திங்கள், 10 டிசம்பர், 2018

எண்ணிய வண்ணம் வாழ்வு: பகுதி-3 - எண்ணமும் உடல் நலமும்

மூலம்:  As a Man Thinketh by James Allen        தமிழில்: சுப்ரமண்ய செல்வா

உடல் எனப்படுவது மனதின் அடிமை.  அது மனதின் இயக்கங்களுக்கு அடிபணிகிறது; அந்த இயக்கங்கள் திட்டமிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவையாக இருக்கலாம் அல்லது தானாகவே வெளிப்படுத்தப்பட்டவையாகவும் இருக்கலாம்.  தீய எண்ணங்கள் உடலை துரிதமாக நோயையும் அழிவையும் நோக்கி இட்டுச் செல்கின்றன.  அதேபோல்  தூய்மையான அழகான எண்ணங்கள் உடலை இளமையாக அழகுபடுத்துகின்றன.

சூழ்நிலைகளைப் போலவே நோயும் உடல் நலமும் எண்ணத்தில் ஆழ வேரூன்றி இருக்கின்றது.  தீய எண்ணங்கள் நோயுற்ற உடல் மூலம் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன.  அச்சமிக்க எண்ணங்கள் தோட்டாக்களைப் போல்வே துரிதமாக மனிதரை கொல்வதை நாம் அறிவோம்.  நோயைப்பற்றி பயந்து வாழ்பவர்களே சீக்கிரம் நோய்வாய்ப்படுகிறார்கள்.  பதற்றம் முழு உடலையும் நிலைகுலைத்து அதனுள் நோய் உட்புக உறுதுணையாகிறது.  அதுபோலவே தூய்மையற்ற எண்ணங்கள் - அவை உடலால் அனுபவிக்கப்படாவிட்டாலும்கூட - வெகு விரைவில் நரம்பு மண்டலத்தை தகர்த்துவிடும்.

திடமான, தூய, இன்பமான எண்ணங்கள் உடலை சுறுசுறுப்பு மிக்கதாக, வசீகரமானதாக கட்டி எழுப்புகின்றன.  உடல் ஒரு மென்மையான நெகிழ்வான கருவி.  ஆகவே அது எண்ணங்களின் பதிவுகளை உடனடியாக பிரதிபலிக்கின்றது.  நல்லதும் தீயதுமான எண்ணப் பழக்கங்கள் அவற்றுக்கு ஒத்த விளைவுகளை அதன் மீது உண்டாக்குகின்றன.

மனிதர் அழுக்கான எண்ணங்களை பரப்பும் வரையில் அவர்களுக்குள் அசுத்தமான நஞ்சான இரத்தம் ஓடிக்கொண்டேதான் இருக்கும். தூய இதயத்தில் இருந்து வருவதே தூய வாழ்வும் தூய உடலும். மாசுமிக்க மனதின் வெளிப்பாடே மாசுமிக்க வாழ்வும் சீரழிந்த உடலும்.  எண்ணமே செயலின், வாழ்வின், சகல வெளிப்பாட்டினதும் ஊற்று.  ஊற்றினைத் தூய்மைப்படுத்துங்கள்; அனைத்தும் தூய்மையாகும்.

ஒருவன் தனது எண்ணங்களை மாற்றாதவரை வெறும் உணவுப் பழக்கங்களை மாற்றுவதினால் அவனக்கு எவ்வித நன்மையும் வந்துவிடப் போவதில்லை.  தனது எண்ணங்களை தூய்மைப்படுத்திய ஒருவன் தூய்மையற்ற உணவினை நாடுவதும் இல்லை.

தூய எண்ணங்கள் தூய பழக்க வழக்கங்களை ஏற்படுத்துகின்றன.  தனது உடலினைத் தூய்மைப்படுத்தாத ஒரு துறவி உண்மையில் துறவியல்ல.  தனது எண்ணங்களை திடப்படுத்திய, தூய்மைப்படுத்திய ஒருவன் தீய கிருமிகளைப்பற்றி கவலைப்பட தேவையில்லை.

உங்கள் உடல் பூரண நலத்துடன் இருக்க வேண்டுமெனில், உங்கள் மனதினை காத்திடுவீர்.  உங்கள் உடலினை புதுப்பிக்க வேண்டுமெனில், உங்கள் மனதினை அழகுபடுத்துவீர்.  வன்மம்மிக்க, பொறாமைமிக்க, ஏமாற்றமிகு, மனச்சோர்வுமிக்க எண்ணங்கள் உடலின் நலத்தையும் வசீகரத்தையும் கொள்ளையிடும்.  சிடுசிடுப்பான முகம் என்பது தற்செயலாய் வருவதல்ல.  அது வெறுப்பான எண்ணங்களின் வெளிப்பாடு.

அழகை கெடுக்கும் சுருக்கங்கள் மடமை, இச்சை, கர்வம் என்பவற்றால் உண்டானவையே.

பிரகாசமான, களங்கமற்ற சிறுமி ஒருத்தியின் முகம் கொண்ட தொண்ணூற்றாறு வயதான மூதாட்டி ஒருவரை நான் அறிவேன்.  அதேபோன்று தன் வயதிற்கு சிறிதும் பொறுத்தமற்ற முகம் கொண்ட நடுத்தர வயதிற்கும் குறைவான ஒருவனையும் நான் அறிவேன்.  முன்னையது இனிமையான, மகிழ்வான மனநிலையின் வெளிப்பாடு.  பின்னையது இச்சைமிகுந்த, அமைதியிழந்த மனதின் விளைவு.

காற்றையும் சூரிய ஒளியையும் தாராளமாக உட்புக விட்டாலன்றி உங்களால் இனிமையான முழுமையான உறைவிடத்தை பெற முடியாது.  அது போல மனதினுள் ஆனந்தம், நல்லெண்ணம், அமைதி என்பனவற்றை தாராளமாக உட்புக விட்டால் மட்டுமே, திடமான உடலினையும் பிரகாசமான, மகிழ்வான, அமைதியான முகத்தோற்றத்தினையும் பெற முடியும்.

முதியவர்களின் முகங்களில் முகச்சுருக்கங்களைக் காண்கிறோம்.  சிலருக்கு அவை பரிவினால் எற்பட்டிருக்கும்.  சிலருக்கு அவை திடமான, தூய்மையான எண்ணங்களினால் உண்டாகியிருக்கும்.  இன்னும் சிலருக்கோ அவை இச்சையினால் செதுக்கப்பட்டிருக்கும்.  யாரால் அதனை பிரித்தறிய முடியாது?  நேர்மையாய் நன்னெறியில் வாழ்ந்தவர்களுக்கு, முதுமை என்பது சூரிய அஸ்தமனத்தைப் போன்று சலனமற்ற, அமைதியான, மென்மையாய் கனிந்த ஒரு நிலை.  அண்மையில் நான் தத்துவஞானி ஒருவரை அவரது மரணப்படுக்கையில் பார்த்திருக்கிறேன்.  வயதில் மட்டுமே அவர் முதுமை அடைந்திருந்தார்.  அவர் தான் வாழ்ந்தது போல்வே இனிமையாய், அமைதியாய் மரணித்தார்.

உடல்நோய்களை விரட்ட உற்சாகமான எண்ணங்களை விட சிறந்த மருத்துவர் வேறு எவரும் இல்லை.  துயரம், கவலை எனும் இருள் கவியும் போது அதனை கலைக்க நல்லெண்ணத்திற்கும் மேலான ஆறுதல் அளிப்பவர் வேறு எவரும் இல்லை.  பகைமை, வெறுப்பு, சந்தேகம், பொறாமை போன்ற எண்ணங்களுடன் தொடர்ந்து வாழ்வது என்பது தனது சொந்த சிறைக்குள் வாழ்வதற்கு ஒப்பானதாகும்.  பிறரைப் பற்றி நல்லதையே எண்ணுவது, எல்லோருடனும் உற்சாகமாக இருப்பது, பொறுமையாக மற்றவரிடத்தில் நல்லதையே காண்பது போன்ற தன்னலமற்ற எண்ணங்கள் சுவர்கத்தின் வாயில்களாகும்.  நாளுக்கு நாள் எல்லா உயிர்கள் மீதும் அமைதியான எண்ணங்களுடன் வாழ்வோருக்கு அது அபரிமிதமான அமைதியைக் கொண்டு வரும்.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (09.12..2018)

திங்கள், 3 டிசம்பர், 2018

சாபமாகும் வரங்கள்

முதலாளி அரக்கரிடமிருந்து
உன்னை விடுவிப்பதாய்
உறுதி கூறும்
தொழிற்சங்க தேவர்கள்கூட
ஆசைப்படுகிறார்கள்
நீ அவர்களுக்கு
அடிமையாயிருக்க வேண்டுமென
உன் சந்தா எவ்வளவென
அறிவுறுத்தப்படுவாய்
சத்தமின்றி செலுத்து
கணக்குக் கேட்டால்
துரோகியாவாய் கவனம்
உன் ஊதியத்தையும்
உன் உணவையும்
உன் உணர்வையும்
அவர்களே தீர்மானிக்கிறார்கள்
விடுதலை தேவர்களே
விலங்கிடத் துடிக்க
பிசாசுக்கும்
ஆழ்நீலக் கடலுக்குமிடையே
பெருங்ககுழப்பத்தில் நீ.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி (02/12/2018)

துயிலெழுப்பல்


வானூர்தி பயணத்தில்
வாசிக்கவேன்று
கையோடு எடுத்துவந்த
கவிதை நூலை
பாதி வாசித்து
நினைவட்டை இடைச்செருகி
கண்ணயர்ந்தவனை
தட்டி எழுப்பிக்கொண்டிருக்கின்றன
வாசிக்கப்படாத கவிதைகள்

(25.11.2018 சென்னை/தில்லி வானூர்தி பயணத்தில்)

வியாழன், 29 நவம்பர், 2018

எண்ணிய வண்ணம் வாழ்வு: பகுதி-2 எண்ணமும் சூழ்நிலைகளும் (தொடர்ச்சி...)

மூலம்:  As a Man Thinketh by James Allen        தமிழில்: சுப்ரமண்ய செல்வா

துன்பம் என்பது எப்போதும் ஏதோ ஒரு வழியில் தவறான எண்ணத்தின் விளைவே.  அது ஒருவன் தன்னோடும், தன் இருப்பின் மூலமான நியதியோடும் இசைவாய் இல்லை என்பதன் அறிகுறியாகும்.  துன்பத்தின் ஒரே உன்னத நோக்கம் தூய்மைப்படுத்துவதாகும்.  தூய்மையான பின்பு துன்பம் தொடர்வதில்லை.  அழுக்கை அகற்றியபின் தங்கத்தை மேலும் எரிப்பதில் அர்த்தமில்லை; முற்றிலும் தூய்மையான ஒருவன் துன்பப்பட முடியாது.

ஒரு மனிதன் எதிர்கொள்ளும் துன்பம் மிக்க சூழ்நிலைகள் என்பன அவன் தன் அகத்தோடு இசைவற்று இருப்பதன் விளைவே.  அதேபோல் ஒருவன் எதிர்கொள்ளும் இன்பகரமான சூழ்நிலகள் என்பன அவன் தன் அகத்தோடு ஒத்திசைவாய் இருப்பதன் விளைவே.  இன்பம் என்பது சரியான எண்ணத்தினதும், துன்பம் என்பது தவறான எண்ணத்தினதும் சரிசமமான பங்காகும்.  அங்கே உள்ளவன் இல்லாதவன் என்ற பாகுபாட்டுக்கு இடமில்லை.  ஒருவன் செல்வந்தனாக ஆனால் சபிக்கப்பட்டவனாக இருக்கலாம்.  இன்னொருவன் ஏழையாக ஆனால் ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருக்கலாம்.  செல்வமும் மகிழ்ச்சியும் ஒன்றாயிருப்பது அந்த செல்வமானது நேர்மையான விவேவகமான முறையில் பயன்படுத்தப்படும் போது மட்டுமே.  அதேபோல் ஏழை துன்பக்குழியின் கீழே போவது அந்த துன்பமானது தன் மீது அநியாயமாக சுமத்தப்பட்டு இருக்கிறது என்று கருதும்போதே.

வறுமையும் மிதமிஞ்சிய அனுபோகமும் இழிநிலையின் இரு எல்லைகளாகும்.  இவை இரண்டும் இயற்கைக்கு மாறானதும், மனநோயின் விளைவும் ஆகும்.  ஒருவனின் சரியான, இயல்பான நிலை என்பது இன்பமாய், ஆரோக்கியமாய், செழுமையாய் இருத்தலே.  அத்தகைய உன்னத நிலையை அடைவது என்பது அவன் தனது அகத்தோடும் புறத்தோடும், தன்னுள்ளும் தன் புற சூழலோடும் இசைவிணக்கமாய் இருத்தலின் விளைவே.

ஒருவன் உண்மையான மனிதன் ஆகத் தொடங்குவது புலம்பலையும், நிந்தித்தலையும் நிறுத்தி, தன் வாழ்வை ஒழுங்குபடுத்துகின்ற அந்த மறைந்துள்ள மாறாத நியதியை தேட ஆரம்பிக்கும்போது மட்டுமே.  அப்படி அவன் தன் மனதை அந்த ஒழுங்கமைப்போடு இணைக்கும்போது, தனது நிலைமைக்கு மற்றவர்களே காரணம் எனக் குற்றஞ்சாற்றுதலை நிறுத்துகிறான்.  உயரிய எண்ணங்களால் தன்னை கட்டி எழுப்புகின்றான்.  புறச்சூழலோடு போரிடுவதை நிறுத்தி, அச்சூழ்நிலைகளையே தனது துரித முன்னேற்றத்திற்கும், தன்னுள் மறைந்திருக்கும் அற்புதமான ஆற்றல்களையும், சாத்தியங்களையும் கண்டறிய உபயோகப்படுத்திக் கொள்கின்றான்.

குழப்பங்கள் அல்ல, ஒழுங்கமைப்பே பிரபஞ்சத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற அடிப்படைக் கோட்பாடு.  அநீதி அல்ல, நீதியே வாழ்வின் சாரமும், ஆன்மாவும் ஆகும்.  ஒழுக்கக் கேடல்ல, நேர்மையே நம்மை  வடிவமைக்கின்ற, முன்னோக்கித் தள்ளுகின்ற ஆற்றல்.  இந்நியதிக்கொப்ப, பிரபஞ்சம் சரியாக இருக்க வேண்டுமெனில் ஒருவன் தன்னை சரிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.  அப்படி தன்னை சரிப்படுத் கொள்கின்ற இந்நிகழ்வின் போது, ஒருவன் பிற பொருட்களை, பிற மனிதர்களை நோக்கிய தனது எண்ணங்களை மாற்றும்போது, அதற்கொப்ப தன்னை நோக்கிய பிற பொருட்களின், பிற மனிதர்களின் எண்ணங்கள் மாற்றம் அடைவதை அறிந்துக் கொள்வான்.

இந்த உண்மையின் சான்று ஒவ்வொரு மனிதருள்ளும் இருக்கின்றது.  அதனை அறிந்துக்கொள்ள தேவை முறையான சுய ஆய்வும்  சுய பகுப்பாய்வுமே.  ஒருவன் தனது எண்ணங்களை தீவிரமாக மாற்றிப் பார்க்கட்டும்.  அது அவன் வாழ்வில் ஏற்படுத்தும் சடுதியான மாற்றங்களைக் கண்டு வியப்படைவான்.  மனிதர்கள் எண்ணங்களை இரகசியமாக வைத்திருக்க முடியும் என்று எண்ணுகிறார்கள்.  ஆனால் அது சாத்தியமன்று.  எண்ணம் பழக்கமாக வெளிப்படுகின்றது.  பழக்கம் அதற்கொத்த சூழ்நிலையை உருவாக்குகின்றது.  கீழ்த்தரமான எண்ணங்கள் குடி, சிற்றின்பம் முதலிய பழக்கங்கள் ஆகின்றன.  அவை நோய், அழிவு மிகுந்த சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  ஒவ்வொறு விதமான தூய்மையற்ற எண்ணங்களும், வலிமையற்ற குழப்பம் மிகுந்த பழக்கங்கள் ஆகின்றன.  அவை திசை மாற்றுகின்ற, தீமை விளைவிக்கின்ற சூழ்நிலைகளை உருவாக்கின்றன.  அச்சமிக்க, தடுமாற்றமான, உறுதியற்ற எண்ணங்கள் பலவீனமான, கோழைத்தனமான, உறுதியற்ற பழக்கங்கள் ஆகின்றன.  அவை அதற்கு ஒத்த தோல்வி, வறுமை, அடிமைப்பட்ட சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  சோம்பேறித்தனமான எண்ணங்கள், அசுத்தமான, நேர்மையற்ற பழக்கங்கள் ஆகின்றன.  அவை முறைதவறுகின்ற, கொடுவறுமை விளைவிக்கின்ற சூழ்நிலைகள உருவாக்குகின்றன.  பிறரை வெறுக்கின்ற, கண்டிக்கின்ற எண்ணங்கள், வீண் பழி சுமத்துகின்ற, அடவடித்தனமான (வன்முறை) பழக்கங்கள் ஆகின்றன.  அவை மற்றவர்களை காயப்படுத்துகின்ற, துன்புறுத்துகின்ற சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  எல்லாவிதமான சுயநல எண்ணங்களும் தன்னலமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை அதற்கொத்த துயரமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  அதேபோல் எல்லாவிதமான அழகான எண்ணங்களும், தயை மிகுந்த, கருணைமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை அதற்கொத்த அன்பான, பிரகாசமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  தூய்மையான எண்ணங்கள், இச்சை அடக்கிய, சுயகட்டுப்பாடுமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை சாந்தமான, அமைதியான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  தைரியமான, தன்னம்பிக்கைமிக்க மற்றும் தீர்மானமான எண்ணங்கள் வீறுமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை அதற்கொத்த வெற்றிமிக்க, அபரிமிதமான, சுதந்திரமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  ஆற்றல்மிக்க எண்ணங்கள் தூய்மையான, செயலூக்கமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை ரம்மியமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  மென்மையான, பிழை பொறுக்கின்ற எண்ணங்கள், சாந்தமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை பாதுகாப்பான, இதமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  அன்பு மிகுந்த, சுயநலமற்ற எண்ணங்கள், தன்னலமற்ற பழக்கங்கள் ஆகின்றன.  அவை நிச்சயமான நிலையான சுபீட்சம் மற்றும் உண்மையான செழிப்புமிக்க சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.

நன்மையானதோ தீமையானதோ, விடாப்பிடியாக தொடர்கின்ற ஒரு எண்ணம், அதற்கொத்த விளைவுகளை ஒருவருடைய குணத்திலும் சூழ்நிலையிலும் கொடுக்கத் தவறுவதில்லை.  ஒருவன் தன்னுடைய சூழ்நிலைகளை நேரடியாக தேர்ந்தெடுக்க முடியாது.  ஆனால் அவனால் தன் எண்ணங்களை தேர்ந்தெடுக்க முடியும்.  அதன் மூலம் மறைமுகமாக, ஆனால் நிச்சயமாக, தனது சூழ்நிலைகளை வடிவமைக்க முடியும்.

இயற்கையானது ஒருவன் தன்னுள் அதிகமாக ஊக்குவிக்கின்ற எண்ணங்களை ஈடேற்ற உதவுகிறது.  நல்லதும் கெட்டதுமான எண்ணங்களை விரைவில் வெளிக்கொணர்வதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன.

ஒருவன் தனது பாவமிக்க எண்ணங்களை நிறுத்தட்டும்.  முழு உலகமும் அவனை நோக்கி கனிவோடு திரும்பும்.  அவனுக்கு உதவத் தயாராகும்.  அவன் தனது நலிந்த, ஆரோக்கியமற்ற எண்ணங்களை தூர விலக்கட்டும்.  ஆஹா.. அவனது உறுதியான முடிவுக்கு உதவுவதற்கு ஒவ்வொரு கரங்களிலிருந்தும் வாய்ப்புகள் பூக்கும்.  அவன் தன்னுள் நல்ல எண்ணங்களை ஊக்குவிக்கட்டும்.  எந்தத் தலைவிதியும் அவனை துர்பாக்கிய குழியினுள் தள்ளாது.  உலகம் என்பது ஒரு பல்வண்ணக் காட்சிக் கருவி.  அது அடுத்தடுத்து நகர்கின்ற கணங்களில் காட்டுகின்ற மாறுபட்ட பல வண்ணங்களின் கூட்டு என்பது வேறு எதுவுமன்று.  அவை சதா ஓடுகின்ற உங்கள் எண்ணங்களைக் கொண்டு மிக நேர்த்தியாக ஒழுங்குப்படுத்தப்பட்ட படங்களே.

ஆவாய் நீ நின் சித்தம்படி.
தோல்வி திருப்திபட்டுக்கொள்ளட்டும்
சூழ்நிலை எனும் அந்த மாய உலகில்.
ஆன்மா அதனை வெறுக்கின்றது.
ஏனெனில்அது சுதந்திரமானது.

அது
காலத்தை ஆள்கின்றது;  பரவெளியை வெற்றிகொள்கிறது.
சந்தர்ப்பம் எனும் வஞ்சகனை அடக்கியாள்கின்றது.
சூழ்நிலை எனும் கொடுங்கோலனை
வீழ்த்தி அடிமையாக்குகின்றது.

மனித சித்தம்
அந்த
பார்வைக்கு புலப்படா(த) பேராற்றல்
அழிவற்ற ஆன்மாவின் ஆசைக் குழந்தை
எந்த இலக்கை நோக்கியும்
எந்த தடையையும் தகர்த்துச் செல்லும்

எனவே
காலதாமத்தினால் கலங்காதீர் - (யாவும்)
அறிந்தவராய் காத்திருப்பீர்
ஆன்மா எழுந்து ஆணையிடும்போது
அனைத்து கடவுளரும்
பணிவிடைபுரிய பார்த்திருப்பர்.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (25.11..2018)

திங்கள், 12 நவம்பர், 2018

எண்ணிய வண்ணம் வாழ்வு: பகுதி-2 எண்ணமும் சூழ்நிலைகளும் (தொடர்ச்சி...)

மூலம்:  As a Man Thinketh by James Allen        தமிழில்: சுப்ரமண்ய செல்வா

மனிதர்கள் தங்கள் சூழ்நிலைகளை மேம்படுத்த ஆவல் கொள்கிறார்கள்.  ஆனால் தங்களை மேம்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை.  ஆகவே அவர்கள் தொடர்ந்து கட்டுண்டு  கிடக்கின்றார்கள்.  தன்னைத் தானே சிலுவையிலிட்டு வலி வேதனையோடு தன் குறைகளை போக்குகின்ற மனிதன் தன் இதயத்தின் தேடலை அடையத் தவறுவதில்லை.  இந்த உண்மை மண்ணுலக மட்டுமல்ல விண்ணுலக விடயங்களுக்கும் பொருந்தும்.  வெறும் செல்வம் மட்டுமே சேர்க்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவன் கூட, அதனை அடைவதற்கு மிகப்பெரிய தனிப்பட்ட தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கின்றது. அவ்வாறெனின், அமைதியான வாழ்வை பெறுவதற்கு அவன் எத்துணை தியாகம் செய்ய வேண்டும்?

இதோ ஒரு மிக மிக ஏழ்மையான மனிதன்.   தனது சூழலும் வாழ்க்கைத் தரமும் உயர வேண்டுமென்று மிகவும் ஆவல் கொள்கின்றான்.  ஆனால் எப்பொழுதும் தனது வேலைகளை சரியாக செய்யாமல் தனது எஜமானனை ஏமாற்றுகின்றான்.  தனக்கு கிடைக்கும் ஊதியம் குறைவென்று தனது தவறை நியாயப்படுத்துகின்றான்.  உண்மையான சுபீட்சத்திற்கான அடிப்படை எதுவென்று அவனுக்கு புரியவில்லை.  தனது ஏழ்மையிலிருந்து வெளிவர அவன் அருகதையற்றவன்.  அதுமட்டுமன்றி தனது சோம்பேறித்தனமான, ஏமாற்றுகிற, கோழைத்தனமான எண்ணங்களால், ஏழ்மை என்னும் படுகுழியின் ஆழத்திற்கு அவன் தன்னை இழுத்துச் செல்கின்றான்.

இதோ சாப்பாட்டு பிரியரான ஒரு பணக்காரன்.  கட்டுபாடற்ற உணவு பழக்கத்தின் காரணமாக வலி வேதனைமிக்க நீண்ட நோயுற்றவன்.  அவன் தனது நோயிலிருந்து விடுபட எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் செல்வழிக்கத் தயாராயிருக்கிறான்.  ஆனால் உணவு மீதான தனது அபரிமிதமான ஆசையத் துறக்க தயாராயில்லை.  அவனுக்கு விதம்விதமான சுவையான உணவும் வேண்டும்; அதேவேளை உடலும் நலமாக இருக்க வேண்டும்.  அத்தகையவன் ஆரோக்கியமாக இருக்க அருகதையற்றவன்.  அவன் இன்னும் உண்மையான ஆரோக்கிய வாழ்வின் அரிச்சுவடி அறியாதவன்.

இதோ ஒரு எஜமானன்.  குறுக்கு வழிகளை கையாண்டு குறைந்த சம்பளம் கொடுப்பதன் மூலம் அதிக இலாபம் சம்பாதிக்கிறான்.  அத்தகையவன் உண்மையான சுபீட்சத்திற்கு அருகதையற்றவன்.  ஒரு நாள் தனது பெயரையும், பணத்தையும் இழக்கும்போது, சூழ்நிலைகள் மீது குறை கூறுகின்றான்.  தானே அந்த சூழ்நிலையின் காரணகர்த்தா என்பதை அவன் அறியவில்லை.

மேல் குறிப்பிட்ட மூன்று உதாரணங்களையும் நான் குறிப்பிட்டது, மனிதன், தானே தனது சூழ்நிலைகளின் கர்த்தாவாக (பல நேரங்களில் அவனையறியாமலேயே) இருக்கின்றான் என்பதனை எடுத்துக் காட்டவே.  நல்லதையே அடைய வேண்டும் என்று முயற்சிக்கின்ற மனிதன், அந்த முயற்சிக்குத் தடையாக இருக்கக் கூடிய எண்ணங்களையும் ஆசைகளையும் தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டே இருக்கின்றான்.  இத்தகைய உதாரணங்களை முடிவற்று பெருக்கிக் கொண்டே போகலாம்.  அது அவசியமற்றது.  ஏனெனில் ஒருவர் முயற்சித்தால் தனது மனதின்,  வாழ்வின் சுவட்டிலேயே எண்ணங்கள் என்னும் நியதியின் செயல்பாட்டைக் காணலாம்.  அப்படி அறியும் வரை வெறும் வெளிப்புறத் தோற்றங்கள் மூலம் எட்டப்படுகின்ற முடிவானது விவேகமற்றதாகும்.

ஆனால், சூழ்நிலைகள் மிக குழப்பமானவை.  எண்ணங்கள் ஆழ வேரூன்றியவை.  மகிழ்ச்சி என்பதோ மனிதருக்கு மனிதர் மிக வேறுபடுபவை.  ஆகவே ஒரு மனிதனின் முழுமையான உண்மைத் தன்மையை (அது அவனுக்குத் தெரிந்திருப்பினும்) அவனது வெளிப்புறத் தோற்றத்தின் மூலம் இன்னொருவரால் தீர்மானஞ்செய்ய இயலாது.  ஒருவன் சில வழிகளில் நேர்மையானவனாக இருக்கலாம்.  இருந்தும் ஏழ்மையில் கஷ்டப்படலாம்.  இன்னொருவன் சில வழிகளில் நேர்மையற்றவனாக இருக்கலாம்.  இருந்தும் செல்வந்தனாக இருக்கலாம்.  ஆனால் ஒருவன் தோற்றுப் போவது அவனது குறிப்பிட்ட நேர்மையினால் என்றும், மற்றவன் வளமாய் வாழ்வது அவனது குறிப்பிட்ட நேர்மையற்ற தன்மையினால் என்றும் எட்டப்படுகின்ற முடிவானது வெறும் மேலோட்டமானதாகும்.  இதற்கு காரணம் நேர்மையற்றவன் முற்று முழுதாய் அயோக்கியன்; நேர்மையானவன் முழுமையான உத்தமன் என்கிற அனுமானம் ஆகும்.  ஆழ்ந்த அறிவின் மற்றும் பரந்த அனுபவம் மூலம் அம்முடிவானது தவறு என புலப்படும்.  நேர்மையற்றவனிடம் மற்றவனிடம் இல்லாத சில உன்னத பண்புகள் இருந்திருக்கலாம்.  அதேபோல் நேர்மையானவனிடம் மற்றவனிடம் இல்லாத சில தீய குணங்கள் இருந்திருக்கலாம்.  நேர்மையானவன் தனது நல்ல குணங்களின், செயல்களினால் பெறக்கூடிய நற்பலன்களை அனுபவிப்பது போலவே தனது தீய குணங்களினால் வரக்கூடிய துன்பங்களையும் அனுபவிக்கிறான்.  அதுபோலவே நேர்மையற்றவன் தனது துன்பங்களையும் இன்பங்களையும் சேகரிக்கிறான்.

ஒருவன் நல்லவனாய் இருப்பதால்தான் துன்பங்ளை அனுபக்கிறான் என்று வழமையாக நம்புவது அறியாமையின் வெளிப்பாடே.  தனது மனதிலிருந்து ஒவ்வொறு ஆரோக்கியமற்ற, கசப்பான, தூய்மையற்ற எண்ணத்தையும் நிர்மூலமாக்குகின்ற வரையிலும்; தனது ஆன்மாவிலிருந்து பாவக் களங்கங்கள் அனைத்தையும் கழுவிப் போக்குகின்ற வரையிலும், ஒருவன் தனது துயரங்களுக்கு எல்லாம் காரணம் தனது நல்ல தன்மையே என்று பறைசாற்றக் கூடிய தகுதியைப் பெறுவதில்லை.   அத்தகைய ஒப்புயர்வற்ற முழுமையை நோக்கிப் பயணிக்கின்ற வழியில் - அதனை அடையும் முன்பே - பாரபட்சமற்ற அந்த உன்னத இயற்கை நியதியை அறிந்து கொள்கின்றான்.  அது எப்போதும் நன்மைக்குத் தீமையையும், தீமைக்கு நன்மையையும் விளைவாகக் கொடுப்பதில்லை.  அத்தைகைய மேலான அறிவோடு ஒருவன் தனது கடந்த கால வாழ்க்கையை பின்னோக்கிப் பார்க்கும்போது, அது எப்போதும் சரியான ஒழுங்கமைப்போடு இருந்திருப்பதையும், நல்லதும், தீதுமானது தனது எல்லா கடந்த கால அனுபவங்களும் தனது அகத்தின் சரியான வெளிப்பாடு என்பதனையும் அறிகிறான்.

நல்ல எண்ணங்களும் செயல்களும் எப்போதும் தீய விளைவுகளைத் தருவதில்லை; தீய எண்ணங்களும் செயல்களும் எப்போதும் நல்ல விளைவுகளைத் தருவதில்லை.  சோளத்திலிருந்து சோளத்தைத் தவிர, நெருஞ்சியிலிருந்து நெருஞ்சியைத் தவிர வேறு எதுவும் வருவதில்லை.  மனிதர்கள் புற உலகத்தில் இந்த நியதியை நன்கு புரிந்து கொள்கிறார்கள்.  அதனோடு ஒத்துப் போகிறார்கள்.  புற உலகத்தைப் போன்றே அக உலகத்திலும் (அற உலகத்திலும்) அந்த நியதியின் சீரான ஒழுங்கமைப்பு மாறாதது.  எனினும் வெகு சிலரே அதனை புரிந்து கொள்கிறார்கள்.  பலர் அதனை புரிந்து கொள்ளாததால் அதனுடன் ஒத்துப் போவதில்லை.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (11.11..2018)

எண்ணிய வண்ணம் வாழ்வு: பகுதி-2 எண்ணமும் சூழ்நிலைகளும்

மூலம்:  As a Man Thinketh by James Allen        தமிழில்: சுப்ரமண்ய செல்வா

மனித மனம் என்பது ஒரு தோட்டத்தைப் போன்றது.  எதையும் பயிரிட்டாலும் பயிரிடாவிட்டாலும் அங்கு ஏதாவதொன்று முளைத்துக்கொண்டே இருக்கும்.  பயனுள்ள விதைகளை விதைக்கத் தவறினால் பயனற்ற களைகளின் விதைகள் அங்கு விழுந்து தங்களை பெருக்கிக்கொண்டே இருக்கும்.

களைகளை அகற்றி தனக்கு தேவையான கனிகளையும் மலர்களையும் பயிரிடும் ஒரு நல்ல தோட்டக்காரனைப் போல, மனிதன் மனம் என்கின்ற தனது தோட்டத்தில் தவறான, பயனற்ற, தூய்மையற்ற எண்ணங்கள் என்னும் களைகளை அகற்றி, சரியான, பயனுள்ள, தூய்மையான கனிகளையும் மலர்களையும் நிறைவாக பயிரிட்டு வர, தானே தனது ஆன்மாவின் மிகச் சிறந்த தோட்டக்காரன் என்பதையும், தானே தனது வாழ்வை இயக்குபவன் என்பதையும் நன்றாக கண்டு கொள்கின்றான். தனது எண்ணங்களின் குறைகளை உள்ளார்ந்து உணர்கின்றான்.  எப்படி எண்ணங்களும் மனமும் குணத்தை, சூழ்நிலைகளை, தலைவிதியை உருமாற்றுகின்றன என்பதனை துல்லியமாக புரிந்து கொள்கின்றான்.

எண்ணமும் குணமும் ஒன்றே. ஒருவன் தனது குணத்தை அடையாளம் கண்டு கொள்வதும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதும் சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் வழியாகவே. எனவே ஒருவனது வாழ்வின் புறச்சூழ்நிலைக்கும் அவனது அகத்தின் தன்மைக்கும் ஒரு இணக்கமான தொடர்பு இருப்பதைக் காணலாம்.  இதன் அர்த்தம் ஒருவனது குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையானது அவனது மொத்த குணத்தின் வெளிப்பாடாக இருக்கும் என்பதல்ல.  ஆனால் அந்த குறிப்பிட்ட சூழ்நிலையானது அவனுள் இருக்கும் ஏதோ ஒரு ஆழ்ந்த எண்ணத்தோடு தொடர்புடையாதாக இருக்கும்.  அந்தத் தொடர்பின் நெருக்கம் எத்தகையதெனில் அது அந்தச் சூழ்நிலயில் அவனது வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருக்கும்.

ஒவ்வொறு மனிதனதும் தற்போதைய நிலை என்பது அவனது இருப்பின் நியதிக்கு உட்பட்டதே.  அவனது குணத்தை கட்டமைத்த அவனது எண்ணங்களே அவனை அங்கு கொண்டு வந்திருக்கின்றன.  அவனது வாழ்க்கை அமைப்பிலே தற்செயல் என்பதற்கு இடமேயில்லை.  அனைத்தும் எப்போதும் தவற முடியாத ஒரு நியதிக்கு உட்பட்டதே.  இது தங்கள் சூழ்நிலையோடு இணக்கமின்றி இருப்பவர்களுக்கும் மற்றும்  தங்கள் சூழ்நிலையோடு மனநிறைவோடு ஒத்து இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

இடையறாத தன்மாற்றத்துடன் முற்போக்குப் பாதையில் பயணிக்கின்ற மனிதன், தான் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் தரும் பாடங்களை கற்றுக் கொள்ளும்போது தன்னை மேலும் மேலும் உயர்த்திக் கொள்ள முடியும்.  ஒவ்வொறு சூழ்நிலையும் அதனகத்தே அவனுக்காக வைத்திருக்கும் ஆன்ம பாடத்தை அவன் கற்றுத் தேறும்போது, புதிய சூழ்நிலைகள் புதிய பாடங்களோடு அவனுக்காக காத்திருக்கின்றன.

தான் புறச்சூழ்நிலைகளின் உருவாக்கம்  என்று நம்புகின்ற வரையில் மனிதன் சூழ்நிலைகளின் தாக்கத்திற்கு உட்பட்டே இருப்பான்.  ஆனால் தானே படைக்கும் சக்தி என்று உணருபோது; தானே சூழ்நிலைகள் வளர்கின்ற மறைந்திருக்கும் மண்ணையும் விதைகளையும் ஆள்கின்றவன் என்று உணரும்போது, அவன் தனக்குத் தானே சரியான எஜமானன் ஆகின்றான்.

நீண்ட காலம் சுயக்கட்டுப்பாட்டுடன் தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டும் வரும் ஒவ்வொறு மனிதனாலும் சூழ்நிலைகள் என்பன எண்ணங்களிலிருந்து வளர்வதை நன்கு உணர முடியும்.   ஏனெனில் தனது சூழ்நிலைகளின் மாற்றங்களின் அளவானது அவனது மனதின் மாற்ற அளவுக்கு சரியாக ஒத்திருப்பதை அவன் அறிந்திருப்பான்.  அதேபோல் ஒருவன் மனப்பூர்வமாக முயற்சித்து தனது குணங்களில் உள்ள குறைகளை களையும்போது, அவன் இன்பம் துன்பம் என மாறி மாறி வரும் வாழ்க்கைச் சக்கரத்திலிருந்து விரைவாக வெளியே வருகின்றான்.

ஆன்மா தான் விரும்புகின்ற, பயப்படுகின்ற, இரகசியமாய் காக்கின்ற விடயங்களையே தன்னுள் ஈர்க்கின்றது.  அது தனது உயர்வான விருப்பங்கள் என்னும் உச்சியையும் அடைகின்றது.  கட்டுப்படுத்தப்படாதஆசைகள் என்னும் பாதாளத்தையும் தொடுகின்றது.  சூழ்நிலைகள் மூலமே அது தனக்கு ஒத்தவற்றைப் பெறுகின்றது.

மனதிலே விதைக்கப்பட்ட அல்லது விழ அனுமதிக்கப்பட்ட ஒவ்வொறு எண்ண விதையும் வேரூன்றி தனது விளைச்சளைத் தருகின்றது.  அது இன்றோ நாளையோ செயலாக மலர்ந்து, அதற்கு ஒத்த வாய்ப்புகளையும் சூழ்நிலைகளையும் விளைவாக தருகின்றது.  நல்ல எண்ணங்கள் நல்ல கனிகளையும், தீய எண்ணங்கள் தீய கனிகளையும் தருகின்றன.

சூழ்நிலை எனும் புற உலகம் எண்ணம் எனும் அக உலகத்திற்கு எற்ப தன்னை வடிவமைத்துக் கொள்கின்றது.  இனிமையும் கசப்புமான புறச்சூழ்நிலைகளே ஒருவனின் இறுதியான தகைமையை நோக்கி இட்டுச்செல்லும் காரணிகளாக அமைகின்றன.  தனது விளைச்சலை தானே அறுவடை செய்யும் மனிதன் துன்பத்திலிருந்தும் பேரின்பத்திலிருந்தும் படிப்பினை பெறுகின்றான்.

தன்னை ஆட்கொள்ள அனுமதித்த உள்ளார்ந்த ஆசைகளை, விருப்பங்களை, எண்ணங்களை தொடர்வதன் மூலம் மனிதன் இறுதியாக அவற்றின் விளைவுகளை அவனது வாழ்வின் புறச்சூழ்நிலையில் காண்கின்றான்.

ஒருவன் பிச்சை புகுவதோ சிறைக்கு வந்தடைவதோ சந்தர்ப்பத்தின் அல்லது விதியின் கொடுமையினால் அல்ல. அதற்கு அவன் தேர்ந்தெடுத்த மிகத் தாழ்ந்த எண்ணங்களும் கீழ்த்தரமான ஆசைகளும் மிக்க பாதையே காரணம்.  அதே போன்று தூய்மையான மனம் கொண்ட ஒருவன் திடீரென பாவத்தில் வீழ்வது வெறும் புறக்காரணங்களால் அல்ல.  பாவ எண்ணம் நீண்ட காலமாக அவன் இதயத்தினுள்ளே இரகசியமாக ஊட்டி வளர்க்கப்பட்டிருந்தது.  சரியான வாய்ப்பு அதன் ஒன்றுதிரண்ட சக்தியை வெளிப்படுத்தியது.  சூழ்நிலை ஒருவனை உருவாக்குவது இல்லை.  அது அவனை அவனுக்கு வெளிப்படுத்துகிறது.  கீழ்த்தரமான எண்ணங்களின் இணக்கத்தால் அன்றி வேறு எவ்வழியிலும் தீய செயலோ அதனால் விளையக்கூடிய துன்பங்களோ ஏற்படுவதில்லை.  அதேபோன்று நீண்ட நல்லொழுக்கத்தின் விளைவால் அன்றி வேறு எவ்வழியிலும் நற்பண்புகளும் அதனால் ஏற்படக்கூடிய தூய இன்பமும் கிட்டுவதில்லை.  எனவே எண்ணத்தின் எஜமானனான மனிதன் தன்னை உருவாக்குபவனும் உருமாற்றுவனும், தன் புறச்கூழலின் கர்த்தாவும் ஆகிறான்.  பிறப்பிலேயே ஆன்மா தனது தனித்தன்மையோடு வந்து விடுகிறது.  இந்த பூமியில் அது மேற்கொள்ளும் யாத்திரையின் ஒவ்வொறு அடியிலும் தம்மை வெளிப்படுத்துகின்ற சூழ்நிலைகளை அது தன்னை நோக்கி ஈர்க்கின்றது.  அவை அதன் சொந்த தூய்மையும், அழுக்கையும், பலத்தையும், பலவீனத்தையும் பிரதிபலிக்கின்றன.

மனிதர் தாம் விருப்புவதை தம்மை நோக்கி ஈர்த்துக் கொள்வதில்லை.  அவர்கள் எதுவாக இருக்கிறார்களோ அவற்றையே தம்மை நோக்கி ஈர்த்துக் கொள்கிறார்கள்.  அவர்களின் விருப்பங்களும், கற்பனகளும், இலட்சியங்களும் ஒவ்வொறு அடியிலும் தடைபடுகின்றன.  நல்லதும் தீயதுமான அவர்களின் உள்ளார்ந்த எண்ணங்களும் ஆசைகளும் தமக்குத் தாமே உணவாகி பெருகுகின்றன.  நம்மை உருமாற்றுகின்ற தெய்வீகம் நமக்குள்ளேதான் இருக்கின்றது.  அது வேறு யாருமல்ல.  நாமேதான்.  மனிதன் விலங்கிடப்படுவது அவனாலேயேதான்.  எண்ணமும் செயலும் விதியெனும் சிறையின் காவலர்கள்.  அவை கீழ்த்தரமாக இருக்கும்போது அவர்கள் சிறைப்படுத்துகிறார்கள்.  அவை உயர்வாக இருக்கும்போது அவர்களே நம்மை விடுவிக்கின்ற சுதந்திர தேவதைகளாகவும் இருக்கின்றார்கள்.

மனிதனுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதன்றி, அவன் விரும்புவதும் பிரார்த்திப்பதும் அவனுக்கு கிட்டுவதில்லை.   அவனது விருப்பங்கள் ஈடேறுவதும், பிரார்த்தனைகள் பலிப்பதும் அவை அவனது எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் இசைவாக இருக்கும்போது மட்டுமே.

இந்த உண்மையின் ஒளியில் சூழ்நிலைகளுக்கு எதிராக போரிடுதல் என்பதன் அர்த்தம் என்ன? அதன் அர்த்தம் என்னவெனில் மனிதன் எல்லா நேரங்களிலும் விளைவுக்கான காரணத்தை தன்னுள் போஷித்து காத்துக் கொண்டே, விளைவுக்கு எதிராக தொடர்ந்து போரிடுகிறான்.

அந்தக் காரணமானது அவன் அறிந்த இழிச்செயலாகவும் இருக்கலாம்.  அவனுக்கே தெரியாத பலவீனமாகவும் இருக்கலாம்.  எவ்வாறெனினும் கொண்டவனின் முயற்சிகளை அது விடாப்பிடியாக தடுக்கிறது.  எனவே காரணங்களை களைவது அவசியமாகிறது.

(நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் - 04.11.2018)

#மீடூ

என் கொடுங்கனவின் கதாநாயகன் நீ
நீ திருடிச் சென்ற என் உறக்கத்தை
இன்று கைப்பற்றினேன்
ஒரு யுகாந்திர நீளிரவின் விடியலில்
இதோ சுமையிறக்கிய சுகத்தில்
புலர்ந்தும் துயில்கிறேன்
உன் மகளையொத்த என்னை
உன் அதிகார விறைப்பால்
ஊமையாக்கினாய்
இன்றென் குரலைக் கண்டெடுத்து
உரத்துச் சொல்கிறேன்
#நானும்
#மீடூ
என் குரலின் எதிரொலியில்
என்னையொத்த இன்னொருத்தி
மௌனம் கலைகிறாள்
அவளின் எதிரொலியாய் இன்னொருத்தியென
எங்கள் குரலாயுதமேந்தி சமரிடுகிறோம்
கிழிந்து தொங்கும் உன் பிம்ம ஆடை வழி
உன் நிர்வாணம் அரங்கேறுகிறது
இரையாக்கியவன் இரையாகும்
வேட்டையாளன் வேட்டையாடப்படும்
வேளையிது

(நன்றி:  தினகரன வாரமஞ்சரி - 04011.2018)

தேடிச் சோறு நிதம் தின்று…

மாலை 6 மணி. காலநிலை அவ்வளவு ஒன்றும் மோசமாக இல்லை. சற்றுமுன் பெய்து ஓய்ந்த மழையின் காரணமாக காற்றில் ஈரம் கலந்திருந்தது. ஆயினும் அவருக்கு அபரிமிதமாக வியர்த்துக் கொட்டியது. சில நிமிடங்களுக்கு முன்பு தான் பணியாளரை அழைத்து மின்விசிறியை வேகமாக வைக்கச் சொல்லி இருந்தார். ஏற்கனவே வியர்வையால் தொப்பையாக நனைந்திருந்த கை துண்டை எடுத்து மீண்டும் முகத்தையும், கைகளையும், தலையையும் அழுந்த துடைத்துக் கொண்டார்.  கல்லாப்பெட்டியில் உயர்ந்த நாற்காலியிலிருந்து சற்றுத் திரும்பி தனது உணவகத்தை நோட்டமிட்டார். எல்லா மேசைகளும் நிறைந்திருந்தன. பணியாளர்கள் சுறுசுறுப்பாக உணவு பரிமாறிக் கொண்டிருந்தனர். மேசையை யாரோ தட்டுவது கேட்டு மெதுவாக திரும்பினார். முன்னே நிற்பவர் முகம் கொஞ்சம் மங்கலாக தெரிந்தது. கண்களை ஒரு முறை இறுக மூடி திறந்தார்.  விலைச்சீட்டோடு அவர் கொடுத்த பணத்தை வாங்க முயன்று, தடுமாறி முன்பக்கமாக மேசையின் மீது சரிந்து விழுந்தார். 'ஐயோ முதலாளி' என்று கத்திய பணியாளர்களின் ஓலத்தை கேட்கும் திறனை, முகத்தில் தெளிக்கப்பட்ட நீரை உணரும் நிலையை அவர் கடந்து விட்டிருந்தார்.  அந்த நொடியில் அவர் உயிர் பிரிந்துவிட்டதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவசரமாக வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்தார்கள். மருத்துவர்களால் அவரது மரணத்தை உறுதிப்படுத்த மட்டுமே முடிந்தது.

இது கதையல்ல. உண்மைச் சம்பவம்.

கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே அவரது உடல்நிலை அவ்வளவு நன்றாக இல்லை. முதுகு, தோள்பட்டை மற்றும் இடது கையில் தொடர்ந்து வலி. வழமைபோல் காலையில் வீட்டை விட்டு கிளம்புபவர் இரவு 10 மணிக்கு வீடு திரும்பி வலி நிவாரணி தைலம் பூசிக்கொண்டு படுத்திருக்கிறார். நெஞ்செரிச்சலை அஜீரணக் கோளாறு என்று அவராகவே தீர்மானித்து சோடா குடித்து சமாளித்திருக்கிறார்.

மாரடைப்புக்கான அறிகுறிகளை அலட்சியம் செய்ததால் அவரது நாற்பத்தி எட்டாவது வயதில் ஏற்பட்ட அகால மரணம் இது. விபத்துக்களால் மட்டுமன்றி அறியாமையினால்,  அலட்சியத்தினால் ஏற்படுகின்ற தவிர்க்கக்கூடிய இத்தகைய மரணங்களும் அகால மரணங்களே.

இதுபோன்ற இறப்புகளைப் பற்றி கேள்விப்படுவது இப்பொழுதெல்லாம் வழக்கமாகிவிட்டது.  காட்சிகள் வேறாயினும் முடிவு என்னவோ ஒன்றாகவே இருக்கிறது. இவற்றில் பெரும்பான்மையானவை தவிர்க்கக்கூடிய இழப்புகள் என்பது பெரும் சோகம். இவற்றிற்கான காரணங்களை ஆராயும் பொழுது ஒரு பொதுவான பாணி தென்படுவதைக் காணலாம். அவை:
• இது போன்ற நோய்கள் நமக்கு வராது என்கிற அசட்டுத்தனமான எண்ணம்.
• நோயை தாமே ஊகித்து தமக்கு தாமே வைத்தியம் செய்து கொள்கிற அறிவீனம்.
• நடுத்தர வயதை கடந்த பின் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதனை காலவிரயம்,  பணவிரயம் என்று எண்ணி தவிர்க்கும் போக்கு.
•எவ்வித உடற்பயிற்சியிலும் ஈடுபடாதிருப்பது.

நமது முன்னோர்களுக்கு  அரிதாக இருந்த மாரடைப்பு, நீரிழிவு, இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்கள் இப்போதெல்லாம் வாலிப வயதினருக்கும் வருவதைப் பார்க்கின்றோம். நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் பாரிய மாற்றங்கள் இதற்கு காரணம். உணவு பழக்கவழக்கங்கள், குறிப்பாக துரித உணவு வகைகள், விவசாயத்தில் பயன் படுத்தப்படும் ரசாயனங்கள், சூழல் மாசு, போதிய ஓய்வின்மை, உடற்பயிற்சியின்மை, போட்டி மிக்க வாழ்க்கை தரும் மனவழுத்தம் போன்றவை தற்கால மனிதர் வாழ்வில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

தனது மறைவுக்குப் பின்னும் தனது குடும்பம் சுகமாக இருக்க வேண்டும் என்று அயராது உழைக்கின்ற ஒரு குடும்பத்தலைவர்,  அவரையே முற்றுமுழுதாக சார்ந்திருக்கும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கையை அவரின்  இறப்பு எப்படி புரட்டிப் போடும் என்பது பற்றி கொஞ்சம் சிந்தித்தால் அவரது உடல் நலம் பற்றிய அக்கறையும் பொறுப்புணர்வும் இயல்பாகவே அதிகரிக்கும்.

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட நபரின் மனைவியின் வயது 38. இப்போது அவர் இளம் விதவை. இதுவரையும் வீடே உலகம் என்று வெளியுலகம் தெரியாது வாழ்ந்தவர். பதின்ம வயது மகன். சின்னஞ்சிறு மகள். திக்கற்று திகைத்து நிற்கும் அவர்கள் வாழ்வு இனி ஒருபோதும்  வழமைபோல் இருக்கப் போவதில்லை. இதுவல்ல அந்தக் குடும்பத் தலைவர் தனது குடும்பத்தைப் பற்றியும் கண்ட கனவு.

அதேபோல் உயிரோடு இருந்த பொழுதும் அவர் உண்மையிலேயே வாழ்ந்தாரா என்பது கேள்விக்குறி.

வருடம் முழுவதும் ஒரு நாளேனும் ஓய்வெடுக்காத உழைப்பு. விடியும் முன் வீட்டை விட்டு கிளம்பினால் இரவு 10 மணிக்கு பின்புதான் வீடு திரும்புவார்.  காலையில் சில நிமிடங்கள் மட்டுமே தந்தையை பிள்ளைகள் காண்பதுண்டு. உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கு, பள்ளி கூட்டங்களுக்கு மற்றும் விழாக்களுக்கு மனைவி மட்டுமே சென்று வருவார். குடும்பத்தோடு ஒன்றாய் குதூகலித்த பொழுதுகள் அரிதிலும் அரிது. வெளியூர் சுற்றுப்பயணம் என்ன உள்ளூர் கடற்கரைக்கோ, ஒரு திரைப்படத்திற்கோ கூட சேர்ந்து சென்றதில்லை.

வீட்டில் பொருத்தியிருக்கும் பெருந்திரை தொலைக்காட்சி மற்றும் இன்ன பிற சொகுசு சாதனங்கள் தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்பது அவரது எண்ணம். ஆனால் அவர்களின் உண்மையான மகிழ்ச்சி அவரின் அருகாமை என்பதனை அவர் அறிந்திருக்கவில்லை.

இதனை வாசிக்கும் பலருக்கு மேலே குறிப்பிட்ட விடயங்கள் ஏதோ ஒரு விதத்தில் பரிச்சியம் மிக்கதாய், தங்களின் வாழ்வோடு தொடர்புபடுத்திப் பார்க்க கூடியதாய் இருப்பின் அது வியப்பன்று.  ஏனெனில் இன்று பெரும்பாலானோரின் வாழ்வு இவ்விதமாகவே கழிகின்றது. குறிப்பாக கீழத்தேய நாடுகளின் குடும்ப, சமூக அமைப்பு இத்தைகையதாகவே இருக்கின்றது.

இதுவா அரிதிலும் அரிதான இந்த மானிடப் பிறவி எடுத்ததன் நோக்கம்?

விலங்குகள் கூட எதிர்காலம் பற்றிய கவலை இன்றி நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்கின்றன. தின்ற புல்லை அசை போட்டவாறு ஓய்வெடுக்கிறது மாடு. தனது தேவை தீர்ந்ததும் மர நிழலில் படுத்து தன்னை தளர்த்திக் கொள்கிறது சிங்கம். தோகை விரித்தாடி காண்போரை மயக்குகிறது மயில். கிளைக்கு கிளை தாவி குதூகலிக்கிறது குரங்கு. ஏரியில் நீராடி தண்ணீரை பீச்சி அடித்து விளையாடி மகிழ்கிறது யானை.

ஆனால் நாம் மூச்சுவிட நேரமின்றி ஓடிக் கொண்டிருக்கிறோம். நாளைகளை பற்றிய கவலையில் இன்றைய தினங்களை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இயந்திரமயமாகிப் போன இந்த வாழ்வில்
இயற்கையின் பேரழகு பற்றிய பிரக்ஞையின்றி இயந்திரங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறோம்.

இதுவன்று மனித வாழ்வின் நோக்கம். அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்கிறார் அவ்வைப் பிராட்டி. அத்தகு அரிய வாழ்வுதனை முத்துக்களை வீசிவிட்டு சிப்பிகளை சேகரிக்கும் அறிவிலிகள் போல் வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.

எனின், உண்மையில் மனித வாழ்வின் நோக்கம்தான் என்ன?

'இயற்கை இன்பங்களை அளவோடு முறையோடு துய்த்து அறிவின் முழுமைப்பேறை  அடைவதே மனித வாழ்வின் நோக்கம்' என்கிறார் வேதாத்திரி மகரிஷி.

இந்த துய்த்தல், நுகருதல் அல்லது அனுபவித்தல் என்பது மனிதருக்கு மட்டுமே கிட்டியுள்ள பேறு. நமது ஒவ்வொரு செயலுடனும் நமது புலன்களும், மனதும் சம்பந்தப்பட்டு அவை அனுபவங்களாக மாறுகின்றன.  பசுவானது தனது வாழ்நாள் முழுவது புல்லையே தின்கின்றது.  ஆனால் நம்மால் ஒரே வகையான உணவை தொடர்ந்து உண்ண முடிவதில்லை.  ஏனெனில் நாம் உண்ணுகின்றபோது அந்த உணவின் சுவையை, மணத்தை, உருவகத்தை இரசித்து அனுபவிக்கின்றோம்.  அதனை அனுபவித்து முடிந்ததும் வேறு குணமுள்ள உணவை நாடுகின்றோம். ஒரே வகையான தன்மை சலிப்பைத் தருகின்றது.  இதனைப்போல் தான் எல்லா அனுபோகங்களும்.

உறவுகளோடு கூடி குலாவ, இயற்கை எழிலை கண்டுகளிக்க, இன்னிசையை இரசிக்க, கலைகளோடு ஒன்றி மெய்மறக்க நேரம் ஒதுக்க முடியாத வாழ்க்கை வெறும் இருப்பு மட்டுமே: வாழ்தல் அல்ல.

இருத்தல் அல்ல வாழ்வின் நோக்கம்; வாழ்தல்.

இன்னும் பலர் தமது பிரச்சினைகளையெல்லாம் தீர்த்த பிறகு, பொறுப்புகளையெல்லாம் ஈடேற்றிய பிறகு வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்று எண்ணுகிறார்கள்; சந்தோஷங்களை தள்ளி வைக்கிறார்கள். ஆனால் அநேகருக்கு அந்த நாள் வராமலே போய்விடுகிறது. சிலருக்கு எல்லாம் சரிவர அமையும்போது காலம் கடந்துவிடுகிறது. உடலும் மனமும் ஒத்துழைக்க மறுத்து வாழ்க்கை சுமையாகிறது.

வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி என்பது சென்றடையும் இடத்தில் அல்ல, செல்லும் பயணத்திலேயே இருக்கிறது. அடையப்போகும் இடத்தை பற்றிய கவனத்தினாலும், கவலையினாலும் பாதையின் இருமருங்கிலுமுள்ள பச்சைப் புல்வெளிகளையும், மணம் பரப்பும் மலர்களையும், பாடும் பறவைகளையும், வீசும் தென்றலையும்,  இன்னும் பல இன்பங்களையும் அனுபவிக்கத் தவறி கடந்து செல்கின்றோம். வாழ்க்கை என்பது ஒரு வழிச் சாலை. இன்னொரு நாள் நாம் இவ்வழியில் பயணிக்கப் போவதில்லை.

நமது வாழ்க்கையின் இலையுதிர் காலத்தில் நமக்கு துணை இருக்கப் போவது நாம் சுமந்திருக்கும் நினைவுகள் மாத்திரமே. அப்போது திரும்ப பெற இப்போது எத்தகைய நினைவுகளை வைப்பில் இடப்போகிறோம்?  இந்தக் கேள்விக்கான பதிலில் இருக்கிறது நமது வாழ்வு வெறும் இருத்தலா அல்லது வாழ்தலா என்பது.

நன்றி:  வீரகேசரி வார வெளியீடு (04.11.2018)

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

எண்ணிய வண்ணம் வாழ்வு: பகுதி-1 எண்ணமும் குணமும்

மூலம்:  As a Man Thinketh by James Allen        தமிழில்: சுப்ரமண்ய செல்வா

மனிதன் எதை எண்ணுகின்றானோ அதுவாகவே ஆகின்றான் என்பது முதுமொழி.  இந்தக் கூற்று மனித இருப்பின் சகல பரிமாணங்களையும் தழுவி நிற்கின்றது.  அவன் வாழ்வின் ஒவ்வொறு நிலைக்கும் சந்தர்ப்பத்திற்கும் பொருந்தி நிற்கிறது.  மனிதன் என்பவன் உண்மையிலேயே அவனது எண்ணங்களே.  குணம் என்பது அவனது எல்லா எண்ணங்களினதும் மொத்தக் கூட்டலே.

விதை இன்றி செடி இல்லை.  விதையிலிருந்தே செடி எழுச்சி பெறுகிறது. அவ்வாறே மனிதனின் ஒவ்வொறு செயலும் அவனுள் மறைந்திருக்கும் எண்ணம் என்னும் விதைகளிருந்து எழுச்சி பெறுகிறது.  இது தற்செயலான செயல்களுக்கு மட்டுமன்றி திட்டமிட்டு செய்யும் செயல்களுக்கும் சமமாக பொருந்தும்.

செயல் என்பது எண்ணத்தின் மலர்ச்சி.  இன்பமும் துன்பமும் அதன் கனிகள். ஆக மனிதன் சேகரிக்கும் சுவையானதும் மற்றும் கசப்பானதுமான அத்தனை கனிகளும் அவனால் பயிரிடப்பட்டவையே.

எண்ணமே எம்மை உருவாக்கியது
எண்ணமே எம்மை வார்த்தது
கள்ள மனமுடையோனை துன்பம் தொடர்கிறது
காளைதனை தொடரும் சக்கரம் போல்
நல்ல மனமுடையோனை இன்பம் தொடர்கிறது
அவனது சொந்த நிழலைப் போல்... சர்வநிச்சயமாய்.

மனிதன் என்பவன் இயற்கை நியதிக்குட்பட்ட பரிணாமமே தவிர, அவன் சிறப்பான சிருஷ்டி ஏதும் அல்ல.  காரணமும் விளைவும் என்பது நாம் கண்ணால் காண்கின்ற பொருள்மயமான இந்த உலகில் எவ்வளவு சாசுவதமானதோ, எண்ணங்கள் என்னும் மறைந்திருக்கும் உலகிலும் அது சாசுவதமானதே.  ஆக, உயர்ந்த தெய்வீக குணம் என்பது அதிர்ஷ்டவசமாக கிடைத்த சலுகை அன்று.  அது உயர்ந்த தெய்வீக எண்ணங்களுடனான நீண்ட உறவின் இயற்கையான வெளிப்பாடே.  அது போன்றே இழிவான, மிருகத்தனமான குணம் என்பது தொடர்ந்து கீழான எண்ணங்களுக்கு அடைக்கலம் கொடுத்ததன் பிரதிபலனே.

மனிதன் ஆவதும் அழிவதும் அவனாலேயே. எண்ணம் என்னும் பட்டறையில் அவன் தன்னையே அழித்துக்கொள்ளும் ஆயுதங்களை படைக்கின்றான்; அதே பட்டறையில் அவன் உவகை, ஊக்கம், அமைதி என்னும் சுவர்க மாளிகைகளை உருவாக்கக் கூடிய கருவிகளையும் படைக்கின்றான். சரியான எண்ணத் தேர்வினாலும் செயல்பாட்டினாலும் அவன் தெய்வீக பூரணத்துவம் அடைகின்றான்.  அதேபோல் தவறான எண்ணத் தேர்வினாலும் செயல்பாட்டினாலும் அவன் மிருகத்தைவிட கீழான நிலைக்குப் தள்ளப்படுகின்றான். இந்த இரண்டு எல்லைகளுக்கும் இடைப்பட்டதுதான் எல்லா விதமான குணங்களும்.  மனிதனே அவை அனைத்தினதும் படைப்பாளனும் எஜமானனும் ஆவான்.

ஆன்மாவைப் பற்றிய பழமையான ஆனால் இன்று மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள அற்புதமான உண்மைகளில் உன்னதமானது எதுவெனில் மனிதனே அவனது எண்ணத்தின் எஜமான். அவனது குணத்தின் கர்த்தா. அவனே அவனது சொந்த நிலையை, சூழ்நிலையை, தலைவிதியை உருவாக்குபவனும் உருமாற்றுபனும் ஆவான்.

அற்புத ஆற்றலும், அறிவும், அன்பும், கருணையும் படைத்தவனும் தனது எண்ணங்களின் எஜமானனும் ஆன மனிதன் எல்லா சூழ்நிலைகளுக்கான பதில்களை மட்டுமன்றி தான் விரும்பியவாரெல்லாம் தன்னை மாற்றிக் கொள்ளவும் புதுப்பித்துக் கொள்ளவும் தேவையான அருமருந்தினை தன்னகத்தே கொண்டுள்ளான்.

மனிதனே எப்பொழுதும் அவனின் எஜமான் - அவன் எவ்வளவு பலஹீனனாய், எவ்வளவு கைவிடப்பட்ட நிலையில் இருப்பினும்.  ஆனால் பலஹீனமான நிலையில், கீழான நிலையில் அவன் தன்னை ஆளத் தெரியாத முட்டாள் எஜமானனாய் இருக்கிறான்.  தனது படைப்பின் நியதி பற்றியும்  இருப்பின் மகிமை பற்றியும் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கும்போது, அவன் புத்திசாலி எஜமானன் ஆகிறான். அப்போது ஆக்கப்பூர்வமான எண்ணங்களுக்காக தனது ஆற்றலை புத்திசாலித்தனமாக பயன்படுத்துகின்றான்.   எண்ணங்களின் நியதியை மனிதன் தன்னுள்ளே கண்டுபிடிக்கும்போதே அவன் தன்னை முற்றும் உணர்ந்த எஜமானன் ஆகின்றான். இந்த கண்டுபிடிப்பு என்பது  முற்றிலும் சுய ஆராய்ச்சி, பிரயோகம், அனுபவம் சார்ந்ததே. 

தங்கமும் வைரமும் எப்படி நீண்ட தேடுதலும் தோண்டுதலுக்கும் பின்பே கிடைக்கின்றதோ  அப்படியே மனிதன் தன்னைப் பற்றிய ஒவ்வொரு உண்மையையும் தன் ஆன்மா என்னும் சுரங்கத்தை ஆழத் தோண்டும்போது அறிந்து கொள்கின்றான்.  தனது குணங்களை, வாழ்க்கையை, தலைவிதியை  தானே உருவாக்குகின்ற வல்லமை படைத்த மனிதன், தனது எண்ணங்களை கூர்ந்து கவனித்து  கட்டுப்படுத்தி தேவைக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கும்போது, அது அவனிலும் பிறரிலும் சூழ்நிலையிலும் ஏற்படுத்தும் அற்புத மாற்றங்களை ஐயமற நிரூபிக்கின்றான். தொடர்ந்த பொறுமையான பின்பற்றலாலும் ஆராய்ச்சியினாலும் காரண-விளைவு உண்மைகளை பூரணமாக உணர்கின்றான்.  தனக்கு கிடைக்கக் கூடிய ஒவ்வொரு அனுபவத்தையும், அன்றாட நிகழ்வுகளையும் - அவை எத்துனை அற்பமாய் இருப்பினும் - பயன்படுத்தி அவன் தன்னைப் பற்றிய அறிவை அறிந்து கொள்கின்றான்.  அவ்வறிவானது புரிந்துணர்வு, விவேகம், சுய பலம் என்பதாகும்.  ஆக மற்ற எல்லா சூழ்நிலைகளையும்விட கேளுங்கள் கொடுக்கப்படும். தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் கூற்று இந்நிலைக்கு மிகவும் பொருந்தும்.  ஏனெனில் பொறுமை, பயிற்சி, இடைவிடாத தேடுதல் மூலமே மனிதன் அறிவு என்னும் ஆலயத்தினுள் நுழைய முடியும்

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (21.10.2018)

காது கொடுத்துக் கேட்போம்

நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேச தொடங்குவோம். நாம் ஒரு சில வார்த்தைகளே பேசி இருக்கக் கூடிய நிலையில், கேட்டுக் கொண்டிருப்பவர் இடைமறித்து பேசத் தொடங்குவார்.  நாம் இதனைத்தான் சொல்ல வருகிறோம் என்று அவராகவே அனுமானித்து அவ்விடயம் பற்றிய அவரது கருத்துகளை விலாவாரியாக பேசி முடிப்பார். நாம் சொல்ல வந்ததை சொல்ல மறந்து அல்லது அதற்கு கால அவகாசம் இன்றி அந்த உரையாடல் நிறைவு பெறும்.  பெரும்பாலும் அவரது அனுமானம் நமது நோக்கத்திற்கு முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.

இது நம் எல்லோருக்கும் பரிச்சயமான ஒரு அனுபவம். பல வேளைகளில் நாமே அந்த கேட்பவராக இருந்திருப்போம்.

இதற்குக் முதற்காரணம் ஒருவர் பேசத் தொடங்கியதுமே அவர் கூற வருவது இதுவாகத்தான் இருக்கும் என்கிற நமது முன்முடிவு. அடுத்தது தான் அனுமானித்த அந்த விடயம்பற்றி கேட்பவர் தனது பாண்டியத்தை பறைசாற்றுகிற ஆவல். இது அவரின் தன்முனைப்போடு சம்பந்தப்பட்டது. மிகமுக்கிய காரணம் என்னவெனில் செவிமடுக்கும் பொறுமை இல்லாதிருப்பது.  இப்போதெல்லாம் மருத்துவர்களுக்கு கூட தமது நோயாளிகள் கூறுவதை முழுமையாக கேட்கின்ற பொறுமை இருப்பதில்லை.

'பெரும்பாலான மனிதர்கள் புரிந்துகொள்வதற்காக அன்றி பதில் சொல்வதற்காகவே செவிமடுக்கிறார்கள்' என்கிறார் 'அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்' என்னும் உலகப் புகழ்பெற்ற சுயமுன்னேற்ற நூலின் ஆசிரியரும், கல்வியாளருமான ஸ்டீஃபன் ஆர். காவி.

செவிமடுத்தல் என்பது ஒரு அற்புத கலை. மனித இருப்பில் செவிகளின் பங்கு அளப்பரியது. அதனால் தான் வள்ளுவர் கூட
'செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை' என்கிறார்.

'கேட்ட'லுக்கும் 'செவிபடுத்த'லுக்கும் நிறைய வேறுபாடு உண்டு.  கேட்டல் என்பது உடல் திறன்.  செவிமடுத்தல் என்பது செயல் திறன்.  கேட்டல் குறைபாடு உள்ளவர்களைத் தவிர மற்ற எல்லா மனிதர்களுக்கும், ஏன் விலங்குகளுக்கும்கூட, கேட்கும் உடல் திறன் இயற்கையாகவே அமைந்துவிடுகிறது.  நாம் செவிமடுக்காவிட்டாலும் ஒவ்வொறு கணமும் எத்தனையோ வித ஒலிகள் நமது செவிகளில் விழுந்தவண்ணமே  இருக்கின்றன.

ஆனால் செவிமடுத்தல் என்பது பயிற்சியினாலும், பொறுமையினாலும் வரக்கூடிய ஒரு திறமை.

உரையாடல் என்பது இருவழிப் பாதையாக இருக்கும்போது மட்டும்தான் அதில் ஈடுபட்ட அனைவருக்கும் அது பயன்மிக்கதாயும், நிறைவுள்ளதாயும் அமையும்.  அர்த்தமிக்க உரையாடலுக்கு ஆழ்ந்த செவிமடுத்தல் அவசியமாகிறது.

ஆங்கிலத்தில் 'ரீடிங்க் பிட்வீன் லைன்ஸ்' (reading between lines) எனச் சொல்வார்கள்.  பல வேளைகளில் ஒருவர் பேசும்போது பயன்படுத்தும் வார்தைகளின் மேலோட்டமான அர்த்தங்களைத் தாண்டி வேறு உள் அர்த்தங்கள் இருப்பதுண்டு. செவிமடுக்கும்போதுதான் பேசுபவர் சொல்வதை மட்டுமல்ல சொல்லாததையும் புரிந்துகொள்ள முடியும்.

'நமக்கு இரண்டு காதுகளும் ஒரு வாயும் இருப்பது பேசுவதைவிடவும் இரண்டு மடங்கு செவிமடுக்க வேண்டும் என்பதற்காகவே' என்பது சீனோ (Zeno of Citium) என்னும் கிரேக்க தத்துவஞானி இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு பகர்ந்த எளிமையான ஆனால் ஆழ்ந்த அர்த்தமுள்ள கூற்று.

மனிதத் தொடர்பாடலில் எழுத்து வடிவங்கள் உருவாக்கப்படுவதற்கு முன்பு வாய் வார்த்தைகளாகவே அனைத்தும் பகிரப்பட்டன.  சரித்திரங்களும், பழங்கதைகளும், புராணங்களும், நாட்டுப்புற கதைகளும், ஆன்மீக போதனைகளும் செவிவழிச் செய்திகளாகவே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டன.  அவை எழுத்து வடிவம் பெறும் முன்பு பலநூறு வருடங்கள் நிலைத்திருந்தமையானது நமது முன்னோர்கள் எத்தகைய சிறப்புமிக்க செவிமடுப்பவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை பறைசாற்றுகிறது.

ஆனால் இன்றைய நவீன வேக உலகில் பொறுமையான செவிமடுத்தல் என்பது அரிதாகி வருவது வெளிப்படை.  செவிமடுப்பதைவிட பேசுவதையே நாம் அதிகம் விரும்புகிறோம்.  'ஒருவரின் செவிகள் கேட்க விரும்பும் மிக இனிமையான சப்தம் அவரது சொந்த குரல் ஒலியே' என்னும் நகைச்சுவையான கூற்றை மெய்ப்பிக்க முனைகிறோம்.

ஆனால் செவிமடுத்தல் ஒரு உயரிய குணம்.  அதனால் கிட்டும் பயன்களும் அளப்பரியன.

'பேசும்போது நீங்கள் அறிந்தவற்றையே திருப்பிச் சொல்கிறீர்கள்.  ஆனால் செவிமடுக்கும்போது புதிய விடயங்களை கற்றுக்கொள்கிறீர்கள்' என்கிறார் தலாய் லாமா.

ஆம், முன்முடிவுகளற்று பொறுமையாக செவிமடுக்கும்போது நாம் அறியாத பல புதிய விடயங்களை அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பு கிட்டுகிறது.  செவிமடுப்பவர் இடைமறித்து பேசும்போது பேசுபவரின் எண்ணவோட்டம் தடைபட்டு, பேச்சு திசைமாறி சொல்ல வந்த விடயம் சொல்லப்படாமல் போய்விடுவதுண்டு.   இதனால் இருவருக்குமே இழப்பு.

பொறுமையான செவிமடுத்தல் நம்மைப்பற்றிய நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்தும்.  செவிமடுப்பவர்கள் மதிக்கப்படுகிறார்கள்.  கவனமாக காதுகொடுத்து  கேட்கும்போது பேசுபவர் பற்றியும், அவர் கூறும் விடயங்கள் பற்றியும் நமது விருப்பையும், ஆர்வத்தையும்,  அவர் மீதான நமது மதிப்பையும் வெளிப்படுத்துகிறோம்.

கவனமான செவிமடுத்தலால் தவறான புரிதல்களும், தப்பபிப்பிராயங்களும் தவிர்க்கப்படும். பழைய மனக்கசப்புகள் களைய உதவும். புதிய புரிதல்கள் ஏற்படும். பிரச்சினைகளுக்குத் இலகுவில் தீர்வு கிட்டும்

சிலர் வேறெவ்வித எதிர்ப்பார்ப்புமின்றி தங்களது மனபாரங்களை இறக்கி வைப்பதற்காகவே பேசுவார்கள்.  அவ்வாறான சந்தர்ப்பங்களில் செவிமடுப்பவர் பேசுபவரின் சுமைதாங்கியாகவும், அவரை ஆற்றுப்படுதுவராகவும் ஆகிவிடும் அற்புதம் நிகழும்.

செவிகொடுப்பவர்கள் நோக்கி மற்றவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்;  நம்பத் தகுந்த  நல்ல நட்பாக, துவளும் தருணங்களில் தோள் கொடுக்கும் தோழமையாக  மதிக்கப்படுகிறார்கள்.  அதனால் அவர்களது நட்பு வட்டம் விரிவடைந்துகொண்டே இருக்கும்.  மற்றவர்கள் அவர்களின் பேச்சுக்கு செவிகொடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.

செவிமடுத்தல் என்பது செயற்கரிய காரியமன்று.  சிறிது விழிப்புணர்வுடனான தொடர் பயிற்சி நம் எல்லோரையும் நல்ல செவிமடுப்பவர்களாக மாற்றும்.  நம்மை எளிதில் உணர்ச்சிவசப்படாதவராக, பொறுமையானவராக, அமைதிமிக்கவராக மாற்றுகின்ற வல்லமையும் அதற்கு உண்டு.

பேசுவது அன்று செவிமடுப்பதே சிறப்பு.  வாருங்கள் காது கொடுத்து கேட்போம்.  தாய், தந்தை, வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், உறவுகள், நண்பர்கள், நாம் விரும்புவர்கள், விருப்பாதவர்கள், நம்மை விரும்பாதவர்கள், ஏன் எதிரிகள் என எல்லோரையும் செவிமடுப்போம். அது நமது வாழ்விலும், நம்மோடு தொடர்புகொண்டோர் வாழ்விலும் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தும்.

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (21.10.2018)

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

இடம்பெயர்வு

ஒரு மலர்வனத்தின் மொத்த  சுகந்தத்தையும்
சுமந்து கொண்டிருக்கிறது
நீ விட்டுச்சென்ற
மல்லிகையின் ஒற்றையிதழ்

பறந்த பின்னும்
விரல்களில் ஒட்டியிருக்கும்
பட்டாம்பூச்சியின் நிறத் துகள்கள் போல்
உரசிச் சென்ற
உன் தாவணியின்  வண்ணங்கள்
என் மேனி எங்கும்

உன் ஓர விழி பாச்சிய
வெளிச்சத்தின் பிரவாகத்தில்
புலர்ந்தே கிடக்கின்றன
என் பொழுதுகள்

ஓயாது ரீங்கரிக்கும்
உன் கொலுசொலியின் நாதத்தில்
கிறங்கிக் கிடக்கின்றன
செவிகள்

நா வறண்ட பின்னும்
நீரருந்த மறுத்து
நீ தந்த தேனீர்ச் சுவையில்
திளைத்திருக்கிறது என் நா

எனதான சித்திரங்கள்
அத்தனையும் அழிக்கப்பட்டு
உன்னுருவம் மட்டுமே
வியாபித்திருக்கிறது
மனவெளியெங்கும்

எனதென்று சொல்ல
எனது உயிரை மட்டுமே
மிச்சம் விட்டாய்

அரை நிமிட அருகாமையில்
உன்னை விட்டுவிட்டு
என்னை எடுத்துச் செல்லும்
மாயவித்தையை
எங்கு கற்றாய்?

- சுப்ரமண்ய செல்வா -

நன்றி: தினகரன் வாரமஞ்சரி (18.11.2018)

செவ்வாய், 9 அக்டோபர், 2018

வார்த்தைகள் வடிவமைக்கின்றன வாழ்க்கையை

மனைவியின் தொலைபேசி அழைப்பு இடையூறினை தவிர்க்கவும்,  அவள் அழைத்து தான் பதிலளிக்காவிட்டால் பதட்டப்படுவாள் என்பதற்காகவும் அலுவலக கூட்டம் தொடங்குமுன் மனைவிக்கு குறுஞ்செய்தி ஒன்றை அவசரமாக அனுப்பிவிட்டு கைப்பேசியை மௌனமாக்கினார் சிவா.

'மீடிங்க்... மொபைல் ஒன் சைலன்ஸ்'

அன்றைய கூட்டம் வழக்கத்திற்கு மாறாக சற்று நீண்டு விட்டது.  எல்லோரிடமும் விடைபெற்று தனது இருக்கைக்கு வந்து கைப்பேசியை உயிர்ப்பித்து பார்த்தபோது மனைவியிடமிருந்து ஐந்து தவறிய அழைப்புகள். குறுஞ்செய்தி அனுப்பியும் அழைத்திருக்கிறாளே என்று சற்று எரிச்சலுடன் மனைவிக்கு அழைப்பை ஏற்படுத்தினார்.  வழக்கத்திற்கு மாறான தாமதத்திற்கு பிறகு, முகமன் ஏதுமற்று, கொஞ்சம் சூடாக வந்து விழுந்தன வார்த்தைகள்,

"ஃபோன் பன்னுனா எடுக்க மாட்டீங்களா...?"

இன்னும் கொஞ்சம் சூடாகவே பறந்தன பதில் வார்த்தைகள்,

"ஏன் நீ மெஸேஜ் பார்க்க மாட்டியா...?"

அடுத்த ஐந்து நிமிடங்கள் அரங்கேறிய அனல் பறக்கும் சொற்போருக்குப் பிறகு அழைப்பு ஏற்படுத்தியதின் நோக்கம் நிறைவேறாமலேயே தொடர்பு துண்டிக்கப்பட்டது.  அதற்கு பிறகான அந்த நாள் அவர்கள் இருவருக்குமே அமைதியற்ற நாளாகவே அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

அன்று மாலை அவர்கள் இருவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டு, சமாதானமாகிய பிறகு அறிந்துகொண்ட உண்மை; மனைவி அந்த குறுஞ்செய்தியை பார்த்து இரண்டு மணித்தியாலங்களுக்குப் பிறகு, கூட்டம் முடிந்திருக்கும் என்று அனுமானித்து அழைத்திருக்கிறார். கூட்டம் முடிவடைந்த பின்னும் கணவர் கைப்பேசியை நிசப்த நிலையிலிருந்து மாற்றவில்லை என்று எண்ணி மீண்டும் மீண்டும் அழைத்திருக்கிறார்.

இப்போது இந்த காட்சியில் வார்த்தைகளை கொஞ்சம் மாற்றிப் பார்ப்போம்.

மனைவி: "மீட்டிங்க் முடிய லேட் ஆகிறிச்சோ..?" அல்லது
"ஃபோன சைலன்ஸ்ல இருந்து மாத்த மறந்து விட்டீர்களா?" அல்லது
உணர்ச்சிவசப்படாமல் "ஏம்பா ஃபோன் எடுக்கல..?"

இப்படி தொடங்கும் உரையாடல் எப்படி இனிமையாக தொடர்ந்து நிறைவுபெற்றிருக்கும் என்பதை எம்மால் ஊகிக்க முடியும்.

ஆம். வார்த்தைகள் வடிவமைக்கின்றன வாழ்க்கையை.

'நீங்கள் பேசுவது உண்மை இல்லை' என்பதும் 'நீங்கள் பொய் பேசுகிறீர்கள்' என்பதும் ஏறக்குறைய ஒரே அர்த்தம்தான்.  ஆனால் சொல்லப்படுபவரிடம்  இவை இரண்டும் இரண்டு விதமான எதிர்வினைகளை ஏற்படுத்தும். பின்னயதைவிட முன்னையதின் எதிர்வினை நிச்சயம் மென்மையானதாக இருக்கும்.

நாம் பிறருடன் வாய்மொழியாகவோ, எழுத்து மூலமோ தொடர்பு கொள்வதன் நோக்கம் எமது கருத்தை அவர்களுக்கு புரியவைப்பது மட்டுமன்றி, அதன் மூலம் நாம் விரும்புகின்ற விளைவை பெறுவதும் ஆகும்.  சரியான விளைவைப் பெற வேண்டுமெனில் சரியான வார்த்தைப் பிரயோகம் அவசியமாகிறது.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று என்பது நாம் அறிந்த திருக்குறள்.  இனிய சொற்கள் இருக்கும்போது கடுமையான சொற்களைப் பயன்படுத்துதல் என்பது மரத்திலே பழுத்து தொங்கும் பழங்களை விட்டுவிட்டு காய்களை பறித்து உண்பதற்கு ஒப்பானது என்கிறார் திருவள்ளுவர்.

வார்த்தைகள் வலிமையானவை.  அவற்றால் ஆக்கவும் முடியும்; அழிக்கவும் முடியும்.  அவற்றால் வீழ்ந்து கிடப்பவரை வீறுகொண்டு எழச் செய்து வெற்றி பெறச் செய்ய முடியும்.  முன்னேற வேண்டும் என்று முயற்சி செய்பவரை முடக்கிப்போடவும் முடியும்.

வார்த்தைகளால் முடியும் உறவுகளை உருவாக்கவும் உருக்குலைக்கவும்.
ஒற்றை வார்த்தையில்  உடைந்துபோன இதயங்கள், பிரிந்து போன சினேகங்கள், விலகிப் போன உறவுகள் ஏராளம்.

வார்த்தைகள் மனிதர்களில் மட்டுமல்ல சடப்பொருள்களிலும் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்துக்கிறது என்பதை மாஸாரு எமோடோ என்கிற ஜப்பானிய ஆராச்சியாளர் நிரூபித்துள்ளார். ஒரே அளவான கொள்கலன்களில் சுத்தமான தண்ணீரை நிரப்பி அவற்றில் சிலவற்றிடம் மென்மையான வார்த்தைகளையும், மற்றவற்றிடம் கடுமையான வார்த்தைகளையும் பேசி வந்துள்ளார்.  சில நாட்களுக்குப் பிறகு அவற்றை உறைய வைத்து நுண்ணோக்கியில் ஆராய்ந்தபோது மென்மையான வார்த்தைகள் பேசப்பட்ட நீரில் அழகான நீர்ப்படிகங்கள் உருவாகியிருப்பதையும், கடுமையான வார்த்தைகள் பேசப்பட்ட நீரில் அவலட்சணமான நீர்ப்படிகங்கள் உருவாகியிருப்பதையும் ஆச்சரியத்துடன் அவதானித்தார்.

தமிழ்நாட்டில் ஆழியாரில் அமைந்துள்ள மனவளக்கலை அறிவுத்திருக்கோயில் வளாகத்தில்  மனவளக்கலை பேராசிரியர் கலாநிதி எஸ். இலக்குமணன் அவர்கள் நடாத்திய ஆய்வுகளின் முடிவுகள் பெருவியப்புக்குரியதாய் அமைந்தன. அவர் ஒரு ஓய்வுபெற்ற வேளான் பூச்சியியல் விஞ்ஞானி மற்றும் அத்துறை பேராசிரியராதலால் தனது ஆய்வினை சரியான விஞ்ஞான முறைப்படி செய்துள்ளார். ஒரே எண்ணிக்கையிலான வெண்டைக்காய் செடிகளை இருவேறு ஒரே அளவிலான பாத்திகளில் நட்டு, ஒரு பாத்தியில் உள்ள செடிகளை தினமும் 'வாழ்க வளமுடன்' என்று வாழ்த்தி வந்துள்ளார். மற்றைய பாத்தியில் உள்ள செடிகளுக்கு வாழ்த்து ஏதும் சொல்லப்படவில்லை.  இரண்டு பாத்திகளிலும் உள்ள செடிகளுக்கும் ஒரே விதமான நீர்ப்பாசனம், உரமிடுதல் மற்றும் பராமரிப்பு முறைகள் கையாளப்பட்டன.  வாழ்த்து கூறப்பட்ட செடிகள் அதிசயத்தக்க வகையில் மற்றவற்றைவிட  60% வரை அதிக விளைச்சலைத் தந்தன.  இந்த ஆய்வு முடிவுகள் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 'ஏன்ஸியன்ட் சயன்ஸ்' (Ancient Science) என்னும் விஞ்ஞான சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டன.

எனவே எமது வார்த்தைகள் சக மனிதரிடம் மட்டுமன்றி, சடப்பொருள்களிலும், தாவரம் ஈறாக மற்ற உயிரினங்களிலும் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை வாய்ந்தவை.

நேர்மறையான வார்த்தைகள் மனதுக்கு இதமூட்டி, சுகமான சூழலையும், சுமுகமான மனித உறவுகளையும் ஏற்படுத்துபவை.  நாமே ஒரு பரிசோதனை செய்து பார்க்கலாம். கண்களை மூடி, தளர்வாக அமர்ந்துகொண்டு, கீழ்வரும் சொற்களை ஒருவர் குறிப்பிட்ட இடைவெளி விட்டு சொல்ல, செவிமடுங்கள்:
வெளிச்சம்,  தாமரை, பச்சைப் புல்வெளி, பனி மலை, ஆகாயம்
அன்பு, பாசம், அமைதி,  நட்பு, கருணை
சில நிமிட இடைவெளிக்குப் பிறகு, கீழ்வரும் சொற்களை செவிமடுங்கள்:
இருள், கருகிய செடிகள், வரண்ட பூமி, பூகம்பம், விபத்து, ஆத்திரம், சண்டை, கொலை, மரணம்
இப்போது நினவுபடுத்திப் பாருங்கள். முன்னைய சொற்களையும், பின்னையை சொற்களையும் செவிமடுக்கும்போது உங்கள் மனநிலை எவ்வாறு வேறுபட்டது?  இவ்வாறுதானே நமது வார்த்தைகள் பிறர் மனங்களில் தாக்கங்களை ஏற்படுத்தும்.  இந்தப் புரிதல் நமது வார்த்தைகள் மீதான நமது பொறுப்புணர்ச்சியை அதிகரிக்கும்.  அதனால் நம்மிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் நல்லவைகளாகவே இருக்கும்.

ஒருவரை திருத்துவதற்காக சொல்லப்படும் வார்த்தைகளில் கவனம் தேவை.  அது அவரின் குறையை சுட்டிக்காட்டுவதாக அமைந்தால் நமது நோக்கம் நிறைவேறுவது கடினம்.  பொதுவாக குறைகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது ஒரு விடயம் தனக்கு புரியவில்லை என்று ஒத்துக்கொள்ளவோ ஒருவரின் தன்முனைப்பு இடங்கொடுப்பதில்லை.   'நான் சொல்வது உங்களுக்கு புரியவில்லை' என்பதைவிட 'நான் தெளிவாக சொல்லவில்லை என்று நினைக்கிறேன்' என்று தொடங்கும் உரையாடல் நாம் விரும்பும் பலாபலனைத் தரும்.

எதனைப் பேசுவது, எப்படிப் பேசுவது என்பதைப் போலவே எதனைப் பேசக்கூடாது என்பதும் மிக மிக முக்கியம். பெஞ்சமின் ஃப்ரான்க்லின் அவர்கள் சொன்னது போல் "சரியான இடத்தில் சரியான வார்த்தைகளை சொல்வதிலும் கடினமானது எதுவெனில் தூண்டப்பட்ட ஒரு தருணத்தில் தவறானதை சொல்லாதிருத்தல்."

பொதுவாக வாக்குவாதங்களின் போதுதான் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை வாரியிறைத்து விடுகிறோம். பல வேளைகளில் வாய்த்தவறி சொல்லும் வார்த்தைகள்கூட காலம் பல கடந்தும் மாறாத வடுக்களாய் மனதிலே தங்கிவிடுவதுண்டு.  பிறர் தவறு செய்யும்போது நீதிபதியாகவும், நாம் தவறு செய்யும்போது வக்கீலாகவும் நாம் ஆகி விடுகிறோம்.  நம்மை நியாயப்படுத்த எவ்வித வார்த்தைகளையும் பயன்படுத்தி, எந்த எல்லைக்கும் செல்லத் தாயாராகிவிடுகிறோம்.  பல வேளைகளில் வெற்றியும் பெற்றுவிடுகிறோம். ஆனால் அந்த வெற்றிக்கு நாம் கொடுத்த விலை மிக மிக அதிகமென்பதை  பிறகு உணர்கிறோம். பெரும்பாலும் அப்போது காலம் கடந்துவிட்டிருக்கும்; உறவுகளில் சீர்படுத்த முடியாத சேதம் விளைந்திருக்கும்.  வாதங்களில் வென்று உறவுகளை இழப்பதால் என்ன பயன்?

நாம் யார் என்பதை நமது வார்த்தைகளே உலகுக்கு உணர்த்துகின்றன. கிரேக்கப் பேரரசரும், தத்துவஞானியுமான மார்கஸ் ஒரீலியஸ் சொன்ன கூற்றொன்று 'ஒவ்வொரு செயலை செய்யும்போதும் இதுவே உங்கள் வாழ்க்கையின் கடைசி செயல் என்று நினைத்து செய்யுங்கள்' எனபதாகும்.  இதனயே கொஞ்சம் மாற்றி 'ஒவ்வொறு வார்த்தையைப் பேசும்போதும் இதுவே நமது கடைசி வார்த்தை' என்று நினைத்துப் பேசினால் வார்த்தைகள் நமது வாழ்க்கையை அழகானதாய், அர்த்தம் மிக்கதாய் வடிவமைக்கும்.

நன்றி: வீரகேசரி வார வெளியீடு / 07.10.2018

திங்கள், 8 அக்டோபர், 2018

லிங்கன் - ஒரு சமயத்தில் தோல்வியின் நாயகன் இவர்

எல்லோரிடமும் எந்நாளும் உண்டு ஒரு கேள்வி. உடற்குறை, உளக்குறை மிக்க எண்ணற்ற மனிதர்கள் எத்தனையோ மகத்தான சாதனைகள் புரிவதை கண்டும், கேட்டும்கூட எம்மைவிட்டு விலக மறுக்கும் ஒற்றைக் கேள்வி.

"என்னால் முடியுமா...?"

தயக்கத் தளைகளை நம் கால்களில் இறுகப்பூட்டி நம்மை முன்னேற விடாமல் முடக்கிப்போடும் கேள்வி. கனவு மொட்டுகள் நம்முள் மலரும்முன்னே கருகச்செய்யும் கேள்வி.

'என்னால் முடியுமா?' என்னும் கேள்விக்குறியை 'என்னால் முடியும்.' என்னும் முற்றுப்புள்ளியாக மாற்றுவது எப்படி?

உணமையில் 'என்னால் முடியுமா?' என்கிற இந்தக் கேள்விக்கு அடிப்படையாய் இருப்பது தோற்று விடுவோமோ என்கிற அச்சம். தோல்வி பயம் தருகின்ற அவநம்பிக்கையினால் முதல் அடி எடுத்து வைக்காமலேயே நனவாகாத  கனவுகள் ஆயிரமாயிரம்.

'ஒரு சிலரால்  மகத்தான வெற்றிகளை அடைய முடிகிறது என்பதே மற்றவர்களாலும் அது சாத்தியம் என்பதற்கு அத்தாட்சி' என்கிறார் ஆப்ரகாம் லிங்கன்.  அதனைச் சொல்லுகின்ற அருகதை அவரைத் தவிர வேறொருவருக்கு இருத்தல் அரிது.  ஏனெனில் ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை தோல்விகளின் தொடர்கதை. இதோ மலைக்கவைக்கும் அந்தத் தோல்வி பட்டியல்:
1816இல் அவரின் குடும்பம் தங்கள் குடியிருப்பில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப் படுகிறது. புதிய இடத்தில் குடில் அமைக்க சின்னஞ்சிறு ஆபிரகாம் லிங்கன் தனது தந்தைக்கு உதவி செய்கிறார்.
1818இல் தனது ஒன்பதாவது வயதில் தாயின் மரணம்.
1831இல் வியாபாரத்தில் தோல்வி.
1832இல் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி. அதே வருடம் தான் செய்து வந்த தொழிலையும் இழக்கின்றார்.  சட்டக் கல்லூரியில் நுழையும் முயற்சியும் தோல்வி.
1834இல் நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கி தொடங்கிய வியாபாரத்தில் பெரும் நஷ்டம்.
1835இல் உயிருக்குயிராக காதலித்த, திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணின் திடீர் மரணம்.
1836இல் நரம்பு முறிவு நோயினால் பாதிக்கப்பட்டு ஆறுமாத காலம் படுக்கையில் கழிக்கிறார்.
1838இல் மாநில சட்டமன்றத்தில்  சபாநாயகர் ஆகும் முயற்சி தோல்வி.
1843இல் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சி தோல்வி.
1848இல் (1846இல்   வெற்றி பெற்று இருந்தும்) மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சி தோல்வி.
1849இல் ஜனாதிபதி ஆவதற்கு தான் அயராது பாடுபட்ட சசரி டெய்லர் வெற்றி பெற்றதும், தான் எதிர்பார்த்த நில அதிகாரி பதவியை தராததால் பெருத்த ஏமாற்றம்.
1854இல் அமெரிக்க செனட் தேர்தலில் தோல்வி.
1856இல் துணை ஜனாதிபதி நியமனத் தேர்வில் தோல்வி.
1858இல் மீண்டும் அமெரிக்க செனட் தேர்தலில் தோல்வி.

என்ன, மூச்சு முட்டுகிறதா? நம்புவதற்கு கடினமாக இருப்பினும் இவை அத்தனையும் உண்மை. நிஜம்  கற்பனையிலும் விசித்திரமானது என்பது எத்துணை உண்மை!  இத்தனை தோல்விகளையும் ஒரு மனிதர் எப்படி தாங்கிக் கொண்டார்?  சின்னச் சின்ன தோல்விகளை எல்லாம் கண்டு துவளுகின்ற, ஏன் தன்னையே மாய்த்துக் கொள்ளும் எல்லை வரை செல்லுகின்ற இந்தக்கால மனிதர்களுக்கு, தோல்விகளை கண்டு துவளாத ஆபிரகாம் லிங்கனின்  மனோதிடம் நம்ப முடியாத ஒன்றாக இருப்பதில் வியப்பில்லை.

அத்தனை தோல்விகளையும் கடந்து 1860இல் தனது ஐம்பத்தோராவது வயதில் அமெரிக்க ஜனாதிபதியானார் ஆபிரகாம் லிங்கன். வெற்றியின் பின் அவர் தனது பதவி காலத்திலும் முத்திரை பதிக்கத் தவறவில்லை. அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது நாடு பிளவுபடாமல் கட்டிக் காத்தது, கருப்பின அடிமைத்தனம் ஒழிப்புப் பிரகடனம் முதலிய செயல்களின் மூலம், படுகொலை செய்யப்பட்டு நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் அவர் இன்றும் நினைவுகூரப்படுகிறார். தோல்வி கண்டு துவளும் எண்ணற்றோருக்கு அவரது வாழ்க்கை எழுச்சியூட்டும் உதாரணம் என்பது நிதர்சனம்.

ஆபிரகாம் லிங்கனின் வெற்றியின் இரகசியம் என்ன? அது தோல்விகளின் முன்னே அடிபணியாது, முயற்சிகளை கைவிடாத திடமனம். வெற்றியாளர்கள் தடங்கல்களை கண்டு தங்கள் இலட்சியங்களை கைவிடுவதில்லை; கை விடுபவர்கள் வெற்றியாளர்கள் ஆவதில்லை. ஆபிரகாம் லிங்கன் வாழ்ந்த காலத்தில் உயிர் வாழ்ந்த 100 கோடி மக்களில் மிகச் சிலரே இன்று நினைவு கூறப்படுகிறார்கள். காரணம் வெற்றியாளர்களையே சரித்திரம் நினைவில் நிலை நிறுத்தி வைத்திருக்கிறது.

'என்னால் முடியுமா?' என்னும் சந்தேகக் கேள்விக்கு அடுத்த காரணம் நமது வயது பற்றிய ஐயம்.  ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு புதிதாக ஒன்றை தொடங்க முடியாது அல்லது சாதிக்க முடியாது என்கின்ற எண்ணம்.

பிரித்தானியாவை சேர்ந்த 97 வயதான வயோதிபர் ஒருவர் 10,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து குதித்து சாதனைப் படைத்துள்ளார்.  இந்த சாதனையையடுத்து ஜோர்ஜ் மொய்ஸி ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளிக்கையில் சொன்னது: "இவ்வாறு சாதனை செய்வது இது முதல் தடவை என்றபோதும், இது இறுதியான சாதனையல்ல.."

'மணிக்கு 108 மைல் வேகத்தில் காரோட்டி 106 வயது பெண்மணி சாதனை.' நாளிதழில் வந்த இன்னொரு செய்தி இது.

தனது 85 வயதிலும் ஒரு முன்னணி காட்சியறையில் சுறுசுறுப்பாக பணிபுரியும் ஒரு மூதிளைஞரை அண்மையில் சந்தித்து வியந்து நின்றேன்.  மனம் சோர்வுறும் போதெல்லாம் அவரோடு எடுத்துக்கொண்ட சுயபடத்தைப் பார்த்து புத்துணர்ச்சி பெறுகிறேன்.

சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்று சரித்திரம் படைத்தவர்கள் ஏராளம்.

பார்க்கின்சன் நோயை அடையாளம் கண்ட போது ஜேம்ஸ் பார்க்கின்சன் அவர்களுக்கு வயது 62.

இவ்வருட தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பொழுது டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு வயது 71.

விண்வெளியில் பயணித்த அதிக வயதான மனிதர் என்கின்ற சாதனையை படைத்த போது ஜோன் க்லென் அவர்களுக்கு வயது 77.

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் கால்பதித்த அதிக வயதான மனிதர் என்கிற சாதனையை 2013ஆம் வருடம் படைத்தபோது ஜப்பானை சேர்ந்த யுய்சீரோ மியுரா அவர்களுக்கு வயது 80. அதற்கு முன் அவர் இரண்டு முறை இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது எண்பதாவது வயதிலும்புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வுகளில் முனைப்புடன் ஈடுபட்டிருந்தார் தோமஸ் அல்வா எடிசன்.

உலகின் அதிக வயதான நெடுந்தூர ஓட்ட வீரரான ஃபவுஜா சிங் அவர்களின் வயது 101.

தனது 22வது வயதில் உலகக் கோடீஸ்வரர்கள் வரிசையில் ஒருவராக இடம்பிடித்த முகநூல் நிறுவனர் மார்க் ஷுகெர்பெர்க்கும், தனது 62வது வயதில் KFC உணவகத்தை ஆரம்பித்து வெற்றிபெற்று பெரும்பணக்காரரான ஹார்லண்ட் சண்டெர்ஸூம் நம்மைப்போன்ற மனிதர்களே.

வயது என்பது வெறும்  ஒரு எண் மட்டுமே என்று எண்ணுபவர்களுக்கு எந்த வயதிலும் சாதனை சாத்தியம்.

ஆக, தோல்வி பயமும், தங்கள் வயதைப் பற்றிய ஐயமும் அற்றவர்களின் வாழ்வில் 'என்னால் முடியுமா?' என்கிற கேள்விக்கே இடமில்லை.

'என்னால் முடியும்' என்று முன்னே செல்பவர்களை வரவேற்று வாகை சூட்டக் காத்திருக்கிறது வாழ்க்கை.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (07.10.2018)

செவ்வாய், 2 அக்டோபர், 2018

குடிக்காதவன் குடியும் கெடுமோ?

குடி குடியைக் கெடுக்குமென்று
கூக்குரலிட்டவனின்
குரல்வளை நசுக்கப்பட்டு
கெட்டுக் கிடக்கிறது அவன் குடி

'காக்கிகள்
கசிப்பினை ஒழித்திருந்தால்
கணவர் பிழைத்திருப்பார்'
அவளின் அழுகுரல் எதிரொலிக்கிறது
அவன் சாய்க்கப்பட்ட
இறப்பர் மரக் காடெங்கும்

வருமுன் காத்தல்
சமூக நோய்களுக்கு
பொருந்தாது போலும்

'உள்ளூர் போலீஸ் முதல்
நாட்டின் அதிபர் வரை
சொல்லியும் பயனில்லையே'
புத்திர சோகத்தில்
புலம்பும் தந்தை

ஏழையின் குரல் எப்பொழுது அப்பா
ஆளும் செவிகளை எட்டியது?
நாட்டை ஆள்பவர்களுக்கு - உன்
தோட்டப் பிரச்சினை துச்சம்

கசிப்பரக்கனிடமிருந்து
சக மனிதரைக் காக்க
அவன் கொடுத்த விலை
மிகப் பெரிது

அதிகாரத்தின்
குருடான கண்களையும்
செவிடான செவிகளையும்
பிரிந்த அவன் உயிர் கொண்டு
உயிர்ப்பித்து
கள்ளச்சாராயம்
இல்லாதொழியும் ஓர் நாளில்
அவன் பிறப்பும் இறப்பும் அர்த்தம் பெறும்

- சுப்ரமண்ய செல்வா -

(கள்ளச்சாரயத்திற்கு எதிராக போராடி படுகொலை செய்யப்பட்ட பாம்கார்டன் தோட்ட சமூக போராளி விஜேரத்னத்திற்கு சமர்ப்பணம்)

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (14.10.2018)

திங்கள், 1 அக்டோபர், 2018

ஒரு ஒப்புதல் வாக்குமூலம்

(இன்று உலக சிறுவர்கள் தினம்)

உலகச் சிறார்களே
உங்களிடம் அளிக்க
எங்களிடம் பாக்கியிருக்கிறது
ஒரு ஒப்புதல் வாக்குமூலம்

உங்களிடம் தருவதாய்
உறுதியளித்து
எங்கள் பெற்றோரிடமிருந்து
பெற்றுக்கொண்ட
பொக்கிஷமொன்றை
காணாமலாக்கிவிட்டோம்
அறியாதல்ல
அறிந்தே செய்தோம்

அது

மாசற்ற மண்ணும்
பசுமரக் காடுகளும்
தூசற்ற காற்றும்
தூய நன்னீரும்
காசுக்கு விலைபோகா
மாசிலாமணிகள் ஆண்ட
உன்னத உலகம்

ஆம் அதை
தெரிந்தே தொலைத்தோம்

உங்களிடம் கையளிக்க
எங்கள் பாவக்கரங்கள் கொண்டு
ஒரு புதிய உலகை
உருவாக்கினோம்

மரங்களை வீழ்த்தி
மழையை விரட்டினோம்
வேதியுரம் கொண்டு
மண்வளம் அழித்தோம்
கரிவளி கக்கச் செய்து
காற்றை கறைபடுத்தினோம்
ஒசோன் போர்வையில்
ஓட்டைப் போட்டோம்
நெகிழிக் கயிறுகொண்டு
நிலமகளை தூக்கிலிட்டோம்

மதமென்றும் இனமென்றும்
மனிதரைப் பிரித்தாளும்
சதி பயின்றோம்

உன்னத தியாகிகளை
உதைத்து விரட்டிவிட்டு
காடையர்கள் பாராள
காரணமானோம்
வாழத் தெரியாதோர்
வாழும் உலகில்
ஆளத்தெரியாதோர்
ஆட்சிதானே நடக்கும்!

அன்புச் செல்வங்களே!
அசலைத் தொலைத்துவிட்டு
போலியை கையளித்த
பாவிகளை மன்னியுங்கள்

உங்கள் பூக்கரங்கள் கொண்டு
ஒரு புத்துலகை படைத்திடுங்கள்
உங்கள் பிள்ளைகளிடம் அதனை
உவப்போடு அளித்திடுங்கள்

போலியை மீண்டும் அசலாக்கும்
புனிதப் புரட்சி மலரட்டும்!

- சுப்ரமண்ய செல்வா -

நீதியின் நிறம் கருப்பு

கருப்பு அப்பிக் கிடக்கின்றது
நீதிமன்றம் எங்கும்

குற்றம் செய்தவனும் 
குற்றம் சொன்னவனும்
காத்திருக்கிறார்கள்
கருத்த முகங்களுடன்

மழை நாளொன்றில் பூத்த சுவர் பாசிகள்
இந்தக் கொடு வெப்ப நாளில்
காய்ந்து கருத்துக் கிடக்கின்றன

கருப்பங்கி போர்த்தி
வழக்காடு பவரின்
கருவிழித் தூண்டில்கள்
காத்துக்கிடக்கின்றன
ஒரு கருப்பு மீன் இரைக்காக

கருப்பு சிறை வண்டியில்
வந்திறங்கிய
கைதிகளின் ஊர்வலம்

கருப்பு கம்பிகளின் பின்னே
அச்சத்துடன்
அலட்சியத்துடன்
துக்கத்துடன்
ஏக்கத்துடன்
கண்ணீருடன்
கவலையுடன்
அலைபாயும் கருவிழிகள்

கருத்த மேலுடை தரித்த
நீதிபதியின்
கருமை நிற எழுதுகோல்
கருப்பு மையில் எழுதிச் செல்கிறது
சில கருத்த தீர்ப்புகளை

வழக்குத் தொடுத்த
பாவத்திற்கு தண்டனையாக
நான்கு மணிநேரம்
கால்கடுக்க நின்று
வாய்தா சாபம் பெற்று
அந்த கருத்த நாளை
சபித்துச் செல்கிறான்
ஒரு வாதி

நீதிதேவதையின்
கண்களைச் சுற்றிய
கருப்புத் துணி
கொஞ்சம் விலகி இருக்கிறது
யாரேனும் இறுகக் கட்டி விடுங்களேன்.

- சுப்ரமண்ய செல்வா -
(27.09.2018)

(சில நாட்களுக்கு முன் நான் தொடுத்த வழக்கு நிமித்தம் நீதிமன்றம் சென்றிருந்தேன்)

நன்றி: தினகரன் வாரமஞ்சரி (21.10.2018)

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

ஈகோ நல்லது

என்ன.. ஈகோ நல்லதா? வியப்பாக இருக்கிறதா?  ஆம்! ஈகோ நல்லது.
ஈகோ என்பது ஆங்கிலச் சொல்.  அதன் ஆங்கில விளக்கத்தை தேடியபோது ஆச்சரியம் காத்திருந்தது. முன்னணி ஆங்கில அகராதிகளில் காணப்படும் அர்த்தங்கள் இவை:
Oxford: a Person's self-esteem or self-importance (ஓருவரின் சுயமதிப்பு அல்லது சுய முக்கியத்துவம்)
Cambridge: Your idea or opinion of yourself, especially your feeling of your own importance and ability (உங்களைப்பற்றி நீங்கள் கொண்டுள்ள அபிப்பிராயம், குறிப்பாக உங்கள் முக்கியத்துவம், திறமை பற்றிய உங்கள் எண்ணம்)
Collins: Sense of one's own worth (தனது சுயமதிப்பு பற்றிய ஒருவரின் உணர்வு)
Marriam Webster: The opinion that you have about yourself (உங்களைப்பற்றி நீங்கள் கொண்டுள்ள அபிப்பிராயம்)

இப்போது சொல்லுங்கள்.  ஈகோ தேவையா? இந்த அர்த்தங்களில் அடிப்படையில் ஒருவருக்கு ஈகோ தேவையா என்றால் நிச்சயம் தேவை.

உண்மையில் நம்மைப் பற்றிய பிறரின் அபிப்பிராயத்தைவிட நம்மைப் பற்றிய நமது அபிப்பிராயமே முதன்மையானது.

'உலகம் ஆயிரம் சொல்லட்டுமே... உனக்கு நீயே நீதிபதி' என்று கவிஞர் கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல் ஒன்று உண்டு.  ஆம்! நமக்கு நாமே நீதிபதியாக இருக்கும்போதுதான் நம்மை நாமே சீர்தூக்கிப் பார்த்து அறிந்து கொள்ள முடியும்.  அந்த அறிதலால் எம் எண்ணங்களில், பேச்சில், செயல்களில் ஏற்படும் மாற்றமானது பிறரிடம் நம்மைப்பற்றிய நல்லபிப்பிராயத்தை இயல்பாகவே ஏற்படுத்தும்.

நம்மை நாம் அறிவது எப்படி? அதற்கு அகப்பயணம் அவசியமாகிறது. நமது சொல், செயல் முதலிய புற மாற்றங்கள் நமது சிந்தனை, எண்ணங்கள் ஆகிய அக மாற்றங்களின் வெளிப்பாடன்றி வேறில்லை.

'வெளியே பார்ப்பவன் கனவு காண்கிறான்;  உள்ளே பார்ப்பவன் விழித்துக் கொள்கிறான்' என்கிறார் பிரபல மனோவியலாளர் கார்ல் யுங்க்.  'உன்னையே நீ அறிவாய்' என்றும் 'ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்ற வாழ்க்கை' என்றும் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிச் சென்றிருக்கிறார் கிரேக்க ஞானி சாக்ரடீஸ்.  'ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்' என்கிறார் திருவள்ளுவர்.
'தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே' என்று தன்னை அறிந்த ஒருவன் பிறர் வழிபடும் அளவுக்கு உயர்வான் என்கிறது திருமந்திரம்.

தினமும் சில நிமிடங்களை ஒதுக்கி, தனிமையில் அமைதியாக அமர்ந்து நான் யார்? நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? எனது கடமைகள் என்ன? எனது குறைகள் எவை? அவற்றை களைவது எப்படி? நிறைகள் எவை? அவற்றை வளர்த்துக்கொள்வது எப்படி? எனது தனித்துவமிக்க திறமைகளைக் கொண்டு சக மனிதர்களின் வாழ்வின் வளத்திற்கு என்னால் எப்படி பங்களிக்க முடியும்? போன்ற கேள்விகளுக்கு பதில் தேடத் தொடங்கினால், சில நாட்களிலேயே நமது வாழ்வில் மகத்தான மாற்றங்கள் ஏற்படுவதை உணரலாம்.

மனவளக்கலை யோகாவில் 'அகத்தாய்வு பயிற்சிகள்' என்று முறையான தற்சோதனைப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.  இது போன்ற முறையான பயிற்சிகள் மூலம் நம்மைப் பற்றி நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

நம்மைப் பற்றிய அறிதலும், புரிதலும் நம்மைப் பற்றிய அபிப்பிராயத்தை நமக்குள் ஏற்படுத்துகிறது. அதுவே நமது ஈகோவாக உருவாகிறது. அத்தைகைய ஈகோ இல்லாத ஒருவரை நாம் எங்கும் காண முடியாது. உண்மையில் ஈகோ நம் மனதின் முதுகெலும்பு.  உடலளவில் நாம் நிமிர்ந்து நிற்பதற்கு காரணம் நமது முதிகெலும்பெனில் மனதளவில் நான் நிமிர்ந்து நிற்பதற்கு காரணம் நமது ஈகோ, அதாவது நமது சுயமதிப்பு.  சுயமதிப்பே தன்னம்பிக்கையின் அஸ்திவாரம்.  தன்னம்பிக்கையே நம்மை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் உந்துசக்தி.  இத்தகைய ஈகோவை 'நேர்மறை ஈகோ' (Positive Ego) என்று சொல்லலாம்.

எனின், எது 'எதிர்மறை ஈகோ' (Negative Ego)?

வேதாத்திரி மகரிஷி அவர்கள் இதனை எளிமையாக விளக்குகிறார். எதிர்மறை ஈகோவுக்கு அவர் பயன்படுத்தும் தமிழ்ச்சொல் 'தன்முனைப்பு'.  அவர் அதனை 'நான்', 'எனது' என்கிற இரண்டு செருக்கு மனநிலைகளாக பிரிக்கிறார்.  'நான்' என்பது அதிகாரப் பற்றினாலும், 'எனது' என்பது பொருள் பற்றினாலும் உண்டாவதாக அவர் பகர்கின்றார். 

'நான் சொல்வது சரி' அல்லது 'எனக்குத் தெரியும்' என்பது நேர்மறை ஈகோ.  'நான் சொல்வது மட்டுமே சரி' அல்லது 'எனக்கு மட்டுமே தெரியும்' எனபது எதிர்மறை ஈகோ.  பல்லின மக்கள் வாழும் இவ்வுலகில் எனது இனம், மொழி, மதம் மட்டுமே உயர்ந்தது என எண்ணுவது, நிலைநாட்ட முயல்வது எதிர்மறை ஈகோ.

சுருக்கமாக சொல்வதாயின் நமது சுயமதிப்பின் வெளிப்பாடு (ஆது வாய்மொழியற்றதாகக் கூட இருக்கலாம்) மற்றவரின் சுயமதிப்பை காயப்படுத்தும்போது அது எதிர்மறை ஈகோவாகிறது. தான் பெற்றுள்ள கல்வி, அறிவு, அந்தஸ்த்து, பதவி, அதிகாரம் போன்றவற்றை கொண்டு பிறரை சிறுமைபடுத்துகின்ற உயர்மனச் சிக்கல் அது.  இது ஆங்கிலத்தில் egotism எனப்படும். பெரும்பாலான ஆங்கில-தமிழ் அகராதிகளில் Egoவிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் தமிழ் அர்த்தம் (தற்பெருமை, நான் என்னும் அகங்காரம், தன்முனைப்பு, சுயநலம், ஆணவம், கர்வம், திமிர், தன்னை மட்டும் மையப்படுத்திய பேச்சு/செயல்) இதற்கு பொருந்தும்.  உண்மையில் இது ஒரு தற்காதல் நிலை. தன்னை மையப்படுத்தி சிருஷ்டித்த அந்த கற்பனை உலகில் வேறு எவருக்கும் இடமிருப்பதில்லை.  அதனால்தான் எதிர்மறை ஈகோவினால் மிக நெருங்கிய உறவுகளில்கூட  இடைவெளி ஏற்படுகிறது; சில வேளைகளில் பிரிவும் நிகழ்கிறது.

நமது கட்டுப்பாட்டுக்குள் இருப்பது நேர்மறை ஈகோ.  தனக்குத் தானே உணவாகி கட்டற்று பெருகி தனிமைப்பட்டு போவது எதிர்மறை ஈகோ.

எனவே மற்றவர்களை பாதிக்காத, நமக்கு தன்னம்பிக்கையூட்டுகிற ஈகோ நல்லது.   அது நமது வளர்ச்சிக்கு அத்தியாவசியமும் கூட.

(நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் - 23.09.2018)

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

எதனை நோக்கிய ஓட்டம் இது?

ஒரு நண்பர் ஓட்டிச்சென்ற வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தேன்.  சாலை சமிஞ்சை விளக்குகளை தாண்டி ஒரு குறுகலான பாதையில் நுழைந்தோம். பின்னால் வந்த வண்டி தொடர்ந்து ஒலிப்பான் எழுப்பி எங்களை முந்த முயன்று கொண்டிருந்தது. எதிர்புறம் தொடர்ந்து வண்டிகள் வந்து கொண்டிருந்ததால் பின்னால் வந்த வண்டிக்கு முந்திச் கெல்ல இடம் கொடுக்க முடியவில்லை.  நிலைமை அறிந்தும் துரத்தும் வண்டிக்காரர் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார். எங்களால் இதை விட வேகமாக செல்வதும் சாத்தியமில்லை. சிறிது தூரம் பயணித்த பின் கிடைத்த ஒரு சிறிய வெற்றிடத்தில் வண்டியை ஒதுக்கி நிறுத்தி பின்னால் வந்த வண்டி முந்திச்செல்ல இடம் கொடுத்தார் நண்பர். நன்றி சொல்ல வேண்டிய அந்த ஓட்டுநர் கையை நீட்டி ஏதோ வசை சொல் வீசிச் சென்றார். எதுவும் நடவாதது போல் நண்பர் வண்டியை ஓட்டத் தொடங்கினார். அவரின் எதிர்வினை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இவ்வாறான சூழ்நிலைகளில் பொதுவான எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஆத்திரப்படுவது, திருப்பிக் கத்துவது, முடிந்தால் துரத்திச் சென்று அந்த வண்டியை முந்தி சண்டையிடுவது போன்றவைதான் பொதுவான எதிர்வினைகள்.

எனது எண்ணவோட்டத்தைப் புரிந்து கொண்ட நண்பர் சொன்னார்:
"அந்த இடத்தில் ஒதுங்கி இடம் கொடுத்ததால் நான் எதையும் இழக்கவில்லை. ஆனால் அவருடன் நான் போட்டி போட்டு இருந்தாலோ, வேகமாக செல்ல முயற்சித்திருந்தாலோ எனக்குள் பதற்றம் அதிகரித்து எனது மன அமைதியை இழந்திருப்பேன்.  அது நாம் இப்போது சென்று கொண்டிருக்கும் நமது வணிக சந்திப்பில் எனது பங்களிப்பை மிகவும் பாதித்திருக்கும். அதன் விளைவு எனது வியாபார இழப்பாக கூட அமையலாம்"

எத்துணை பேருண்மை! நமது வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தக் கூடிய உண்மை இது.

இப்படித்தான் நாம் பல சந்தர்ப்பங்களில் சூழ்நிலைகளும், மனிதர்களும் நம்மை எதிர்மறை எதிர்வினையாற்ற அனுமதித்து நமது அமைதியை இழந்து தவிக்கிறோம்.

நமது இந்த குறைபாட்டை சரி செய்து கொள்வது எப்படி? நமது எதிர்வினைகள் நமது அமைதியை கெடுக்காமல் பார்த்துக் கொள்வது எப்படி? அதனால் ஏற்படும் இழப்புகளில் இருந்து எம்மை காத்துக் கொள்வது எப்படி?

இதற்கு மனித இருப்பு பற்றிய, மனித வாழ்வின் நோக்கம் பற்றிய புரிதல் அவசியமாகிறது.

'மனிதன் என்பவன் இயற்கை நியதிக்குட்பட்ட பரிணாமமே தவிர, அவன் சிறப்பான சிருஷ்டி ஏதும் அல்ல.' என்கிறார் ஜேம்ஸ் ஆலன். இயற்கை நியதிக்கு உட்பட்டு வாழுகின்ற இயல்பான வாழ்வில் முரண்களுக்கு இடமில்லை. மனிதனைத் தவிர மற்ற எல்லா உயிரினங்களும் அத்தகைய இயற்கையோடு இசைந்த இயல்பான வாழ்க்கையையே வாழுகின்றன. ஒரு மான் இன்னொரு மானுடைய கொம்பின் நேர்த்தியை பார்த்து பொறாமை கொள்வதில்லை. அதனுடைய காலை முடமாக்கி தன்னிலும் கீழானதாக அதனை ஆக்க சதித்திட்டம் தீட்டுவதில்லை. ஒற்றை பூ மலர்ந்த ரோஜா செடி கொத்துக் கொத்தாய் மலர்ந்திருக்கும் தன் பக்கத்து ரோஜா செடியைப் பார்த்து காழ்ப்புணர்ச்சி கொள்வதில்லை. தன்னிலிருந்து உதிர்ந்த மலர்களையிட்டு கவலைப்பட்டு கண்ணீர் விடுவதில்லை மரம். எஞ்சிய மலர்களிலிருந்து  தோன்றும் பிஞ்சுகளை காய்களாகவும், கனிகளாகவும் ஆக்குவதில் அது கவனம் செலுத்துகிறது. அதற்குத் தெரியும் அடுத்த இளவேனிற் காலத்தில் தன்னில் மீண்டும் பூக்கள் பூக்கும் என்று.  அதற்கு முன் வெட்டப்பட்டாலும் அது மனமுடைந்து சோர்ந்து போவதில்லை. தன்னை மீண்டும் துளிரச் செய்யும் முயற்சியிலிருந்து பின்வாங்குவதில்லை.

விலங்குகளும் மனிதருக்கு கற்றுத் தரும் பாடங்கள் மகத்தானவை.  அவை ருசிக்காகவன்றி பசிக்காகவே உணவைத் தேடுகின்றன. அதனையும் அளவுக்கு மீறி உண்டு அவஸ்த்தைப்படுவதில்லை.  மனிதருக்கு அரிதாக இருந்து இன்று சர்வசாதாரணமாக ஆகிப்போன நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் அவை துன்புறுவதில்லை.  நாளைய தினத்தைப் பற்றிய அச்சங்களாலும், கவலைகளாலும் அல்லறும் மானிடரைப் போலன்றி,  அவை எவ்வித எதிர்பார்ப்புமின்றி இன்றைய தினத்தை இயற்கையோடு இசைந்து கழிப்பதால்,  இன்றைய மனிதர்களின் சாபங்களான பதற்றம் (tension), மனவழுத்தம் (stress) போன்ற மனநோய்களால் அவை பாதிப்படைவதில்லை.

சிந்தனையாற்றலை பெரும் வரமாய் பெற்ற மனிதன் மற்ற உயிரினங்களைவிட சிறப்பாய் வாழ வேண்டாமா? உடல், மன ஆரோக்கியத்தில் உச்சத்தில் இருக்க வேண்டாமா?  எங்கு தொலைத்தோம் நாம் வாழ்க்கையை?

மனிதன் மனிதனாக வாழாமல் தன் இயல்பிலிருந்து மாறிப் போனதின் விளைவு இது.

எனின் எது மனித இயல்பு?

'மனது இதமானவனே மனிதன்' என்கிறார் வேதாத்திரி மகரிஷி.  இதமான மனது இன்பம், துன்பம் ஆகிய இரண்டும் அற்ற நிலை.    உண்மையில் இன்பம், துன்பம் இரண்டுமே உணர்ச்சி எழுச்சி நிலைகள். துன்பமானது வலியையும், வேதனையும் தருவதைப் போலவே இன்பமும் அதன் உடையும் புள்ளியை கடக்கும்போது துன்பமாக மாறுகிறது. இனிப்புப் பண்டமொன்று உண்ணும்போது இன்பம் தருகிறது என்பதற்காக தொடர்ந்து சாப்பிட்டால் ஒரு புள்ளிக்கப்பால் குமட்டல் எடுத்து துன்பமாக மாறுகிறது. உண்மையில் எல்லா இன்பங்களும் இத்தகையனவே. ஒரு புள்ளியை கடக்கும்போது சலிப்பாக மாறுகிறது. நீடித்த சலிப்பும் ஒருவித துன்பமே.  இந்த இருவித உணர்ச்சி எழுச்சி நிலைகளுமற்ற ஒருவித சுகமான அதேவேளை  கட்டுக்கடங்கிய இன்ப நிலையே இதமான மனநிலை.  காலநிலையில்கூட அதிக வெப்பமோ, அதீத குளிரோ அற்ற மிதமான காலநிலையையே நாம் விரும்பிகிறோம்.  அது நமக்கும் இதமாக இருப்பதே அதற்கு காரணம்.

அத்தகைய இதமான மனநிலையை நிலையாக தக்க வைத்துக்கொள்ள வேண்டுமாயின் அதீத இன்பம் தருகின்ற (அதுவே துன்பமாக மாறும்) புலன் நுகர்ச்சியிலிருந்தும்,  மனதின் சமநிலையைக் குலைக்கின்ற கோபம், பொறாமை, கவலை, அவசியமற்ற அச்சம் போன்ற மனக்குறைகளிலிருந்தும் விடுபட வேண்டும்.  இதமான மனது அமைதியின் இருப்பிடமாகும்.  ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் நாம் படிப்பது, தொழில் செய்வது, சம்பாதிப்பது முதலிய நமது அனைத்து செயல்களும் இதனை நோக்கியதே என்பது புரியும். அமைதியே வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சாணி. அமைதியை நமது வாழ்க்கையின் மையப்புள்ளியாக மாற்றிக்கொள்ளும்போது நமது இருப்பு அர்த்தம் பெறுகிறது. அதற்கான எளிய வழி நமது அமைதியை குலைக்கின்ற பொருள், மனிதர், சூழ்நிலை, அவை எத்தனை பெறுமதிமிக்கதாய் இருப்பினும், அவற்றிலிருந்து விலகிச் செல்வதே.

இதமான மனது சக மனிதர் மீதும், ஏன் எல்லா உயிர்கள் மீதும் எல்லையற்ற அன்பு கொள்ளும். பிறர் துயரை தன் துயராய் கொண்டு கலங்கும்; அந்த துயரை துடைக்க முயலும்.  எல்லோரும் இன்புற்றிக்க நினைக்கும்.
மற்றவரை மகிழ்வித்து, அந்த மகிழ்ச்சியில் ஆனந்தம் அடையும்.

உணர்ச்சி வசப்படாது நேர்மறை எதிர்வினையாற்றுகின்ற ஒருவரின் இதமான மனநிலை மற்றவரையும் பற்றிக்கொள்ளும். அது பல்கிப் பெருகி இவ்வுலகில் அன்பும், கருணையும் அரிதான ஒன்று என்கிற நிலை மாறி இயல்பான ஒன்றாகும்.

இதுவே மனித இருப்பின் அர்த்தம்;  மனித வாழ்வின் நோக்கம்.  இந்த பிரபஞ்சத்தின் வயதோடு ஒப்பிடும்போது மனித வாழ்க்கையின் காலம் மிக மிகக் குறுகியது. எல்லையற்ற இந்த இயற்கை இதமான மனதினராய் மனிதர் வாழ எல்லா பாடங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றை தேடிப் படித்து பின்பற்றும் போதும் அந்த குறுகிய காலத்திற்குள் நீண்ட சரித்திரம் படைப்பது நம் எல்லோருக்கும் சாத்தியமாகும்.

(நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் - 09.09.2018)

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

புதிரானவள் நீ

ஒரு கவிதையைப் போலிருக்கிறாய்
புரிந்தும் புரியாமலும்
ஒவ்வொரு வாசிப்பின் முடிவிலும்
வெவ்வேறு அர்த்தமாகிறாய்
உன்மொழி கற்றுத்தா
ஒரு பொழிப்புரையெழுத

நம் மௌனங்கள் பரிமாறிக்கொள்ளும்
பரிபாஷையே போதுமானது
வார்த்தைகள் தேடிக் களைக்கும்
நம் சம்பாஷணைகளுக்கு
மௌனமே அடைக்கலமளிக்கிறது

பெருமழையில் கலைந்துபோகும்
மண்குவியலைப்போல்
உன்னில் கரைந்துபோக
வேட்கை கொள்கிறேன்
உன்னிசைவை ஒருமுறை சொல்
உன்னீர்ப்பு விசையில்
என்னைத் தொலைக்கிறேன்.

அருகில் செல்கையில் விலகிச்செல்லும்
கானலைப்போல் மாயமாகிறாய்
ஒரேயொரு முறை உன் காதலை மொழிந்து செல்
நீ மீண்டும் தோன்றும் கணம் வரை
உயிர்த்திருக்க

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

மழை மாலைப்பொழுது

சட்டென வந்துவிட்டது மழை
அறிந்திருந்தால்
வெறுந்தேநீர் கருப்பட்டியுடன்
காத்திருந்திருப்பேன்
வெருட்டும் இடி மின்னலை விட்டுவிட்டு
தென்றலை மட்டும் கூட்டி வந்திருக்கலாம்
மழையைப்போல் தென்றலுக்கும் குளிர்மை குணம்
சந்தோஷ சப்தத்தோடு கொட்டித் தீர்க்கிறது.
சாளரத்தில் பட்டுத்தெறிக்கும் சாரல்
சருமத்தை ஸ்பரிசித்து சிலிர்ப்பூட்டுகிறது.
அடையாளச் சுமைகளை இறக்கிவிட்டு
கூச்சத்தை பறக்கவிட்டு
கொட்டும் மழையில் இலக்கற்று நடக்கும்
வேட்கை மிகுகிறது
தரையைத் தழுவும் மழைநீர்
கழுவிச்செல்கிறது
எல்லா அழுக்குகளையும்
மழை வரவின் ஆச்சர்யம் விலகி
மழை உணர்ந்து
மழையில் லயித்து
மழையாகும் வேளை
கிளம்பிச் செல்கிறது மழை
மழைப்பாடலை முணுமுணுத்திருக்கிறது தூவானம்
கண்ணீரைப்போல மழைநீராலும் முடிகிறது
மனதை ஈரமாக்கிச் செல்ல.
- சுப்ரமண்ய செல்வா -

வியாழன், 5 ஜூலை, 2018

புது விதி

எந்த மரத்தடியிலும்
கண்மூடி தியானிக்கவில்லை
ஆயினும் திடீர் தெள்ளறிவு

ஒரு முள்ளின் கீறலால்
எல்லா ரோஜாக்களையும் வெறுப்பதா?
நனவாகாத ஒரு கனவுக்காக
கனவுகளை துறப்பதா?
கசந்த ஒரு கனிக்காக
தருவை வேரறுப்பதா?
போதுமிந்த பேதைமை

என்னையழுத்தும் உன்
நினைவு கற்களால்
நான் கட்டப்போவது
காதலின் கல்லறையல்ல
யாவருக்குமான நிழற்குடை.

நீ மூட்டிச்சென்ற  பிரிவுத்தீயில்
என்னையெரித்து உயிர்த்தெழுகிறேன்
ஒரு ஃபீனிக்ஸ் பறவையாய்
உலகத்தை காதலிக்க
உன்னையும் சேர்த்து.

- சுப்ரமண்ய செல்வா -

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (02.09.2018)

சனி, 21 ஏப்ரல், 2018

கசப்பினிமை

நீ கையசைத்து
கடந்து சென்ற காட்சி
கடலடி பாறையாய்
கனத்துக்கிடக்கிறது

ஏனோ நீ
பள்ளிக்கூட வாசலில்
துள்ளிப் பிரியும்
நினைவு வந்து போகிறது
பள்ளியிலிருந்து தினமும்
இல்லம் திரும்புவாய்

விடுபட மறுத்த
உன் விரல்களை
வலிய பிரித்து
நடந்தபோது
உவகையும் வெறுமையும்
பெருமிதமும் பிரிதுயருமென
வித்தியாச அவஸ்தையில்
விம்மித் தணிகிறேன்

மகளே
கண்ணீர் கலந்த
என் பெருமூச்சு
சுமந்து வருகிறது
உனக்கான
வாழ்த்துக்களையும்
பிரார்த்தனைகளையும்

-  சுப்ரமண்ய செல்வா -

(அண்மையில் மகளை மணமுடித்துக் கொடுத்த நண்பன் சந்திராவுக்கு)

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

உன்னால் முடியுமெனில்...

கசக்கிய மலரை
மீண்டும் பொருத்தி
மலர்வி

கொட்டிய ரத்தத்தை
மீள் செலுத்தி
காயங்களழி

விடுவித்த உயிரை
சிறைபிடி

அந்தத் தாயை
மனைவியை
சகோதரியை
மகளை
மாசற்று
திருப்பிக்கொடு

உன்னால் முடிகின்ற
அந்நாளில்
நீசனே
வன்புணர்!

- சுப்ரமண்ய செல்வா -

[உலகெங்கும் உருக்குக்குலைக்கப்படும்
ஹசீபாக்களுக்கும், ஹாசினிகளுக்கும் சமர்ப்பணம்]

வியாழன், 19 ஏப்ரல், 2018

முகம் தொலைத்த பூமி

முதற்கல்லை எறியும்
ஆணை வந்ததும்
எல்லோரும் குனிந்து
தமக்கான கல்லை
பொறுக்கத் தொடங்கினர்

ஆண்டவர் அதிர்ந்தார்.

'என்ன...
எல்லோரும் புனிதரா இங்கு?'

நெருங்கி நோக்கினார்.

அத்தனையும்
புனித முகமூடிகள்...
அக அழுக்குகளின்
அடிச்சுவடு மறைத்து
வண்ண வண்ண
சாயம் பூசி
நாட்கணக்கில்
நகாசு செய்து
அசலை விஞ்சிய
அழகு முகமூடிகள்

ஆண்டவரே கொஞ்சம்
மயங்கித்தான் போனார்

முகம் மறந்த
முகமூடிகள் கூட்டம்
குற்றம் சுட்டி ஆர்ப்பரித்தது

ஆண்டவர் அவளிடம் சொன்னார்:
'முகம் தொலைத்த பூமியில்
முகங்காட்டும் நீ நிர்வாணி;
நீயுமொரு புனித முகமூடி தரி
உன் பாவங்கள் மறைக்கப்படலாம்'. 

புதன், 18 ஏப்ரல், 2018

எந்த நட்சத்திரம் நீ

அன்றும் இதே போன்ற ஒரு இரவு
நிலவைத் தொலைத்த வானம்
நீளும் கடற்கரை
முகம் மறைக்கும் கும்மிருட்டு
ஆர்ப்பரிக்கும் கடல்
நானும் நீயும் தனியே

மணலின் ஈரம் மனதை நனைக்க
மெளன நடை

நம் அந்தரங்கம் மதித்து
நண்டுகள்கூட தம் பொந்துக்குள்
முகம் புதைத்துக்கொண்டன

மணல் நடையில் சமனிழந்து
உரசி விலகும் நம் உடல்களிலிருந்து
உருகி வழிந்த பேரன்பில்
அந்த இரவு ஈரமானது

இணைந்த விரல்களினூடே
எண்ணற்ற கனவுப்பறிமாற்றம்
வாய்மொழியற்ற சம்பாஷணை

ஊடலும் பின் கூடலுமாய்
உயிர்ப்போடுலவிய
நெடுங்காதல் பாயணம்
இது போதுமென
இரு மனங்களும் சொல்லும்
ஓர் இலையுதிர்கால நாளில்
பழுத்த இலைகள் இரண்டு மெதுவாய்
மிக மெதுவாய் மரத்திலிருந்து
விலகிச் செல்வதுபோல்
விரல்கோர்த்து ஒன்றாய்
விடைபெறும் நம்
கடைசிக் கனவு மட்டும்
கைகூடாமலே போனது

இதோ இன்னுமொரு
நிலவைத் தொலைத்த இரவு
நிலா முற்றத்தில் மல்லாந்து
விழித்துக் கிடக்கிறேன்
எண்ணற்ற நட்சத்திரங்களில்
எந்த நட்சத்திரம்
நீ.

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

கானகத் தீர்மானம்

மலரைக் கசக்கி
மகிழும் வக்கிரம்
மனிதருக்கு மட்டுமே

பிறகேன் எம்மை
வம்புக்கிழுக்கின்றீர்

எங்களில் எவரும்
தங்கள் பெண்டிரை
கூடியென்ன
தனியேயேனும்
சிதைப்பதில்லை

எனின்
மிருங்கங்கள் போலென
எங்ஙனம் உரைப்பீர்

ஆதலினால் இனி
குரூரத்திற்கு உவமையாய்
மனிதரைக் கொள்வதென
மாக்கள் கூடி
முடிவு செய்தோம்.

- சுப்ரமண்ய செல்வா -

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

ஆதலினால் காத்திரு

கடிகாரத்தை பரிசளிக்கும்
உன் சூசகம் அறிவேன்.

காலதாமதங்களுக்கு
கடிகாரமெனில்
என்
காலந்தவறாத வருகைகளுக்கு
பரிசாய்
என்ன தருவாய்

எனக்கான
உன் காத்திருப்பின்
இடைவெளியை
நிரப்பிக்கொண்டிருக்கும்
என் காதலை
கவனிக்கவில்லையா நீ

நீதானே சொல்வாய்
காத்திருத்தலில்
உயிர்த்திருக்கிறது
உன் காதலென்று

நிமிடங்களும் மணிகளும்
கால நெடுங்கணக்கின்
சிறு பின்னங்கள்

உன்னை அடைதலுக்கான
என் காத்திருப்பு
யுகங்கள் பல கடந்ததென்பதனை
அறிவாயா

ஆதலினால் காத்திரு.

- சுப்ரமண்ய செல்வா -

புதன், 28 மார்ச், 2018

பயணிக்காத பாதை

இலையுதிர்கால
எழில் வனமொன்றினில்
பிரிந்து நீண்டன
பாதைகள் இரண்டு

இரண்டிலும் ஒன்றாய்
பயணிக்க இயலா
பரிதவிப்பில் நான்
பார்த்து நின்றேன்
பாதை ஒன்றினை;
பார்வைக்கெட்டிய
புதர் நிறைந்த
வளைவுவரை.

பின்பு நான்
மறுபாதையினைத் தேர்ந்தேன்;
பாதங்கள் ஸ்பரிசிக்காத
பசும்புல் பாதையது.

அந்தக் காலை பொழுதினில்
சரிநிகராய் விரிந்தன
இருபாதைகளும்;
பாதங்கள் பட்டு சருகாகா
பச்சிலைப் பாதைகள் இரண்டு.

முன்னையப் பாதயினை
இன்னொரு நாளுக்கு
ஒதுக்கினேன்.
ஆயினும் நானறிவேன்
ஒருபாதையின் முடிவில்
வேறொரு பாதைத் தொடங்கும்
மாயப் பயணமிது.
இன்னொரு நாள் நான்
இவ்வழி வருவது ஐயமே.

யுகயுகங்களை கடந்து ஓர்நாளில்
பெருமூச்சுடன் பகர்வேன்;
எழில்வனமொன்றினில்
பிரிந்து நீண்டன
பாதைகள் இரண்டு
நான்
பயணம் குறைந்த
பாதையினைத் தேர்ந்தேன்.
அதனால் விளைந்தன
அனைத்து மாற்றங்களும்.

மூலம்: The Road Not Taken by Robert Frost
தமிழில்: - சுப்ரமண்ய செல்வா -

ஞாயிறு, 25 மார்ச், 2018

கணிதமும் வாழ்வும்

கணிதம் கற்றுத்தரும்
வாழ்க்கைப் பாடம்...

நல்லவை கூட்டு (+)
அல்லவை கழி (-)
அன்பை பெருக்கு (×)
மனிதரை வகுத்தலை (÷)
மட்டும்
மறந்தும் செய்யாதிரு!

ஏனெனில்
வாழ்க்கை கணக்கில்
வகுஎண் வகுபடு எண்
எதுவாயினும்
ஈவு பூஜ்ஜியமே!

- சுப்ரமண்ய செல்வா -

(தமிழில் கணிதம் கல்லாதவர்களுக்கு:
வகுஎண் = Divisor
வகுபடு எண் = Dividend
ஈவு = Quotient)

வெள்ளி, 23 மார்ச், 2018

நின்றுபோன மனிதத்தின் இதயம்

(சிரியப் போரில் கொள்ளப்படும் பொதுமக்களில் நால்வரில் ஒருவர் ஒரு குழந்தை - அண்மையச் செய்தி)
===================================================================

குழந்தையும் தெய்வமும்
ஒன்றென்றால்
சிரியத் தெருக்களில்
தினமும்
சிதறிச் சாகின்றன
சிலநூறு தெய்வங்கள்.
தெய்வங்களைக் காக்கும்
தெய்வமெது?
*  *  *  *
வல்லாதிக்க அரக்கர்களின்
விளையாட்டு பூமியில்
உதைபடும் பந்துகளாய்
சிரியச் சிறார்களின்
பிஞ்சுத்தலைகள்.
*  *  *  *
மானுடமும் ஊடகமும்
வளர்க்கும்
மௌன நெருப்பில்
தீக்குளித்து
உயிர்த்துறக்கின்றன
சிரிய மொட்டுக்கள்.
*  *  *  *
மனிதவுரிமை வள்ளல்களின்
மரண மௌனத்தில் கிழிகிறது
மனிதத்தின் செவிப்பறை.
*  *  *  *
அன்று ஈழம்
இன்று சிரியா
அதே மௌனம்
அதே அலட்சியம்
அதே வேடிக்கை நோக்கு.
மரணம்
தம் வாசல் வரும்வரை
மௌனித்திருத்தலே
மானுடத்தின் பெருஞ்சாபம்.
*  *  *  *
எஞ்சியிருக்கும்
பிஞ்சு விழிகளின்
ஒரே கேள்வி...
எந்த அதிர்ச்சி வைத்தியம்
நின்றுபோன
மனிதத்தின் இதயத்தை
துடிக்கச் செய்யும்?

- சுப்ரமண்ய செல்வா -

புதன், 21 மார்ச், 2018

கவிப்பிழை

கார்மேகக் கூந்தல்
பிறைநெற்றி
கயல்விழிகள்
முத்துப்பற்கள்
பவழ இதழ்கள்
சங்குக் கழுத்து
மாங்கனி மார்புகள்
கொடியிடை
தபேளா பிருஷ்டங்கள்
வாழைத் தொடைகள்

கற்பனை வானில்
சிறக்கடித்த ஆண்கவி
கவனிக்கத் தவறியது...

அவள் மனது.

- சுப்ரமண்ய செல்வா -

காணாமல்போனேன்

திடீரென்று நான்
காணாமல்போனேன்.

மனைவி மக்கள்
கலங்கினர்.
நண்பர்கள்
தேடிக் களைத்தனர்.
உறவுகள்
குழம்பினர்.
நிறுவனம்
ஸ்தம்பித்தது.
உலகம் என்
கைநழுவியது.

எல்லோரும் நான்
காற்றில் கரைந்ததாய்
கருதிய வேளை....

காணாமல்போன கைப்பேசி
கைவந்து சேர்ந்தது;

உயிர்த்தெழுந்தேன்.

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

பிற்போடும் பிணி

பிறகு...
அப்புறம்...
நாளை...
இன்னொரு நாள்...

நேரமில்லை.
'மூட்' இல்லை.
அவசரமில்லை.

காலந்தாழ்த்த
காரணமாயிரம்.

தள்ளிப்போடும் தருணங்களிலெல்லாம்
வாய்ப்புகளை வாரிக்கொண்டு
சொல்லிக்கொள்ளாமல் விரைகிறது
காலம்.

பிற்போடும் பிணி
பீடித்தோர்க்கு
சாண் ஏற முழம் சறுக்கும்
சாகசம் நிரந்தரம்.
- சுப்ரமண்ய செல்வா -

திங்கள், 19 பிப்ரவரி, 2018

இன்று உனது நாளையை சம்பாதித்தாயா?

இதோ! இன்றைய நாளின் நிறைவு நெருங்கிக்கொண்டிருக்கிறது.
எவ்விதம் கழிந்தது உனது நாள்?
நீ கடந்து செல்கையில் யாரேனும் களிப்படைந்தார்களா?
நீ நின்று பேசினாயென யாரேனும் நினைவில் கொண்டார்களா?
அன்பான சில வார்த்தைகள் உன்னைப்பற்றிச் சொல்ல
இங்கு யாரேனும் உள்ளார்களா?

உனது நண்பனுக்கு உற்சாக வணக்கம் சொன்னாயா? - அல்லது
கடமைக்கு கையசைத்து கடந்து போனாயா?
சுயநலமாய் விரைந்ததா இன்றைய நாள்?  அல்லது
யாருடைய நெஞ்சமேனும் உன் செயலால்
நன்றியால் நனைந்ததா?

இன்றைய நாளை வீணாக்கினாயா? இழந்தாயா?
நலமாய் நகர்ந்ததா? கடிதாய் கடந்ததா?
கருணைத் தடம்விட்டு வந்தாயா? காய வடு விட்டு கடந்தாயா?

இன்றிரவு உறக்கம் நாடி உன் விழிகள் மூடும்போது
இன்றைய உனது  உன்னதச் செயல்களினால்
இன்னுமொரு நாளையை நீ சம்பாதித்தாயென
கடவுள் களிப்புடன் சொல்வாரா?

மூலம்: Have You Earned Your Tomorrow By Edgar Guest
தமிழில்: சுப்ரமண்ய செல்வா

வியாழன், 15 பிப்ரவரி, 2018

வாழ்க்கையின் தருணங்கள்

வாழ்க்கையில் சில தருணங்களில் சிலரின் பிரிவு நம்மை அவ்வளவு பாதிக்கிறது, அவர்களை நாம் நம் கனவுகளிலிருந்து அள்ளியெடுத்து நிஜமாகவே ஆரத்தழுவ ஆசைப்படுகிறோம்.

ஒரு சந்தோஷக்கதவு மூடிக்கொள்ளும் போது இன்னொன்று தானாக திறந்து கொள்கிறது. ஆனால் நாம் அநேக வேளைகளில் மூடிய கதவையே பார்த்துக் கொண்டிருப்பதால் திறந்திருக்கும் கதவை கவனிக்க தவறிவிடுகிறோம்.

வெளித்தோற்றத்தில் மயங்கி விடாதீர்கள். அவை உங்களை ஏமாற்றிவிடும். செல்வத்தில் மயங்கி விடாதீர்கள். அவை கூட மறைந்து விடும். உங்களை புன்னகைக்க வைக்கக்கூடியவரை தேடுங்கள். ஏனெனில் புன்னகையால்தான் ஒரு இருண்ட நாளை ஒளிமயமாக்க முடியும். உங்கள் உள்ளங்களை புன்னகைக்க வைக்கக் கூடிய உறவைத் தேடுங்கள்.

விரும்பிய கனவுகளைக் காணுங்கள். விரும்பிய இடத்திற்கெல்லாம் செல்லுங்கள். என்னவாக விரும்புகின்றீர்களோ அவ்வாறே ஆகுங்கள். ஏனெனில் இவையனைத்தையும் செய்ய உங்களுக்கு இருப்பது ஒரு வாழ்க்கை, ஒரு வாய்ப்பு.

வாழ்க்கை உங்களை இனிமையானவராக்க இன்பத்தை தரட்டும்; வலிமையுள்ளவராக்க சோதனைகளைத் தரட்டும்; பணிவுள்ளவராக்க துயரங்களைத் தரட்டும்; மகிழ்ச்சிமிக்கவராக்க நம்பிக்கைகளைத் தரட்டும்.

எல்லா பெருமகிழ்ச்சிமிக்கவர்களும் எல்லா சிறப்புகளையும் பெற்றவர்கள் அல்ல; அவர்கள் கிடைத்ததை சிறப்பாக்கிக் கொண்டவர்கள்.

எப்போதும் மறக்கப்பட்ட கடந்தகாலத்திலேயே ஒளிமயமான எதிர்காலம் தங்கியிருக்கிறது. நேற்றைய தோல்விகளையும், வேதனைகளையும் சுமந்தவாறு நாளையை நோக்கி நடைபோட முடியாது.

நீங்கள் பிறந்தபோது நீங்கள் அழுதீர்கள்; சுற்றியிருந்தோரெல்லாம் புன்னகைத்தார்கள். நீங்கள் இறக்கும்போது நீங்கள் புன்னகையோடு விடைபெறக்கூடிய, உங்களைச் சுற்றியிருப்போரெல்லாம் அழக்கூடிய ஒரு வாழ்க்கையை இறுதிவரை வாழுங்கள்.

வருடங்களை கணக்கிடாதீர்கள்; நினைவுகளை கணக்கிடுங்கள்.

வாழ்க்கையின் அர்த்தம் எத்தனை முறை சுவாசிக்கிறோம் என்பதில் அல்ல, எத்தனை முறை மூச்சுவிட மறந்து வியந்து நிற்கிறோமோ அந்த அற்புதத் தருணங்களில் இருக்கிறது.

(வாசித்து சேமித்து வைத்தது. ஆங்கில மூலம் எழுதியது யாரென்று தெரியவில்லை.
தமிழிலில்: சுப்ரமண்ய செல்வா)

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

நானும் மனிதனே

உன் நெற்றித் திருநீறு கடந்து
உன் தொப்பி கடந்து
உன் தாடி கடந்து
உன் சிலுவை கடந்து
உன்னை என்னால்
நேசிக்க முடியுமெனில்
நானும் மனிதனே!
- சுப்ரமண்ய செல்வா -  

உலகம் உங்கள் கண்ணாடி

நீங்கள் மற்றவர்களில் காணும் நல்லவைகள் உங்களிடமும் இருக்கின்றன.
நீங்கள் மற்றவர்களில் காணும் தவறுகள் உங்களிடமும் இருக்கின்றன.
ஏனெனில் ஒன்றை அடையாளம் காண வேண்டுமெனில், ஏற்கனவே அது உங்களுக்கு தெரிதிருக்க வேண்டும் அல்லவா!
நீங்கள் மற்றவர்களில் காணும் மகத்தான சாத்தியக்கூறுகள் உங்களாலும் சாத்தியமே.

உங்களைச் சுற்றிலும் நீங்கள் காணும் அழகு உங்கள் அழகே.
உங்களைச் சுற்றிலும் நீங்கள் காணும் உலகு உங்களின் பிரதிபலிப்பே;
அது உங்களை உங்களுக்கு காட்டும் கண்ணாடி.

உலகை மாற்ற வேண்டுமெனில் முதலில் உங்களை மாற்றுங்கள்.
பழிபோடுவதாலும், குறை கூறுவதாலும் ஆவது ஒன்றும் இல்லை.
உங்கள் கருத்துகளுக்கு நீங்களே பொறுப்பாளிகள்.
நீங்கள் மற்றவர்களில் காண்பவை உங்களை உங்களுக்கு காண்பிக்கின்றன.
மற்றவர்களில் நல்லதை காணுங்கள். நீங்கள் உங்களை மிகச் சிறந்தவராய் காண்பீர்கள்.
மனமுவந்து ஈனுங்கள்.  நீங்கள் உங்களுக்கே கொடுக்கின்றீர்கள்.

அழகை ஆராதியுங்கள்;  நீங்கள் அழகாகுவீர்கள்.
படைப்பாற்றலை போற்றுங்கள்; படைப்பாளியாவீர்கள்.
நேசியுங்கள்;  நேசிக்கப்படுவீர்கள்.
புரிந்துகொள்ள முயலுங்கள்;  புரிந்துகொள்ளப்படுவீர்கள்.
செவிகொடுங்கள்;  உங்கள் குரல் செவிமடுக்கப்படும்.
கற்றுக்கொடுங்கள். கற்றுக்கொள்வீர்கள்.

உங்களின் சிறந்த முகத்தை கண்ணாடி முன் காட்டுங்கள்.
உங்களை திருப்பி நோக்கும் முகத்தைப் பார்த்து ஆனந்தப்படுவீர்கள்.

(ஆங்கில மூலம் எழுதியவர் யாரென்று தெரியவில்லை.
தமிழில்: சுப்ரமண்ய செல்வா)

நான் நீயாயின்

காட்சி ஒன்றாயினும்
காணும் நீயல்ல நான்

நம்மறிவு
நம்மனுபவம்
நம்முணர்வு
வெவ்வேறு

நீ காணும் உலகை
நின் விழி வழியே
நான் காணும் நாளில்
நான் நாமாகும்
மாயம் நிகழும்!

- சுப்ரமண்ய செல்வா - 

வியப்பு

விபத்துதான் நம் சந்திப்பு
உன்னால் மட்டும் எப்படி
காயப்படாமல்
கடந்து செல்ல முடிந்தது...!?
- சுப்ரமண்ய செல்வா -

கடமை

வனப்புமிகு வனம் என்னை வசீகரிகறிக்கிறது.
ஆயினுமிது தாமதிக்கும் தருணமல்ல.
நிறையவிருக்கின்றன நான்
நிறைவேற்றக் காத்திருக்கும் வாக்குறுதிகள்.
தொலைதூரம் செல்ல வேண்டும் நான் துயில்கொள்ளும் முன்
ஆம்
தொலைதூரம் செல்ல வேண்டும் நான் துயில்கொள்ளும் முன்.

(Robert Frost அவர்களின் 'Stopping by the woods on a snowy evening' கவிதையில் ஒரு பகுதி
தமிழில்: சுப்ரமண்ய செல்வா)


உங்கள் மீது பதிந்த சிறு விழிகள்...


அந்தச் சின்னஞ்சிறு விழிகள்
உங்களையே கவனிக்கின்றன
இரவும் பகலும் எப்பொழுதும்.

அந்தச் சின்னஞ்சிறு செவிகள்
திறந்தேயிருக்கின்றன
உங்களது ஒவ்வொறு சொல்லையும்
உடனுக்குடன் உள்வாங்க.

அந்தச் சின்னஞ்சிறு கரங்கள்
பரபரக்கின்றன
நீங்கள் செய்வதத்தனையையும் செய்வதற்காக.

அந்தச் சின்னஞ்சிறு மனது
கனவு காண்கிறது
உங்களைப்போல் உருவாகும்
அந்த ஒரு நாளுக்காக.

நீங்களே அவனின் நாயகன்; நீங்களே
அறிவாளிகளுக்கெல்லாம் அறிவாளி.
ஐயமேதும் இல்லை உங்களில்
அந்த சின்ஞ்சிறு நெஞ்சினில்.

முற்றுமுழுதாய் அவன் நம்புகின்றான்;
நீங்கள் சொல்வதனைத்தையும்
நீங்கள் செய்வதனைத்தையும்.
உங்களைப்போல் ஒருநாள் பெரியவனாகி
உங்களைப்போலவே பேசுவான்
உங்களைப்போலவே நடப்பான்.

அகல விழி திறந்த அந்தச் சிறுவன்
நம்புகிறான்
நீங்கள் எப்பொழுதும் சரியென்று.
உங்கள்
ஒவ்வொறு வாக்கும் திருவாக்கே
ஒவ்வொறு செயலும் நற்செயலே.

அந்த சின்ஞ்சிறு விழிகள்
திறந்தேயிருக்கின்றன.
இரவும் பகலும் எப்பொழுதும்
உங்களையே அவை கவனிக்கின்றன.

ஒவ்வொறு நாளும்
உங்கள் எல்லா செயல்களிளும்
தடம்விட்டுச் செல்கிறீர்கள் நீங்கள்.
உங்களைப்போல் வளரக் காத்திருக்கும்
அந்தச் சின்னஞ்சிறு கால்கள்
உங்கள் தடம்பற்றியே நடக்கும்.

(ஆங்கில மூலக்கவிதையை எழுதியது யாரென்று தெரியவில்லை.
தமிழில்: சுப்ரமண்ய செல்வா)

கற்பிப்போர் கவனத்திற்கு

(ஹிட்லரின் நாஜி வதை முகாமிலிருந்து உயிர்பிழைத்த ஒரு பள்ளி அதிபர் கல்வியாளர்களுக்கு எழுதிய கடிதம்).

அன்புள்ள ஆசிரியர்களுக்கு, நான் நாஜி சித்திரவதை முகாமிலிருந்து உயிர்பிழைத்தவன். வேறு எவரும் காணக்கூடாத காட்சிகளை எனது கண்கள் அங்கு கண்டன. படித்த பொறியியலாளர்களால் கட்டப்பட்ட நச்சு வாயு அறைகள்; படித்த மருத்துவர்களால் நஞ்சூட்டப்பட்ட சிறுவர்கள்; தாதிகளால் கொல்லப்பட்ட சிசுக்கள்; பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கல்வி கற்ற ஆயுதப்படையினரால் கொல்லப்பட்ட பெண்களும், குழந்தைகளும். எனவே நான் கல்வியின் மீது மிகுந்த சந்தேகம் கொள்கிறேன்.

எனவே ஆசிரியர்களே! எனது வேண்டுதல் என்னவெனில் உங்கள் மாணவர்கள் நல்ல மனிதர்களாக உருவாக உதவுங்கள். உங்கள் உழைப்பு மெத்தப் படித்த அரக்கர்களையும், திறமையான உளநோயாளர்களையும் உருவாக்கக் கூடாது. எழுத்தும், வாசிப்பும், கணிதமும், சரித்திரமும் மாணவர்களை நல்ல மனிதர்களாக ஆக்கினால் மட்டுமே பயன் மிகுந்ததாக இருக்கும்.

(Excerpt from the book 'Teacher and Child' by by Dr. Haim Ginott, Child Psychologist and Author)

தமிழில் : சுப்ரமண்ய செல்வா #செல்வாசகம்

வியாழன், 4 ஜனவரி, 2018

சபிக்கப்பட்ட என் கைப்பேசி

மறைந்த தன் நண்பனின் தொலைபேசி இலக்கத்தை தனது கைப்பேசியிலியிருந்து அழிக்க முயலுகையில் படும் துயரத்தை பகிர்ந்துகொண்ட ஒரு நண்பனுக்காக எழுதிய கவிதை:
=================================

நீ
அழைத்த போதெல்லாம்
உன் பெயரால்
ஒளிர்ந்த என் கைப்பேசி
இன்று ஓய்ந்து கிடக்கிறது.
உன் குரலின் ஸ்பரிசத்தை
இனி அது
உணரப்போவதில்லை.

உன் குரலால்
ஆசீர்வதிக்கப்பட்ட
என் செவிகள்
உன் மரணம் கேட்குமாறு
சபிக்கப்பட்டது எப்போது?

கண்ணீரால் காயமான
என் கண்கள்
செய்த பாவமென்ன?

எப்போதும்
சொல்லிவிட்டுத்தானே செல்வாய்
இப்போது மட்டுமென்ன?

நண்பனே!
என் கைப்பேசி சுமக்கும்
உன் எண்ணை
நீக்க முயலுகையில்
துடிக்கும் என் விரல்களை
பதறும் என் நெஞ்சை
நடுங்கும் என் உடலை
உயிருடன் நான் படும்
மரண அவஸ்தையை
உணரவேனும் ஒருமுறை
திரும்பி வா.

- சுப்ரமண்ய செல்வா -