திங்கள், 31 மே, 2021

எண்ணிய எண்ணியாங்கு

சிகரங்களை தொட்டவர்களென நாம் சிரம் உயர்த்தி பார்ப்பவர்களில் பெரும்பாலோர் சிறிய தொடக்கம் கொண்டவர்கள் என்கிற உண்மை நமக்கான நம்பிக்கை. ஆப்ரகாம் லிங்கனிலிருந்து அப்துல் கலாம் ஈறாக உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.  'ஒரு சிலரால்  மகத்தான வெற்றிகளை அடைய முடிகிறது என்பதே மற்றவர்களாலும் அது சாத்தியம் என்பதற்கு சான்று' என்கிறார் ஆப்ரகாம் லிங்கன். இலங்கைத் தெருக்களில் நான் வாகனம் ஓட்டத் தொடங்கியதில் ஒரு சுவாரசியப் பின்னணி உண்டு.  1995ம் வருடம். பத்தாண்டு கால வெளிநாட்டு வாசத்திற்குப் பின் நாடு திரும்பியிருந்தேன். நான் வண்டி ஓட்டத் தொடங்கியதே  சீராக கட்டமைக்கப்பட்டிருந்த நான் பணிபுரிந்த அந்த நாட்டின் பெரும்பாதைகளில்.  இலங்கைப் பாதைகளைப் பார்த்து திகைத்து நின்றேன்.  சிறிய இருவழிப் பாதைகளில் விரையும் சிறிதும் பெரிதுமான வாகனங்கள், முச்சக்கர, இருச்சக்கர வண்டிகள், மிதி வண்டிகள், மாட்டு வண்டிகள், நினைத்த இடத்தில் பாதையின் குறுக்கேச் செல்லும் மனிதர்கள் என பெருங்குழப்பமாய் தெரிந்தன நம் வீதிகள். சில நாட்கள் கவனித்துப் பார்த்தபோது நிறைய பெண்கள் எவ்வித தயக்கமுமின்றி லாவகமாய் வண்டி ஓட்டிச் செல்வதை கண்டேன். கொஞ்சம் தைரியம் வந்தது.  இவர்களே ஓட்டும்போது நம்மால் ஏன் முடியாது என்கிற எண்ணம் தோன்றிற்று. ('இவர்களே'வில் தொனிக்கும் அன்றைய ஆண் திமிர் மனநிலையை மறைக்க விரும்பவில்லை.  முதிர்ச்சிப் பாதையில் வெகு தூரம் பயணித்தாயிற்று).   மனதை தைரியப்படுத்திக்கொண்டு ஓட்டத் தொடங்கினேன்.   ஓரிரு நாள் பதற்றத்திற்குப் பின் சகலமும் சரியாயிற்று.  

தினமும் காலை நடைப்பயிற்சியில் பல முதியவர்களைப் பார்க்கிறேன்.  தவறாது தினமும் வந்துவிடுகிறார்கள்.  சோம்பல் தரும் சுகத்தில் இன்று நடைப்பயிற்சியை தவிர்த்துவிடுவோமா என தடுமாறும் தருணங்களில் அவர்களின் நினைப்பே எனக்கும் உந்துசக்தி.   நம்மாலும் முடியும் என்கிற நம்பிக்கையில் பயணத்தின் பாதி தூரத்தை கடந்துவிடலாம்.  நமக்கு ஆதர்சமாகவும், உந்துசக்தியாகவும் பலர் இருக்கிறார்கள்.  தேடல் நிறைந்த கண்களுக்கு அவர்கள் புலப்படுகிறார்கள்.

-சுப்ரமண்ய செல்வா -    #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

YouTube: https://youtube.com/c/SubramanyaSelva


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

உங்கள் உண்மையான கருத்துகளின் வெளிப்பாடுகள் அவ்வளவும், வாழ்க்கை பாதையில் நானும் கடந்து வந்த அதே சுவடுகள். ஆமாம் நமக்கு உந்து சக்திகள் நிறைய இருக்கிறார்கள். பயணத்தை வெற்றிகரமாக தொடர்வோம்��