது எண்ணங்களை கூர்ந்து கவனித்து  கட்டுப்படுத்தி தேவைக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கும்போது, அது அவனிலும் பிறரிலும் சூழ்நிலையிலும் ஏற்படுத்தும் அற்புத மாற்றங்களை ஐயமற நிரூபிக்கின்றான். தொடர்ந்த பொறுமையான பின்பற்றலாலும் ஆராய்ச்சியினாலும் காரண-விளைவு உண்மைகளை பூரணமாக உணர்கின்றான்.  தனக்கு கிடைக்கக் கூடிய ஒவ்வொரு அனுபவத்தையும், அன்றாட நிகழ்வுகளையும் - அவை எத்துனை அற்பமாய் இருப்பினும் - பயன்படுத்தி அவன் தன்னைப் பற்றிய அறிவை அறிந்து கொள்கின்றான்.  அவ்வறிவானது புரிந்துணர்வு, விவேகம், சுய பலம் என்பதாகும்.  ஆக மற்ற எல்லா சூழ்நிலைகளையும்விட கேளுங்கள் கொடுக்கப்படும். தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் கூற்று இந்நிலைக்கு மிகவும் பொருந்தும்.  ஏனெனில் பொறுமை, பயிற்சி, இடைவிடாத தேடுதல் மூலமே மனிதன் அறிவு என்னும் ஆலயத்தினுள் நுழைய முடியும்

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (21.10.2018)

திங்கள், 19 பிப்ரவரி, 2018

இன்று உனது நாளையை சம்பாதித்தாயா?

இதோ! இன்றைய நாளின் நிறைவு நெருங்கிக்கொண்டிருக்கிறது.
எவ்விதம் கழிந்தது உனது நாள்?
நீ கடந்து செல்கையில் யாரேனும் களிப்படைந்தார்களா?
நீ நின்று பேசினாயென யாரேனும் நினைவில் கொண்டார்களா?
அன்பான சில வார்த்தைகள் உன்னைப்பற்றிச் சொல்ல
இங்கு யாரேனும் உள்ளார்களா?

உனது நண்பனுக்கு உற்சாக வணக்கம் சொன்னாயா? - அல்லது
கடமைக்கு கையசைத்து கடந்து போனாயா?
சுயநலமாய் விரைந்ததா இன்றைய நாள்?  அல்லது
யாருடைய நெஞ்சமேனும் உன் செயலால்
நன்றியால் நனைந்ததா?

இன்றைய நாளை வீணாக்கினாயா? இழந்தாயா?
நலமாய் நகர்ந்ததா? கடிதாய் கடந்ததா?
கருணைத் தடம்விட்டு வந்தாயா? காய வடு விட்டு கடந்தாயா?

இன்றிரவு உறக்கம் நாடி உன் விழிகள் மூடும்போது
இன்றைய உனது  உன்னதச் செயல்களினால்
இன்னுமொரு நாளையை நீ சம்பாதித்தாயென
கடவுள் களிப்புடன் சொல்வாரா?

மூலம்: Have You Earned Your Tomorrow By Edgar Guest
தமிழில்: சுப்ரமண்ய செல்வா

வியாழன், 15 பிப்ரவரி, 2018

வாழ்க்கையின் தருணங்கள்

வாழ்க்கையில் சில தருணங்களில் சிலரின் பிரிவு நம்மை அவ்வளவு பாதிக்கிறது, அவர்களை நாம் நம் கனவுகளிலிருந்து அள்ளியெடுத்து நிஜமாகவே ஆரத்தழுவ ஆசைப்படுகிறோம்.

ஒரு சந்தோஷக்கதவு மூடிக்கொள்ளும் போது இன்னொன்று தானாக திறந்து கொள்கிறது. ஆனால் நாம் அநேக வேளைகளில் மூடிய கதவையே பார்த்துக் கொண்டிருப்பதால் திறந்திருக்கும் கதவை கவனிக்க தவறிவிடுகிறோம்.

