புதன், 28 ஜூன், 2023

வீடு மாறுதல்


நேற்று மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போது முன்னே சென்று கொண்டிருந்த சரக்குந்து (lorry) வீட்டுப் பாவனை பொருட்களால் நிறைந்திருந்தது. குளிர்சாதன பெட்டி, துணி துவைக்கும் யந்திரம், கட்டில், மெத்தை நாற்காலிகள், பூந்தொட்டிகள், ஒரு ஆரஞ்சு நிற கூடைப்பந்து, அட்டைப் பெட்டிகளில் அடைத்த மற்றும் பிற பொருட்களோடு அந்த வண்டி ஆடி அசைந்து கனத்த மனங்களின் நினைவுகளையும் சுமந்து செல்வது போல் தோன்றியது.

வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இது ஒரு வாடிக்கையான நிகழ்வு என்றாலும் வீடு மாறுதல் என்பது பெரும்பாலும் ஒரு வலி மிகுந்த அனுபவம். வேரூன்றிய மரம் ஒன்றை பிடுங்கி வேறு ஒரு இடத்தில் நடுவது போன்றது.

வீடு மாறுதலின் முதல் இழப்பான அயலவர்கள் நம் வாழ்வில் அசைக்க முடியாத ஒரு அங்கம். அவசரத்திற்கு சமையல் பொருட்களை பரிமாறிக் கொள்வதிலிருந்து ஆபத்து நேரங்களில் கை கொடுப்பது வரை நமது வாழ்வில் அவர்களின் பங்கு அளப்பரியது. எங்கோ இருக்கும் உறவுகள் எல்லோரும் பிறகு தான் வந்து சேர்வார்கள். நமது இன்பம், துன்பம், கொண்டாட்டங்கள் என பலவற்றையும் பகிர்ந்து கொள்ளும் அவர்கள் பல வேளைகளில் உறவினர்களை விடவும் நெருக்கமானவர்களாக இருப்பார்கள். வீடு மாறும் போது அப்படிப்பட்டவர்களை பிரிந்து சென்று மீண்டும் புதிய சூழலில் புதிய வாழ்வை ஆரம்பிப்பது அத்தனை எளிதன்று. பெரியவர்களுக்கு மட்டுமின்றி இளையவர்களுக்கும் இது சவால்களும், சங்கடங்களும் நிறைந்த அனுபவம்.

வீடு மாறுதல் பற்றி நா. முத்துக்குமார் அவர்கள் எழுதிய நெஞ்சைத் தொடும் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

- நா. முத்துக்குமார் -

ஒவ்வொரு முறை 
வீடு மாற்றும் போதும் 
இழந்து விடுகிறோம் எதையாவது

பாட்டிக்கு பாக்குவெட்டி
தம்பிக்கு
தீப்பெட்டி படங்கள்
கிழித்து ஒட்டி வைத்த 
கட்டுரை நோட்டு

அப்பாவுக்கு 
ஆபீஸ் போக வசதியாய்
அருகிலேயே பேருந்து

எனக்கு
ஆடு சதை தெரிய கோலம் போடும்
எதிர் வீட்டுப் பெண் மற்றும்
கம்யூனிசம் முதல் 
காமசூத்திரம் வரை பேசும்
டீக்கடை நண்பர்கள்

இம்முறை கவனமாய் 
போனவாரம் நட்ட 
ரோஜாச்செடி முதல்
மாடியில் காய வைத்த 
உள்ளாடை வரை எடுத்தாயிற்று

என்றாலும் 
ஏதோ ஒன்றை 
மறந்த ஞாபகம்

சோற்றுக்கு வரும் நாயிடம் 
யார் போய் சொல்வது
வீடு மாறுவதை?
-----------------------------------
இந்த நாளும் இனிய நாளாகட்டும்!
என்றும் அன்புடன்
 / சுப்பிரமண்ய செல்வா
28.06.2023


ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

கெட்ட நேரத்துக்குப் பிறகு...

நேற்று மகன் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த திரைப்படத்தின் கடைசி சில காட்சிகளை பார்க்கக் கிடைத்தது. திரைப்படத்தின் பெயர் 'நேரம்'.  படத்தின் முடிவில் வரும் வசனம் இது:

பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் கதாநாயகன் திரைப்படத்தின் முடிவில் கூறுவது:

(இவ்வளவு பிரச்சினைகளுக்குப் பிறகும்)  "நிம்மதியா ஒரு தம் அடிச்சுக்கிட்டு, மனசுக்கு புடிச்ச பொண்ண நெஞ்சோடு சேர்த்து நான் இங்க நிக்கிறதுக்கு காரணம் என்னன்னா எங்கேயோ யாரோ சொன்னது ஞாபகத்துக்கு வருது...   

'நேரம்'

நேரம் இரண்டு வகைப்படும். ஒன்னு  நல்ல நேரம்.   இன்னொன்னு கெட்ட நேரம்.  கெட்ட நேரத்துக்கு அப்புறம் நல்ல நேரம் வரும்"

ஆம் கெட்ட நேரத்துக்கு பிறகு நல்ல நேரம் நிச்சயம் வரும். அதற்கு அடித்தளமாக இருப்பது நம்பிக்கை.

நம்பிக்கை.  இந்த நம்பிக்கைதான் மனிதர்களின் வாழ்க்கைப் படகு கவிழ்ந்து விடாமல் நங்கூரமிட்டு காக்கிறது.   நாளை அனைத்தும் நலமாக இருக்கும் என்கின்ற நம்பிக்கையே ஒவ்வொரு காலையிலும் எதிர்பார்ப்புடன் கண் விழிக்கச் செய்கிறது.  துவண்டு விடாமல் காரியங்கள் ஆற்றச் செய்கிறது.

ஆங்கில கவிஞர் அலெக்சாண்டர் போப் அவர்களின் ஒரு அழகான கவிதை வரி:

'Hope springs eternal in the human breast. நம்பிக்கை மனித நெஞ்சில் நித்தியமாக துளிர்த்திருக்கிறது.'

நம்பிக்கையே இருண்ட சுரங்கத்தில் எங்கோ தெரியும் ஒரு சிறிய ஒளியை நோக்கி நம்மை நகர்த்திச் செல்லும்  வழிகாட்டி.

அமெரிக்க கவிஞர் எமிலி டிக்கின்சன் அவர்களின் கவிதையில் வருவது போல்

'நம்பிக்கை ஆன்மாவின் கிளையில் அமர்ந்து வார்த்தைகளற்று ராகமிசைக்கும் அழகிய பறவை.  அது பாடுவதை என்றுமே நிறுத்துவதில்லை.'

வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை.  இரவும் பகலும் போல் ஏற்றமும் இறக்கமும் வாழ்க்கையில் மாற்ற முடியாதது.  ஒவ்வொரு அஸ்தமனமும் இன்னொரு விடியலுக்கான வாக்குறுதி.

நமது தற்போதைய நிலையை உற்றுப் பார்த்து, நாம் இந்த இடத்துக்கு  வந்து சேர்ந்ததற்கான காரணங்களை நன்கு ஆராய்ந்து, நமது எண்ணங்களை, செயல்களை, சூழ்நிலையை மாற்றி அமைப்பதன் மூலம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குகின்ற வல்லமை நம் அனைவருக்கும் உண்டு.  நமது தவறுகளை படிப்பினைகளாகவும், பெற்ற அனுபவங்களை படிக்கட்டுகளாகவும் ஆக்கினால் வெற்றியை நிச்சயம் எட்டிப் பிடிக்கலாம்.

மாட்டின் லூதர் கிங் கூறுவது போல்:

'எல்லைக்குட்பட்ட ஏமாற்றங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஆனால் எல்லையற்ற நம்பிக்கையை ஒருபோதும் இழந்து விடக்கூடாது.'

சவால் மிக்க தருணங்களில் நம்பிக்கையை இழப்பது இயல்பு.  ஆனால் நம்பிக்கையை கைவிடாது இறுகப் பற்றிக் கொண்டால், அல்லலுரும் பொழுதுகளில் அது நல்லதொரு துணையாக இருக்கும்.

நாம் நம்பிக்கையை கைவிடாமல் இருக்கும் வரை நம்பிக்கை நம்மை என்றும் கை விடுவதில்லை.

நாளை நலமே விளையும். நம்பிக்கை!

--------------------------
இந்த நாளும் இனிய நாளாகட்டும்!
என்றும் அன்புடன்
சுப்ரமண்ய செல்வா
(02.04.2023)

சனி, 1 ஏப்ரல், 2023

மதிப்பீடுகள் மாறினால்...

 ஒரு ஆங்கில முதுமொழி இது:

ஒருவரை மதிப்பிடும் முன் அவருடைய காலணிகளில் ஒரு மைல்  தூரம் நடந்து பாருங்கள்.  (Before you judge a man, walk a mile in his shoes).

அந்த காலணிகள் பெரும்பாலும் நமக்கு பொருந்தாமலேயே இருக்கும். சில தளர்வானதாக, சில இறுக்கமானதாக, இன்னும் சில மிகவும் தேய்ந்து போய் அல்லது கிழிந்து போய் அதை அவர்கள் எப்படி அணிகிறார்கள் என்று ஆச்சரியம் தருவதாக இருக்கும்.  

நாம் எப்போதும் பிறரை நமது அளவுகோல்களை வைத்தே மதிப்பிடுகிறோம்.  

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு நாம் முகம் கொடுப்பது போல், எதிர்வினை ஆற்றுவது போல், பிறரும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.  

ஒருவர் கற்ற கல்வி, வளர்ந்த சூழ்நிலை, பெற்ற அனுபவங்கள், சந்தித்த சவால்கள், அவை ஏற்படுத்திய அக மாற்றங்கள் இப்படி பலவித கலவைகளால் ஆனதே ஒருவருடைய ஆளுமை.  எனவே ஒருவருடைய ஆளுமையின் வெளிப்பாடு இன்னொருவரைப் போல் இருப்பது சாத்தியமே இல்லை.  இந்தப் பேருண்மையின் வெளிச்சத்தில் நமது எதிர்பார்ப்பு எவ்வளவு நியாயமற்றது என்பது புலப்படும்.

பிறரின் மனநிலையில் இருந்து சிந்தித்து, ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கு அல்லது செயலுக்கு அவர்களுடைய நியாயத்தை அல்லது அவர்களுடைய உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொண்டால் பெரும்பாலான மனித உறவுச் சிக்கல்கள் இல்லாமல் போய்விடும்.

பிறரின் எண்ணத்தை சரியாக புரிந்து கொண்டால் தப்பான அபிப்ராயங்கள் துளிர் விடாது.

குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் இது மிக மிக அவசியம்.  நம்மீது அன்பு கொண்டோரின் பேச்சு அல்லது செய்கை நம் மீதான உண்மையான அக்கறையின், அன்பின் வெளிப்பாடு என்று ஆழமாக நம்பினால், அவை நமக்கு ஒரு தற்காலிக அசௌகரியத்தை கொடுத்தாலும், அங்கு முரண்பாடுகளுக்கு இடம் இருக்காது.  வாழ்க்கை இனிமை மிகுந்ததாக, அன்பு நிறைந்ததாக இருக்கும்.

மார்க் ட்வெய்ன் அவர்களின் கூற்று ஒன்று:

'வாழ்க்கை மிகக் குறுகியது - இங்கு சண்டைகளுக்கோ, மன்னிப்புகளுக்கோ, பொறாமைகளுக்கோ, பழிசுமத்தல்களுக்கோ நேரமில்லை.  அன்பு செலுத்தலுக்கு மட்டுமே நேரமிருக்கிறது; அதுவும் ஒரு கணப்பொழுது நேரமே!'

--------------------------
இந்த நாளும் இனிய நாளாகட்டும்!
என்றும் அன்புடன் / சுப்ரமண்ய செல்வா
(01.04.2023)

வெள்ளி, 31 மார்ச், 2023

தவறுகள் அவமானங்களா?

எனது நிறுவன பணியாளர்களுடனான  அலுவலக கூட்டங்களில் நான் அடிக்கடி முகம் கொடுக்கும் ஒரு சூழ்நிலை.

எனது எழுத்துகளிலும் பேச்சுகளிலும் எப்போதும் அறிஞர்களின் கூற்றுக்களை மேற்கோள் காட்டுவது வழக்கம்.  கூறுகின்ற கருத்தை வலியுறுத்தி கேட்பவர், வாசிப்பவர் மனங்களில் அவற்றை ஆழப் பதிய வைப்பது அதன் நோக்கம்.

அத்தகைய கூட்டங்களில் நான் கேள்விகள் கேட்பதுண்டு.  உதாரணமாக ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் கூற்று ஒன்றை மேற்கோள் காட்டுவதற்கு முன்பு ஸ்டீவ் ஜாப்ஸ் என்றால் யார் என்று தெரியுமா என்கிற கேள்வி.  அடுத்த சில நொடிகள் அங்கு மயான அமைதி நிலவும்.  அங்கு இருப்பவர்களில் பெரும்பாலோருக்கு  சரியான பதில் தெரிந்திருக்கும்.  ஆனால் கூறத் தயக்கம்.  காரணம் தவறாக கூறி விடுவோமோ, அப்படி தவறாக கூறிவிட்டால் சக பணியாளர்கள் முன் அவமானப்பட்டு விடுவோமோ என்கின்ற அச்சம்.  

இப்படியான சந்தர்ப்பங்களை நம்மில் பலரும் பல சந்தர்ப்பங்களிலும் முகம் கொடுத்திருப்போம்.  இந்த அவசியமற்ற அச்சத்தின் காரணமாக நம் அறிவை, திறமையை வெளிப்படுத்தக்கூடிய  பல சந்தர்ப்பங்களை இழந்திருப்போம்.

இந்த அச்சம் அல்லது தயக்கத்துக்கு காரணம் தவறான பதிலை கூறுதல் அல்லது ஒரு விடயத்தை தவறாக செய்தல் என்பது அவமானத்துக்குரியது என்று சிறு வயது முதல் நம்முள்  ஆழப் பதிந்துள்ள தவறான எண்ணம்.

தவறுகள் அவமானங்கள் அல்ல.  

பலமுறை விழுந்து எழுந்தே நாம் நடக்கப் பழகுகிறோம். 

2774 தடவை தோல்வி அடைந்த பின்பே மின் விளக்குக்கான சரியான வரைபடத்தை அடைந்ததாக தாமஸ் அல்வா எடிசன் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு கண்டுபிடிப்புகளில் அவருடைய தோல்விகளைப் பற்றி அவரிடம் கேட்டபோது அவர் கூறிய பதில்:

"நான் பத்தாயிரம் முறை தோல்வியடையவில்லை.  சரியாக வேலை செய்யாத பத்தாயிரம் வழிகளை நான் வெற்றிகரமாக கற்றுக் கொண்டேன்."

தவறுகளே நமக்கு சரியானவற்றை கற்றுத் தரும் சிறந்த ஆசான்கள்.  எதுவும் செய்யாமல் இருப்பதை விட தவறாக ஒன்றை செய்வது சாலச் சிறந்தது.

பொதுவாக தனிமையில் செய்யும் தவறுகளையிட்டு நாம் அவமானப்படுவதில்லை.  ஆனால் அதே தவறை பிறர் முன் செய்யும்போது, அதனை நாம் அவமானமாக கருதுகிறோம்.  காரணம் நாம் குறைவாக மதிப்பிடப்படுவோம் என்கின்ற அச்சம்.  ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் எப்போதும் நம்மை நாம் சரியானவராக, பிழையற்றவராக காட்டிக் கொள்ள வேண்டும் என்கின்ற எமது ஈகோவின் உந்துதல் அது என்பது புரியும்.

இந்த மனநிலையிலிருந்து வெளி வந்தால் மாத்திரமே நம்மில் நேர்மறை மாற்றமும், வளர்ச்சியும் சாத்தியமாகும்.

எப்படி வெளிவருவது?

இந்த உலகில் எவரும் குறையற்றவர்களாக, முழுமையானவர்களாக இல்லை  என்கின்ற பேருண்மையை முழுமையாக உணர்ந்து கொள்வது.  நாமும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்பதை உணர்ந்து பிறர் முன் நாம் செய்யக்கூடிய தவறுகளையிட்டு நாம் படக்கூடிய அவமானத்தை காற்றில் கரைய விடுவது.

அடுத்த முறை அச்சமின்றி சொல்லலாம் ஒரு பிழையான பதிலை.  தயங்காமல் செய்யலாம் ஒரு தவறை. பல சந்தர்ப்பங்களில் நாம் நினைப்பது போல் அவை தவறாகவே இருக்காது என்பதுதான் ஆச்சரியமிகு உண்மை.

--------------------------
இந்த நாளும் இனிய நாளாகட்டும்!
என்றும் அன்புடன்
சுப்ரமண்ய செல்வா
(31.03.2023)

வியாழன், 30 மார்ச், 2023

கேள்விகளின் மகத்துவம்

 வளர்ச்சியை வசப்படுத்துவது எப்படி என்று நேற்று சிந்தித்தோம்.

ஆவல் மிக்க மனது தேடல் மிக்க மனிதர்களை உருவாக்குகிறது.  தேடலின் மூலம் வளர்ச்சி வசமாகிறது.

ஆர்வம் மிக்க மனதுக்கு அடிப்படையாய் இருப்பது கேள்விகள். கேள்விகளே ஆவலைத் தூண்டுகின்றன.  கேள்விகளே வளர்ச்சி பயணத்தின் கலங்கரை விளக்கங்கள்.

கற்கால மனிதனை தற்கால மனித நிலைக்கு உயர்த்தியிருப்பது கேள்விகளே.   காடு அதுவாக பற்றியெரிந்த பின் கிடைக்கும் விலங்குகளின் மாமிசம் சுவையாக இருக்கிறதே,  நெருப்பை எப்படி உருவாக்குவது? மீனைப் போல் நீந்தி வெகு தூரம் நீரில் நம்மால் ஏன் பயணிக்க முடியாது? ‌ பறவையைப் போல் எம்மால் ஏன் பறக்க முடியாது?  பகலைப் போல் இரவிலும் வீட்டுக்குள் எப்படி வெளிச்சத்தை கொண்டு வருவது? பல நூறு மைல்களை களைப்பின்றி எப்படி கடப்பது?  இப்படியாக அனைத்து அறிவியல் வளர்ச்சிக்கும் அடிப்படை காரணமாக இருப்பது ஏன்? எப்படி? என்னும் கேள்விகள்.

கிரேக்க மெய்யியலாளர் சாக்ரடீஸ் அவர்களின் கூற்று ஒன்று:

'ஆய்வுக்கு உட்படுத்தப்படாத (நமக்கு நாமே கேள்விகள் கேட்டுக்கொள்ளாத) வாழ்க்கை வாழத் தகுதியற்ற வாழ்க்கை'

கேள்விகள் கேட்பதன் மூலம் மாணவர்களின் அறிவுத்திறனை அதிகரிக்கலாம் என்று அறிந்து அதனை தனது கற்பித்தல் முறையாக நடைமுறைப்படுத்தியவர் பேராசான் சாக்ரடீஸ்.  அது இன்றும் 'Socratic Questioning' என்று அறியப்படுகிறது.

கேள்விகள் மனித வளர்ச்சியின் இன்றியமையாத அங்கம்.  அவை நம்மையும், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தையும் நன்கு புரிந்து கொள்ள வெகுவாக உதவுகின்றன. நாம் எதிர்கொள்ளும் தடைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக முன்னேற அவை நமக்கு கைகொடுக்கின்றன.

நாம் கேட்கும் கேள்விகளே நமது வளர்ச்சியையும், நமது உயர்வையும் தீர்மானிக்கின்றன.  

பிரெஞ்சு அறிவொளி இயக்க எழுத்தாளர் வோல்டயர் அவர்களின் கூற்று ஒன்று:

'ஒரு மனிதரை அவரது பதில்களை காட்டிலும் அவருடைய கேள்விகளைக் கொண்டு மதிப்பிடுங்கள்'

நாம் கேட்கும் கேள்விகள் நமது ஆர்வத்தையும் புதியவற்றை,  கற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற திறந்த மனதையும், வளர வேண்டும் என்கின்ற விருப்பத்தையும் வெளிப்படுத்துகின்றன.   

நாம் முகம் கொடுக்கும் மனிதர்களை, சூழ்நிலைகளை,  அறிந்து கொள்ளும் புதிய விடயங்களை அவற்றின் முக மதிப்பைக் கொண்டு ஏற்றுக் கொள்ளாமல், கேள்வி கேட்பதை நமது தன்னியல்பாக மாற்றிக் கொண்டால் வளர்ச்சி நிச்சயம்.

--------------------------
இந்த நாளும் இனிய நாளாகட்டும்!
என்றும் அன்புடன் / சுப்ரமண்ய செல்வா
(30.03.2023)

புதன், 29 மார்ச், 2023

வளர்ச்சியை வசப்படுத்திக் கொள்வது எப்படி?

 அக வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவை அவாமிக்க, ஆர்வம் மிக்க  துருவித் தேடி அறிந்து கொள்ள வேண்டும் என்கின்ற உந்துதல் மிக்க மனம். (An inquisitive mind).

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் கூற்று ஒன்று:

'என்னிடம் சிறப்பான திறமைகள் எதுவும் இல்லை. என்னிடம் இருப்பது பேரார்வம் மட்டுமே.'

அந்தப் பேரார்வம்தான் அவரை  இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அறிவியலாளராக, இயற்பியலாளராக மாற்றியது.  

ஆர்வம் மிக்க மனம் நம்மை தேடல் மிக்க மனிதர்களாக மாற்றுகிறது.  கேள்விப்படும் அனைத்தைப் பற்றியும் தேடி அறிந்து விரிவான அறிவைப் பெறும் உந்துதலை தருகிறது.

 அப்படி பெறுகின்ற அறிவின் மூலம்  நாம் அனுதினமும் வளர்கின்றோம்.  அத்தகைய வளர்ச்சி நமக்கு அளப்பரிய மனநிறைவைத் தருகிறது.

அறிவுத் தேடலில் வாசிப்பு மிகப்பெரிய பங்கை வகிக்கிறது. பள்ளிகள், கல்லூரிகளுடன் நின்றுவிட்ட கற்றலை வாசிப்பின் மூலமே தொடர முடியும்.

அறிவின் வளர்ச்சியில் கற்றது கைமண்ணளவு என்கின்ற பேருண்மை புரிகிறது.  

மேற்கத்திய தத்துவ மரபின் தந்தை எனக் குறிப்பிடப்படும் சாக்ரடீஸ் அவர்களின் கூற்று ஒன்று:

'எனக்குத் தெரிந்ததெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது என்பதே.'

எனவே தேடல் தொடர்கிறது. வளர்ச்சி வசப்படுகிறது.

இந்த இடையராத வளர்ச்சியின் மூலம் பெற்ற அறிவு, அவற்றை சக மனிதர்களுடன் பகிர்ந்து அவர்களையும் உயர்த்த வேண்டும் என்கின்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அந்த எண்ணத்தின் வெளிப்பாடுதான் எழுத்தாக, பேச்சாக இன்னும் பிற கலைகளாக, இலக்கியங்களாக வடிவெடுக்கிறது.

சாக்ரடீஸுக்கும் முந்தைய  கிரேக்க மெய்யியலாளர் ஹெராக்ளிட்டஸ் அவர்களின் அற்புதமான கூற்று ஒன்று:

'எந்த மனிதனும் ஒரே நதியில் இரண்டு முறை அடியெடுத்து வைப்பதில்லை, ஏனென்றால் அது ஒரே நதி அல்ல, அவன் ஒரே மனிதனும் அல்ல.'

உதாரணமாக இந்தப் பதிவை வாசிக்கத் தொடங்கும் முன் இருந்த நீங்களும் வாசித்த பிறகு இருக்கும் நீங்களும் ஒருவர் அல்லர்.

மனிதரின் அக வளர்ச்சி அத்தகைய நுண்ணிய பொழுதுகளில் நடந்து கொண்டிருக்கிறது.

ஆர்வம் மிக்கவர்களாக, தேடல் மிக்கவர்களாக  இருந்தால் அந்த வளர்ச்சி நம் அனைவருக்கும் சாத்தியம் என்பது மாற்ற முடியாத உண்மை.

--------------------------
இந்த நாளும் இனிய நாளாகட்டும்!
என்றும் அன்புடன் / சுப்ரமண்ய செல்வா
(29.03.2023)

செவ்வாய், 28 மார்ச், 2023

வளரக் கூடாதா?

 மாற்றத்தைப் பற்றி நேற்று எழுதியிருந்தேன்.  மாற்றத்தை போலவே வளர்ச்சியையும் நிலையானதாக ஆக்கிக் கொண்டால் (When growth becomes constant) மனிதர் வாழ்வு மதிப்பு மிக்கதாக, அர்த்தமுள்ளதாக மாறும்.

