வியாழன், 4 ஜனவரி, 2018

சபிக்கப்பட்ட என் கைப்பேசி

மறைந்த தன் நண்பனின் தொலைபேசி இலக்கத்தை தனது கைப்பேசியிலியிருந்து அழிக்க முயலுகையில் படும் துயரத்தை பகிர்ந்துகொண்ட ஒரு நண்பனுக்காக எழுதிய கவிதை:
=================================

நீ
அழைத்த போதெல்லாம்
உன் பெயரால்
ஒளிர்ந்த என் கைப்பேசி
இன்று ஓய்ந்து கிடக்கிறது.
உன் குரலின் ஸ்பரிசத்தை
இனி அது
உணரப்போவதில்லை.

உன் குரலால்
ஆசீர்வதிக்கப்பட்ட
என் செவிகள்
உன் மரணம் கேட்குமாறு
சபிக்கப்பட்டது எப்போது?

கண்ணீரால் காயமான
என் கண்கள்
செய்த பாவமென்ன?

எப்போதும்
சொல்லிவிட்டுத்தானே செல்வாய்
இப்போது மட்டுமென்ன?

நண்பனே!
என் கைப்பேசி சுமக்கும்
உன் எண்ணை
நீக்க முயலுகையில்
துடிக்கும் என் விரல்களை
பதறும் என் நெஞ்சை
நடுங்கும் என் உடலை
உயிருடன் நான் படும்
மரண அவஸ்தையை
உணரவேனும் ஒருமுறை
திரும்பி வா.

- சுப்ரமண்ய செல்வா -