வெளித்தோற்றத்தில் மயங்கி விடாதீர்கள். அவை உங்களை ஏமாற்றிவிடும். செல்வத்தில் மயங்கி விடாதீர்கள். அவை கூட மறைந்து விடும். உங்களை புன்னகைக்க வைக்கக்கூடியவரை தேடுங்கள். ஏனெனில் புன்னகையால்தான் ஒரு இருண்ட நாளை ஒளிமயமாக்க முடியும். உங்கள் உள்ளங்களை புன்னகைக்க வைக்கக் கூடிய உறவைத் தேடுங்கள்.

விரும்பிய கனவுகளைக் காணுங்கள். விரும்பிய இடத்திற்கெல்லாம் செல்லுங்கள். என்னவாக விரும்புகின்றீர்களோ அவ்வாறே ஆகுங்கள். ஏனெனில் இவையனைத்தையும் செய்ய உங்களுக்கு இருப்பது ஒரு வாழ்க்கை, ஒரு வாய்ப்பு.

வாழ்க்கை உங்களை இனிமையானவராக்க இன்பத்தை தரட்டும்; வலிமையுள்ளவராக்க சோதனைகளைத் தரட்டும்; பணிவுள்ளவராக்க துயரங்களைத் தரட்டும்; மகிழ்ச்சிமிக்கவராக்க நம்பிக்கைகளைத் தரட்டும்.

எல்லா பெருமகிழ்ச்சிமிக்கவர்களும் எல்லா சிறப்புகளையும் பெற்றவர்கள் அல்ல; அவர்கள் கிடைத்ததை சிறப்பாக்கிக் கொண்டவர்கள்.

எப்போதும் மறக்கப்பட்ட கடந்தகாலத்திலேயே ஒளிமயமான எதிர்காலம் தங்கியிருக்கிறது. நேற்றைய தோல்விகளையும், வேதனைகளையும் சுமந்தவாறு நாளையை நோக்கி நடைபோட முடியாது.

நீங்கள் பிறந்தபோது நீங்கள் அழுதீர்கள்; சுற்றியிருந்தோரெல்லாம் புன்னகைத்தார்கள். நீங்கள் இறக்கும்போது நீங்கள் புன்னகையோடு விடைபெறக்கூடிய, உங்களைச் சுற்றியிருப்போரெல்லாம் அழக்கூடிய ஒரு வாழ்க்கையை இறுதிவரை வாழுங்கள்.

வருடங்களை கணக்கிடாதீர்கள்; நினைவுகளை கணக்கிடுங்கள்.

வாழ்க்கையின் அர்த்தம் எத்தனை முறை சுவாசிக்கிறோம் என்பதில் அல்ல, எத்தனை முறை மூச்சுவிட மறந்து வியந்து நிற்கிறோமோ அந்த அற்புதத் தருணங்களில் இருக்கிறது.

(வாசித்து சேமித்து வைத்தது. ஆங்கில மூலம் எழுதியது யாரென்று தெரியவில்லை.
தமிழிலில்: சுப்ரமண்ய செல்வா)

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

உலகம் உங்கள் கண்ணாடி

நீங்கள் மற்றவர்களில் காணும் நல்லவைகள் உங்களிடமும் இருக்கின்றன.
நீங்கள் மற்றவர்களில் காணும் தவறுகள் உங்களிடமும் இருக்கின்றன.
ஏனெனில் ஒன்றை அடையாளம் காண வேண்டுமெனில், ஏற்கனவே அது உங்களுக்கு தெரிதிருக்க வேண்டும் அல்லவா!
நீங்கள் மற்றவர்களில் காணும் மகத்தான சாத்தியக்கூறுகள் உங்களாலும் சாத்தியமே.

உங்களைச் சுற்றிலும் நீங்கள் காணும் அழகு உங்கள் அழகே.
உங்களைச் சுற்றிலும் நீங்கள் காணும் உலகு உங்களின் பிரதிபலிப்பே;
அது உங்களை உங்களுக்கு காட்டும் கண்ணாடி.

