திங்கள், 12 நவம்பர், 2018

எண்ணிய வண்ணம் வாழ்வு: பகுதி-2 எண்ணமும் சூழ்நிலைகளும்

மூலம்:  As a Man Thinketh by James Allen        தமிழில்: சுப்ரமண்ய செல்வா

மனித மனம் என்பது ஒரு தோட்டத்தைப் போன்றது.  எதையும் பயிரிட்டாலும் பயிரிடாவிட்டாலும் அங்கு ஏதாவதொன்று முளைத்துக்கொண்டே இருக்கும்.  பயனுள்ள விதைகளை விதைக்கத் தவறினால் பயனற்ற களைகளின் விதைகள் அங்கு விழுந்து தங்களை பெருக்கிக்கொண்டே இருக்கும்.

களைகளை அகற்றி தனக்கு தேவையான கனிகளையும் மலர்களையும் பயிரிடும் ஒரு நல்ல தோட்டக்காரனைப் போல, மனிதன் மனம் என்கின்ற தனது தோட்டத்தில் தவறான, பயனற்ற, தூய்மையற்ற எண்ணங்கள் என்னும் களைகளை அகற்றி, சரியான, பயனுள்ள, தூய்மையான கனிகளையும் மலர்களையும் நிறைவாக பயிரிட்டு வர, தானே தனது ஆன்மாவின் மிகச் சிறந்த தோட்டக்காரன் என்பதையும், தானே தனது வாழ்வை இயக்குபவன் என்பதையும் நன்றாக கண்டு கொள்கின்றான். தனது எண்ணங்களின் குறைகளை உள்ளார்ந்து உணர்கின்றான்.  எப்படி எண்ணங்களும் மனமும் குணத்தை, சூழ்நிலைகளை, தலைவிதியை உருமாற்றுகின்றன என்பதனை துல்லியமாக புரிந்து கொள்கின்றான்.

எண்ணமும் குணமும் ஒன்றே. ஒருவன் தனது குணத்தை அடையாளம் கண்டு கொள்வதும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதும் சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் வழியாகவே. எனவே ஒருவனது வாழ்வின் புறச்சூழ்நிலைக்கும் அவனது அகத்தின் தன்மைக்கும் ஒரு இணக்கமான தொடர்பு இருப்பதைக் காணலாம்.  இதன் அர்த்தம் ஒருவனது குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையானது அவனது மொத்த குணத்தின் வெளிப்பாடாக இருக்கும் என்பதல்ல.  ஆனால் அந்த குறிப்பிட்ட சூழ்நிலையானது அவனுள் இருக்கும் ஏதோ ஒரு ஆழ்ந்த எண்ணத்தோடு தொடர்புடையாதாக இருக்கும்.  அந்தத் தொடர்பின் நெருக்கம் எத்தகையதெனில் அது அந்தச் சூழ்நிலயில் அவனது வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருக்கும்.

ஒவ்வொறு மனிதனதும் தற்போதைய நிலை என்பது அவனது இருப்பின் நியதிக்கு உட்பட்டதே.  அவனது குணத்தை கட்டமைத்த அவனது எண்ணங்களே அவனை அங்கு கொண்டு வந்திருக்கின்றன.  அவனது வாழ்க்கை அமைப்பிலே தற்செயல் என்பதற்கு இடமேயில்லை.  அனைத்தும் எப்போதும் தவற முடியாத ஒரு நியதிக்கு உட்பட்டதே.  இது தங்கள் சூழ்நிலையோடு இணக்கமின்றி இருப்பவர்களுக்கும் மற்றும்  தங்கள் சூழ்நிலையோடு மனநிறைவோடு ஒத்து இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

இடையறாத தன்மாற்றத்துடன் முற்போக்குப் பாதையில் பயணிக்கின்ற மனிதன், தான் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் தரும் பாடங்களை கற்றுக் கொள்ளும்போது தன்னை மேலும் மேலும் உயர்த்திக் கொள்ள முடியும்.  ஒவ்வொறு சூழ்நிலையும் அதனகத்தே அவனுக்காக வைத்திருக்கும் ஆன்ம பாடத்தை அவன் கற்றுத் தேறும்போது, புதிய சூழ்நிலைகள் புதிய பாடங்களோடு அவனுக்காக காத்திருக்கின்றன.

தான் புறச்சூழ்நிலைகளின் உருவாக்கம்  என்று நம்புகின்ற வரையில் மனிதன் சூழ்நிலைகளின் தாக்கத்திற்கு உட்பட்டே இருப்பான்.  ஆனால் தானே படைக்கும் சக்தி என்று உணருபோது; தானே சூழ்நிலைகள் வளர்கின்ற மறைந்திருக்கும் மண்ணையும் விதைகளையும் ஆள்கின்றவன் என்று உணரும்போது, அவன் தனக்குத் தானே சரியான எஜமானன் ஆகின்றான்.

நீண்ட காலம் சுயக்கட்டுப்பாட்டுடன் தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டும் வரும் ஒவ்வொறு மனிதனாலும் சூழ்நிலைகள் என்பன எண்ணங்களிலிருந்து வளர்வதை நன்கு உணர முடியும்.   ஏனெனில் தனது சூழ்நிலைகளின் மாற்றங்களின் அளவானது அவனது மனதின் மாற்ற அளவுக்கு சரியாக ஒத்திருப்பதை அவன் அறிந்திருப்பான்.  அதேபோல் ஒருவன் மனப்பூர்வமாக முயற்சித்து தனது குணங்களில் உள்ள குறைகளை களையும்போது, அவன் இன்பம் துன்பம் என மாறி மாறி வரும் வாழ்க்கைச் சக்கரத்திலிருந்து விரைவாக வெளியே வருகின்றான்.

ஆன்மா தான் விரும்புகின்ற, பயப்படுகின்ற, இரகசியமாய் காக்கின்ற விடயங்களையே தன்னுள் ஈர்க்கின்றது.  அது தனது உயர்வான விருப்பங்கள் என்னும் உச்சியையும் அடைகின்றது.  கட்டுப்படுத்தப்படாதஆசைகள் என்னும் பாதாளத்தையும் தொடுகின்றது.  சூழ்நிலைகள் மூலமே அது தனக்கு ஒத்தவற்றைப் பெறுகின்றது.

மனதிலே விதைக்கப்பட்ட அல்லது விழ அனுமதிக்கப்பட்ட ஒவ்வொறு எண்ண விதையும் வேரூன்றி தனது விளைச்சளைத் தருகின்றது.  அது இன்றோ நாளையோ செயலாக மலர்ந்து, அதற்கு ஒத்த வாய்ப்புகளையும் சூழ்நிலைகளையும் விளைவாக தருகின்றது.  நல்ல எண்ணங்கள் நல்ல கனிகளையும், தீய எண்ணங்கள் தீய கனிகளையும் தருகின்றன.

சூழ்நிலை எனும் புற உலகம் எண்ணம் எனும் அக உலகத்திற்கு எற்ப தன்னை வடிவமைத்துக் கொள்கின்றது.  இனிமையும் கசப்புமான புறச்சூழ்நிலைகளே ஒருவனின் இறுதியான தகைமையை நோக்கி இட்டுச்செல்லும் காரணிகளாக அமைகின்றன.  தனது விளைச்சலை தானே அறுவடை செய்யும் மனிதன் துன்பத்திலிருந்தும் பேரின்பத்திலிருந்தும் படிப்பினை பெறுகின்றான்.

தன்னை ஆட்கொள்ள அனுமதித்த உள்ளார்ந்த ஆசைகளை, விருப்பங்களை, எண்ணங்களை தொடர்வதன் மூலம் மனிதன் இறுதியாக அவற்றின் விளைவுகளை அவனது வாழ்வின் புறச்சூழ்நிலையில் காண்கின்றான்.

