புதன், 28 டிசம்பர், 2016

வேர்கள் சொல்லும் வேதம்

செகொவ்யா* எனும் பெருமரம்
ஆண்டுகள் பல்லாயிரம் அழியாதிருக்குமாம்
அடைமழை பெருவெள்ளம் புயல்காற்று
எதனாலும் அதனை வேரறுக்க முடியாதாம்
ஆயினும் அதன் வேர்கள்
ஆழ ஊடுறுவிச் செல்லாதாம்.
ஆச்சர்ய உண்மை!

அதிர்ந்து போன அறிவியல்
நிலம் தோண்டி தேடிற்று.
மண் மறைத்த  ரகசியம் தென்பட்டது.

செகொவ்யா வேர்கள்
பக்கவாட்டில் படர்ந்து
தன் சக மர வேர்களை
பற்றிப் பிணைந்து
பலம் பெற்றுக் கொள்ளும்.

செகொவ்யா வனமெங்கும்
செம்மர வேர்கள்
கிளை பரப்பி கரங்கோர்த்து
ஒன்றொக்கொன்று உறுதுணையாகி
காலத்தை வெல்லும்
சூட்சுமம் சொல்லும்

வேர்கள் சொல்லும் வேதம்
புரிகிறதா மானுடமே?

*sequoia

-- சுபரமண்ய செல்வா --

வெள்ளி, 23 டிசம்பர், 2016

தீராக்கடன்

ஐயாயிரம் புத்தம் புது விடியல்கள்
ஒரு கோடி பனிச்சொறியும் புது மலர்கள்
ஐயாயிரம் பொன் போர்த்திய அஸ்தமனங்கள்
ஒரு கோடி சில்லிட்ட பனித் திரள்கள்
ஐந்து அமைதிமிகு நண்பர்கள்; ஒரு குழந்தையின் நேசம்
மேலே ஒரு வெண்மேகக் கடல்
ஒரு நூறு இசை உலவும் கனவுகள்
நிலவொளியில் நனைந்த பாதைகள்; விரைந்தோடும் சிற்றோடை
நறுமணக் காட்டில் ஓரு ஜுன் இரவு
அன்பு செய்கிற… புரிந்துகொள்கிற ஒரு இதயம்
அன்று காலை விழித்த வேளை நான் வியந்தேன்
இறைவா…!
எப்படி நான் இந்த கடனை அடைப்பேன்?

மூலம்: Courtland W. Sayers
தமிழாக்கம்:  சுப்ரமண்ய செல்வா

வியாழன், 15 டிசம்பர், 2016

அலை ஞானம்

சில அலைகள்
எழுந்ததும் வீழ்ந்து மறைகின்றன
சில அலைகள்
சில தூரம் கடந்து சிதைகின்றன
சில அலைகள்
கரையைத் தொட்டு
காணாமற் போகின்றன

தோன்றுவனவெல்லாம்
தொலைந்து போதல் நியதி.
அலைகள் சொல்லும் செய்தி!

-- சுப்ரமண்ய செல்வா -

(இன்று, 15/12/2016, காலை கடல் பார்த்து அமர்ந்திருந்த வேளை அலைகள் சொன்ன சேதி...

திங்கள், 31 அக்டோபர், 2016

தீபாவளி

தீபாவளி என்பது
ஒரு நினைவூட்டலே.
நமக்குள் நடமாடும்
நரகாசுரனை
நாமே தேடி அழித்திட
தினந்தினம்
தீபாவளியே!

-- சுப்ரமண்ய செல்வா --

புதன், 26 அக்டோபர், 2016

மௌனத்தின் சப்தம்

நடுநிசி இரவின் விழிப்பில்
அருகில் யாருமில்லா
தனிமைத் தருணங்களில்
மௌனம்
பெருங்குரலெடுத்து பேசும்

இதய மயான மூலையில்
யாருமறியாது மூடிய குழியை
தோண்டத் தூண்டும்
ஈவிரக்கமின்றி ஆணையிடும்

தோண்டத் தோண்ட
திகில் மிகும்

ஓ...
ஒரு சவக்குழிக்குள்
இத்தனை எலும்புக்கூடுகளா.?!