உலகை மாற்ற வேண்டுமெனில் முதலில் உங்களை மாற்றுங்கள்.
பழிபோடுவதாலும், குறை கூறுவதாலும் ஆவது ஒன்றும் இல்லை.
உங்கள் கருத்துகளுக்கு நீங்களே பொறுப்பாளிகள்.
நீங்கள் மற்றவர்களில் காண்பவை உங்களை உங்களுக்கு காண்பிக்கின்றன.
மற்றவர்களில் நல்லதை காணுங்கள். நீங்கள் உங்களை மிகச் சிறந்தவராய் காண்பீர்கள்.
மனமுவந்து ஈனுங்கள்.  நீங்கள் உங்களுக்கே கொடுக்கின்றீர்கள்.

அழகை ஆராதியுங்கள்;  நீங்கள் அழகாகுவீர்கள்.
படைப்பாற்றலை போற்றுங்கள்; படைப்பாளியாவீர்கள்.
நேசியுங்கள்;  நேசிக்கப்படுவீர்கள்.
புரிந்துகொள்ள முயலுங்கள்;  புரிந்துகொள்ளப்படுவீர்கள்.
செவிகொடுங்கள்;  உங்கள் குரல் செவிமடுக்கப்படும்.
கற்றுக்கொடுங்கள். கற்றுக்கொள்வீர்கள்.

உங்களின் சிறந்த முகத்தை கண்ணாடி முன் காட்டுங்கள்.
உங்களை திருப்பி நோக்கும் முகத்தைப் பார்த்து ஆனந்தப்படுவீர்கள்.

(ஆங்கில மூலம் எழுதியவர் யாரென்று தெரியவில்லை.
தமிழில்: சுப்ரமண்ய செல்வா)

கடமை

வனப்புமிகு வனம் என்னை வசீகரிகறிக்கிறது.
ஆயினுமிது தாமதிக்கும் தருணமல்ல.
நிறையவிருக்கின்றன நான்
நிறைவேற்றக் காத்திருக்கும் வாக்குறுதிகள்.
தொலைதூரம் செல்ல வேண்டும் நான் துயில்கொள்ளும் முன்
ஆம்
தொலைதூரம் செல்ல வேண்டும் நான் துயில்கொள்ளும் முன்.

(Robert Frost அவர்களின் 'Stopping by the woods on a snowy evening' கவிதையில் ஒரு பகுதி
தமிழில்: சுப்ரமண்ய செல்வா)


உங்கள் மீது பதிந்த சிறு விழிகள்...


அந்தச் சின்னஞ்சிறு விழிகள்
உங்களையே கவனிக்கின்றன
இரவும் பகலும் எப்பொழுதும்.

அந்தச் சின்னஞ்சிறு செவிகள்
திறந்தேயிருக்கின்றன
உங்களது ஒவ்வொறு சொல்லையும்
உடனுக்குடன் உள்வாங்க.

அந்தச் சின்னஞ்சிறு கரங்கள்
பரபரக்கின்றன
நீங்கள் செய்வதத்தனையையும் செய்வதற்காக.

அந்தச் சின்னஞ்சிறு மனது
கனவு காண்கிறது
உங்களைப்போல் உருவாகும்
அந்த ஒரு நாளுக்காக.

நீங்களே அவனின் நாயகன்; நீங்களே
அறிவாளிகளுக்கெல்லாம் அறிவாளி.
ஐயமேதும் இல்லை உங்களில்
அந்த சின்ஞ்சிறு நெஞ்சினில்.

முற்றுமுழுதாய் அவன் நம்புகின்றான்;
நீங்கள் சொல்வதனைத்தையும்
நீங்கள் செய்வதனைத்தையும்.
உங்களைப்போல் ஒருநாள் பெரியவனாகி
உங்களைப்போலவே பேசுவான்
உங்களைப்போலவே நடப்பான்.

அகல விழி திறந்த அந்தச் சிறுவன்
நம்புகிறான்
நீங்கள் எப்பொழுதும் சரியென்று.
உங்கள்
ஒவ்வொறு வாக்கும் திருவாக்கே
ஒவ்வொறு செயலும் நற்செயலே.

அந்த சின்ஞ்சிறு விழிகள்
திறந்தேயிருக்கின்றன.
இரவும் பகலும் எப்பொழுதும்
உங்களையே அவை கவனிக்கின்றன.

ஒவ்வொறு நாளும்
உங்கள் எல்லா செயல்களிளும்
தடம்விட்டுச் செல்கிறீர்கள் நீங்கள்.
உங்களைப்போல் வளரக் காத்திருக்கும்
அந்தச் சின்னஞ்சிறு கால்கள்
உங்கள் தடம்பற்றியே நடக்கும்.

(ஆங்கில மூலக்கவிதையை எழுதியது யாரென்று தெரியவில்லை.
தமிழில்: சுப்ரமண்ய செல்வா)

கற்பிப்போர் கவனத்திற்கு

(ஹிட்லரின் நாஜி வதை முகாமிலிருந்து உயிர்பிழைத்த ஒரு பள்ளி அதிபர் கல்வியாளர்களுக்கு எழுதிய கடிதம்).

அன்புள்ள ஆசிரியர்களுக்கு, நான் நாஜி சித்திரவதை முகாமிலிருந்து உயிர்பிழைத்தவன். வேறு எவரும் காணக்கூடாத காட்சிகளை எனது கண்கள் அங்கு கண்டன. படித்த பொறியியலாளர்களால் கட்டப்பட்ட நச்சு வாயு அறைகள்; படித்த மருத்துவர்களால் நஞ்சூட்டப்பட்ட சிறுவர்கள்; தாதிகளால் கொல்லப்பட்ட சிசுக்கள்; பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கல்வி கற்ற ஆயுதப்படையினரால் கொல்லப்பட்ட பெண்களும், குழந்தைகளும். எனவே நான் கல்வியின் மீது மிகுந்த சந்தேகம் கொள்கிறேன்.

எனவே ஆசிரியர்களே! எனது வேண்டுதல் என்னவெனில் உங்கள் மாணவர்கள் நல்ல மனிதர்களாக உருவாக உதவுங்கள். உங்கள் உழைப்பு மெத்தப் படித்த அரக்கர்களையும், திறமையான உளநோயாளர்களையும் உருவாக்கக் கூடாது. எழுத்தும், வாசிப்பும், கணிதமும், சரித்திரமும் மாணவர்களை நல்ல மனிதர்களாக ஆக்கினால் மட்டுமே பயன் மிகுந்ததாக இருக்கும்.

(Excerpt from the book 'Teacher and Child' by by Dr. Haim Ginott, Child Psychologist and Author)

தமிழில் : சுப்ரமண்ய செல்வா #செல்வாசகம்

வியாழன், 13 ஏப்ரல், 2017

Love at Dusk of Life

HE:
Not a blossom that just bloomed
But a bundle of hay that's  doomed
Her frame;
Nor her gait zesty parade 
For anile  she is  who totter
Nor her face moon-like and nice
More of arid plains; sunken eyes.
Yet happy I am; you may ask why
For alive she is that is why.

SHE:
Wane may my hands of righteous deeds
Wane may my ears that loudly heard
Wane may my legs that walked hard
Wane may my eyes that clearly viewed 
Yet wane won't my heart's might 
that bears my beloved knight. 

Original Poem in Tamil By: Bharathidasan  / Tamil Translation: Subramanya Selva

Published:  Daily News 12/07/2017

பாரதிதாசன் அவர்களின் மூலக்கவி ('குடும்ப விளக்கு' நெடுங்கவிதையின் ஒரு பகுதி)

புதுமலர் அல்ல; காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
தள்ளாடி விழும் மூதாட்டி
மதியல்ல முகம் அவட்கு
வறள்நிலம்! குழிகள் கண்கள்!
எது எனக்கின்பம் நல்கும்?
'இருக்கின்றாள் ' என்ப தொன்றே!
 ***********
அறம்செய்த கையும் ஓயும்
மக்களை அன்பால் தூக்கிப்
புறம்போன காலும் ஓயும்!
செந்தமிழ்ப் புலவர் சொல்லின்
திறம்கேட்ட காதும் ஓயும்!
செயல்கண்ட கண்ணும் ஓயும்!
மறவனைச் சுமக்கும் என்றன்!
மனம்மட்டும் ஓய்தலில்லை