மரம் செடி கொடிகள் என அனைத்தும் வளருகின்றன.  மனிதர்கள் வளராமல் இருந்தால் எப்படி?  ஆனால் அவற்றுக்கும் எமக்குமடையே வளர்ச்சியில் வேறுபாடு இருக்கிறது.  தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும்  வளர்ச்சி புறமட்டத்தில் மாத்திரமே சாத்தியம்.

புறமட்டத்தில் மாத்திரமன்றி அகமட்டத்திலும் வளரக்கூடிய வாய்ப்பு ஆற்றலும் மனிதருக்கு மட்டுமே கிட்டியிருக்கும் பெரும் பேறு.  அந்த அக வளர்ச்சியே அல்லது அந்த அக மாற்றமே ஒரு மனிதரை மற்றவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

நாம் எப்போதும் பிறரை முந்தும் போட்டியிலேயே காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் நாம் முந்த வேண்டியது பிறரை அல்ல நம்மை.

கடந்த வருடத்தை, விட கடந்த மாதத்தை விட, கடந்த வாரத்தை விட, நேற்றை விட, ஏன் கடந்த நிமிடத்தை விட இந்த கணத்தில் நாம் எப்படி வளர்ந்து இருக்கிறோம் என்பதிலேயே எமது வாழ்க்கையின் அர்த்தம் தங்கியிருக்கிறது.  

ஒவ்வொரு நாளின் முடிவிலும் இன்று நாம் எதை சாதித்தோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.  அந்த சாதனை மிகச்சிறியதாகக் கூட இருக்கலாம்.  நம்மில் ஏற்பட்டுள்ள மாற்றம் அல்லது வளர்ச்சி அளவில் சிறியதாக இருக்கலாம். ஆனால் வளர்ச்சி ஏதாவது ஒரு வகையில் இருந்தேயாக வேண்டும்.

ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் கூற்று ஒன்று:

"நிறைய பணம் சம்பாதித்து பெரும் செல்வந்தனாக கல்லறைக்கு செல்வதை விட ஒவ்வொரு நாளும் 'இன்று மகத்தான ஒன்றை சாதித்தோம்' என்ற மனநிறையுடன் இரவு உறங்கச் செல்வதுயே நான் விரும்புகிறேன்"

தண்ணீர் தேங்கி இருக்கும் ஏரியை விட ஓடும் நதிக்கே உயிர்ப்பு அதிகம். 

அதுபோல் தொடர்ந்து வளரும் மனிதரின் வாழ்வே உயிர்ப்பு மிக்கதாக, ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சி மிக்கதாக இருக்கும்.

அந்த வளர்ச்சியை எப்படி வசப்படுத்திக் கொள்வது?

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

--------------------------

இந்த நாளும் இனிய நாளாகட்டும்!
என்றும் அன்புடன் / சுப்ரமண்ய செல்வா
(28.03.2023)

திங்கள், 27 மார்ச், 2023

கொடுக்கலாம் இன்னும் ஒரு வாய்ப்பு

 "மாற்றம் ஒன்றே வாழ்க்கையில் நிலையானது" (Only change is constant in life) - ஈராயிரத்து ஐந்நூறு  வருடங்களுக்கு முன்பு கிரேக்க தத்துவஞானி ஹெறக்லிடஸ் மொழிந்த மகத்தான உண்மை இது.  

உயிருள்ள, உயிரற்ற அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கின்றன. மனிதர்களும் மாறுகிறார்கள். காலம் மனிதருள் ஏற்படுத்தும் மாற்றம் மகத்தானது.  கடக்கும் ஒவ்வொரு கணமும் மனிதர்கள் முகம் கொடுக்கும் அனுபவங்கள், அவர்களுடைய எண்ணங்களில், நம்பிக்கைகளில், ஆளுமையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே கடந்து செல்கிறது.

ஆனால் அந்த மாற்றம் ஓர் இரவில் நடப்பதில்லை.  அது மிக மிக மெதுவான பயணம்.

 வாழ்வின் அனுபவங்கள் மனிதர்களை முதிர்ச்சி மிக்க புதிய மனிதர்களாக மாற்றுகிறது.  அந்த முதிர்ச்சி அவர்களை வாழ்க்கையை, மனிதர்களை, சூழ்நிலைகளை புதிய கண்கொண்டு பார்க்கும் வல்லமையை கொடுக்கிறது.  பிறரை அன்புடன், அனுதாபத்துடன், கருணையுடன், அவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொண்டு அணுகும் ஆற்றலை அவர்கள் பெறுகிறார்கள்.  ஒவ்வொருவருக்கும் இருக்கக்கூடிய தனிப்பட்ட உணர்வுகளை, அவர்களுடைய போராட்டங்களை புரிந்து கொள்ள முயல்கிறார்கள்.

தங்களுடைய கடந்த காலத்தைப் பற்றி எண்ணிப் பார்க்கிறார்கள்.  அதில் விட்ட தவறுகளுக்காக வருந்துகிறார்கள்.  அவற்றுக்காக பரிகாரம் செய்ய முயல்கிறார்கள். தங்களுக்குள் ஏற்பட்டுள்ள நேர்மறை மாற்றத்தை வெளிப்படுத்த வாய்ப்பு தேடுகிறார்கள்.

எனவே ஒருவர் என்றோ சொன்ன ஒரு சொல்லுக்காக, செய்த ஒரு செயலுக்காக இன்றும் அவர்களை வெறுப்பது சரியா என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். 

ஒருவருடைய கடந்த கால தவறுகளை  வைத்து அவரை மதிப்பீடு செய்யாமல்  அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுப்பது அவசியமாகிறது. மனதால் மாற்றம் பெற்ற ஒவ்வொரு மனிதரும் அந்த வாய்ப்புக்கு தகுதியானவர்கள். காலம் எல்லா காயங்களையும் ஆற்றும். பிரெஞ்சு கவிஞர் ஜீன் டி லா ஃபொன்டைனே கூறியது போல் "காலத்தின் சிறகுகளில் சோகங்கள் பறந்து போகும்".  அந்த வாய்ப்பை தர காலம் இன்னும் கடந்து விடவில்லை என்பதை கருத்தில் கொள்வோம்.

தயக்கத் தடையை கடந்து, அப்படி நாம் கொடுக்கும் ஒரு வாய்ப்பின் மூலம், பட்ட மரம் மீண்டும் துளிர்ப்பது போல், பிரிந்த ஒரு உறவு மீண்டும் இணைந்து, வாழ்க்கையை மேலும்  மகிழ்ச்சி மிக்கதாக, கொண்டாட்டம் மிக்கதாக மாற்ற முடியும் என்பதை மனதில் கொள்வோம்.

--------------------------
இந்த நாளும் இனிய நாளாகட்டும்!
என்றும் அன்புடன் / சுப்ரமண்ய செல்வா
(27.03.2023)

திங்கள், 12 ஜூலை, 2021

என்ன செய்யப்போகிறோம்?

'வாழ்க்கை மிகக் குறுகியது - இங்கு சண்டைகளுக்கோ, மன்னிப்புகளுக்கோ, பொறாமைகளுக்கோ, பழிசுமத்தல்களுக்கோ நேரமில்லை.  அன்பு செலுத்தலுக்கு மட்டுமே நேரமிருக்கிறது; அதுவும் ஒரு கணப்பொழுது நேரமே!'      - மார்க் ட்வெய்ன் -

எத்தனை பெரிய உண்மை!

என்று தொடங்கியது இந்தக் காலம்? என்று முடியும்? ஆதியும் அந்தமும் அறியாத இந்த காலத்தின் நிகரற்ற நீட்சியில்  சின்னஞ்சிறு நுண் பொழுதே நம் வாழ்க்கை.  மனித ஆயுள் என்னும் அந்த  நுண் பொழுது நிமிடங்கள்,  மணித்தியாலங்கள், நாட்கள்,  வாரங்கள், மாதங்கள், வருடங்கள் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைந்துவிடுகிறது.  சில தினங்களுக்கு முன் 98 வயதில் ஒரு நடிகர் மறைந்தார்.  சில மாதங்களுக்கு முன் 50 வயதில் வேறொரு நடிகர் மறைந்தார்.  காலத்தின் கணக்கு யாராலும் புரிந்துகொள்ள முடியாது பெரும் புதிர்.