நெஞ்சறிந்து வஞ்சித்தது
அஞ்சாது பொய்யுரைத்தது
கெஞ்சியும் இரங்காதது
ஆணவத்தில் ஆர்ப்பரித்தது
அச்சமின்றி இச்சித்தது
துச்சமென இகழ்ந்தது
இருந்தும் ஈயாதது
தெரிந்தும் திருடியது
போலியாய் புகழ்ந்தது
முறையற்று காமுகித்தது
பொறாமையில் புழுங்கியது
புறம்பேசி மகிழ்ந்தது

தோண்டத் தோண்ட
தோன்றிக்கொண்டேயிருக்கும்
ஆழப்புதைத்த அவலங்கள்

திகில் கண்டு திளைக்கும்
மௌனத்தின் சப்தத்தில்
மனசாட்சி விழித்தேழுந்து
மருகித் தவிக்கும்.

== சுப்ரமண்ய செல்வா ==

SMILE

Smile, they say, is contagious
Yet...
You refuse to return my smile
You search for hidden meanings

Who is he?
Why is the smile?
What does he want?

Lost in your quest for reason
Is a glorious moment when
A lifelong bond can blossom

Smile is a blessing
Only unto the humanity

Hence dear stranger
Unlock your lips
Let it curl a bit
Add some warmth in eyes
Smile
Not for this
Not for that
Just for the sake of smile.

== Subramanya Selva ==

Published in Daily News - 26.10.2016

தொடுதூரத்தில் விடிவானம்

கொஞ்சம் வெளியே வா தோழா
கொஞ்சம் சம்பாஷிப்போம்...

என்ன தயக்கம்?

சுய இரக்க சுவர்களுக்குள்
சுகம் கண்டது போதும்
வா வெளியே

அடிமைப்பட்டிருப்பதை
அறியாதிருத்தலே
ஆபத்தின் ஆரம்பம்
ஆனந்த அடிமைகள்தான்
சுதந்திரத்தின் முதல் எதிரிகள்

சுயவிருப்பக் கைதி நீ
உனது சிறை உனது சிருஷ்டி
காவலனும் நீ கைதியும் நீ
பூட்டுகள் ஏதுமில்லை வெளியே
உள்ளே நீயிட்ட தாள்
திறந்து வா

தயக்கத் தளைகளை
தகர்த்தெறிந்து வா
தற்சோதனைச் சாலையில்
கொஞ்சம் பயணிப்போம்

என்னதான் உன் பிரச்சினை?
ஏன் இந்த முடக்கம்?

'எதற்கும் உதவாதவன் நான்'
என்கிறாய்

அறிவாயா நண்பா
ஆண்டுகள் பலகோடியான
அகிலத்தின் சரித்திரத்தில்
உன்னைப்போல் இன்னொருவன்
என்றும் இருந்ததில்லை
இனியும் வரப் போவதில்லை
தனிப்பிறவி நீ - உன்
தனித்துவத்தை கொண்டாடு
தரணியறிய பறைசாற்று

'தொட்டதெல்லாம் தோல்வி' என்கிறாய்

சொல்.
எத்தனை கனவு விதைத்தாய்?
எத்தனை இரவு விழித்தாய்?
வீழ்ந்தாய்;
எத்தனை முறை எழுந்தாய்?

பெருங்கனவு... பெருவிருப்பம்
அயரா முயற்சி... சிதரா சிந்தனை
தளரா உழைப்பு... ... தணியா ஆர்வம்
தடைகளுக்கு அஞ்சா பெருநெஞ்சம்
தோல்வி கண்டு துவளா திடமனம்
இவைதான் நண்பா
வெற்றியாளரின் வீர லட்சணங்கள்

வெற்றி மாளிகைகளின்
வெளிப்பூச்சு கண்டு வியக்கிறாய்
கூர்ந்து பார் உள்ளே
தடைக்கற்கள் எல்லாம்
சுவர் கற்களாய் உருமாறிய
தடயம் தெரியும்

வெற்றி என்பது
எட்டித் தொடும் இலக்கல்ல.
தொடரும் பயணம்.
ஒரு நாளில் உருவாகவில்லை
ரோமாபுரி!

