திங்கள், 12 ஜூலை, 2021

என்ன செய்யப்போகிறோம்?

'வாழ்க்கை மிகக் குறுகியது - இங்கு சண்டைகளுக்கோ, மன்னிப்புகளுக்கோ, பொறாமைகளுக்கோ, பழிசுமத்தல்களுக்கோ நேரமில்லை.  அன்பு செலுத்தலுக்கு மட்டுமே நேரமிருக்கிறது; அதுவும் ஒரு கணப்பொழுது நேரமே!'      - மார்க் ட்வெய்ன் -

எத்தனை பெரிய உண்மை!

என்று தொடங்கியது இந்தக் காலம்? என்று முடியும்? ஆதியும் அந்தமும் அறியாத இந்த காலத்தின் நிகரற்ற நீட்சியில்  சின்னஞ்சிறு நுண் பொழுதே நம் வாழ்க்கை.  மனித ஆயுள் என்னும் அந்த  நுண் பொழுது நிமிடங்கள்,  மணித்தியாலங்கள், நாட்கள்,  வாரங்கள், மாதங்கள், வருடங்கள் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைந்துவிடுகிறது.  சில தினங்களுக்கு முன் 98 வயதில் ஒரு நடிகர் மறைந்தார்.  சில மாதங்களுக்கு முன் 50 வயதில் வேறொரு நடிகர் மறைந்தார்.  காலத்தின் கணக்கு யாராலும் புரிந்துகொள்ள முடியாது பெரும் புதிர்.

அந்த நுண் பொழுதின் பெரும்பகுதியை எப்படிக் கழிக்கிறோம்?

'அன்பு செலுத்துவதிலா,
வன்மம் வளர்ப்பதிலா?
சண்டை சச்சரவுகளிலா,
சமரச சகவாழ்விலா?
துன்பம் தருவதிலா,
துன்பம் போக்குவதிலா?
அலைகழிக்கும் மனதுடனா,
அமைதியின் அரவணைப்பிலா?'
என்பதில் தங்கியிருக்கிறது எமது இருப்பின் அர்த்தம்.

பாரதி கேட்பதுபோல்,

'தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே'

வீழ்ந்து விடைபெறுவதா நம் வாழ்வின் நோக்கம்? சிந்தித்து விடை காண வேண்டிய கேள்வி.

- சுப்ரமண்ய செல்வா -    #செல்வாசகம் 


அண்மையில் வெளிவந்துள்ள எனது புதிய நூல்கள் கீழ்காணும் இணைப்புகளில் கிடைக்கும்:

அகவரிகள் (பாகம்-1)
வாழ்க்கை திசைகாட்டி

https://notionpress.com/read/agavarigal

எண்ணம் என்ன செய்யும்?
மின்னூல் / eBook

Pustaka Digital Media
https://www.pustaka.co.in/home/ebook/tamil/ennam-enna-seyyum
Amazon India
https://www.amazon.in/dp/B0983KGBYT
Amazon International
https://www.amazon.com/dp/B0983KGBYT
Google Books
https://play.google.com/store/books/details/Subramanya_Selva_Ennam_Enna_Seyyum?id=1Pg1EAAAQBAJ
Scribd
https://www.scribd.com/book/513916259/Ennam-Enna-Seyyum

வியாழன், 1 ஜூலை, 2021

வார்த்தைகள் போதும்

தனது மகனின் அண்மைய சாதனையொன்றை நண்பர் ஒருவர் வாட்ஸ்அப் வழியாக பெருமையுடன் பகிர்ந்திருந்தார்.  முகம் தெரியாத அந்த மகனுக்கு அகம் நிறைந்த வாழ்த்துச் செய்தி ஒன்றை பதிலாக அனுப்பிவிட்டு இந்தப் பதிவை எழுதுகிறேன்.  பதினாறு வார்த்தைகளே கொண்ட அந்த வாழ்த்து நண்பரின் மனதில் எத்துணை மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும், மகனுக்கு எவ்வளவு உற்சாகம் தந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன்.

வார்த்தைகள் வெறும் வார்த்தைகளல்ல!

அவற்றை நாம் இலவசமாகத்தான் கொடுக்கிறோம்.  ஆனால் அவை மற்றவர்களில் ஏற்படுத்தும் மாற்றங்கள் மகத்தானவை.

ஒரு நோயுற்றவரின் வலியை, துயரை  நம்மால் போக்க முடியாது.  ஆனால் ஒரு நலம் விசாரிப்பு மூலம், ஒரு ஆறுதல் வார்த்தை மூலம் அவர்கள் மனதை மயிலிறகு கொண்டு வருடிவிடலாம்.

ஏதாவது ஒன்றை முயற்சி செய்பவருக்கு நமது உற்சாக வார்த்தைகள் மூலம் உந்துதல் அளிக்கலாம்.

ஒன்றை சாதிப்பவரை பாராட்டி வாழ்த்தி பரவசப்படுத்தலாம்.

மறக்காமல் பிறந்தநாள், திருமண நாள் வாழ்த்து சொல்லி அவர்கள் மகிழ்ச்சியில் பங்கேற்கலாம்.

இப்படியாக நமது வார்த்தைகளை கொண்டு மற்றவர்கள் வாழ்க்கையில் மாயம் புரியலாம்.

ஆனால் நாம் தயங்குகிறோம். தவிர்க்கிறோம்.  தள்ளிப் போடுகிறோம். தள்ளிப் போடுவதால் மறந்துவிடுகிறோம்.

வாட்ஸ்அப் நமது வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்ட இந்தக் காலத்தில் நமது வார்த்தைகளை வழங்க தேவையானதெல்லாம் பெரிய மனதும், சிறிய மெனக்கெடலும் மாத்திரமே.

வார்த்தைகள் மூலம் மற்றவர் மனதை மலர்விக்க நம் எல்லோராலும் முடியும் என்பது எத்துணை பெரும்பேறு!

- சுப்ரமண்ய செல்வா -    #செல்வாசகம்


அகவரிகள் (பாகம்-1) வாழ்க்கை திசைகாட்டி அச்செறியுள்ள எனது இரண்டாவது நூல்.

இங்கு கிடைக்கும்  👇👇👇

https://notionpress.com/read/agavarigal

ஞாயிறு, 27 ஜூன், 2021

மன்னிக்கும் மனம்...


மன்னிப்பு கேட்பதன் அவசியம் பற்றி பதிவிட்ட பிறகு மன்னித்தலின் மாண்பு பற்றி குறள் ஒன்று வாசிக்கக் கிடைத்தது ஒரு இனிய நிகழ்வுப் பொருத்தம்.


ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். (குறள்: 156)

கலைஞர் மு.கருணாநிதி உரை:

தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.

மன்னிப்பது இயலாமையின், பலவீனத்தின் அறிகுறியன்று.  அது வீரத்தின் அறிகுறி.  நமது தன்னம்பிக்கையின் வெளிப்பாடு.

மன்னிப்பு கேட்பவரை மன்னித்து விடுவது மனித குணமென்றால், மன்னிப்பு கேட்காதவரையும் மன்னித்து விடுவது மாமனித குணம்.  

மன்னித்து மறந்துவிட்டவர்களின் வாழ்க்கைப் பயணம் சுமைகளற்ற சுகப்பயணமாக இருக்கும்.

எனது கவிதையொன்று:

மன்னித்துவிடு
===============
வெறுக்கப்படுபவரைவிட 
வெறுப்பவர்க்கே 
வேதனை அதிகம்

வெறுப்புச் சுமை சுமந்து
நடக்கும் வாழ்வு கொடிது

சுமையிறக்கிய பறவையாய்
சுதந்திர வானில்
சிறகடித்துப் பறக்க ஆசையா...?

மன்னித்துவிடு.

மன்னிக்காமல்
மறத்தல் அரிது

முகம் பார்த்து மன்னிக்க 
முடியவில்லையா?
அகம் நிறைந்து மன்னித்துவிடு.

தன்னை தான் வெறுத்தலே
தாளாத சுமை
உன்னையும் சேர்த்து
மன்னித்துவிடு.

விதிவிலக்கல்ல நீ
எல்லா இதய வீட்டுக்குள்ளும்
இறுகப் பூட்டிய
இருண்ட அறைகள் உண்டு

இறந்தகாலம்
இறந்த காலம்
மற.

ஏனெனில் இங்கு
கடந்தகாலமற்ற ஞானியுமில்லை
எதிர்காலமற்ற பாவியுமில்லை.

-  சுப்ரமண்ய செல்வா  -

(தொடுதூரத்தில் விடிவானம் கவிதைத் தொகுதி)

இங்கு கிடைக்கும் 👇👇👇

https://notionpress.com/read/agavarigal



வெள்ளி, 25 ஜூன், 2021

மன்னித்துவிடு(ங்கள்)

 


'மன்னித்துவிடு(ங்கள்)'

எத்தனையோ காயங்களை ஆற்றக்கூடிய, பிரிவுகளை மாற்றக்கூடிய,  இடைவெளிகளை நிரப்பக்கூடிய ஒற்றைச் சொல்.  ஆனால் அதனை உச்சரிப்பதில்தான் எத்தனைத் தயக்கம்!  மனம் விரும்பினாலும் அது வாய்மொழியாவதை தன்முனைப்பு தடுத்து நிறுத்தும்.  

யார் முதலில் சொல்வது என்கிற போட்டியில் ஒரே நாளில் தீரக்கூடிய சிறு சச்சரவுகூட வாரக்கணக்கில், மாதக்கணக்கில், சிலவேளைகளில் வருடக்கணக்கில் நீண்டு தீராத பெரும் பகையாய் உருமாறும்.   

மன்னிப்பு கேட்பதன் அர்த்தம் 'நான் பிழை - நீ சரி' என்பதல்ல; 'நான் சிறியவன் - நீ பெரியவன் என்பதல்ல'.  அதன் அர்த்தம் 'நான் என் தன்முனைப்பைவிட (ego) உன் உறவை அதிகம் மதிக்கிறேன்' என்பதாகும்.

பல வேளைகளில் தவறு நமதாக இருந்தாலும் அதை ஒத்துக்கொள்ளும் போது நாம் பிறரிலும் தாழ்ந்து விடுகிறோம் என்கின்ற தவறான எண்ணம் மன்னிப்பு கேட்பதை தடுக்கின்றது.  நாம் எப்போதும் சரியானவர்கள், தவறு செய்யாதவர்கள் என்று நம்பவே நம் மனது விரும்புகிறது.  இந்த மாயையிலிருந்து வெளிவந்து, மனிதத் தவறுகளுக்கு நாமும் விதிவிலக்கல்ல என்பதை உணர்ந்து, நமது தவறுகளுக்கு தைரியமாக, மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்க முடிந்தால் எத்தனையோ இருகப்பூட்டிய மனக்கதவுகள் அகலத் திறந்து உறவுகள் தொடர்கதையாககும்.  

'மன்னித்துவிடு(ங்கள்)'  எனும் ஒரே வார்த்தையில் மறக்கப்படக் கூடிய தவறுகள் எத்தனை?  உலர்ந்துவிட்ட உறவும் நட்பும் மீண்டும் துளிர்க்கும் வாய்ப்புகள் எத்தனை?  தனிமரம் தோப்பாகாது.  ஒவ்வொரு தனிமனித வாழ்வின் உயர்விலும், தாழ்விலும் உறுதுணையாய் இருப்பது உன்னத உறவுகளும், உயர்ந்த சினேகங்களுமே.  

வாழ்க்கையில் வரப்பிரசாதமாய் கிடைத்த உறவுகளும், நட்புகளும் கைநழுவி போய்விடாமல் 'மன்னித்துவிடு(ங்கள்)'  என்ற ஒற்றை வார்த்தை காக்குமென்றால், நமது ஈகோவை விட்டு அதை உச்சரிப்பதில்தான  என்ன தவறு?  விடை காண வேண்டிய வினா.

- சுப்ரமண்யா செல்வா -  #செல்வாசகம்

https://youtu.be/SRITxY-GPMU

செவ்வாய், 22 ஜூன், 2021

கடமையைச் செய்தால் போதுமா?


இன்றைய காலை வாசிப்பில் சிந்திக்கத் தூண்டிய மூன்று வார்த்தைகள்: 

"போருக்காக போர் புரிவாயாக".

(இன்ப துன்ப, இலாப நஷ்ட, வெற்றி தோல்வி, இவற்றைக் கருதாது போருக்காக போர் புரிவாயாக - கீதை  அத்: 2 பதம்: 38). 

இது ஆயுதம் ஏந்தி புரியும் போருக்கு மட்டுமல்ல, நாம் அன்றாடம் செய்யும் எல்லா செயல்களுக்கும் பொருந்தும். பெறுபேறுகள் பற்றிய சிந்தனையும், எதிர்பார்ப்பும் செயல் மீதான கவனத்தை சிதைக்கும். 

ஸ்டீவ் ஜொப்ஸ் கூற்று ஒன்று நினைவுக்கு வருகிறது.

"உங்கள் கவனம் இலாபத்தில் இருந்தால், நீங்கள் தயாரிக்கும் பொருட்களின் தரத்தின் மீதான கவனம் குறையும். மாறாக உங்கள் கவனம் பொருட்களின் தரத்தில் இருந்தால், இலாபம் தானாக வரும்". 

செயல் நேர்த்தியும், செயல் சிறப்பும் தக்க விளைவுகளை தராமல் போகாது. அதற்குத் தேவை செயல்/தொழில் மீதான பேரார்வம், பெருவிருப்பு (passion).

(தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை. செய்கையின் பயனைக் கருதாதே; தொழில் செய்யாமலுமிராதே. கீதை  அத்: 2 பதம்: 47). 

விளைவுகள் மீது அதிக கவனம் வேண்டாம் என்பதற்கு இன்னொரு காரணம் விளைவுகள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதாகும்.  செயல் நமது கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த செயல் விளைவாக மாறுவதற்கு நமது கட்டுப்பாட்டில் இல்லாத இன்னும் பல காரணிகள் ஏதுவாகின்றன. எனவே நமது கட்டுப்பாட்டில் இல்லாத விடயங்களைப்பற்றி கவலை கொள்வதால் காலவிரயம் தவிர வேறொன்றுமில்லை.  

எந்தச் செயல்/தொழில் தொடங்குமுன் தூண்டுதலையும், ஈடுபடும்போது கிளர்ச்சியையும் (excitement) தருகிறதோ அதுவே பெருவிருப்பத்திற்குரியதாகும். பெறுபேறுகள் பற்றிய சிந்தனையின்றி செயல் தரும் இன்பத்திற்காக செயல் புரிவது. உதாரணமாக இந்தப் பதிவை நான் எழுதும்போதே அது எனக்கு கிளர்ச்சிமிக்கதாகவும், நிறைவு தருவதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறன்றி இது பெறப்போகும் விருப்புகளில் (likes) எனது கவனம் இருந்தால் எழுதுவதில் முழுமையான ஈடுபாடு இருக்காது.  

உங்கள் செயல்/தொழில் அத்தகைய மனநிலையை தரவில்லையெனில் அற்புத வரமான உங்கள் வாழ்க்கையை வீணடிக்கிறீர்கள் என அர்த்தம். செயல் சிறக்க இன்னோரு வழி பற்றற்ற மனநிலை.  

விளைவில்தான் பற்று கூடாது என்றால் செயலிலுமா? அதுவும் பெருவிருப்போடு ஈடுபடும் செயலில் எப்படி பற்றற்று இருப்பது?   'பற்றற்ற' என்பதில் கொஞ்சம் ஆன்மிகம் தூக்கல் என்பதால் 'கருவி' (tool) மனநிலை என்று வைத்துக்கொள்ளலாம்.  கருவி மனநிலை என்பது ஒரு செயலை 'நான் செய்கிறேன்' என்றில்லாமல் அச்செயல் 'என் மூலம் செய்யப்படுகிறது' என்பதாகும்.  'நான் செய்கிறேன்' என்கிறபோது ஈகோ உள்ளே நுழைந்து காரியத்தை கெடுத்துவிடுகிறது.  ஆணவம் கலந்த செயல் உண்மையான நிறைவையும், மகிழ்ச்சியையும் தராது.  கருவி மனநிலையில்  ஒரு செயலில்  பெருவிருப்போடு அதேவேளை பற்றற்று ஈடுபடுதல் சாத்தியம்.  தன் ஊடாக வெளிப்படும் இன்னிசைக்கு புல்லாங்குழல் சொந்தம் கொண்டாடுவதில்லை. 

- சுப்ரமண்ய செல்வா -   #செல்வாசகம்

https://youtu.be/orpxSTl9jlg



சனி, 19 ஜூன், 2021

தப்பெண்ணத்தை மாற்றுவது எப்படி ?