அந்த நுண் பொழுதின் பெரும்பகுதியை எப்படிக் கழிக்கிறோம்?

'அன்பு செலுத்துவதிலா,
வன்மம் வளர்ப்பதிலா?
சண்டை சச்சரவுகளிலா,
சமரச சகவாழ்விலா?
துன்பம் தருவதிலா,
துன்பம் போக்குவதிலா?
அலைகழிக்கும் மனதுடனா,
அமைதியின் அரவணைப்பிலா?'
என்பதில் தங்கியிருக்கிறது எமது இருப்பின் அர்த்தம்.

பாரதி கேட்பதுபோல்,

'தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே'

வீழ்ந்து விடைபெறுவதா நம் வாழ்வின் நோக்கம்? சிந்தித்து விடை காண வேண்டிய கேள்வி.

- சுப்ரமண்ய செல்வா -    #செல்வாசகம் 


அண்மையில் வெளிவந்துள்ள எனது புதிய நூல்கள் கீழ்காணும் இணைப்புகளில் கிடைக்கும்:

அகவரிகள் (பாகம்-1)
வாழ்க்கை திசைகாட்டி

https://notionpress.com/read/agavarigal

எண்ணம் என்ன செய்யும்?
மின்னூல் / eBook

Pustaka Digital Media
https://www.pustaka.co.in/home/ebook/tamil/ennam-enna-seyyum
Amazon India
https://www.amazon.in/dp/B0983KGBYT
Amazon International
https://www.amazon.com/dp/B0983KGBYT
Google Books
https://play.google.com/store/books/details/Subramanya_Selva_Ennam_Enna_Seyyum?id=1Pg1EAAAQBAJ
Scribd
https://www.scribd.com/book/513916259/Ennam-Enna-Seyyum

வியாழன், 1 ஜூலை, 2021

வார்த்தைகள் போதும்

தனது மகனின் அண்மைய சாதனையொன்றை நண்பர் ஒருவர் வாட்ஸ்அப் வழியாக பெருமையுடன் பகிர்ந்திருந்தார்.  முகம் தெரியாத அந்த மகனுக்கு அகம் நிறைந்த வாழ்த்துச் செய்தி ஒன்றை பதிலாக அனுப்பிவிட்டு இந்தப் பதிவை எழுதுகிறேன்.  பதினாறு வார்த்தைகளே கொண்ட அந்த வாழ்த்து நண்பரின் மனதில் எத்துணை மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும், மகனுக்கு எவ்வளவு உற்சாகம் தந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன்.

வார்த்தைகள் வெறும் வார்த்தைகளல்ல!

அவற்றை நாம் இலவசமாகத்தான் கொடுக்கிறோம்.  ஆனால் அவை மற்றவர்களில் ஏற்படுத்தும் மாற்றங்கள் மகத்தானவை.

ஒரு நோயுற்றவரின் வலியை, துயரை  நம்மால் போக்க முடியாது.  ஆனால் ஒரு நலம் விசாரிப்பு மூலம், ஒரு ஆறுதல் வார்த்தை மூலம் அவர்கள் மனதை மயிலிறகு கொண்டு வருடிவிடலாம்.

ஏதாவது ஒன்றை முயற்சி செய்பவருக்கு நமது உற்சாக வார்த்தைகள் மூலம் உந்துதல் அளிக்கலாம்.

ஒன்றை சாதிப்பவரை பாராட்டி வாழ்த்தி பரவசப்படுத்தலாம்.

மறக்காமல் பிறந்தநாள், திருமண நாள் வாழ்த்து சொல்லி அவர்கள் மகிழ்ச்சியில் பங்கேற்கலாம்.

இப்படியாக நமது வார்த்தைகளை கொண்டு மற்றவர்கள் வாழ்க்கையில் மாயம் புரியலாம்.

ஆனால் நாம் தயங்குகிறோம். தவிர்க்கிறோம்.  தள்ளிப் போடுகிறோம். தள்ளிப் போடுவதால் மறந்துவிடுகிறோம்.

வாட்ஸ்அப் நமது வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்ட இந்தக் காலத்தில் நமது வார்த்தைகளை வழங்க தேவையானதெல்லாம் பெரிய மனதும், சிறிய மெனக்கெடலும் மாத்திரமே.

வார்த்தைகள் மூலம் மற்றவர் மனதை மலர்விக்க நம் எல்லோராலும் முடியும் என்பது எத்துணை பெரும்பேறு!

- சுப்ரமண்ய செல்வா -    #செல்வாசகம்


அகவரிகள் (பாகம்-1) வாழ்க்கை திசைகாட்டி அச்செறியுள்ள எனது இரண்டாவது நூல்.

இங்கு கிடைக்கும்  👇👇👇

https://notionpress.com/read/agavarigal

ஞாயிறு, 27 ஜூன், 2021

மன்னிக்கும் மனம்...


மன்னிப்பு கேட்பதன் அவசியம் பற்றி பதிவிட்ட பிறகு மன்னித்தலின் மாண்பு பற்றி குறள் ஒன்று வாசிக்கக் கிடைத்தது ஒரு இனிய நிகழ்வுப் பொருத்தம்.


ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். (குறள்: 156)

கலைஞர் மு.கருணாநிதி உரை:

தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.

மன்னிப்பது இயலாமையின், பலவீனத்தின் அறிகுறியன்று.  அது வீரத்தின் அறிகுறி.  நமது தன்னம்பிக்கையின் வெளிப்பாடு.

மன்னிப்பு கேட்பவரை மன்னித்து விடுவது மனித குணமென்றால், மன்னிப்பு கேட்காதவரையும் மன்னித்து விடுவது மாமனித குணம்.  

மன்னித்து மறந்துவிட்டவர்களின் வாழ்க்கைப் பயணம் சுமைகளற்ற சுகப்பயணமாக இருக்கும்.

எனது கவிதையொன்று:

மன்னித்துவிடு
===============
வெறுக்கப்படுபவரைவிட 
வெறுப்பவர்க்கே 
வேதனை அதிகம்

வெறுப்புச் சுமை சுமந்து
நடக்கும் வாழ்வு கொடிது

சுமையிறக்கிய பறவையாய்
சுதந்திர வானில்
சிறகடித்துப் பறக்க ஆசையா...?

மன்னித்துவிடு.

மன்னிக்காமல்
மறத்தல் அரிது

முகம் பார்த்து மன்னிக்க 
முடியவில்லையா?
அகம் நிறைந்து மன்னித்துவிடு.

தன்னை தான் வெறுத்தலே
தாளாத சுமை
உன்னையும் சேர்த்து
மன்னித்துவிடு.

விதிவிலக்கல்ல நீ
எல்லா இதய வீட்டுக்குள்ளும்
இறுகப் பூட்டிய
இருண்ட அறைகள் உண்டு

இறந்தகாலம்
இறந்த காலம்
மற.

ஏனெனில் இங்கு
கடந்தகாலமற்ற ஞானியுமில்லை
எதிர்காலமற்ற பாவியுமில்லை.

-  சுப்ரமண்ய செல்வா  -

(தொடுதூரத்தில் விடிவானம் கவிதைத் தொகுதி)

இங்கு கிடைக்கும் 👇👇👇

https://notionpress.com/read/agavarigal



வெள்ளி, 25 ஜூன், 2021

மன்னித்துவிடு(ங்கள்)

 


'மன்னித்துவிடு(ங்கள்)'

எத்தனையோ காயங்களை ஆற்றக்கூடிய, பிரிவுகளை மாற்றக்கூடிய,  இடைவெளிகளை நிரப்பக்கூடிய ஒற்றைச் சொல்.  ஆனால் அதனை உச்சரிப்பதில்தான் எத்தனைத் தயக்கம்!  மனம் விரும்பினாலும் அது வாய்மொழியாவதை தன்முனைப்பு தடுத்து நிறுத்தும்.  

யார் முதலில் சொல்வது என்கிற போட்டியில் ஒரே நாளில் தீரக்கூடிய சிறு சச்சரவுகூட வாரக்கணக்கில், மாதக்கணக்கில், சிலவேளைகளில் வருடக்கணக்கில் நீண்டு தீராத பெரும் பகையாய் உருமாறும்.   

மன்னிப்பு கேட்பதன் அர்த்தம் 'நான் பிழை - நீ சரி' என்பதல்ல; 'நான் சிறியவன் - நீ பெரியவன் என்பதல்ல'.  அதன் அர்த்தம் 'நான் என் தன்முனைப்பைவிட (ego) உன் உறவை அதிகம் மதிக்கிறேன்' என்பதாகும்.

பல வேளைகளில் தவறு நமதாக இருந்தாலும் அதை ஒத்துக்கொள்ளும் போது நாம் பிறரிலும் தாழ்ந்து விடுகிறோம் என்கின்ற தவறான எண்ணம் மன்னிப்பு கேட்பதை தடுக்கின்றது.  நாம் எப்போதும் சரியானவர்கள், தவறு செய்யாதவர்கள் என்று நம்பவே நம் மனது விரும்புகிறது.  இந்த மாயையிலிருந்து வெளிவந்து, மனிதத் தவறுகளுக்கு நாமும் விதிவிலக்கல்ல என்பதை உணர்ந்து, நமது தவறுகளுக்கு தைரியமாக, மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்க முடிந்தால் எத்தனையோ இருகப்பூட்டிய மனக்கதவுகள் அகலத் திறந்து உறவுகள் தொடர்கதையாககும்.  

'மன்னித்துவிடு(ங்கள்)'  எனும் ஒரே வார்த்தையில் மறக்கப்படக் கூடிய தவறுகள் எத்தனை?  உலர்ந்துவிட்ட உறவும் நட்பும் மீண்டும் துளிர்க்கும் வாய்ப்புகள் எத்தனை?  தனிமரம் தோப்பாகாது.  ஒவ்வொரு தனிமனித வாழ்வின் உயர்விலும், தாழ்விலும் உறுதுணையாய் இருப்பது உன்னத உறவுகளும், உயர்ந்த சினேகங்களுமே.  

வாழ்க்கையில் வரப்பிரசாதமாய் கிடைத்த உறவுகளும், நட்புகளும் கைநழுவி போய்விடாமல் 'மன்னித்துவிடு(ங்கள்)'  என்ற ஒற்றை வார்த்தை காக்குமென்றால், நமது ஈகோவை விட்டு அதை உச்சரிப்பதில்தான  என்ன தவறு?  விடை காண வேண்டிய வினா.

- சுப்ரமண்யா செல்வா -  #செல்வாசகம்

https://youtu.be/SRITxY-GPMU

செவ்வாய், 22 ஜூன், 2021

கடமையைச் செய்தால் போதுமா?


இன்றைய காலை வாசிப்பில் சிந்திக்கத் தூண்டிய மூன்று வார்த்தைகள்: 

"போருக்காக போர் புரிவாயாக".

(இன்ப துன்ப, இலாப நஷ்ட, வெற்றி தோல்வி, இவற்றைக் கருதாது போருக்காக போர் புரிவாயாக - கீதை  அத்: 2 பதம்: 38). 

இது ஆயுதம் ஏந்தி புரியும் போருக்கு மட்டுமல்ல, நாம் அன்றாடம் செய்யும் எல்லா செயல்களுக்கும் பொருந்தும். பெறுபேறுகள் பற்றிய சிந்தனையும், எதிர்பார்ப்பும் செயல் மீதான கவனத்தை சிதைக்கும். 

ஸ்டீவ் ஜொப்ஸ் கூற்று ஒன்று நினைவுக்கு வருகிறது.

"உங்கள் கவனம் இலாபத்தில் இருந்தால், நீங்கள் தயாரிக்கும் பொருட்களின் தரத்தின் மீதான கவனம் குறையும். மாறாக உங்கள் கவனம் பொருட்களின் தரத்தில் இருந்தால், இலாபம் தானாக வரும்". 

செயல் நேர்த்தியும், செயல் சிறப்பும் தக்க விளைவுகளை தராமல் போகாது. அதற்குத் தேவை செயல்/தொழில் மீதான பேரார்வம், பெருவிருப்பு (passion).

(தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை. செய்கையின் பயனைக் கருதாதே; தொழில் செய்யாமலுமிராதே. கீதை  அத்: 2 பதம்: 47). 

விளைவுகள் மீது அதிக கவனம் வேண்டாம் என்பதற்கு இன்னொரு காரணம் விளைவுகள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதாகும்.  செயல் நமது கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த செயல் விளைவாக மாறுவதற்கு நமது கட்டுப்பாட்டில் இல்லாத இன்னும் பல காரணிகள் ஏதுவாகின்றன. எனவே நமது கட்டுப்பாட்டில் இல்லாத விடயங்களைப்பற்றி கவலை கொள்வதால் காலவிரயம் தவிர வேறொன்றுமில்லை.  

எந்தச் செயல்/தொழில் தொடங்குமுன் தூண்டுதலையும், ஈடுபடும்போது கிளர்ச்சியையும் (excitement) தருகிறதோ அதுவே பெருவிருப்பத்திற்குரியதாகும். பெறுபேறுகள் பற்றிய சிந்தனையின்றி செயல் தரும் இன்பத்திற்காக செயல் புரிவது. உதாரணமாக இந்தப் பதிவை நான் எழுதும்போதே அது எனக்கு கிளர்ச்சிமிக்கதாகவும், நிறைவு தருவதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறன்றி இது பெறப்போகும் விருப்புகளில் (likes) எனது கவனம் இருந்தால் எழுதுவதில் முழுமையான ஈடுபாடு இருக்காது.  

உங்கள் செயல்/தொழில் அத்தகைய மனநிலையை தரவில்லையெனில் அற்புத வரமான உங்கள் வாழ்க்கையை வீணடிக்கிறீர்கள் என அர்த்தம். செயல் சிறக்க இன்னோரு வழி பற்றற்ற மனநிலை.  

விளைவில்தான் பற்று கூடாது என்றால் செயலிலுமா? அதுவும் பெருவிருப்போடு ஈடுபடும் செயலில் எப்படி பற்றற்று இருப்பது?   'பற்றற்ற' என்பதில் கொஞ்சம் ஆன்மிகம் தூக்கல் என்பதால் 'கருவி' (tool) மனநிலை என்று வைத்துக்கொள்ளலாம்.  கருவி மனநிலை என்பது ஒரு செயலை 'நான் செய்கிறேன்' என்றில்லாமல் அச்செயல் 'என் மூலம் செய்யப்படுகிறது' என்பதாகும்.  'நான் செய்கிறேன்' என்கிறபோது ஈகோ உள்ளே நுழைந்து காரியத்தை கெடுத்துவிடுகிறது.  ஆணவம் கலந்த செயல் உண்மையான நிறைவையும், மகிழ்ச்சியையும் தராது.  கருவி மனநிலையில்  ஒரு செயலில்  பெருவிருப்போடு அதேவேளை பற்றற்று ஈடுபடுதல் சாத்தியம்.  தன் ஊடாக வெளிப்படும் இன்னிசைக்கு புல்லாங்குழல் சொந்தம் கொண்டாடுவதில்லை. 

- சுப்ரமண்ய செல்வா -   #செல்வாசகம்

https://youtu.be/orpxSTl9jlg



சனி, 19 ஜூன், 2021

தப்பெண்ணத்தை மாற்றுவது எப்படி ?


அண்மையில் வந்த கேள்வியோன்று:
ஒருவர் என்மீது கொண்டிருக்கும் தப்பெண்ணத்தை எப்படி மாற்றுவது?

பெரும்பாலான உறவுச் சிக்கல்களுக்கு காரணமாய் இருப்பது தவறான புரிதலால் ஏற்படும் தப்பெண்ணம் அல்லது தப்பபிப்பிராயம்.  தவறான புரிதல்களுக்கு காரணம் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளும்போது ஏற்படும் இடைவெளி (Communication Gap).   சொல்பவர் சொல்ல முற்படுவது ஒன்றாகவும், கேட்பவர் புரிந்துகொள்வது வேறொன்றாகவும் இருப்பது. 

பல வேளைகளில் தவறான வார்த்தைகளால் சரியான நோக்கம்கூட சரிந்துவிடுகிறது. சொல்லும் விதம் தவறாகும்போது சொன்னதனைத்தும் கேட்பவரிடம் சென்றடையத் தவறிவிடுகிறது.