முடியாதென்பதற்கு
முன்னூறு காரணம் சொல்கிறாய்
முடியும் என்பதற்கு
ஒன்று கூடவா இல்லை உன்னிடம்?
தேடு.
உனக்குள் உள்ளது பொக்கிஷம்

மூடிய கதவை
முழுநேரம் வெறிக்கிறாய்
திறந்திருக்கும் கதவுகள் பக்கம்
திரும்ப மறுக்கிறாய்

தட்டினால் திறக்கப்படுவதும்
கேட்பதால் கொடுக்கப்படுவதும்
வெட்டிக்கதையல்ல
வாழ்க்கையின் வேதம்

எழுந்து வா!
எட்டி நட!

தொலைதூரத்திலல்ல தோழா

தொடுதூரத்தில்தான்
விடிவானம்!

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

மன்னித்துவிடு!

வெறுக்கப்படுபவரைவிட
வெறுப்பவர்க்கே வேதனை அதிகம்

வெறுப்புச் சுமை சுமந்து
நடக்கும் வாழ்வு கொடிது

சுமையிறக்கிய பறவையாய்
சுதந்திர வானில்
சிறகடித்துப் பறக்க ஆசையா...?

மன்னித்துவிடு.

மன்னிக்காமல்
மறத்தல் அரிது

முகம் பார்த்து மன்னிக்க
முடியவில்லையா?
அகம் நிறைந்து மன்னித்துவிடு

தன்னை தான் வெறுத்தலே
தாளாத சுமை
உன்னையும் சேர்த்து
மன்னித்துவிடு

விதிவிலக்கல்ல நீ
எல்லா இதய வீட்டுக்குள்ளும்
இறுகப் பூட்டிய
இருண்ட அறை உண்டு

இறந்தகாலம்
இறந்த காலம்
மற

ஏனெனில் இங்கு
கடந்த காலமற்ற ஞானியுமில்லை
எதிர்காலமற்ற பாவியுமில்லை.

==  சுப்ரமண்ய செல்வா  ==

சனி, 22 அக்டோபர், 2016

புன்னகை செய்

புன்னகை திரும்பி வருமாம்...
ஆயினும் நீ
என் புன்னகையை
திருப்பித் தர மறுக்கிறாய்.

காரணம் தேடுகிறாய்.

யார் இவன்?
எதற்கிந்த புன்னகை?
என்ன இவன் எதிர்பார்ப்பு?

உணர்ந்து கொள்
உன் காரணத் தேடலில்
உன்னத உறவொன்று உருவாகும்
பொக்கிஷ நிமிஷங்கள்
தொலைந்து போகலாம்

புன்னகை
மனிதருக்கு மட்டுமேயான வரம்...

ஆதலினால் அன்பான அன்னியனே
பூட்டிய உதடுகளை திற
கொஞ்சம் அவை விரியட்டும்
கண்களில் கொஞ்சம்
சினேகம் சேரட்டும்

புன்னகை செய்.

எதற்காகவுமல்ல
புன்னகைக்காக புன்னகை செய்.

திங்கள், 17 அக்டோபர், 2016

உயிர்ச்சொற்கள்

தமிழில் உயிரெழுத்து
பன்னிரெண்டு
ஆயினும் உண்மையில்
ஒவ்வொறு  எழுத்துக்கும்
உயிருண்டு
ஒவ்வொறு வார்த்தைக்கும்
உயிருண்டு

அன்பு காட்டும் வர்த்தைகள்
வன்மம் கக்கும் வார்த்தைகள்
ஆசை சொல்லும் வார்த்தைகள்
ஆளைக் கொல்லும் வார்த்தைகள்
ஆறுதல் வார்த்தைகள்
ஆத்திர வார்த்தைகள்
பாசம் பகிரும் வார்த்தைகள்
பாசாங்கு வார்த்தைகள்
சிந்தனை தூண்டும் வார்த்தைகள்
சினம் கிளரும் வார்த்தைகள்
பலம் தரும் வார்த்தைகள்
பரிகசிக்கும் வார்த்தைகள்
வியப்பு தரும் வார்த்தைகள்
விலைபேசும் வார்த்தைகள்
ஈரம் சொட்டும் வார்த்தைகள்
வறண்ட வார்த்தைகள்
உயிர் காக்கும் வார்த்தைகள்
உயிர் போக்கும் வார்த்தைகள்

             ********

என்றோ யாரோ சொன்ன
வாத்சல்ய வார்த்தையொன்று
இன்றும் மனதை நெகிழ்த்தும்

சொல்ல மறந்த
வார்த்தயொன்றின் நெருடலில்
நெஞ்சம் கனக்கும்

வருடங்கள் கடந்தும் மாறாதிருக்கும்
கீறிச் சென்ற வார்த்தைகள் தந்த
ரணங்களும் வலியும்

             ********

வார்த்தைகள்... வார்த்தைகள்... வார்த்தைகள்...

இறுதியில் மிஞ்சுவது
வார்த்தைகள் மட்டுமே
அவை நல்லவைகளாய்
இருந்துவிட்டு போகட்டுமே!

== சுப்ரமண்ய செல்வா ==

திங்கள், 10 அக்டோபர், 2016

ஆனந்த அடிமைகள்

தொலைக்காட்சி தொடர்களில்
தொலைந்துபோன தாய்மை

இணையப் பெருங்காட்டில்
தொலைதூரம் பயணிக்கும் தந்தை

முகநூலில் அகம் தொலைத்து
சுகம் காணும் மகன்

'வாட்ஸப்' வசீகரத்தில்
தன்வசமிழந்த மகள்

ஓடிக் கூடி விளையாடும் பருவத்தில்
* 'கோபப்பறவைகள்'
# 'கோவில் ஓட்டம்'  என
விரல்நுனி விளையாட்டில்
வீணாகும் பால்யம்

புத்துலகின் புத்திரரென
மார்தட்டும் நாம்

உண்மையில்....

அறிவியற் சிறையின்
விருப்பக் கைதிகள்

மெய்நிகர் உலகின்
ஆனந்த அடிமைகள்

(* Angry Birds / # Temple Run)

-- சுப்ரமண்ய செல்வா  --

வியாழன், 6 அக்டோபர், 2016

கற்றுத் தந்த கடவுளர்கள்...

தாய்
முதல் ஆசிரியை
ஆசிரியை
இரண்டாவது தாய்
ஆசிரியன்
தாயுமானவன்!

அன்னை தந்தைக்கு
அடுத்த தெய்வம்...
அருளியதனைத்தும்
அழியாச் செல்வம்

கருங்கற் பாறைகளை
கலைநயச் சிலைகளாய்
செதுக்கிய உளிகள்
ஒதுங்கிப் பார்த்து
உவகையுறும்

அறிவொளி காட்டி
அறியாமை இருளகற்றி
தடம் மாறும் தருணங்களில்
கரம்பற்றி வழிகாட்டி
நல்லதை ஊட்டி
அல்லதை அகற்றி
கனவுகள் விதைத்து - பெருங்
காட்சிகள் காட்டி...

இன்னொரு தாயாய்
இன்னொரு தந்தையாய்
ஒரு தாய் வழிப் பிறப்பாய்
உறவாய் நட்பாய்...

பிறப்பெத்தனை வேண்டும்
பெற்றதை ஈடு செய்ய

நாமறிந்த தமிழில்
'நன்றி' தவிர வேறில்லை!

--  சுப்ரமண்ய செல்வா  --

(06.10.2016 - ஆசிரியர் தினம்  -  நேற்றைய.. இன்றைய... நாளைய ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்)

நீ நான் தெய்வம்

ஒரு நேசப்   பார்வை
ஒரு சினேகப் புன்னகை
ஒரு ஆறுதல் வார்த்தை
ஒரு செவிகொடுத்தல்
எல்லோரும் இன்புற்றிருக்க
ஒரு நினைப்பு
உதவ நீளும் கரங்கள்
உயர்த்த விரையும் கால்கள்
மற்றவர் மகிழ்ச்சி கண்டு
மகிழும்  ஒரு மனசு
போதுமிது...
தேடித்திரிய  தேவையில்லை
தெய்வம் இங்கு நீயும் நானும்!

- சுப்ரமண்ய செல்வா -

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

ஒருமை

நீ சுவாசித்த காற்று
என்னுள் நுழைந்து வெளியேறுகிறது

யாரோ என்றோ கழித்த சிறுநீர்
கடலில் கலந்து மழையாகி
என் வீட்டுக் குழாயில் கொட்டுகிறது

கடலிலிருந்தே பூமி பிறந்தது எனில்
நாம் பெயர் பல சூட்டிடினும்
உலகை சூழ்ந்த கடல் ஒன்று

கோடு வரைந்து பிரித்திடினும்
மண் ஒன்று

உனக்கும் எனக்கும் ஒரே சூரியன்
பிரித்து பொழிவதில்லை மழை

ஆயினும் இங்கு
நீ வேறு நான் வேறு
இனம்  மொழி மதம் சாதி

எனினும் நண்பா
எங்கோ வெடித்த குண்டு
எங்கோ பாய்ந்த பெருவெள்ளம்
எங்கோ வீழ்ந்த விமானம்
எங்கோ வீசிய புயல்
எங்கோ நடுங்கிய பூமி
என்னையும் உன்னையும் ஏன்
இப்படி கலங்கடிக்கிறது?

உன்னையும் என்னையும் இணைக்கும்
கண்ணுக்குத் தெரியாத
மனிதத்தின் அலரலில்
மானுட மனசாட்சி
விழித்துக் கொண்ட ஒரு நாளில்
இந்த பூமி
அமைதிப் பூச்சொரிந்து
ஆசீர்வதிக்கப்படும்.

==சுப்ரமண்ய செல்வா ==

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

ஊடல் பொழுதுகள்

வா கொஞ்சம் பேசுவோம்
நீ நீயாக. நான் நானாக
நமக்குள் ஏன் இந்த நாடகம்?

என்னில் கொஞ்சம் நீ
உன்னில் கொஞ்சம் நான்
இரண்டு சுயங்களின் இழப்புதானே
நம் உறவு

இந்த மௌனம் பொல்லாதது
பேசிய பொழுதுகளில்
மௌனித்திருந்து
பேசாத பொழுதுகளில்
பெருங்குரலெடுத்து பேசுகிறது

அமைதியின் ஆரவாரத்தில்
இரவு விழித்துக் கிடக்கிறது

போதும் உன் போலி நாடகம்
எனக்குத் தெரியும்
விரல் நுனி ஸ்பரிசத்தில்
வீர்யமிழக்கும் உன் கோபம்

வா கொஞ்சம் பேசுவோம்
நீ நீயாக. நான் நானாக

== சுப்ரமண்ய செல்வா ==

வியாழன், 15 செப்டம்பர், 2016

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

-    சுப்ரமண்ய செல்வா  -

எல்லோருக்குமானது இந்த உலகுஎல்லோருக்கும் உண்டு இங்கு தமக்கென ஓர் இடம்அந்த இடத்தை மலர்வனமாக மாற்றி மகிழ்ந்திருக்கலாம்அல்லது பாலைவனமாக்கி பரிதவிக்கலாம்இந்த இரண்டு தேர்வுகளும் இருப்பது அவரவர் கைகளில்.

தமது சொந்த நிலங்களை நந்தவனமாக்கும் வாய்ப்பும், ஆற்றலும் மனிதருக்கு உண்டுஆயினும் இங்கு சோலைகளைவிட பாலைகளே அதிகம். தன் வாழ்வை சோலையாக்கி சுகம் காண வேண்டிய மனிதன், வாய்ப்புகளைத் தவறவிட்டு, வழி தவறி, நெறி தவறி, தனது வாழ்வை தொலைத்துவிட்டு தவிப்பதைப் பார்க்கிறோம்

மனிதன் உயிரினங்களின் உச்சம்நீண்ட நெடிய பரிணாமப் பயணத்தின் நிறைவுஓரறிவில் இருந்து உயர்ந்து ஆறறிவாய் மலர்ந்திருக்கும் மகா அற்புதம். கோடானு கோடி ஆண்டு தவத்தின் பயனாய் இயற்கை பெற்ற வரம்.

