திங்கள், 12 நவம்பர், 2018

எண்ணிய வண்ணம் வாழ்வு: பகுதி-2 எண்ணமும் சூழ்நிலைகளும் (தொடர்ச்சி...)

மூலம்:  As a Man Thinketh by James Allen        தமிழில்: சுப்ரமண்ய செல்வா

மனிதர்கள் தங்கள் சூழ்நிலைகளை மேம்படுத்த ஆவல் கொள்கிறார்கள்.  ஆனால் தங்களை மேம்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை.  ஆகவே அவர்கள் தொடர்ந்து கட்டுண்டு  கிடக்கின்றார்கள்.  தன்னைத் தானே சிலுவையிலிட்டு வலி வேதனையோடு தன் குறைகளை போக்குகின்ற மனிதன் தன் இதயத்தின் தேடலை அடையத் தவறுவதில்லை.  இந்த உண்மை மண்ணுலக மட்டுமல்ல விண்ணுலக விடயங்களுக்கும் பொருந்தும்.  வெறும் செல்வம் மட்டுமே சேர்க்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவன் கூட, அதனை அடைவதற்கு மிகப்பெரிய தனிப்பட்ட தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கின்றது. அவ்வாறெனின், அமைதியான வாழ்வை பெறுவதற்கு அவன் எத்துணை தியாகம் செய்ய வேண்டும்?

இதோ ஒரு மிக மிக ஏழ்மையான மனிதன்.   தனது சூழலும் வாழ்க்கைத் தரமும் உயர வேண்டுமென்று மிகவும் ஆவல் கொள்கின்றான்.  ஆனால் எப்பொழுதும் தனது வேலைகளை சரியாக செய்யாமல் தனது எஜமானனை ஏமாற்றுகின்றான்.  தனக்கு கிடைக்கும் ஊதியம் குறைவென்று தனது தவறை நியாயப்படுத்துகின்றான்.  உண்மையான சுபீட்சத்திற்கான அடிப்படை எதுவென்று அவனுக்கு புரியவில்லை.  தனது ஏழ்மையிலிருந்து வெளிவர அவன் அருகதையற்றவன்.  அதுமட்டுமன்றி தனது சோம்பேறித்தனமான, ஏமாற்றுகிற, கோழைத்தனமான எண்ணங்களால், ஏழ்மை என்னும் படுகுழியின் ஆழத்திற்கு அவன் தன்னை இழுத்துச் செல்கின்றான்.

இதோ சாப்பாட்டு பிரியரான ஒரு பணக்காரன்.  கட்டுபாடற்ற உணவு பழக்கத்தின் காரணமாக வலி வேதனைமிக்க நீண்ட நோயுற்றவன்.  அவன் தனது நோயிலிருந்து விடுபட எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் செல்வழிக்கத் தயாராயிருக்கிறான்.  ஆனால் உணவு மீதான தனது அபரிமிதமான ஆசையத் துறக்க தயாராயில்லை.  அவனுக்கு விதம்விதமான சுவையான உணவும் வேண்டும்; அதேவேளை உடலும் நலமாக இருக்க வேண்டும்.  அத்தகையவன் ஆரோக்கியமாக இருக்க அருகதையற்றவன்.  அவன் இன்னும் உண்மையான ஆரோக்கிய வாழ்வின் அரிச்சுவடி அறியாதவன்.

இதோ ஒரு எஜமானன்.  குறுக்கு வழிகளை கையாண்டு குறைந்த சம்பளம் கொடுப்பதன் மூலம் அதிக இலாபம் சம்பாதிக்கிறான்.  அத்தகையவன் உண்மையான சுபீட்சத்திற்கு அருகதையற்றவன்.  ஒரு நாள் தனது பெயரையும், பணத்தையும் இழக்கும்போது, சூழ்நிலைகள் மீது குறை கூறுகின்றான்.  தானே அந்த சூழ்நிலையின் காரணகர்த்தா என்பதை அவன் அறியவில்லை.

மேல் குறிப்பிட்ட மூன்று உதாரணங்களையும் நான் குறிப்பிட்டது, மனிதன், தானே தனது சூழ்நிலைகளின் கர்த்தாவாக (பல நேரங்களில் அவனையறியாமலேயே) இருக்கின்றான் என்பதனை எடுத்துக் காட்டவே.  நல்லதையே அடைய வேண்டும் என்று முயற்சிக்கின்ற மனிதன், அந்த முயற்சிக்குத் தடையாக இருக்கக் கூடிய எண்ணங்களையும் ஆசைகளையும் தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டே இருக்கின்றான்.  இத்தகைய உதாரணங்களை முடிவற்று பெருக்கிக் கொண்டே போகலாம்.  அது அவசியமற்றது.  ஏனெனில் ஒருவர் முயற்சித்தால் தனது மனதின்,  வாழ்வின் சுவட்டிலேயே எண்ணங்கள் என்னும் நியதியின் செயல்பாட்டைக் காணலாம்.  அப்படி அறியும் வரை வெறும் வெளிப்புறத் தோற்றங்கள் மூலம் எட்டப்படுகின்ற முடிவானது விவேகமற்றதாகும்.

ஆனால், சூழ்நிலைகள் மிக குழப்பமானவை.  எண்ணங்கள் ஆழ வேரூன்றியவை.  மகிழ்ச்சி என்பதோ மனிதருக்கு மனிதர் மிக வேறுபடுபவை.  ஆகவே ஒரு மனிதனின் முழுமையான உண்மைத் தன்மையை (அது அவனுக்குத் தெரிந்திருப்பினும்) அவனது வெளிப்புறத் தோற்றத்தின் மூலம் இன்னொருவரால் தீர்மானஞ்செய்ய இயலாது.  ஒருவன் சில வழிகளில் நேர்மையானவனாக இருக்கலாம்.  இருந்தும் ஏழ்மையில் கஷ்டப்படலாம்.  இன்னொருவன் சில வழிகளில் நேர்மையற்றவனாக இருக்கலாம்.  இருந்தும் செல்வந்தனாக இருக்கலாம்.  ஆனால் ஒருவன் தோற்றுப் போவது அவனது குறிப்பிட்ட நேர்மையினால் என்றும், மற்றவன் வளமாய் வாழ்வது அவனது குறிப்பிட்ட நேர்மையற்ற தன்மையினால் என்றும் எட்டப்படுகின்ற முடிவானது வெறும் மேலோட்டமானதாகும்.  இதற்கு காரணம் நேர்மையற்றவன் முற்று முழுதாய் அயோக்கியன்; நேர்மையானவன் முழுமையான உத்தமன் என்கிற அனுமானம் ஆகும்.  ஆழ்ந்த அறிவின் மற்றும் பரந்த அனுபவம் மூலம் அம்முடிவானது தவறு என புலப்படும்.  நேர்மையற்றவனிடம் மற்றவனிடம் இல்லாத சில உன்னத பண்புகள் இருந்திருக்கலாம்.  அதேபோல் நேர்மையானவனிடம் மற்றவனிடம் இல்லாத சில தீய குணங்கள் இருந்திருக்கலாம்.  நேர்மையானவன் தனது நல்ல குணங்களின், செயல்களினால் பெறக்கூடிய நற்பலன்களை அனுபவிப்பது போலவே தனது தீய குணங்களினால் வரக்கூடிய துன்பங்களையும் அனுபவிக்கிறான்.  அதுபோலவே நேர்மையற்றவன் தனது துன்பங்களையும் இன்பங்களையும் சேகரிக்கிறான்.

ஒருவன் நல்லவனாய் இருப்பதால்தான் துன்பங்ளை அனுபக்கிறான் என்று வழமையாக நம்புவது அறியாமையின் வெளிப்பாடே.  தனது மனதிலிருந்து ஒவ்வொறு ஆரோக்கியமற்ற, கசப்பான, தூய்மையற்ற எண்ணத்தையும் நிர்மூலமாக்குகின்ற வரையிலும்; தனது ஆன்மாவிலிருந்து பாவக் களங்கங்கள் அனைத்தையும் கழுவிப் போக்குகின்ற வரையிலும், ஒருவன் தனது துயரங்களுக்கு எல்லாம் காரணம் தனது நல்ல தன்மையே என்று பறைசாற்றக் கூடிய தகுதியைப் பெறுவதில்லை.   அத்தகைய ஒப்புயர்வற்ற முழுமையை நோக்கிப் பயணிக்கின்ற வழியில் - அதனை அடையும் முன்பே - பாரபட்சமற்ற அந்த உன்னத இயற்கை நியதியை அறிந்து கொள்கின்றான்.  அது எப்போதும் நன்மைக்குத் தீமையையும், தீமைக்கு நன்மையையும் விளைவாகக் கொடுப்பதில்லை.  அத்தைகைய மேலான அறிவோடு ஒருவன் தனது கடந்த கால வாழ்க்கையை பின்னோக்கிப் பார்க்கும்போது, அது எப்போதும் சரியான ஒழுங்கமைப்போடு இருந்திருப்பதையும், நல்லதும், தீதுமானது தனது எல்லா கடந்த கால அனுபவங்களும் தனது அகத்தின் சரியான வெளிப்பாடு என்பதனையும் அறிகிறான்.

நல்ல எண்ணங்களும் செயல்களும் எப்போதும் தீய விளைவுகளைத் தருவதில்லை; தீய எண்ணங்களும் செயல்களும் எப்போதும் நல்ல விளைவுகளைத் தருவதில்லை.  சோளத்திலிருந்து சோளத்தைத் தவிர, நெருஞ்சியிலிருந்து நெருஞ்சியைத் தவிர வேறு எதுவும் வருவதில்லை.  மனிதர்கள் புற உலகத்தில் இந்த நியதியை நன்கு புரிந்து கொள்கிறார்கள்.  அதனோடு ஒத்துப் போகிறார்கள்.  புற உலகத்தைப் போன்றே அக உலகத்திலும் (அற உலகத்திலும்) அந்த நியதியின் சீரான ஒழுங்கமைப்பு மாறாதது.  எனினும் வெகு சிலரே அதனை புரிந்து கொள்கிறார்கள்.  பலர் அதனை புரிந்து கொள்ளாததால் அதனுடன் ஒத்துப் போவதில்லை.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (11.11..2018)

கருத்துகள் இல்லை: