வியாழன், 22 ஜூலை, 2010

கேள்வி

நீ நோக்காததால் 
நான் நோக்கவில்லை.
நீ புன்னகைக்காததால்
நான் புன்னகைக்கவில்லை.
நீ பேசாததால்
நான் பேசவில்லை.
ஜெயித்ததாய்
இறுமாந்திருந்தது மனது.
சட்டென விழித்து
கேட்டது புத்தி,
'நான் ஏன்
நீயாக வேண்டும்?'

***  சுப்ரமண்ய செல்வா ***  

கல்லைக் கண்டால்...


'கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.  நாயைக் கண்டால் கல்லைக் காணோம்'.  நாம் சர்வ சாதாரணமாய் பயன்படுத்தும் சொற்றொடர்.  அர்த்தம், ஒரு காரியத்தை முடிக்க இரண்டு விடயங்கள் தேவைப்படும்போது பல சமயங்களில் ஒன்று அமைந்தால் மற்றது அமைவதில்லை என்பதாகும்.  ஆனால் இந்த சொற்றொடருக்கு முற்றிலும் வித்தியாசமான அர்த்தம் ஒன்றை இன்று காலை திரு. கனக சுப்புரத்தினம் (பதினாறு கவனர் - தமிழ்நாடு) அவர்கள் எழுதியுள்ள  'நினைவாற்றல் வளர...' எனும் புத்தகத்தை வாசித்துக் கொண்டிரும்போது அறிந்து வியந்தேன்.  இதோ அவரது வரிகளில்......


****************************************************************************
நமது மூளை சுமார் 1400 கிராம் எடையுள்ள புரதப் பொருள். அதில் 700 கிராம் இடப்புறம் உள்ளது.  இது அறிவுப் பகுதி.  Logic and Intellectual Wing.  மீதி 700௦௦ கிராம் வலப்புறம் உள்ளது.  இது உணர்வுப் பகுதி.  Intuition and Intelligence Wing.

இடப்புறம் அறிவுப்பகுதி - எய்தியும் பிரித்துப் பார்க்கும்.  ஆராச்சி செய்யும்.  அதாவது Scanning Process.

ஒரு பூவைப் பார்த்தவுடன், 'அல்லி வட்டம் எது? புல்லி வட்டம் எது? இதழ்கள் எத்தனை?' என்றெல்லாம் ஆராச்சியில் இறங்குவதே இடப்புற வேலை.

வலப்புற உணர்வுப் பகுதி எதையும் சேர்த்து முழுதாய்ப் பார்க்கும். அதோடு, அதன் மீது விருப்பு, வெறுப்பு, வியப்பு... இப்படி ஏதோ ஓர் உணர்வைத் தோற்றுவிக்கும்.

அதே பூவைப் பார்த்து, 'அடடா என்ன அழகான ரோஜா!' என்பது போன்ற வியப்பு உணர்வை உண்டாக்கும்.  மண்ணைப் பிசைந்து மலராக்கிக்த் தந்த செடியின் மேல் காதல் வரும்.  காதல் கசிந்து கண்ணீர் வரும்.  கவிதை கூட பொங்கும்.  'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடி' வள்ளலார் ஆகும்.

ஆக, இடப்புற அறிவியல் (விஞ்ஞானம்) அறுத்துப் பார்த்து ஆராச்சி செய்யும்; வலப்புற உணர்வியல் (மெய்ஞ்ஞானம்) வளர்த்துப் பார்த்து ஆனந்தம் கொள்ளும்.  நடந்ததைப் பதிவு செய்வது அறிவு.  நடப்பதை அனுபவிப்பது உணர்வு.  பிரித்துப் பார்த்தால் அறிவு. சேர்த்துப் பார்த்தால் உணர்வு.

நாய் வடிவத்தில் ஒரு கற்சிலை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.  அறிவுப் பகுதி அதை 'வெறும் கல்' என்று சொல்லும்.  உணர்வுப் பகுதியோ 'அடடே என்ன அழகான   நாய்!' என்று வியக்கும்.

ஆக, 'கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.  நாயைக் கண்டால் கல்லைக் காணோம்'.

****************************************************************************

இந்த சொற்றொடருக்கு இப்படி ஒரு அர்த்தம் இருப்பதை இதுவரை அறிந்திருக்கவில்லை.    எனினும் இதே அர்த்தம் கொண்ட வேறொரு சொற்றொடரை அறிவேன். 'மரத்தை மறைத்தது மாமத யானை.  மரத்தில் மறைந்தது மாமத யானை.'  மரத்தினால் ஆன யானை ஒன்றை பார்க்கும் போது, அதை மரமாக பார்த்தால் யானை தெரிவதில்லை.  யானையாக  பார்த்தால் மரம் தெரிவதில்லை.  ஆன்மீகத்தில் இதன் அர்த்தம் 'இந்த பிரபஞ்சத்தில் அனைத்தும் விண்ணின் (அணுவுக்கும் முன்னைய மூலக்கூறு) கூட்டே.  அதனை விண்ணாய்ப் பார்க்கும்போது நானும் எல்லா பொருட்களும், எல்லா உயிர்களும் ஒன்றே.'    அந்த விண்ணானது  உயிரினங்களுக்கு உள்ளே ஓடும்போது அதனை 'உயிர்' என்கிறோம்.  ஆக, அத்தனை உயிரினங்களையும் உயிர் என்ற நிலையில் இருந்து பார்க்கும்போது, நானும் அனைத்து உயிரினங்களும் ஒன்றே.  அத்தகைய மனநிலை வந்து விட்டால், எல்லா உயிர்கள் மீதும் அன்பும் கருணையும் இயல்பாகவே வந்துவிடும்.  இதைதான் மகாகவி பாரதி,
காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்' என்கிறார்.
கீதையில் கண்ணன் :
எந்தப் பொருளிலும் என்னைக் காண்பவன் எவனோ,
அவனை விட்டு எப்போதும் நான் நீங்குவதில்லை;
அவன் என்னை விட்டு நீங்குவதில்லை.
என்பதன் அர்த்தமும் இதுவே.

என்றென்றும் அன்புடன் / சுப்ரமண்ய செல்வா...