மனிதன் என்பதன் அர்த்தம் மனது இதமானவன்என்கிறார் மகான் வேதாத்திரி மகரிஷிஇதமானதாகவா இருக்கிறது இங்கு எல்லோர் மனங்களும்சக மனிதனின் சங்கடத்தில் சுகம் காணும் மனங்கள்தன்முனைப்பு தலைக்கேறிதான்’, ‘தனதுஎனும் மமதையில் மற்றோரை துச்சமாய் மதிக்கும் மனப்பாங்குஇல்லாதான் நிலை கண்டு இரங்கா மனங்கள்.  ‘ஈதல் இசைபட வாழ்தல்என்றார் வள்ளுவப் பெருந்தகைஇங்கு ஈதலும் இல்லைஅதனால் இசைபட வாழ்தலும் இல்லை.

தக்கன பிழைத்து வாழ்தல்எனும் டார்வின்னின் பரிணாமக் கோட்பாடு மனித வாழ்வின் சகல பரிமாணங்களிலும் பரவி வியாபித்திருக்கிறதுஇங்கு பலசாலியே பிழைத்திருப்பான்பணம், கல்வி, அதிகாரம் என ஏதோ ஒரு பலத்தை பெறுவதற்கும், அதனை தக்க வைப்பதற்குமான ஓட்டப் போட்டி இங்கு இடையறாது நடைபெற்றுக் கொண்டிருக்கிறதுகணம் தாமதித்தாலும் காணாமல் போய் விடுவோம் எனும் அச்சத்தில் காலடியில் மிதிபடுபவனைப் பற்றி கவலைப்பட நேரம் ஏது? இயந்திர வாழ்க்கை இதயங்களையும் இரும்பாக்கி விட்டது.

பணம், பொருள், அதிகாரம் எதுவாயினும், இலக்குகளே முக்கியம் இங்குஎப்படி அவை அடையப்படுகின்றன என்பது பற்றி எவருக்கும் கவலை இல்லைஅடைந்த இலக்குகள் கடந்த வழிகளை நியாயப்படுத்துகின்றனநெறி தவறி செல்வம் சேர்த்த பணக்காரன் முன் பவ்வியமாக பணிவதும், அட்டூழியம் செய்து அதிகாரம் பெற்றவன் முன் அடிபணிவதும் எவ்வித கூச்சமும் இன்றி இயல்பாய் நடக்கிறது. வணிகத்திலும், அரசியலிலும் பொய்யும், கையூட்டும், ஊழலும் பொது விதியென போதிக்கப்படுகிறது. பொது வாழ்வில் தூய்மையென்பது வெறும் கற்பனாவாதமாகவே காட்சிப்படுத்தப்படுகின்றதுஅதர்மங்கள் அங்கீகரிக்கப்பட்ட இவ்வாழ்கை முறையில் பலியானவை உண்மையும், நீதியும், நேர்மையும், நியாயமுமேஉண்மையையே உரைப்பவன்,  நீதி நெறி வழுவாதவன், நேர்மையாளன், நியாயத்திற்கு கட்டுப்பட்டவன் இங்கு பிழைக்கத் தெரியாதவனாக பரிகசிக்கப்படுகிறான்இளம் சந்ததியினருக்கு இச்சமிஞ்சை மிக ஆபத்தானது
இன்றைய வேக உலக இளைஞன் எதையும் வேகமாக அடைய விளைகிறான்விதிகளும், வழிகளும் அவனுக்கு ஒரு பொருட்டல்ல.

மாறாதா இந்நிலைமாற்றவே முடியாதாமனிதகுலம் இன்று சென்று கொண்டிருக்கும் இந்த இருண்ட பாதை திரும்ப முடியாத ஒருவழிச் சாலையாநிச்சயம் இல்லைமாறாது இருப்பது மாற்றம் ஒன்றுதானேகற்காலத்திலிருந்து தற்காலம் வரை மாற்றம் பல கண்ட மனித குலத்திற்கு இது ஒன்றும் மகத்தான காரியமல்லஇப்போது நடப்பது பாதை மாறிய பயணம்சரியான பாதை மறந்த பயணம்தேவை எல்லாம் சரியான பாதையை நினைவூட்டலும், வழி காட்டலுமே

என்னதான் வேண்டும் இந்த மனிதனுக்குஏனிந்த இடையறாத ஓட்டம்பணம், பதவி, புகழ் இவற்றில் ஒன்றோ பலவோ, தனக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போய் விடுமோ? அல்லது இருப்பதை இழந்து விடுவோமோ? என்கிற அச்சம்சதா இந்த அச்சம் உந்தித் தள்ள, விடாமல் தொடர்கிறது ஓட்டம்ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால், ஓட்டத்தின் நோக்கம் பலவாயினும், எல்லா நோக்கங்களின் நோக்கமும் நிம்மதி அல்லது அமைதியேசரி, ஓட்டமின்றி இந்த அமைதியை அடைதல் சாத்தியமாநிச்சயம் சாத்தியமே.

இப்போதைய தேவை உண்மையான பகுத்தறிவுஅது என்ன உண்மையான பகுத்தறிவு? அது ஏற்கனவே எல்லா மனிதருக்கும் உள்ளதுதானேஅது ஒன்றுதானே மனிதனை மற்ற உயிரின்ங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது

இது வேறுவிதமான பகுத்தறிவுவிரிந்த மன நிலையில் அனைத்தையும் பகுத்துப் பார்க்கும் அறிவு.

அனைத்துப் பொருட்களையும் பகுத்துச் சென்றால் இறுதியில் மிஞ்சுவது அணு அல்லவாஅணு என்கிற தன்மையிலே பொருட்களுக்குள் வேறுபாடு ஏதுமனித உடலும் அணுக்களின் கூட்டுதானே. எனின், அணுவாய் நோக்கும்போது சேதன மனிதனும், அசேதனப் பொருட்களும் வேறில்லையேஓரறிவு முதல் ஆறறிவு ஈராக, அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் ஆதாரமான ஆற்றல் உயிர்அது பேதமில்லாததுஉயிர் என்ற நிலையிலே, மனிதன் உட்பட, உயிர்களுக்குள் வேறுபாடு ஏதுஅந்நிலையில் நானும் நான்கு கால் பிராணியும் ஒன்றான போது, நானும் நீயும் எப்படி வேறாவோம்?

அதுபோல் உள்ளுறையும் ஆன்மாவானது அனைத்து மனிதருக்கும் ஒன்றேஅதற்கு சாதியில்லை, மதம் இல்லை, மொழியில்லை, தேசம் இல்லைஆன்ம உலகில் அனைவரும் உறவினரேநான் வேறு எனது கை வேறு அல்லஎனது கை என்னிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத ஓர் அங்கம்எனது கையும் சேர்ந்ததுதான் நான்அதுபோல் ஆன்மா எனும் நிலையில் என்னிலிருந்து பிரிக்க முடியாத, என்னில் ஓர் அங்கம் நீநீயும் சேர்ந்ததுதான் நான்உனது வலியும், துயரமும், எனது வலி, எனது துயரம். உனது மகிழ்ச்சி, எனது மகிழ்ச்சி, உனது வெற்றி, எனது வெற்றிஉன்னை வருத்துவது, என்னை வருத்துவது அல்லவா?

இந்த உண்மையை மனித குலம் உணர்ந்தால், தறிகெட்டு ஓடும் அதன் ஓட்டம் நிற்கும்அன்பும் கருணையும் பொங்கிப் பெருகும்தன்னைப் போல் பிறரையும் நேசித்து, சக மனிதரின் இன்ப துன்பங்களில் பங்கேற்று, எல்லோரும் இன்புற்றிருக்கும் நிலை உருவாகும்அமைதி அனைவரையும் அரவணைக்கும்தனி மனித அமைதி, உலக அமைதியாக உருவெடுக்கும்

இதனை எல்லோராலும் சாதிக்க முடியுமாநிச்சயம் முடியும்தேவை மனமாற்றம் ஒன்றேகாந்தி அடிகள் சொன்னதுபோல் நாம் உலகில் காண விரும்பும் மாற்றம் நம்மிலிருந்தே தொடங்கட்டும். மண்ணில் நிச்சயம் நல்ல வண்ணம் வாழலாம்.

நன்றி: சுகவாழ்வு