வெள்ளி, 23 டிசம்பர், 2016

தீராக்கடன்

ஐயாயிரம் புத்தம் புது விடியல்கள்
ஒரு கோடி பனிச்சொறியும் புது மலர்கள்
ஐயாயிரம் பொன் போர்த்திய அஸ்தமனங்கள்
ஒரு கோடி சில்லிட்ட பனித் திரள்கள்
ஐந்து அமைதிமிகு நண்பர்கள்; ஒரு குழந்தையின் நேசம்
மேலே ஒரு வெண்மேகக் கடல்
ஒரு நூறு இசை உலவும் கனவுகள்
நிலவொளியில் நனைந்த பாதைகள்; விரைந்தோடும் சிற்றோடை
நறுமணக் காட்டில் ஓரு ஜுன் இரவு
அன்பு செய்கிற… புரிந்துகொள்கிற ஒரு இதயம்
அன்று காலை விழித்த வேளை நான் வியந்தேன்
இறைவா…!
எப்படி நான் இந்த கடனை அடைப்பேன்?

மூலம்: Courtland W. Sayers
தமிழாக்கம்:  சுப்ரமண்ய செல்வா

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

எண்ணங்கள்

எண்ணங்களே எமை வார்த்தன
எண்ணங்களே எமை உருவாக்கின
கள்ள மனமுடையோனை துன்பம் தொடர்கிறது
காளைதனை தொடரும் வண்டிபோல்
நல்ல மனமுடையோனை இன்பம் தொடர்கிறது
சொந்த நிழலை போல்... சர்வ நிச்சயமாக.

மூலம்:  James Allen's "As a Man Thinketh"
தமிழில்:  சுப்ரமண்ய செல்வா

சனி, 12 டிசம்பர், 2009

வாழ்க்கையின் மகத்துவமான சின்னச் சின்ன சந்தோஷங்கள்

பிரபல இந்திய ஊடகவியலாளர் அனிதா பிரதாப் எழுதிய 'The Island of Blood' புத்தகத்திலிருந்து சில பகுதிகள் (தமிழாக்கம்: சுப்பிரமண்ய செல்வா) 

சில நேரங்களில் நான் வியக்கிறேன்.  என் வாழ்நாளில் நான் பார்க்காதது ஏதும் உண்டா? கால்கள் சிதறிய சின்னஞ் சிறார்கள்... சிதைந்த உடல்கள்... தலையற்ற உடல்கள்... உடலற்ற தலைகள்... எரியும் தசைகள்... இரத்தம் சொட்டும் கத்திகள்...

என் வாழ்நாளில் நான் எண்ணற்ற உடல்களை பார்த்திருக்கிறேன்.  வன்செயல் கட்டவிழ்ந்த வீதிகளில், பூகம்பம் உலுக்கிய நகரங்களில், சூறாவளி தாக்கிய கிராமங்களில், லொறிகளில் அடுக்கிய... பாதையோரங்களில் கிடத்திய... வைத்தியசாலைகளில் நிறைந்து  வழியும்...மனித உடல்கள்.

இவ்வித அசாதாரண நிகழ்வுகளுடனான இடைவிடாத தொடர்புகள் என்னுள் ஏற்படுத்திய பக்கவிளைவுகள் பற்பல.  வெள்ளை மலர்கள், மஞ்சள் விழிகள் போன்ற ஆபத்தற்ற விடயங்கள் மீது கூட என்னுள் அர்த்தமற்ற, ஆனால் ஆழமான வெறுப்பு உண்டாயிற்று.  சில வேளைகளில் பிரகாசமான ஒளியில், ஏன் சாதாரண புன்னகையில் கூட அர்த்தமின்றி நான் அதிர்ந்து போகிறேன்.

ஆனால் பன்முகப்பட்ட இந்த அனுபவங்களால் உலகம் ஒரு பொருட்டாக கருதாத பல சின்னச் சின்ன சந்தோசங்களின் உன்னதத்தை நான் உணர்ந்து கொண்டேன்.  பலருக்கு இவை சுவாரசஸ்யமற்ற  சர்வ சாதாரணமானவை.  ஆனால் நான் இந்த சின்னச் சின்ன சந்தோசங்களை நன்றியோடு நினைத்துக் கொள்வேன்.  அவை என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றன.  புதிய சூழ்நிலைகளை புத்துணர்ச்சியோடு முகம் கொடுக்க உதவுகின்றன.

சின்னச் சின்ன சந்தோசங்கள்... ஆம், முதல் முதலாய் பனிமழை பெய்வதை பரவசத்தோடு பார்த்து நின்ற அனுபவம் போன்று.  (ஓ... அந்த வெண்பனிக் கட்டிகள் ஆடி... அசைந்து... மெதுவாய்... மிக மெதுவாய்... ஆகாயத்திலிருந்து கீழிறங்கி தரையை முத்தமிடும் அற்புதத்தை ஆச்சரியத்தோடு பார்த்து நின்றேன்.)  அப்பொழுது எனக்கு வயது நாற்பத்து  ஒன்று.

சின்னச் சின்ன சந்தோசங்களை நான் மதிக்கக் கற்றுக் கொண்டேன்.  ஏனெனில், ஊடகவியலாளர் என்ற முறையில் எனது ஒவ்வொரு அனுபவங்களும் வாழ்க்கை எத்தனை நிச்சயமற்றது, கொடியது, பாழாகக் கூடியது என்பதை எனக்கு உணர்த்தின.

1996ஆம் ஆண்டு மே மாதம் ஒரு நாள்.  திரையரங்கு ஒன்றில் படம் பார்த்துக் கொண்டு இருந்தேன்.  கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பின் நான் திரையரங்கில் பார்க்கும் முதல் படம்.  எனது செல்போன் சிணுங்கிற்று.  எழுந்து வெளியே வந்து பேசினேன்.  கெட்ட செய்தியொன்று.  மத்திய டெல்லியில் லாஜ்பட்  என்னும் இடத்தில் குண்டு ஒன்று வெடித்துவிட்டதாம்.  இனி படம் பார்த்த மாதிரிதான்.  நான் காரில் ஏறி புயல் வேகத்தில் ஸ்தலத்திற்கு விரைந்தேன்.

கோரமான காட்சி அது.  கொடிய தீயின் கோரப்பிடியில் கட்டிடங்கள்.  வளைந்து நெளிந்த இருப்புத் தூண்கள்.  உடைந்து நொறுங்கிய பொருட்கள்.  சிதறிய, துண்டாடிய மனிதர்கள்.  சிலர் இறந்தும், இன்னும் சிலர் இறந்து கொண்டும்.  வலி தாளாத கதறல்கள்.  இடிபாடுகளில் சிக்குண்டு காப்பாற்றக் கெஞ்சும் அவலக் குரல்கள். போராடும் தீயணைப்புப் படையினர்.  பொதுமக்களை தூர விலகிப் போகும்படி கத்தும் பொலிசார்.  நான் ஸ்தம்பித்துப் போய் நின்றேன்.

"ஐயோ மகளே... நான் உன் பேச்சைக் கேட்டு நாளை கடைக்கு வந்திருக்கக் கூடாதா... நீ உயிருடன் இருந்திருப்பாயே... மகளே.. நீயின்றி இனி நான் எப்படி உயிருடன் இருப்பேன்...?" ஒரு நடுத்தர வயதுப் பெண் மார்பில் அடித்துக் கதறிக் கொண்டிருந்தாள்.  அவள் மடியில் ஒரு சிதைந்த அழகிய இளம்பெண்.  சுற்றிலும் கருகிய பைகளில் சிதறிக் கிடக்கும் பொருட்கள்.  சில நிமிடங்களுக்கு முன் துள்ளலுடன், நீண்ட கூந்தலுடன், ஆப்பிள் கன்னங்களுடன் - இன்னும் சில நாட்களில் மணப்பெண்ணாகப் போகும் பரவசத்துடன் - இளமையின் விளிம்பில் நின்ற பெண் அவள்.  அந்தத் தாய் திருமண வேலைகளை சீக்கிரம் முடிக்க வேண்டுமென அவசரப்பட்டு இன்று கடைவீதி வந்திருக்கிறாள்.

யோசித்துப் பாருங்கள்.  அந்தத் தாய் இனி என்றேனும் பழைய மாதிரி சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?  அவளின் காயங்கள் எப்படி, எப்பொழுது ஆறும்?

சிந்தித்துப் பார்கிறேன்.  நாம் அலட்டிக் கொள்ளும் நம் பிரச்சினைகள் எவ்வளவு சிறியவை?  எவ்வளவு அற்பமானவை?  எவ்வளவு அர்த்தமற்றவை?  தாள முடியாத வெட்க உணர்வு என்னை ஆட்கொண்டது.  சற்றுமுன் திரைப்படம் தடைபட்டபோது என்னுள் ஓடிய எண்ணங்கள் நினைவுக்கு வந்தன.  'சே... என்ன இது... என்னால் நிம்மதியாக ஒரு படம் கூடப் பார்க்க முடியாதா...?  என்ன வாழ்க்கை இது...?'  ஆத்திரத்தில், துக்கத்தில் புலப்பித் தீர்த்தேனே.

துக்கம்!  அந்த வார்த்தையை பிரயோகிக்க எனக்கு என்ன அருகதை இருக்கிறது?  இதோ இந்தத் தாய் சற்றுமுன் ஜீவனுடன் ஜொலித்த தன மகளின் உடலை மடியில் கிடத்திக் கதறுகிறாளே, இந்தத் துக்கத்தின் முன், இந்த வேதனையின் முன் எனது துக்கம் எத்தனை அற்பமானது?  கதறியழும் அந்தத் தாயின் முகத்தை ஜீவனற்று வெறிக்கும் அந்து பெண் நானாகக் கூட இருந்திருக்கலாம்.  அல்லது துண்டு துண்டான என் மகனை கையிலேந்தி கதறும் தாயாகக் கூட நான் இருந்திருக்கலாம்.  எனக்கு அந்த வேதனையை,  வலியைத் தராத கடவுளுக்கு நெஞ்சம் நெகிழ நன்றி சொன்னேன்.

எனது அனுபவங்கள், பல சர்வ சாதாரணமான விஷயங்களைக் கூட பொக்கிஷங்களாகப் பேணும் பக்குவத்தை எனக்கு தந்திருக்கின்றன.  நானும், என்னை நேசிப்போரும், என்னால் நேசிக்கப்படுவோரும் உயிருடன் இருப்பதையிட்டு நான் சந்தோசப்படுகிறேன்.  பலர் உறவுகளின் பெறுமதியை அவற்றை இழந்த பிறகுதான் உணர்கிறார்கள்.  வருந்துகிறார்கள்.  சுய பச்சாதாபப்படுகிரார்கள்.  ஆனால் அப்போது காலம் கடந்துவிட்டிருக்கும்.

இதுதான் வாழ்க்கை.  இதுதான் யதார்த்தம்.  மரணம் என்பது எவ்வளவு சடுதியானது, எவ்வளவு கொடுமையானது, எப்படி எல்லாவற்றையும் ஒரே கணத்தில் மாற்றிவிடும் வல்லமை கொண்டது என்பதை நீங்கள் உணர்ந்தீர்களானால், வாழ்க்கை என்பது எவ்வளவு பெறுமதியானது, எத்துணை அற்புதமான கொடை என்பதை உணர்வீர்கள்.  அதனை பொக்கிஷமாய் பேண வேண்டியதின் அவசியம் புரியும்.  உறவுகளின் உன்னதம் புரியும்.  வாழ்க்கையின் சின்னச் சின்ன சந்தோசங்களின் மகத்துவம் புரியும்.

(நன்றி: தினக்குரல்)
நன்றி: வீரகேசரி வார வெளியீடு (24.02.2019)