அண்மையில் வந்த கேள்வியோன்று:
ஒருவர் என்மீது கொண்டிருக்கும் தப்பெண்ணத்தை எப்படி மாற்றுவது?

பெரும்பாலான உறவுச் சிக்கல்களுக்கு காரணமாய் இருப்பது தவறான புரிதலால் ஏற்படும் தப்பெண்ணம் அல்லது தப்பபிப்பிராயம்.  தவறான புரிதல்களுக்கு காரணம் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளும்போது ஏற்படும் இடைவெளி (Communication Gap).   சொல்பவர் சொல்ல முற்படுவது ஒன்றாகவும், கேட்பவர் புரிந்துகொள்வது வேறொன்றாகவும் இருப்பது. 

பல வேளைகளில் தவறான வார்த்தைகளால் சரியான நோக்கம்கூட சரிந்துவிடுகிறது. சொல்லும் விதம் தவறாகும்போது சொன்னதனைத்தும் கேட்பவரிடம் சென்றடையத் தவறிவிடுகிறது.

கேட்பவரும் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ள முன்முடிவுகளுடன் செவிமடுக்கும்போது, சொல்பவரின் வார்த்தைகளுக்கு புதுப்புது அர்த்தங்கள் புலப்படுவதுண்டு.  எப்போதும் வார்த்தைகள் சொல்பவருடையவை; அர்த்தங்கள் கேட்பவருடையவை.

தீர விசாரிக்காமல் ஏற்றுக்கொள்ளப்படும் மற்றவர்களின் அபிப்பிராயங்களும் தப்பெண்ணங்களை ஏற்படுத்துவதுண்டு.

சரி,  ஏற்பட்டுவிட்ட தப்பெண்ணத்தை மாற்றுவது எப்படி?

இலகுவான வழி சம்பந்தப்பட்டவரிடம் நேரடியாக மனம் திறந்து பேசுவதுதான்.  பெரும்பாலும் நம் முன் எழுந்து நிற்கும்  நமது ஈகோ என்னும் பெருஞ்சுவர் நம்மை அந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க விடாமல் தடுக்கும்.  தைரியத்துடன் அதனைத் தாண்டிவிட்டால் தீர்வு கிட்டிவிடும் வாய்ப்புகள் அதிகம். சம்பந்தப்பட்டவர் நேரடி உரையாடலுக்கு தயாராக இல்லை என்றால், இருவருக்கும் பொதுவான ஒருவரின் உதவியை நாடலாம்.  அப்போதும் அவர் நமது நகர்வுகளை புறந்தள்ளினால் அப்போதைக்கு அந்த முயற்சியை கைவிடுவதே உகந்தது.  ஏனெனில் நம்மைப்பற்றிய தப்பபிப்ராயங்களை தொடர்ந்து வலிந்து சென்று மாற்றுவது கடினம். அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்தும் உண்டு. நமது தவறு என்று அவர்கள் நினைப்பதை நாம் நியாயப்படுத்த முயலுவதாக கருதப்படலாம். ஒரிருமுறை முயற்சி செய்துவிட்டு காலத்திடம் கையளிப்பதே சாலச் சிறந்தது. காலம் எல்லா காயங்களையும் ஆற்றும்; நம்மை புரிந்துகொள்ளும் பக்குவத்தை அவர்களுக்கு கொடுக்கும். நம் நியாயம் புலப்படும் நாளொன்று வரும்.  அதுவரை காத்திருத்தலே புத்திசாலித்தனம்.

- சுப்ரமண்ய செல்வா -   #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

https://youtu.be/orpxSTl9jlg

வெள்ளி, 18 ஜூன், 2021

அச்சுகள் ஆயிரம்

கைதேர்ந்த அச்சு வார்ப்பவர்கள் நாம். பெற்றோர், பிள்ளைகள், உறவுகள் நண்பர்கள், சக பணியாளர்கள் என நம்மிடம் உறவு கொள்ளும் அனைவருக்கும் விதவிதமான அச்சுகளை  உருவாக்கி வைத்திருக்கிறோம்.  அவர்கள் அனைவரும் நாம் வார்த்து வைத்துள்ள அச்சுகளில் துல்லியமாக பொருந்த வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.  அப்படி நடக்காத பட்சத்தில் ஏமாற்றம் அடைகிறோம்.  இந்தப் புள்ளியில் ஆரம்பமாகின்றன எல்லா உறவுச் சிக்கல்களும்.  

பிறரின் அச்சுகளில் நாம் பொருந்துகின்றோமா என்கின்ற கேள்வியின் பதிலில் எமது எதிர்பார்ப்புகள் எவ்வளவு அர்த்தமற்றவை என்கின்ற உண்மை புரியும்.  

எண்ணூறு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கும் உலக மக்கள் தொகையில் உருவத்தால் ஒருவர் மற்றொருவரை போல் இல்லாத பொழுது உள்ளத்தால் ஒருவரைப் போல் இன்னொருவர் இருப்பது எப்படி சாத்தியம்?   ஒருவருடைய எண்ணம், சொல், செயல் என்பன அவருடைய பிறப்பு, வளர்ப்பு, கல்வி, வாழ்க்கை அனுபவம் என பலவித கலவைகளின் வெளிப்பாடு.  உடன்பிறந்த இரட்டையர்களுக்கு கூட அவை  ஒன்றுபோல் இருப்பதில்லை.  இந்த உண்மையின் வெளிச்சம் எம்முள் படர்ந்தால் நமது எதிர்பார்ப்பு இருள் அகலும்.

நமது அச்சுகளையும் அவை உருவாக்கும் எதிர்பார்ப்புகளையும் ஆழப் புதைத்துவிட்டு, மனிதர்களை அவர்களுடைய இயல்பான பலங்களுடன்,  பலவீனங்களுடன் நிபந்தனையற்று ஏற்றுக்கொள்ள முடிந்தால் எல்லா உறவுத் தொடர்புகளும் அர்த்தமிக்கதாய், நிறைவானதாய் இருக்கும்.

- சுப்ரமண்ய செல்வா -   #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

https://youtu.be/d6dBNwkekaU

புதன், 16 ஜூன், 2021

தொடக்கச் சிக்கல்

நனவாகக் கூடிய எத்தனையோ கனவுகள் நனவாகாமல், அடையக்கூடிய எத்தனையோ வெற்றிகள் அடையப்படாமல், புரியக்கூடிய எத்தனையோ சாதனைகள் நிகழாமல் இருப்பதற்கு காரணம் தொடக்கச் சிக்கல் (starting trouble). 

நம்மால் ஒன்றை சாதிக்க முடியும் என்று நன்கு தெரிந்திருந்தும்  எல்லாம் சரியாக அமையட்டும் என்று காத்திருக்கிறோம்.   தயக்கம் காரணமாக தள்ளிப்- போடுகிறோம்;  அல்லது காரணம் எதுவுமின்றி காலந்தாழ்த்துகிறோம்.

இது சிறிய செயல்களிலிருந்து பெரும் சாதனைகள் வரை அனைத்துக்கும் பொருந்தும்.  உண்மையில் கச்சிதமான தொடக்கம் கச்சிதமான முடிவு என்று எதுவுமில்லை. ஆயிரம் மைல் பயணம் ஒற்றைக்  காலடியில் தொடங்குகிறது.  பயணத்தில் வரக்கூடிய தடங்கல்களை,  சவால்களைப் பற்றி எண்ணிக்-கொண்டிருந்தால் எப்போது பயணத்தை ஆரம்பிப்பது?

நம்மால் காற்றின் திசையை கட்டுப்படுத்த முடியாது.  ஆனால் நமது கப்பலின் பாயை மாற்றிக் கட்டி இலக்கை அடைய முடியும்.

'எண்ணித் துணிதல்' நன்றுதான். ஆனால் எவ்வளவு காலம்தான் எண்ணிக்கொண்டே இருப்பது?  ஏதாவது ஒரு புள்ளியில் தொடக்கம், இடையிடையே சின்னச்சின்ன திருத்தங்கள், மேம்படுத்தல்கள் - இவையே வெற்றிப்பயணத்திற்கான விதிமுறைகள்.

தொடக்கமும், முடிவும் போலவே பயணமும் முக்கியம்.  சென்றடையும் இலக்கைப் போலவே இலக்கை நோக்கிச் செல்லும் வழியில் கிடைக்கும் அனுபவங்களும் பெறுமதியானவை.  

