புதன், 26 அக்டோபர், 2016

தொடுதூரத்தில் விடிவானம்

கொஞ்சம் வெளியே வா தோழா
கொஞ்சம் சம்பாஷிப்போம்...

என்ன தயக்கம்?

சுய இரக்க சுவர்களுக்குள்
சுகம் கண்டது போதும்
வா வெளியே

அடிமைப்பட்டிருப்பதை
அறியாதிருத்தலே
ஆபத்தின் ஆரம்பம்
ஆனந்த அடிமைகள்தான்
சுதந்திரத்தின் முதல் எதிரிகள்

சுயவிருப்பக் கைதி நீ
உனது சிறை உனது சிருஷ்டி
காவலனும் நீ கைதியும் நீ
பூட்டுகள் ஏதுமில்லை வெளியே
உள்ளே நீயிட்ட தாள்
திறந்து வா

தயக்கத் தளைகளை
தகர்த்தெறிந்து வா
தற்சோதனைச் சாலையில்
கொஞ்சம் பயணிப்போம்

என்னதான் உன் பிரச்சினை?
ஏன் இந்த முடக்கம்?

'எதற்கும் உதவாதவன் நான்'
என்கிறாய்

அறிவாயா நண்பா
ஆண்டுகள் பலகோடியான
அகிலத்தின் சரித்திரத்தில்
உன்னைப்போல் இன்னொருவன்
என்றும் இருந்ததில்லை
இனியும் வரப் போவதில்லை
தனிப்பிறவி நீ - உன்
தனித்துவத்தை கொண்டாடு
தரணியறிய பறைசாற்று

'தொட்டதெல்லாம் தோல்வி' என்கிறாய்

சொல்.
எத்தனை கனவு விதைத்தாய்?
எத்தனை இரவு விழித்தாய்?
வீழ்ந்தாய்;
எத்தனை முறை எழுந்தாய்?

பெருங்கனவு... பெருவிருப்பம்
அயரா முயற்சி... சிதரா சிந்தனை
தளரா உழைப்பு... ... தணியா ஆர்வம்
தடைகளுக்கு அஞ்சா பெருநெஞ்சம்
தோல்வி கண்டு துவளா திடமனம்
இவைதான் நண்பா
வெற்றியாளரின் வீர லட்சணங்கள்

வெற்றி மாளிகைகளின்
வெளிப்பூச்சு கண்டு வியக்கிறாய்
கூர்ந்து பார் உள்ளே
தடைக்கற்கள் எல்லாம்
சுவர் கற்களாய் உருமாறிய
தடயம் தெரியும்

வெற்றி என்பது
எட்டித் தொடும் இலக்கல்ல.
தொடரும் பயணம்.
ஒரு நாளில் உருவாகவில்லை
ரோமாபுரி!

முடியாதென்பதற்கு
முன்னூறு காரணம் சொல்கிறாய்
முடியும் என்பதற்கு
ஒன்று கூடவா இல்லை உன்னிடம்?
தேடு.
உனக்குள் உள்ளது பொக்கிஷம்

மூடிய கதவை
முழுநேரம் வெறிக்கிறாய்
திறந்திருக்கும் கதவுகள் பக்கம்
திரும்ப மறுக்கிறாய்

தட்டினால் திறக்கப்படுவதும்
கேட்பதால் கொடுக்கப்படுவதும்
வெட்டிக்கதையல்ல
வாழ்க்கையின் வேதம்

எழுந்து வா!
எட்டி நட!

தொலைதூரத்திலல்ல தோழா

தொடுதூரத்தில்தான்
விடிவானம்!

கருத்துகள் இல்லை: