திங்கள், 10 டிசம்பர், 2018

எண்ணிய வண்ணம் வாழ்வு: பகுதி-3 - எண்ணமும் உடல் நலமும்

மூலம்:  As a Man Thinketh by James Allen        தமிழில்: சுப்ரமண்ய செல்வா

உடல் எனப்படுவது மனதின் அடிமை.  அது மனதின் இயக்கங்களுக்கு அடிபணிகிறது; அந்த இயக்கங்கள் திட்டமிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவையாக இருக்கலாம் அல்லது தானாகவே வெளிப்படுத்தப்பட்டவையாகவும் இருக்கலாம்.  தீய எண்ணங்கள் உடலை துரிதமாக நோயையும் அழிவையும் நோக்கி இட்டுச் செல்கின்றன.  அதேபோல்  தூய்மையான அழகான எண்ணங்கள் உடலை இளமையாக அழகுபடுத்துகின்றன.

சூழ்நிலைகளைப் போலவே நோயும் உடல் நலமும் எண்ணத்தில் ஆழ வேரூன்றி இருக்கின்றது.  தீய எண்ணங்கள் நோயுற்ற உடல் மூலம் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன.  அச்சமிக்க எண்ணங்கள் தோட்டாக்களைப் போல்வே துரிதமாக மனிதரை கொல்வதை நாம் அறிவோம்.  நோயைப்பற்றி பயந்து வாழ்பவர்களே சீக்கிரம் நோய்வாய்ப்படுகிறார்கள்.  பதற்றம் முழு உடலையும் நிலைகுலைத்து அதனுள் நோய் உட்புக உறுதுணையாகிறது.  அதுபோலவே தூய்மையற்ற எண்ணங்கள் - அவை உடலால் அனுபவிக்கப்படாவிட்டாலும்கூட - வெகு விரைவில் நரம்பு மண்டலத்தை தகர்த்துவிடும்.

திடமான, தூய, இன்பமான எண்ணங்கள் உடலை சுறுசுறுப்பு மிக்கதாக, வசீகரமானதாக கட்டி எழுப்புகின்றன.  உடல் ஒரு மென்மையான நெகிழ்வான கருவி.  ஆகவே அது எண்ணங்களின் பதிவுகளை உடனடியாக பிரதிபலிக்கின்றது.  நல்லதும் தீயதுமான எண்ணப் பழக்கங்கள் அவற்றுக்கு ஒத்த விளைவுகளை அதன் மீது உண்டாக்குகின்றன.

மனிதர் அழுக்கான எண்ணங்களை பரப்பும் வரையில் அவர்களுக்குள் அசுத்தமான நஞ்சான இரத்தம் ஓடிக்கொண்டேதான் இருக்கும். தூய இதயத்தில் இருந்து வருவதே தூய வாழ்வும் தூய உடலும். மாசுமிக்க மனதின் வெளிப்பாடே மாசுமிக்க வாழ்வும் சீரழிந்த உடலும்.  எண்ணமே செயலின், வாழ்வின், சகல வெளிப்பாட்டினதும் ஊற்று.  ஊற்றினைத் தூய்மைப்படுத்துங்கள்; அனைத்தும் தூய்மையாகும்.

ஒருவன் தனது எண்ணங்களை மாற்றாதவரை வெறும் உணவுப் பழக்கங்களை மாற்றுவதினால் அவனக்கு எவ்வித நன்மையும் வந்துவிடப் போவதில்லை.  தனது எண்ணங்களை தூய்மைப்படுத்திய ஒருவன் தூய்மையற்ற உணவினை நாடுவதும் இல்லை.

தூய எண்ணங்கள் தூய பழக்க வழக்கங்களை ஏற்படுத்துகின்றன.  தனது உடலினைத் தூய்மைப்படுத்தாத ஒரு துறவி உண்மையில் துறவியல்ல.  தனது எண்ணங்களை திடப்படுத்திய, தூய்மைப்படுத்திய ஒருவன் தீய கிருமிகளைப்பற்றி கவலைப்பட தேவையில்லை.

உங்கள் உடல் பூரண நலத்துடன் இருக்க வேண்டுமெனில், உங்கள் மனதினை காத்திடுவீர்.  உங்கள் உடலினை புதுப்பிக்க வேண்டுமெனில், உங்கள் மனதினை அழகுபடுத்துவீர்.  வன்மம்மிக்க, பொறாமைமிக்க, ஏமாற்றமிகு, மனச்சோர்வுமிக்க எண்ணங்கள் உடலின் நலத்தையும் வசீகரத்தையும் கொள்ளையிடும்.  சிடுசிடுப்பான முகம் என்பது தற்செயலாய் வருவதல்ல.  அது வெறுப்பான எண்ணங்களின் வெளிப்பாடு.

அழகை கெடுக்கும் சுருக்கங்கள் மடமை, இச்சை, கர்வம் என்பவற்றால் உண்டானவையே.

பிரகாசமான, களங்கமற்ற சிறுமி ஒருத்தியின் முகம் கொண்ட தொண்ணூற்றாறு வயதான மூதாட்டி ஒருவரை நான் அறிவேன்.  அதேபோன்று தன் வயதிற்கு சிறிதும் பொறுத்தமற்ற முகம் கொண்ட நடுத்தர வயதிற்கும் குறைவான ஒருவனையும் நான் அறிவேன்.  முன்னையது இனிமையான, மகிழ்வான மனநிலையின் வெளிப்பாடு.  பின்னையது இச்சைமிகுந்த, அமைதியிழந்த மனதின் விளைவு.

காற்றையும் சூரிய ஒளியையும் தாராளமாக உட்புக விட்டாலன்றி உங்களால் இனிமையான முழுமையான உறைவிடத்தை பெற முடியாது.  அது போல மனதினுள் ஆனந்தம், நல்லெண்ணம், அமைதி என்பனவற்றை தாராளமாக உட்புக விட்டால் மட்டுமே, திடமான உடலினையும் பிரகாசமான, மகிழ்வான, அமைதியான முகத்தோற்றத்தினையும் பெற முடியும்.

முதியவர்களின் முகங்களில் முகச்சுருக்கங்களைக் காண்கிறோம்.  சிலருக்கு அவை பரிவினால் எற்பட்டிருக்கும்.  சிலருக்கு அவை திடமான, தூய்மையான எண்ணங்களினால் உண்டாகியிருக்கும்.  இன்னும் சிலருக்கோ அவை இச்சையினால் செதுக்கப்பட்டிருக்கும்.  யாரால் அதனை பிரித்தறிய முடியாது?  நேர்மையாய் நன்னெறியில் வாழ்ந்தவர்களுக்கு, முதுமை என்பது சூரிய அஸ்தமனத்தைப் போன்று சலனமற்ற, அமைதியான, மென்மையாய் கனிந்த ஒரு நிலை.  அண்மையில் நான் தத்துவஞானி ஒருவரை அவரது மரணப்படுக்கையில் பார்த்திருக்கிறேன்.  வயதில் மட்டுமே அவர் முதுமை அடைந்திருந்தார்.  அவர் தான் வாழ்ந்தது போல்வே இனிமையாய், அமைதியாய் மரணித்தார்.

உடல்நோய்களை விரட்ட உற்சாகமான எண்ணங்களை விட சிறந்த மருத்துவர் வேறு எவரும் இல்லை.  துயரம், கவலை எனும் இருள் கவியும் போது அதனை கலைக்க நல்லெண்ணத்திற்கும் மேலான ஆறுதல் அளிப்பவர் வேறு எவரும் இல்லை.  பகைமை, வெறுப்பு, சந்தேகம், பொறாமை போன்ற எண்ணங்களுடன் தொடர்ந்து வாழ்வது என்பது தனது சொந்த சிறைக்குள் வாழ்வதற்கு ஒப்பானதாகும்.  பிறரைப் பற்றி நல்லதையே எண்ணுவது, எல்லோருடனும் உற்சாகமாக இருப்பது, பொறுமையாக மற்றவரிடத்தில் நல்லதையே காண்பது போன்ற தன்னலமற்ற எண்ணங்கள் சுவர்கத்தின் வாயில்களாகும்.  நாளுக்கு நாள் எல்லா உயிர்கள் மீதும் அமைதியான எண்ணங்களுடன் வாழ்வோருக்கு அது அபரிமிதமான அமைதியைக் கொண்டு வரும்.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (09.12..2018)

திங்கள், 3 டிசம்பர், 2018

சாபமாகும் வரங்கள்

முதலாளி அரக்கரிடமிருந்து
உன்னை விடுவிப்பதாய்
உறுதி கூறும்
தொழிற்சங்க தேவர்கள்கூட
ஆசைப்படுகிறார்கள்
நீ அவர்களுக்கு
அடிமையாயிருக்க வேண்டுமென
உன் சந்தா எவ்வளவென
அறிவுறுத்தப்படுவாய்
சத்தமின்றி செலுத்து
கணக்குக் கேட்டால்
துரோகியாவாய் கவனம்
உன் ஊதியத்தையும்
உன் உணவையும்
உன் உணர்வையும்
அவர்களே தீர்மானிக்கிறார்கள்
விடுதலை தேவர்களே
விலங்கிடத் துடிக்க
பிசாசுக்கும்
ஆழ்நீலக் கடலுக்குமிடையே
பெருங்ககுழப்பத்தில் நீ.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி (02/12/2018)

துயிலெழுப்பல்


வானூர்தி பயணத்தில்
வாசிக்கவேன்று
கையோடு எடுத்துவந்த
கவிதை நூலை
பாதி வாசித்து
நினைவட்டை இடைச்செருகி
கண்ணயர்ந்தவனை
தட்டி எழுப்பிக்கொண்டிருக்கின்றன
வாசிக்கப்படாத கவிதைகள்

(25.11.2018 சென்னை/தில்லி வானூர்தி பயணத்தில்)