சிலவேளைகளில் சேருமிடத்தை  சென்றடைய  சிறுது நேரம் ஆகலாம்.  ஆனால் அனுபவித்து பயணித்தால் பயணக்களைப்பின்றி இலக்கை அடையலாம்.

- சுப்ரமண்ய செல்வா -    #செல்வாசகம்

Latest YouTube Video

https://youtu.be/d6dBNwkekaU


திங்கள், 14 ஜூன், 2021

வரங்களின் வரிசை

அபரிமித மனநிலை (abundance mentality)  வாழ்க்கையை அழகுமிக்கதாக மாற்றுகிறது.  குறை மனநிலை அல்லது பற்றாக்குறை மனநிலை (lack/scarcity  mentality) வாழ்க்கையை வரட்சிமிக்கதாக  வடிவமைக்கிறது.

இது ஈர்ப்பு விதி. 

எமது எண்ணங்களுக்கு ஏற்ற சூழ்நிலைகளை நாம் உருவாக்குகிறோம்.

எப்போதும் எம்மிடம் இல்லாதவற்றை பற்றியே எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது இல்லாமையை எம்மை நோக்கி ஈர்த்துக்கொள்கிறோம். 

எமது பிரார்த்தனைகளில் கூட எது எம்மிடம் இல்லையோ அவையே முன்னிலைப்-படுத்தப்படுகின்றன.  எனவே தொடர்ந்தும் அவை எமக்கு எட்டாக்கனிகளாகவே இருக்கின்றன.

அபரிமித மனநிலை நமது மனதில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்துகிறது.  நமது தேவைகள் நம்மை அறியாமல் மெல்ல மெல்ல பூர்த்தி செய்யப்படுகின்றன.

அந்த அபரிமிதமான மன நிலையை அடைவது எப்படி?

நம்மிடம் இல்லாதவற்றைப்  பற்றி மறந்துவிட்டு இருப்பவைகளுக்கு     மனதார நன்றி சொல்ல தொடங்குவது முதல் படி.  காலை கண்விழித்ததும்,  இரவு உறங்கச் செல்லும் முன்பும் ஒரு சில நிமிடங்கள் அதனை ஒரு பிரார்த்தனையாக செய்தால் இன்னும் சிறப்பு.

நேற்று உயிருடன் இருந்தவர் இன்று இல்லை.  குறிப்பாக இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் அது இயல்பான ஒன்றாக ஆகிவிட்டது.  நேற்றிறவு உறங்கச் சென்ற  பல்லாயிரம் பேர் இன்று கண்விழிக்கவில்லை.   அவர்களில் ஒருவராக நாம் இல்லை என்பது முதல் வரம்.  நோயற்ற உடல், உயிர்வாழ அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறையுள், அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள், உணர்வுத் தேவைகளான அன்பு, அமைதி, இன்பம் போன்றவற்றை பூர்த்தி செய்யும் பெற்றோர், உடன் பிறப்புகள், உறவுகள், வாழ்க்கைத்-துணை, பிள்ளைகள், நண்பர்கள் என  இயற்கை நமக்கு வாரி வழங்கியிருக்கும் வரங்களை வரிசைப்படுத்தத் தொடங்கினால் அந்தப் பட்டியல் முடிவற்று நீளும்.  அது ஏற்படுத்தும் நன்றிப் பெருக்கில் அபரிமித மனநிலை சாத்தியமாகும். 

நமக்கு கீழே உள்ளவர் கோடி என்கிற உண்மை புலப்படும்.  நிறை மனம் வாய்க்கும்.

ஒரு ஆங்கில கிறிஸ்தவப் பாடலின் தமிழாக்கம்:

உங்கள் வரங்களை கணக்கிடுங்கள் - அவை
ஒவ்வொன்றையும் உரத்துச் சொல்லுங்கள்...

- சுப்ரமண்ய செல்வா -    #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

YouTube: https://youtube.com/c/SubramanyaSelva

வெள்ளி, 11 ஜூன், 2021

மனதின் பரிணாமம்

டார்வின்னின் பரிணாமக் கோட்பாடு மனிதத் தோற்றத்துடன் நிறைவுபெற்றுவிட்டது என்றே தோன்றுகிறது.  இதற்கு அப்பால் தோற்ற வேறுப்பாட்டுடன் அதிசிறந்த மனிதன் (super human) பரிணாமம் பெறும் வாய்ப்பு  மிகவும் குறைவு. இப்போது நடைபெற்றுக்- கொண்டிருப்பது அறிவின் பரிணாமம். இருபது வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட இன்றைய பத்து வயது சிறுவர்கள் அதிபுத்திசாலிகளாக இருக்கிறார்கள்.  சின்னஞ்சிறுசுகள் கைபேசிகளை அனாயசமாக கையாளும் விதம் இதற்கு ஒரு சான்று.

இதைப்போல் மனதின் பரிணாமம் மிகுந்திடின் மனிதகுலம் மேன்மையுறும். எல்லோரும் இன்புற்றிருத்தல் சாத்தியமாகும். அது என்ன மனதின் பரிணாமம்? உடலளவில் மனிதன் மாறியிருப்பினும், குணத்தளவில்  விலங்கினப் பதிவிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை. சீறும் பாம்பும், தந்திர நரியும், நிறம் மாறும் பச்சோந்தியும், குரூர கொடுமிருகங்களும் அவ்வப்போது தலைக்காட்டி தம் இருப்பை  பறைச்சாற்றிச் செல்கின்றன. இந்த விலங்கினப் பதிவுகளின் நிரந்தர வெளியேற்றமே மனதின் பரிணாமம்.

'மனிதன் என்பதன் பொருள்  மனது இதமானவன்' என்கிறார் வேதாத்திரி மகரிஷி. இதமான மனதிற்கு உரித்தாதல் மனதின் பரிணாமம்.

அன்பும் கருணையுமே இதமான மனதின் அடையாளங்கள்.  பிறருக்கு துன்பம் தராது இருத்தல் அன்பு.  எம்மால் இயன்ற அளவில் பிறர் துன்பம் போக்குதல் கருணை.  எல்லா மதங்களின் சாராம்சமும் இதுவே.

- சுப்ரமண்ய செல்வா -   #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

YouTube: https://youtube.com/c/SubramanyaSelva

செவ்வாய், 8 ஜூன், 2021

தீதற்ற செல்வம்

பணம் படைத்தவர்கள் அனைவரும் செல்வந்தர்கள் அல்லர்.  என்ன வியப்பாக இருக்கிறதா? பணம் அதிகமிக்கவர் பணக்காரர்.  செல்வம் அதிகமிக்கவர் செல்வந்தர்.  தாள்கள், நாணயங்கள், சொத்துகள் என எண்ணிக்கைக்குள் அடங்குவது பணம். 

எனின், எது செல்வம்? 

வங்கிகளில் இருக்கும் கோடிகளா? வாழும் மாடிவீடுகளா? வரிசைகட்டும் வாகனங்களா?  ஆடம்பர ஆபரணங்களா? 

அண்மையில் ஒரு கானொளி பார்த்து கண்கலங்கினேன்.  சொற்பமாய் சம்பாதிக்கும் ஒரு எளிய மனிதர் தனது ஒய்வு நேரத்தில் கழிவறைகளை கழுவி சம்பாத்தித்த பணத்தில் கடந்த 15 வருடங்களில் 1200 மாணவர்களின் கல்விக்கு உதவியிருக்கிறார்.  இவரை எந்த வகையில் சேர்ப்பது?

'அன்னயாவினும் புண்ணியம் கோடி  ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'

எனும் பாரதியின் அறிவுரையை  நடைமுறைப்படுத்திய, ஈகை மனம் என்னும் பெருஞ்செல்வம் படைத்த இந்த மாமனிதரும்  உண்மையில் செல்வந்தர் அல்லவா? 

பதினாறு செல்வங்களில் ஒன்று மட்டுமே பணத்தோடு பொறுந்தக்கூடியது; அதுவும் 'தீதற்ற செல்வம்'. மற்ற பதினைந்து செல்வங்கள் உடையோரும் செல்வந்தர்களே.  முக்கியமானது 'அழியாப் புகழ்'.  ஈகைச்செல்வம் மிக்கோரே அழியாப் புகழ் பெறுவர்.

பணத்தைக்கொண்டு செய்யும் தர்மங்கள் மட்டுமே ஈகையாகாது.  தனக்கு வாய்த்த அறிவைக்கொண்டு, உடல் உழைப்பு மூலம், தனது நேரத்தை செலவழித்து என ஒருவரால் இயன்ற வகையில் சக மனிதரை கைதூக்கி விட, மேம்படுத்த செய்யும் செயல்கள் அனைத்துமே ஈகை என்றே கொள்ளலாம்.  

ஆக செல்வந்தராக இருக்க பணம் படைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை அல்லவா! 

- சுப்ரமண்ய செல்வா - #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

YouTube: https://youtube.com/c/SubramanyaSelva


திங்கள், 7 ஜூன், 2021

வையம் வசமாகும்

ஒரு நேசப் பார்வை
ஒரு சினேகப் புன்னகை
ஒரு அன்புச் சொல்
ஒரு ஆறுதல் அரவணைப்பு...
ஒரு சிறு கல் வீழ்ந்த குளத்தின்
வட்டச் சிற்றலையாய்
விரிந்து விரிந்து
வையத்தை வசப்படுத்தும்
- சுப்ரமண்ய செல்வா -   #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

YouTube: https://youtube.com/c/SubramanyaSelva


திங்கள், 31 மே, 2021

எண்ணிய எண்ணியாங்கு

சிகரங்களை தொட்டவர்களென நாம் சிரம் உயர்த்தி பார்ப்பவர்களில் பெரும்பாலோர் சிறிய தொடக்கம் கொண்டவர்கள் என்கிற உண்மை நமக்கான நம்பிக்கை. ஆப்ரகாம் லிங்கனிலிருந்து அப்துல் கலாம் ஈறாக உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.  'ஒரு சிலரால்  மகத்தான வெற்றிகளை அடைய முடிகிறது என்பதே மற்றவர்களாலும் அது சாத்தியம் என்பதற்கு சான்று' என்கிறார் ஆப்ரகாம் லிங்கன். இலங்கைத் தெருக்களில் நான் வாகனம் ஓட்டத் தொடங்கியதில் ஒரு சுவாரசியப் பின்னணி உண்டு.  1995ம் வருடம். பத்தாண்டு கால வெளிநாட்டு வாசத்திற்குப் பின் நாடு திரும்பியிருந்தேன். நான் வண்டி ஓட்டத் தொடங்கியதே  சீராக கட்டமைக்கப்பட்டிருந்த நான் பணிபுரிந்த அந்த நாட்டின் பெரும்பாதைகளில்.  இலங்கைப் பாதைகளைப் பார்த்து திகைத்து நின்றேன்.  சிறிய இருவழிப் பாதைகளில் விரையும் சிறிதும் பெரிதுமான வாகனங்கள், முச்சக்கர, இருச்சக்கர வண்டிகள், மிதி வண்டிகள், மாட்டு வண்டிகள், நினைத்த இடத்தில் பாதையின் குறுக்கேச் செல்லும் மனிதர்கள் என பெருங்குழப்பமாய் தெரிந்தன நம் வீதிகள். சில நாட்கள் கவனித்துப் பார்த்தபோது நிறைய பெண்கள் எவ்வித தயக்கமுமின்றி லாவகமாய் வண்டி ஓட்டிச் செல்வதை கண்டேன். கொஞ்சம் தைரியம் வந்தது.  இவர்களே ஓட்டும்போது நம்மால் ஏன் முடியாது என்கிற எண்ணம் தோன்றிற்று. ('இவர்களே'வில் தொனிக்கும் அன்றைய ஆண் திமிர் மனநிலையை மறைக்க விரும்பவில்லை.  முதிர்ச்சிப் பாதையில் வெகு தூரம் பயணித்தாயிற்று).   மனதை தைரியப்படுத்திக்கொண்டு ஓட்டத் தொடங்கினேன்.   ஓரிரு நாள் பதற்றத்திற்குப் பின் சகலமும் சரியாயிற்று.  

தினமும் காலை நடைப்பயிற்சியில் பல முதியவர்களைப் பார்க்கிறேன்.  தவறாது தினமும் வந்துவிடுகிறார்கள்.  சோம்பல் தரும் சுகத்தில் இன்று நடைப்பயிற்சியை தவிர்த்துவிடுவோமா என தடுமாறும் தருணங்களில் அவர்களின் நினைப்பே எனக்கும் உந்துசக்தி.   நம்மாலும் முடியும் என்கிற நம்பிக்கையில் பயணத்தின் பாதி தூரத்தை கடந்துவிடலாம்.  நமக்கு ஆதர்சமாகவும், உந்துசக்தியாகவும் பலர் இருக்கிறார்கள்.  தேடல் நிறைந்த கண்களுக்கு அவர்கள் புலப்படுகிறார்கள்.

-சுப்ரமண்ய செல்வா -    #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

YouTube: https://youtube.com/c/SubramanyaSelva


வெள்ளி, 28 மே, 2021

ஒரு பாறையின் கதை

 


பெருங்கற்கள் பல இருந்த ஓரிடத்தில் ஒரு பாறை மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. உளிகளும், சுத்தியல்களும் கொண்டு-வரப்பட்டன. சிற்பி தன் வேலையத் தொடங்கினார். பாறை அடிவாங்கத் தொடங்கியது. அதன் மேனியெங்கும் உளியின் கோரத்தாண்டவம். அதன் பல பகுதிகள் உடைபட்டு விலகிப்போயின. சுற்றியிருந்த மற்ற பாறைகளில் சில வெறுமனே வேடிக்கை பார்த்தன. சில தாங்கள் தப்பித்துவிட்டோமென அக-மகிழ்ந்தன. சில ஏளனப் பார்வை வீசின. சில அதன் வலி, வேதனை கண்டு உள்ளூர மகிழ்ந்தன. சில பரிதாபப்பட்டன. சில பரிதாபப்படுவதுபோல் பகல்வேஷம் போட்டன. நாட்கள் உருண்டோடின. சிதைக்கப்பட்ட பாறை அழகிய சிலையாய் உருவெடுத்தது. கோயிலின் கருவறையில் குடியேறியது. எல்லோரும் கைக்கூப்பி வணங்கும் கடவுளானது. எல்லா பாறைகளுக்கும் சிலையாகும் பேறு கிட்டுவதில்லை.  சிலையான பின்பு அவற்றை உளிகளும், சுத்தியல்களும் நெருங்குவதில்லை.   

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் தடைகளால்,  பிரச்சினைகளால்,  போராட்-டங்களால் நாம் உன்னத உயர்வுக்கு தயார்படுத்தப்படுகின்றோம்.  அவை நாமே அறியாத நமது ஆற்றல்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறன.  அவற்றின் நோக்கம் நம்மை உருக்குலைத்தல் அல்ல உருமாற்றுதல்.  பழைய இரும்பை உருக்குவது புதிய உரு கொடுப்பதற்காக. அசுத்தம் அகன்றபின் தங்கம் மேலும் புடம்போடப்படுவதில்லை.  பல்லாயிரம் ஆண்டுகளின் அழுத்தத்தினாலேயே சாதாரணக் கல்லும் வைரக்கல்லாய் வடிவெடுக்கிறது. நீண்ட தேடுதலுக்கும், தோண்டுதலுக்கும் பின்னேயே தங்கமும், வைரமும் தட்டுப்படுகின்றன. துன்பத்தின் படிப்பினையை கற்றாருக்கு துன்பத்திற்கே துன்பம் கொடுத்திடும் துணிவு பிறந்திடும். 

- சுப்ரமண்ய செல்வா -   #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

YouTube: https://youtube.com/c/SubramanyaSelva


புதன், 26 மே, 2021

கசடறுக்கும் கல்வி


கசடு அறக் கற்கச் சொல்கிறார் வள்ளுவர்.  எது கசடு? எத்தனையோ உண்டு.  அதில் தனது நலம் பற்றி மட்டுமே சிந்திப்பதும் செயல்புரிவதுமே பெரும் கசடு. வணிகமாகிவிட்ட இன்றைய கல்வி அதை ஊக்குவிப்பதில் ஆச்சரியமில்லை.  கற்றுத் தேர்ந்து தொழில் செய்து பணம் சம்பாதிபதையே நோக்கமாகக் கொண்ட இன்றைய கல்வியில் மனித வாழ்க்கை விழுமியங்கள் ஒரு விடுபட்ட  பாடம் ஆகிவிட்டது.  ஆரம்பப் பள்ளி ஓட்டப்பந்தயத்தில் எப்படியாவது முதல் இடத்தை பிடித்து விட வேண்டும் என்று அந்த சின்னஞ்சிறு கால்களுக்கு கற்றுத் தருகிறோம்.   வளர்ந்ததும் அது வாழ்க்கைப் பந்தயத்தில் 'எப்படியாவது'   முதலிடம்  பிடிக்க  ஓடுகிறது.  சக போட்டியாளரை இடறி விழச் செய்வது கூட தவறு இல்லை என்று எண்ணுகிறது.  

சிறுவர்கள் மனவியலாளர் Dr. Haim Ginott தனது Teacher and Child என்ற நூலில் ஹிட்லரின் நாஜி வதை முகாமிலிருந்து உயிர்பிழைத்த ஒரு பள்ளி அதிபர் கல்வியாளர்களுக்கு எழுதிய இந்தக் கடிதம் உள்ளது. 

**********************"

அன்புள்ள ஆசிரியர்களுக்கு, நான் நாஜி சித்திரவதை முகாமிலிருந்து உயிர்பிழைத்தவன்.  வேறு எவரும் காணக்கூடாத காட்சிகளை எனது கண்கள் அங்கு கண்டன.  படித்த பொறியியலாளர்களால் கட்டப்பட்ட நச்சு வாயு அறைகள்; படித்த மருத்துவர்களால் நஞ்சூட்டப்பட்ட சிறுவர்கள்; தாதிகளால் கொல்லப்பட்ட சிசுக்கள்; பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கல்வி கற்ற ஆயுதப்படையினரால் கொல்லப்பட்ட பெண்களும், குழந்தைகளும்.... 

எனவே நான் கல்வியின் மீது மிகுந்த சந்தேகம் கொள்கிறேன்.

எனவே ஆசிரியர்களே! எனது வேண்டுதல் என்னவெனில் உங்கள் மாணவர்கள் நல்ல மனிதர்களாக உருவாக உதவுங்கள்.  உங்கள் உழைப்பு மெத்தப் படித்த அரக்கர்களையும், திறமையான உளநோயாளர்களையும் உருவாக்கக் கூடாது.  எழுத்தும், வாசிப்பும், கணிதமும், சரித்திரமும் மாணவர்களை நல்ல மனிதர்களாக ஆக்கினால் மட்டுமே பயன் மிகுந்ததாக இருக்கும்.

**********************

இந்தக் கடமை ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் உண்டு.   இல்லம்தானே முதல் பள்ளி!

- சுப்ரமண்ய செல்வா -  #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

YouTube: https://youtube.com/c/SubramanyaSelva

செவ்வாய், 25 மே, 2021

இறக்கி வைக்கலாம் இந்தச் சுமையை

ஒரு கதை :

ஒரு நாள் ஒரு ஆரம்ப பள்ளியின் ஆசிரியை தனது மாணவர்களை ஒரு புதிய விளையாட்டுக்கு அழைத்தார்.  ஆவலுடன் வந்த மாணவர்களிடம் சொன்னார்  "நீங்கள் ஒவ்வொருவரும் நாளை வகுப்புக்கு வரும்போது ஒரு  பையில் சில உருளைக்கிழங்குகளை போட்டு கொண்டு வர வேண்டும். ஒவ்வொறு உருளைக்கிழங்கிற்கும் நீங்கள் யார் யாரை வெறுக்கிறீர்களோ அவர்களின் பெயரை இட வேண்டும்."  அடுத்த நாள் எல்லா மாணவரின் கைகளிலும் ஒன்று இரண்டு ஐந்து என பலவித எண்ணிக்கைகளில் உருளைக்கிழங்குகள் அடங்கிய பைகள்.  ஆசிரியை சொன்னார் "ரொம்ப நல்லது.. இனி என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இந்தப் பையை இன்னும் இரண்டு வாரத்திற்கு நீங்கள் எங்கு சென்றாலும் எடுத்துச் செல்ல வேண்டும் (கழிவறை உட்பட)."

ஆசிரியையின் கட்டளையை மாணவர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள்.  நாட்கள் நகர்ந்தன.  உருளைக்கிழங்குகள் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டு துர்மணம் வீசத்தொடங்கின. அதிக உருளைக்கிழங்குகள் வைத்திருந்தவர்கள் அதிக பாரத்தை சுமந்து கஷ்டப்பட்டார்கள்.

ஒருவாறு இரண்டு வாரங்கள் கழிந்தன.  நிம்மதிப் பெருமூச்சோடு வகுப்புக்கு வந்த மாணவர்களிடம் ஆசிரியை அவர்களது அனுபவங்களை கேட்டார்.  எல்லோரும் ஒரே நேரத்தில் பேசத் தொடங்கினார்கள்.  ஒவ்வொருவரும் அழுகிய உருளைக்கிழங்குகள் எவ்வளவு துர்மணம் என்றும் பாரம் சுமப்பது எவ்வளவு கடினமென்றும் புலம்பினார்கள்.

அவர்களை அமைதிப்படுத்திய ஆசிரியை கேட்டார் "துர்மணம் வீசும் உருளைக்கிழங்குகளை இரண்டு வாரம் சுமக்க முடியாத நீங்கள், வெறுப்பு என்கிற துர்மணத்தை, பாரத்தை வாழ்க்கை முழுவதும் உங்கள் இதயங்களில் எப்படி சுமக்கப் போகிறீர்கள்?"

சிறுவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் சிந்திக்கத் தூண்டும் கதை இது.

நாம் வெறுப்பவர்களைப் பற்றி நினைக்கும் போதே  நம்மையறியாமல் நம் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது.  இரத்த அழுத்தம் கூடுகிறது.  மூளை சிந்திக்கும் திறனை இழக்கிறது.  நம் வெறுப்பு நம்மால் வெறுக்கப்படுபவர்களை பாதிக்கின்றதோ இல்லையோ, நம் மனதையும் உடலையும் நிச்சயமாக பாதிக்கின்றது.

உண்மைதான், வெறுப்பு என்பது ஒரு துர்மணம் வீசும் பெருஞ்சுமை.  எத்தனை காலத்துக்குத்தான் அதை மூச்சு முட்ட சுமப்பது?  இறக்கி வைத்து விட்டு கொஞ்சம் சுகமாக சுவாசிக்கலாமா?

- சுப்ரமண்ய செல்வா -     #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

YouTube: https://youtube.com/c/SubramanyaSelva


ஞாயிறு, 23 மே, 2021

ஒரு பிரார்த்தனை

அன்பும் கருணையுமே அனைத்து மதங்களின் சாரம். பிறருக்கு துன்பம் தராதிருத்தல் அன்பு. பிறர் துன்பம் போக்குதல் கருணை.  

இது புனித பிரான்சிஸ் அவர்களின் பிரார்த்தனை என்று இணையத்தில் வாசித்தது.  ஆனால் அது அவருடையது என்பதற்கு எவ்வித சான்றும் இல்லை என்கிற கருத்தும் நிலவுகிறது.  அது எதுவாக இருந்தால் என்ன, மனதை இதமாக்குகிற எந்த பிரார்த்தனையும் எல்லோருக்குமானதே.

************************

இறைவா... நினது சமாதானத்தின் கருவியாக எனை ஆக்குவாயாக. 
எங்கு வெறுப்பு நிறைந்திருக்கிறதோ, 
அங்கு நான் அன்பை விதைப்பேனாக. 
எங்கு காயம் நிறைந்திருக்கிறதோ, 
அங்கு நான் மன்னிப்பை விதைப்பேனாக. 
எங்கு முரண்பாடு நிறைந்திருக்கிறதோ, 
அங்கு ஐக்கியத்தை விதைப்பேனாக. 
எங்கு ஐயம் நிறைந்திருக்கிறதோ, 
அங்கு நான் உறுதியை விதைப்பேனாக. 
எங்கு விரக்தி நிறந்திருக்கிறாதோ, 
அங்கு நான் நம்பிக்கையை விதைப்பேனாக. 
எங்கு இருள் நிறைந்திருக்கிறதோ, 
அங்கு நான் ஒளியை விதைப்பேனாக. 
எங்கு துயரம் நிறைந்திருக்கிறதோ, 
அங்கு நான் மகிழ்ச்சியை விதைப்பேனாக.

தெய்வீகத் தந்தையே, 
ஆறுதல் அளிப்பது போல் ஆறுதல் பெறவும் 
புரிந்துகொள்வது போல் புரிந்துகொள்ளப்படவும் 
அன்பு செய்வது போல்  அன்பு செய்யப்படவும் 
எனக்கருள்வாய். 
ஏனெனில் 
கொடுப்பதனாலேயே பெறுகிறோம். 
மன்னிப்பதனாலேயே மன்னிக்கப்படுகிறோம். 
'நான்' என்கிற அந்த சிறுமையின் மரணத்திலேயே 
அழிவற்ற நிரந்தர வாழ்வில் பிறக்கிறோம்.