கேட்பவரும் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ள முன்முடிவுகளுடன் செவிமடுக்கும்போது, சொல்பவரின் வார்த்தைகளுக்கு புதுப்புது அர்த்தங்கள் புலப்படுவதுண்டு.  எப்போதும் வார்த்தைகள் சொல்பவருடையவை; அர்த்தங்கள் கேட்பவருடையவை.

தீர விசாரிக்காமல் ஏற்றுக்கொள்ளப்படும் மற்றவர்களின் அபிப்பிராயங்களும் தப்பெண்ணங்களை ஏற்படுத்துவதுண்டு.

சரி,  ஏற்பட்டுவிட்ட தப்பெண்ணத்தை மாற்றுவது எப்படி?

இலகுவான வழி சம்பந்தப்பட்டவரிடம் நேரடியாக மனம் திறந்து பேசுவதுதான்.  பெரும்பாலும் நம் முன் எழுந்து நிற்கும்  நமது ஈகோ என்னும் பெருஞ்சுவர் நம்மை அந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க விடாமல் தடுக்கும்.  தைரியத்துடன் அதனைத் தாண்டிவிட்டால் தீர்வு கிட்டிவிடும் வாய்ப்புகள் அதிகம். சம்பந்தப்பட்டவர் நேரடி உரையாடலுக்கு தயாராக இல்லை என்றால், இருவருக்கும் பொதுவான ஒருவரின் உதவியை நாடலாம்.  அப்போதும் அவர் நமது நகர்வுகளை புறந்தள்ளினால் அப்போதைக்கு அந்த முயற்சியை கைவிடுவதே உகந்தது.  ஏனெனில் நம்மைப்பற்றிய தப்பபிப்ராயங்களை தொடர்ந்து வலிந்து சென்று மாற்றுவது கடினம். அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்தும் உண்டு. நமது தவறு என்று அவர்கள் நினைப்பதை நாம் நியாயப்படுத்த முயலுவதாக கருதப்படலாம். ஒரிருமுறை முயற்சி செய்துவிட்டு காலத்திடம் கையளிப்பதே சாலச் சிறந்தது. காலம் எல்லா காயங்களையும் ஆற்றும்; நம்மை புரிந்துகொள்ளும் பக்குவத்தை அவர்களுக்கு கொடுக்கும். நம் நியாயம் புலப்படும் நாளொன்று வரும்.  அதுவரை காத்திருத்தலே புத்திசாலித்தனம்.

- சுப்ரமண்ய செல்வா -   #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

https://youtu.be/orpxSTl9jlg

வெள்ளி, 18 ஜூன், 2021

அச்சுகள் ஆயிரம்

கைதேர்ந்த அச்சு வார்ப்பவர்கள் நாம். பெற்றோர், பிள்ளைகள், உறவுகள் நண்பர்கள், சக பணியாளர்கள் என நம்மிடம் உறவு கொள்ளும் அனைவருக்கும் விதவிதமான அச்சுகளை  உருவாக்கி வைத்திருக்கிறோம்.  அவர்கள் அனைவரும் நாம் வார்த்து வைத்துள்ள அச்சுகளில் துல்லியமாக பொருந்த வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.  அப்படி நடக்காத பட்சத்தில் ஏமாற்றம் அடைகிறோம்.  இந்தப் புள்ளியில் ஆரம்பமாகின்றன எல்லா உறவுச் சிக்கல்களும்.  

பிறரின் அச்சுகளில் நாம் பொருந்துகின்றோமா என்கின்ற கேள்வியின் பதிலில் எமது எதிர்பார்ப்புகள் எவ்வளவு அர்த்தமற்றவை என்கின்ற உண்மை புரியும்.  

எண்ணூறு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கும் உலக மக்கள் தொகையில் உருவத்தால் ஒருவர் மற்றொருவரை போல் இல்லாத பொழுது உள்ளத்தால் ஒருவரைப் போல் இன்னொருவர் இருப்பது எப்படி சாத்தியம்?   ஒருவருடைய எண்ணம், சொல், செயல் என்பன அவருடைய பிறப்பு, வளர்ப்பு, கல்வி, வாழ்க்கை அனுபவம் என பலவித கலவைகளின் வெளிப்பாடு.  உடன்பிறந்த இரட்டையர்களுக்கு கூட அவை  ஒன்றுபோல் இருப்பதில்லை.  இந்த உண்மையின் வெளிச்சம் எம்முள் படர்ந்தால் நமது எதிர்பார்ப்பு இருள் அகலும்.

நமது அச்சுகளையும் அவை உருவாக்கும் எதிர்பார்ப்புகளையும் ஆழப் புதைத்துவிட்டு, மனிதர்களை அவர்களுடைய இயல்பான பலங்களுடன்,  பலவீனங்களுடன் நிபந்தனையற்று ஏற்றுக்கொள்ள முடிந்தால் எல்லா உறவுத் தொடர்புகளும் அர்த்தமிக்கதாய், நிறைவானதாய் இருக்கும்.

- சுப்ரமண்ய செல்வா -   #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

https://youtu.be/d6dBNwkekaU

புதன், 16 ஜூன், 2021

தொடக்கச் சிக்கல்

நனவாகக் கூடிய எத்தனையோ கனவுகள் நனவாகாமல், அடையக்கூடிய எத்தனையோ வெற்றிகள் அடையப்படாமல், புரியக்கூடிய எத்தனையோ சாதனைகள் நிகழாமல் இருப்பதற்கு காரணம் தொடக்கச் சிக்கல் (starting trouble). 

நம்மால் ஒன்றை சாதிக்க முடியும் என்று நன்கு தெரிந்திருந்தும்  எல்லாம் சரியாக அமையட்டும் என்று காத்திருக்கிறோம்.   தயக்கம் காரணமாக தள்ளிப்- போடுகிறோம்;  அல்லது காரணம் எதுவுமின்றி காலந்தாழ்த்துகிறோம்.

இது சிறிய செயல்களிலிருந்து பெரும் சாதனைகள் வரை அனைத்துக்கும் பொருந்தும்.  உண்மையில் கச்சிதமான தொடக்கம் கச்சிதமான முடிவு என்று எதுவுமில்லை. ஆயிரம் மைல் பயணம் ஒற்றைக்  காலடியில் தொடங்குகிறது.  பயணத்தில் வரக்கூடிய தடங்கல்களை,  சவால்களைப் பற்றி எண்ணிக்-கொண்டிருந்தால் எப்போது பயணத்தை ஆரம்பிப்பது?

நம்மால் காற்றின் திசையை கட்டுப்படுத்த முடியாது.  ஆனால் நமது கப்பலின் பாயை மாற்றிக் கட்டி இலக்கை அடைய முடியும்.

'எண்ணித் துணிதல்' நன்றுதான். ஆனால் எவ்வளவு காலம்தான் எண்ணிக்கொண்டே இருப்பது?  ஏதாவது ஒரு புள்ளியில் தொடக்கம், இடையிடையே சின்னச்சின்ன திருத்தங்கள், மேம்படுத்தல்கள் - இவையே வெற்றிப்பயணத்திற்கான விதிமுறைகள்.

தொடக்கமும், முடிவும் போலவே பயணமும் முக்கியம்.  சென்றடையும் இலக்கைப் போலவே இலக்கை நோக்கிச் செல்லும் வழியில் கிடைக்கும் அனுபவங்களும் பெறுமதியானவை.  

சிலவேளைகளில் சேருமிடத்தை  சென்றடைய  சிறுது நேரம் ஆகலாம்.  ஆனால் அனுபவித்து பயணித்தால் பயணக்களைப்பின்றி இலக்கை அடையலாம்.

- சுப்ரமண்ய செல்வா -    #செல்வாசகம்

Latest YouTube Video

https://youtu.be/d6dBNwkekaU


திங்கள், 14 ஜூன், 2021

வரங்களின் வரிசை

அபரிமித மனநிலை (abundance mentality)  வாழ்க்கையை அழகுமிக்கதாக மாற்றுகிறது.  குறை மனநிலை அல்லது பற்றாக்குறை மனநிலை (lack/scarcity  mentality) வாழ்க்கையை வரட்சிமிக்கதாக  வடிவமைக்கிறது.

இது ஈர்ப்பு விதி. 

எமது எண்ணங்களுக்கு ஏற்ற சூழ்நிலைகளை நாம் உருவாக்குகிறோம்.

எப்போதும் எம்மிடம் இல்லாதவற்றை பற்றியே எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது இல்லாமையை எம்மை நோக்கி ஈர்த்துக்கொள்கிறோம். 

எமது பிரார்த்தனைகளில் கூட எது எம்மிடம் இல்லையோ அவையே முன்னிலைப்-படுத்தப்படுகின்றன.  எனவே தொடர்ந்தும் அவை எமக்கு எட்டாக்கனிகளாகவே இருக்கின்றன.

அபரிமித மனநிலை நமது மனதில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்துகிறது.  நமது தேவைகள் நம்மை அறியாமல் மெல்ல மெல்ல பூர்த்தி செய்யப்படுகின்றன.

அந்த அபரிமிதமான மன நிலையை அடைவது எப்படி?

நம்மிடம் இல்லாதவற்றைப்  பற்றி மறந்துவிட்டு இருப்பவைகளுக்கு     மனதார நன்றி சொல்ல தொடங்குவது முதல் படி.  காலை கண்விழித்ததும்,  இரவு உறங்கச் செல்லும் முன்பும் ஒரு சில நிமிடங்கள் அதனை ஒரு பிரார்த்தனையாக செய்தால் இன்னும் சிறப்பு.

நேற்று உயிருடன் இருந்தவர் இன்று இல்லை.  குறிப்பாக இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் அது இயல்பான ஒன்றாக ஆகிவிட்டது.  நேற்றிறவு உறங்கச் சென்ற  பல்லாயிரம் பேர் இன்று கண்விழிக்கவில்லை.   அவர்களில் ஒருவராக நாம் இல்லை என்பது முதல் வரம்.  நோயற்ற உடல், உயிர்வாழ அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறையுள், அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள், உணர்வுத் தேவைகளான அன்பு, அமைதி, இன்பம் போன்றவற்றை பூர்த்தி செய்யும் பெற்றோர், உடன் பிறப்புகள், உறவுகள், வாழ்க்கைத்-துணை, பிள்ளைகள், நண்பர்கள் என  இயற்கை நமக்கு வாரி வழங்கியிருக்கும் வரங்களை வரிசைப்படுத்தத் தொடங்கினால் அந்தப் பட்டியல் முடிவற்று நீளும்.  அது ஏற்படுத்தும் நன்றிப் பெருக்கில் அபரிமித மனநிலை சாத்தியமாகும். 

நமக்கு கீழே உள்ளவர் கோடி என்கிற உண்மை புலப்படும்.  நிறை மனம் வாய்க்கும்.

ஒரு ஆங்கில கிறிஸ்தவப் பாடலின் தமிழாக்கம்:

உங்கள் வரங்களை கணக்கிடுங்கள் - அவை
ஒவ்வொன்றையும் உரத்துச் சொல்லுங்கள்...

- சுப்ரமண்ய செல்வா -    #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

YouTube: https://youtube.com/c/SubramanyaSelva

வெள்ளி, 11 ஜூன், 2021

மனதின் பரிணாமம்

டார்வின்னின் பரிணாமக் கோட்பாடு மனிதத் தோற்றத்துடன் நிறைவுபெற்றுவிட்டது என்றே தோன்றுகிறது.  இதற்கு அப்பால் தோற்ற வேறுப்பாட்டுடன் அதிசிறந்த மனிதன் (super human) பரிணாமம் பெறும் வாய்ப்பு  மிகவும் குறைவு. இப்போது நடைபெற்றுக்- கொண்டிருப்பது அறிவின் பரிணாமம். இருபது வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட இன்றைய பத்து வயது சிறுவர்கள் அதிபுத்திசாலிகளாக இருக்கிறார்கள்.  சின்னஞ்சிறுசுகள் கைபேசிகளை அனாயசமாக கையாளும் விதம் இதற்கு ஒரு சான்று.

இதைப்போல் மனதின் பரிணாமம் மிகுந்திடின் மனிதகுலம் மேன்மையுறும். எல்லோரும் இன்புற்றிருத்தல் சாத்தியமாகும். அது என்ன மனதின் பரிணாமம்? உடலளவில் மனிதன் மாறியிருப்பினும், குணத்தளவில்  விலங்கினப் பதிவிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை. சீறும் பாம்பும், தந்திர நரியும், நிறம் மாறும் பச்சோந்தியும், குரூர கொடுமிருகங்களும் அவ்வப்போது தலைக்காட்டி தம் இருப்பை  பறைச்சாற்றிச் செல்கின்றன. இந்த விலங்கினப் பதிவுகளின் நிரந்தர வெளியேற்றமே மனதின் பரிணாமம்.

'மனிதன் என்பதன் பொருள்  மனது இதமானவன்' என்கிறார் வேதாத்திரி மகரிஷி. இதமான மனதிற்கு உரித்தாதல் மனதின் பரிணாமம்.

அன்பும் கருணையுமே இதமான மனதின் அடையாளங்கள்.  பிறருக்கு துன்பம் தராது இருத்தல் அன்பு.  எம்மால் இயன்ற அளவில் பிறர் துன்பம் போக்குதல் கருணை.  எல்லா மதங்களின் சாராம்சமும் இதுவே.

- சுப்ரமண்ய செல்வா -   #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

YouTube: https://youtube.com/c/SubramanyaSelva

செவ்வாய், 8 ஜூன், 2021

தீதற்ற செல்வம்

பணம் படைத்தவர்கள் அனைவரும் செல்வந்தர்கள் அல்லர்.  என்ன வியப்பாக இருக்கிறதா? பணம் அதிகமிக்கவர் பணக்காரர்.  செல்வம் அதிகமிக்கவர் செல்வந்தர்.  தாள்கள், நாணயங்கள், சொத்துகள் என எண்ணிக்கைக்குள் அடங்குவது பணம். 

எனின், எது செல்வம்? 

வங்கிகளில் இருக்கும் கோடிகளா? வாழும் மாடிவீடுகளா? வரிசைகட்டும் வாகனங்களா?  ஆடம்பர ஆபரணங்களா? 

அண்மையில் ஒரு கானொளி பார்த்து கண்கலங்கினேன்.  சொற்பமாய் சம்பாதிக்கும் ஒரு எளிய மனிதர் தனது ஒய்வு நேரத்தில் கழிவறைகளை கழுவி சம்பாத்தித்த பணத்தில் கடந்த 15 வருடங்களில் 1200 மாணவர்களின் கல்விக்கு உதவியிருக்கிறார்.  இவரை எந்த வகையில் சேர்ப்பது?

'அன்னயாவினும் புண்ணியம் கோடி  ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'

எனும் பாரதியின் அறிவுரையை  நடைமுறைப்படுத்திய, ஈகை மனம் என்னும் பெருஞ்செல்வம் படைத்த இந்த மாமனிதரும்  உண்மையில் செல்வந்தர் அல்லவா? 

பதினாறு செல்வங்களில் ஒன்று மட்டுமே பணத்தோடு பொறுந்தக்கூடியது; அதுவும் 'தீதற்ற செல்வம்'. மற்ற பதினைந்து செல்வங்கள் உடையோரும் செல்வந்தர்களே.  முக்கியமானது 'அழியாப் புகழ்'.  ஈகைச்செல்வம் மிக்கோரே அழியாப் புகழ் பெறுவர்.

பணத்தைக்கொண்டு செய்யும் தர்மங்கள் மட்டுமே ஈகையாகாது.  தனக்கு வாய்த்த அறிவைக்கொண்டு, உடல் உழைப்பு மூலம், தனது நேரத்தை செலவழித்து என ஒருவரால் இயன்ற வகையில் சக மனிதரை கைதூக்கி விட, மேம்படுத்த செய்யும் செயல்கள் அனைத்துமே ஈகை என்றே கொள்ளலாம்.  

ஆக செல்வந்தராக இருக்க பணம் படைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை அல்லவா! 

- சுப்ரமண்ய செல்வா - #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

YouTube: https://youtube.com/c/SubramanyaSelva


திங்கள், 7 ஜூன், 2021

வையம் வசமாகும்

ஒரு நேசப் பார்வை
ஒரு சினேகப் புன்னகை
ஒரு அன்புச் சொல்
ஒரு ஆறுதல் அரவணைப்பு...
ஒரு சிறு கல் வீழ்ந்த குளத்தின்
வட்டச் சிற்றலையாய்
விரிந்து விரிந்து
வையத்தை வசப்படுத்தும்
- சுப்ரமண்ய செல்வா -   #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

YouTube: https://youtube.com/c/SubramanyaSelva