சனி, 11 மார்ச், 2017

காணாமல் ஆக்கப்பட்டவன்

கண் விழித்ததும்
ஏங்கி நோக்கும்
கருப்பு வெள்ளைப் படம்

என்னை கண்டறிவாயா?

கைப்பேசி அலறலில்
கை நடுங்கும்
அவன் குரலா...?

கதவுத் தட்டலில்
இதயம் துடித்தடங்கும்
அவன் வரவா?

தபால்காரன் மணியில்
மனம் தத்தளிக்கும்
அவன் மடலா?

ஏமாற்றங்கள் எழுச்சியூட்டும்
தள்ளாமை தள்ளிப் போகும்
ஈரக்கண் துடைத்து
வீர நடை தொடங்கும்.

நீ வேண்டும் மகனே
நீ வேண்டும்
என் சிதைக்கு தீ மூட்ட
நீ வேண்டும்

இன்று எங்கு போராட்டம்?

- சுப்ரமண்ய செல்வா -