************************

புனித. ஃபிரான்சிஸ் அவர்களின் பிரார்த்தனை
தமிழாக்கம்: சுப்ரமண்ய செல்வா   

சனி, 22 மே, 2021

யார் நமது முன்னேற்றத்தின் எதிரிகள்?

பிறர் அடையும் வெற்றிகளை, முன்னேற்றங்களை நம்மால் ஏன் அடைய முடியாமல் இருக்கிறது?  பிற மனிதர்களை,  சூழ்நிலைகளை சுட்டிக்காட்ட சுற்றுமுற்றும் பார்க்கிறோம். எப்போதும் தமது நிறைகளுக்கு தாமே காரணம் என்று இருமாப்பு கொள்வதும், குறைகளுக்கு புறக் காரணங்களைத் தேடுவதும் மனித இயல்பு.  பிறந்து வளர்ந்த சூழ்நிலை, ஏழ்மை, கல்வி எமக்கு உதவ, உயர்த்திவிட எவருமில்லை என எண்ணற்ற காரணங்கள்.  ஆனால் நம்மிலும்  குறைந்த  வசதி படைத்தவர்கள், கல்வி கற்றவர்கள், ஏன் உடற்குறை உள்ளவர்கள் கூட  எப்படி வாழ்க்கையில் வெற்றியாளர்களாக வீறுநடை போடுகிறார்கள்?

எனின்  யார் நமது முன்னேற்றத்தின் எதிரிகள்? உண்மையில் நாமே நம் முன்னேற்றத்தின் எதிரிகள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். நம்மைச்சுற்றி நாமே கட்டியெழுப்பியிருக்கும் சௌகரிய வலயத்தின் (comfort zone)  சிறைக்கைதிகள் நாம். அந்தச் சிறை பூட்டப்பட்டிருப்பது உட்புறம். சாவிகளும் நம்மிடமே உண்டு. ஆயினும் திறந்து வெளிவரத் தயக்கம்.  அந்த வலயத்திற்கு வெளியே வாய்ப்புகள் வரிசைக்கட்டி நிற்கின்றன. ஆயினும் நாம் அசௌகரியங்களுக்கு அஞ்சி, இடர்களுக்கு முகங்கொடுக்கும் தைரியமற்று, உள்ளதே போதுமென்று நமக்கு நாமே எல்லை வகுத்துக்கொள்கிறோம்.  வாழ்க்கை தொடங்குவது உங்கள் சௌகரிய வலயத்தின் முடிவில் (Life begins at the end of your comfort zone - Neale Donald Walsch).வெற்றிபெற்ற மனிதரெல்லாம் அந்த வலயத்தை விட்டு வெளியே வந்தவர்கள் என்பது எமக்கான பாடம்.

அடுத்தது மாற்றத்துக்கு முகம்கொடுக்க முடியாத, மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலை.  அதனால்   செய்ததையே திரும்பத் திரும்ப செய்துகொண்டு மாறுபட்ட பலனை எதிர்பார்க்கிறோம்.  ("Insanity is doing the same thing over and over again, but expecting different results." - Albert Einstein).

எப்போதும் எதிரி யாரென்று தெரிந்துகொண்டால் போரை வெல்வது எளிது. நமது எதிரி யார் என்ற தெளிவில் நமது வெற்றியும் எளிதாகும்.  

- சுப்ரமண்ய செல்வா -    #செல்வாசகம்


வெள்ளி, 21 மே, 2021

வேர்களின் வேதம்

கண்ணுக்குத் தெரியாத வேர்களின் தயவில் கண்ணுக்குத் தெரியும் மரங்கள் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றன. இரையைத் தேடி விரையும் விலங்கினைப் போல, மரத்தின் வேர் விரல்கள் நீண்டு நீண்டு சென்று நீரையும் கனிமங்களையும் தேடிக் கண்டுபிடித்து  மரத்திற்கு கடத்துகின்றன. 

செக்கோயா (sequoia)  மரங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கலிபோனியா செம்மரங்கள் என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய மரங்களான இவை 380 அடி உயரமும் 30 அடி சுற்றளவு வரை வளரக்கூடியவை. பல நூற்றாண்டுகள் உயிர் வாழ்பவை.  கலிபோர்னியாவில் உள்ள தேசிய செக்கோயா பூங்காவில் இருக்கும் 2300 முதல் 2700 வருடங்கள் வரை  பழமையானது என கருதப்படும் ஜெனரல்  ஷேர்மன் என்னும் பெயர் கொண்ட செக்கோயா மரம்தான் இன்று உயிர்வாழும் செக்கோயா மரங்களிலேயே மிகவும் பழமையானது. 

அவ்வளவு பெரிய மரங்கள், அத்தனை ஆண்டுகள் உயிர் வாழ வேண்டுமென்றால் செக்கோயா மரங்களின் வேர்கள் வெகு ஆழத்திற்கு சென்றிருக்க வேண்டும் இல்லையா?  ஆனால் அவை அவ்வாறு இல்லை என்பதுதான் பேரதிசயம்.  செக்கோயா மரங்களின் வேர்கள் ஆறு முதல் ஏழு அடி ஆழம் வரை மட்டுமே செல்கின்றன.  ஆனால் அவை 100 அடி வரை பக்கவாட்டில் படர்ந்து பக்கத்தில் இருக்கும் மரங்களின் வேர்களை பற்றிக் கொள்கின்றன.  இவ்வாறு புதிதாக வளரும் சிறு மரம் முதற்கொண்டு ஒவ்வொரு மரமும் தனது பக்கத்தில் இருக்கும் மரத்துடன் கைகோர்த்து முழு  செம்மர வனங்களும் தமது ஒன்றுபட்ட ஆற்றலினால் காலத்தை வென்று கம்பீரமாக நிற்கின்றன. 

இது இயற்கை கற்றுத் தரும் இன்னுமொரு பாடம். 

இரண்டு விரல்களுக்கு இடையே இடைவெளி இருப்பது இன்னொரு கரங்களின் விரல்களைப் பற்றிக்கொள்ள.

ஒன்றுபட்டு எழுந்தால் எந்த உச்சத்தையும் தொடலாம்.  

- சுப்ரமண்ய செல்வா -     #செல்வாசகம்


திங்கள், 17 மே, 2021

அர்ச்சுன மனக்குவியல் (பகுதி: 1)

அர்ச்சுன மனக்குவியல்' (Arjuna Focus) கைவரப்பெற்றால் காரியம் யாவும் கைகூடும்.  அது என்ன 'அர்ச்சுன மனக்குவியல்'?  மகாபாரதக் கதையொன்று.... பாண்டவர், கௌரவர்களின் போர் பயிற்றுவிப்பாளரான துரோணாச்சியார் ஒருமுறை தன்னிடம் பயிற்சிபெறும் இளவரசர்கள் அனைவரையும் அழைத்தார்.  அவர்களது வில்லாண்மையையும், மனக்குவியலையும் சோதிக்கும் முகமாக மரத்திலாலான ஒரு பறவையை கிளையொன்றில் வைத்து அவர்களை வில்லேந்தி  பறவையின் கண்ணை குறிபார்க்கச் சொன்னார்.  குறிபார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொறுவரிடமும் 'என்ன தெரிகிறது' என்று கேட்டார்.

"வானம், மேகம், மலை, மரம், கிளை, இலைகள், பறவை" - ஒருவர் சொன்னார்.

"மலை, மரம், கிளை, இலைகள், பறவை" - இன்னொருவர் சொன்னார்.

"மரம், கிளை, இலைகள், பறவை" - மற்றொருவர் சொன்னார்.

இப்படி ஒவ்வொறுவராக சொல்லி வர, அவர்கள் பதில்களில் திருப்தியுறாத துரோணாச்சியார்  "உங்களில் ஒருவராலும் அந்த பறவையை வீழ்த்த முடியாது" என்று கூறிவிட்டு  இறுதியாக அர்ச்சுனனிடம் கேட்டார்:

"உனக்கு என்ன தெரிகிறது?"

"கருமை குருவே... கருமை மட்டுமே தெரிகிறது"

"வேறு என்ன தெரிகிறது?"

"வேறு எதுவும் தெரியவில்லை, கருமை மட்டுமே தெரிகிறது"

"என்ன கருமை அது?"

"பறவையின் கண்மணியின் கருமை குருவே... எனக்கு வேறெதுவும் தெரியவில்லை"

"அம்பை எய்து"  அடுத்த கணம் அம்பு பறவையின் கண்களை துளைத்தது.

தன்னிகரற்ற வில்லாளியான அர்ச்சுனனின் மனக்குவியல் அத்தகையது.  நமக்கும் அத்தகைய மனக்குவியல் கைவரப்பெற்றால் எல்லாச் செயல்களும் வெற்றிச்சிகரத்தை தொட்டு நிற்கும். அதை அடைவது எப்படி? (தொடரும்...)

- சுப்ரமண்ய செல்வா -    #செல்வாசகம்


சனி, 15 மே, 2021

அழுக்காறு என்னும் அழுக்கு

நம்மிடம் இல்லாத ஒன்று மற்றவரிடம் உள்ளபோது, நம்மால் சாதிக்க முடியாததை மற்றவர் சாதிக்கும்போது அதனை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை அழுக்காறு. 


நேரடியாக சொல்வதானால் பொறாமை.  இதில் விசித்திரம் என்னவென்றால் பில்கேட்ஸின் சொத்து ஒரே நாளில் சில பல பில்லியன் டாலர்களால் உயரும்போதோ, அவர் புதிதாக ஒரு பிரத்தியேக ஜெட் வாங்கும்போதோ  அதையிட்டு நாம் எரிச்சல் அடைவது இல்லை.  ஆனால் பஸ் வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரர் ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கினால் அழுக்காறு தலைதூக்குகிறது.  

இதிலிருந்து வெளிவரத் தேவை மனநிலையில் மாற்றம்.  பிறரின் உயர்வை ஏற்றுப் போற்ற முடிந்திடின் அதுவே நமக்கு அகத்தூண்டுதலாக (inspiration) மாறி, நம்மாலும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையையும், சாதிக்கத் தேவையான உத்வேகத்தையும் அளிக்கும்.   'ஒருவர் பெருவெற்றியை அடைகிறார் என்பதே மற்றவராலும் அது சாத்தியம் என்பதற்கு சான்று' என்கிறார் ஆப்ரகாம் லிங்கன். பொறாமை என்பது எதிர்மறை உணர்வு (feeling), அகத்தூண்டுதல்  என்பது நேர்மறை (positive) உணர்வு.  நமது எண்ணங்களுக்கும், உணர்வு நிலைகளுக்கும் ஏற்ப உடலினுள் சுரக்கும் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுகிறது என்கிறது நவீன மருத்துவம்.  பொறாமையின்போது நாம் நம் அடிமனதிற்கு சொல்லும் செய்தி 'என்னில் குறையிருக்கிறது, என்னால் முடியாது'. அகத்தூண்டல் மனநிலையில் நாம் சொல்லும் செய்தி 'அவரால் முடிந்ததெனில் என்னாலும் முடியும். முயன்று பார்ப்போம்.' எண்ணங்களே எம்மை உருவாக்குகின்றன.  எதனைப் பயிரிடுகிறோமோ அதனையே அறுவடை செய்கிறோம்.

சிலவேளைகளில் நம்மைவிட குறை-நிலையில் உள்ளவர்கள் நம்மளவுக்கு உயரும்போதும் பொறாமை புகைவிடத் தொடங்குகிறது.  இது எப்போதும் நாம் மற்றவர்களைவிட உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்கின்ற  உயர்மனச் சிக்கலின் வெளிப்பாடு.   இயற்கை பாரபட்சமற்றது; அது அவரவரின் உழைப்புக்கும், முயற்சிக்கும் ஏற்ப வெகுமதியளிக்கிறது. வாழ்க்கை நமக்கு வாரி வழங்கியுள்ள வரங்களை நன்றியுடனும், பணிவுடனும் போற்றினால் அழுக்காறு அற்ற மனநிலை வாய்க்கும்.

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின். (குறள் 162)

விளக்கம்:

யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை.

- சுப்ரமண்ய செல்வா -  #செல்வாசகம்


வியாழன், 13 மே, 2021

காணாமல்போன கடிதங்கள்

அன்புள்ள அப்பாவுக்கு... அன்புள்ள அம்மாவுக்கு... அன்புள்ள அண்ணாவுக்கு...


இப்படியாகவும் இன்னும் பலவுமாகவும் கடிதங்களால் நிறைந்திருந்தது நமது பால்ய, பதின்ம, வாலிப காலம்.  (2kக்கு மு‌ந்தைய காலகட்டம்).  அறிவியல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட  வாழ்க்கையின் இன்னுமொரு அற்புத அங்கம் கடிதப் பரிமாற்றம். நான் கடிதம் எழுதத் தொடங்கியது கண்டி அசோகா மாணவர் விடுதியில் இருந்தபோது.   விடுதியில் கடிதம் எழுதுவது எங்களுக்கு கட்டாயமாக்கப் பட்டிருந்தது. 

நான் வெளிநாட்டில் பணிபுரிந்தபோது எனது தந்தை  எழுதிய கடிதங்களையும், பள்ளி விடுதியிலிருந்து எனது மகன் எழுதிய கடிதங்களையும், எங்களுடைய திருமண நிச்சயத்திற்கும் திருமணத்துக்கும் இடைப்பட்ட ஆறு மாத காலத்தில் எனது மனைவி எனக்கு எழுதிய கடிதங்களையும் இன்னும் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.  பழைய கடிதங்களை மீண்டும் வாசிக்கும் பொழுது ஏற்படும் மன உணர்வுகளுக்கு வார்த்தை வடிவம் கொடுக்க முடியாது. 

முன்னைய காலத்தில் கடிதம் எழுதுவது காலத்தின் கட்டாயமாக இருந்தாலும் அது ஒரு கலையாக இருந்தது.  வெள்ளைத்தாள் அல்லது கோடிட்ட தாள் எடுத்து, ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து, எண்ணங்களுக்கு எழுத்துரு கொடுத்து, கவரில் இட்டு, எச்சில் தொட்டு முத்திரை ஒட்டி, எப்போதும் வாய்திறந்து காத்திருக்கும் சிவப்பு தபால் பெட்டியில் போட்டுவிட்டுத் திரும்பும்போது   நம்மில் ஒரு பகுதியும் அந்தக் கடித்ததொடு சென்றிருக்கும்.  சிலவேளைகளில் சில  கண்ணீர்த் துளிகளால் எழுத்துகள் உருக்குலைந்து, பக்கங்கள் பள்ளமாகி பயணிக்கும் கடிதங்களும் உண்டு.   

கடிதங்களின் வரவுக்காக காத்திருக்கும் பொழுதுகளில்  தபால்காரரின் சைக்கிள் மணியோசை செவிகளுக்கு இன்னிசையாகும்.  அவசர அல்லது சுருக்கச் செய்திகளுக்கு தபாலட்டைகளின் தயவு நாடப்படும்.  சுமந்து செல்லும் விடயங்களின் வீரியத்திற்கு ஏற்ப கடிதங்களின் கனதி மாறுபடும். 

வாட்ஸ் அப்பில் வாழ்க்கை நடத்தும் இன்றைய எண்ணியல் வாழ்வில் கடிதங்கள் காலாவதியாகிவிட்டன. வசனங்கள் பிறகு வார்த்தைகளாகி இன்று எழுத்துகளுக்குள் சுருங்கிவிட்டன நமது நலம் விசாரிப்புகளும், எண்ணப் பரிமாற்றங்களும். [GM - Good morning, Tq - Thank you 🙂]
கடிதங்கள் இப்போது நமது பழைய நினைவுகளின் ஒரு பகுதி மாத்திரமே. கடிதங்களைப் பற்றி சிந்திக்கும் பொழுது சில பழைய திரைப்படப் பாடல்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை.

************** நான் எழுதுவது கடிதமல்ல - உள்ளம் அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல - எண்ணம் ************** அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம் - நான் எழுதுவதென்னவென்றால் - உயிர்க் காதலில் ஓர் கவிதை ***************

பெரும்பாலும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் இந்த பெருந்தொற்றுக் காலத்தில் அந்த கைபேசியை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு யாருக்காவது ஒரு கடிதம் எழுதலாமே! 

- சுப்ரமண்ய செல்வா - #செல்வாசகம்

எனது முகநூல்: https://www.facebook.com/SubrmanyaSelva/

எனது வலையொளி: https://youtube.com/c/SubramanyaSelva