ஒருவன் பிச்சை புகுவதோ சிறைக்கு வந்தடைவதோ சந்தர்ப்பத்தின் அல்லது விதியின் கொடுமையினால் அல்ல. அதற்கு அவன் தேர்ந்தெடுத்த மிகத் தாழ்ந்த எண்ணங்களும் கீழ்த்தரமான ஆசைகளும் மிக்க பாதையே காரணம்.  அதே போன்று தூய்மையான மனம் கொண்ட ஒருவன் திடீரென பாவத்தில் வீழ்வது வெறும் புறக்காரணங்களால் அல்ல.  பாவ எண்ணம் நீண்ட காலமாக அவன் இதயத்தினுள்ளே இரகசியமாக ஊட்டி வளர்க்கப்பட்டிருந்தது.  சரியான வாய்ப்பு அதன் ஒன்றுதிரண்ட சக்தியை வெளிப்படுத்தியது.  சூழ்நிலை ஒருவனை உருவாக்குவது இல்லை.  அது அவனை அவனுக்கு வெளிப்படுத்துகிறது.  கீழ்த்தரமான எண்ணங்களின் இணக்கத்தால் அன்றி வேறு எவ்வழியிலும் தீய செயலோ அதனால் விளையக்கூடிய துன்பங்களோ ஏற்படுவதில்லை.  அதேபோன்று நீண்ட நல்லொழுக்கத்தின் விளைவால் அன்றி வேறு எவ்வழியிலும் நற்பண்புகளும் அதனால் ஏற்படக்கூடிய தூய இன்பமும் கிட்டுவதில்லை.  எனவே எண்ணத்தின் எஜமானனான மனிதன் தன்னை உருவாக்குபவனும் உருமாற்றுவனும், தன் புறச்கூழலின் கர்த்தாவும் ஆகிறான்.  பிறப்பிலேயே ஆன்மா தனது தனித்தன்மையோடு வந்து விடுகிறது.  இந்த பூமியில் அது மேற்கொள்ளும் யாத்திரையின் ஒவ்வொறு அடியிலும் தம்மை வெளிப்படுத்துகின்ற சூழ்நிலைகளை அது தன்னை நோக்கி ஈர்க்கின்றது.  அவை அதன் சொந்த தூய்மையும், அழுக்கையும், பலத்தையும், பலவீனத்தையும் பிரதிபலிக்கின்றன.

மனிதர் தாம் விருப்புவதை தம்மை நோக்கி ஈர்த்துக் கொள்வதில்லை.  அவர்கள் எதுவாக இருக்கிறார்களோ அவற்றையே தம்மை நோக்கி ஈர்த்துக் கொள்கிறார்கள்.  அவர்களின் விருப்பங்களும், கற்பனகளும், இலட்சியங்களும் ஒவ்வொறு அடியிலும் தடைபடுகின்றன.  நல்லதும் தீயதுமான அவர்களின் உள்ளார்ந்த எண்ணங்களும் ஆசைகளும் தமக்குத் தாமே உணவாகி பெருகுகின்றன.  நம்மை உருமாற்றுகின்ற தெய்வீகம் நமக்குள்ளேதான் இருக்கின்றது.  அது வேறு யாருமல்ல.  நாமேதான்.  மனிதன் விலங்கிடப்படுவது அவனாலேயேதான்.  எண்ணமும் செயலும் விதியெனும் சிறையின் காவலர்கள்.  அவை கீழ்த்தரமாக இருக்கும்போது அவர்கள் சிறைப்படுத்துகிறார்கள்.  அவை உயர்வாக இருக்கும்போது அவர்களே நம்மை விடுவிக்கின்ற சுதந்திர தேவதைகளாகவும் இருக்கின்றார்கள்.

மனிதனுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதன்றி, அவன் விரும்புவதும் பிரார்த்திப்பதும் அவனுக்கு கிட்டுவதில்லை.   அவனது விருப்பங்கள் ஈடேறுவதும், பிரார்த்தனைகள் பலிப்பதும் அவை அவனது எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் இசைவாக இருக்கும்போது மட்டுமே.

இந்த உண்மையின் ஒளியில் சூழ்நிலைகளுக்கு எதிராக போரிடுதல் என்பதன் அர்த்தம் என்ன? அதன் அர்த்தம் என்னவெனில் மனிதன் எல்லா நேரங்களிலும் விளைவுக்கான காரணத்தை தன்னுள் போஷித்து காத்துக் கொண்டே, விளைவுக்கு எதிராக தொடர்ந்து போரிடுகிறான்.

அந்தக் காரணமானது அவன் அறிந்த இழிச்செயலாகவும் இருக்கலாம்.  அவனுக்கே தெரியாத பலவீனமாகவும் இருக்கலாம்.  எவ்வாறெனினும் கொண்டவனின் முயற்சிகளை அது விடாப்பிடியாக தடுக்கிறது.  எனவே காரணங்களை களைவது அவசியமாகிறது.

(நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் - 04.11.2018)

கருத்துகள் இல்லை: