சனி, 22 மே, 2021

யார் நமது முன்னேற்றத்தின் எதிரிகள்?

பிறர் அடையும் வெற்றிகளை, முன்னேற்றங்களை நம்மால் ஏன் அடைய முடியாமல் இருக்கிறது?  பிற மனிதர்களை,  சூழ்நிலைகளை சுட்டிக்காட்ட சுற்றுமுற்றும் பார்க்கிறோம். எப்போதும் தமது நிறைகளுக்கு தாமே காரணம் என்று இருமாப்பு கொள்வதும், குறைகளுக்கு புறக் காரணங்களைத் தேடுவதும் மனித இயல்பு.  பிறந்து வளர்ந்த சூழ்நிலை, ஏழ்மை, கல்வி எமக்கு உதவ, உயர்த்திவிட எவருமில்லை என எண்ணற்ற காரணங்கள்.  ஆனால் நம்மிலும்  குறைந்த  வசதி படைத்தவர்கள், கல்வி கற்றவர்கள், ஏன் உடற்குறை உள்ளவர்கள் கூட  எப்படி வாழ்க்கையில் வெற்றியாளர்களாக வீறுநடை போடுகிறார்கள்?

எனின்  யார் நமது முன்னேற்றத்தின் எதிரிகள்? உண்மையில் நாமே நம் முன்னேற்றத்தின் எதிரிகள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். நம்மைச்சுற்றி நாமே கட்டியெழுப்பியிருக்கும் சௌகரிய வலயத்தின் (comfort zone)  சிறைக்கைதிகள் நாம். அந்தச் சிறை பூட்டப்பட்டிருப்பது உட்புறம். சாவிகளும் நம்மிடமே உண்டு. ஆயினும் திறந்து வெளிவரத் தயக்கம்.  அந்த வலயத்திற்கு வெளியே வாய்ப்புகள் வரிசைக்கட்டி நிற்கின்றன. ஆயினும் நாம் அசௌகரியங்களுக்கு அஞ்சி, இடர்களுக்கு முகங்கொடுக்கும் தைரியமற்று, உள்ளதே போதுமென்று நமக்கு நாமே எல்லை வகுத்துக்கொள்கிறோம்.  வாழ்க்கை தொடங்குவது உங்கள் சௌகரிய வலயத்தின் முடிவில் (Life begins at the end of your comfort zone - Neale Donald Walsch).வெற்றிபெற்ற மனிதரெல்லாம் அந்த வலயத்தை விட்டு வெளியே வந்தவர்கள் என்பது எமக்கான பாடம்.

அடுத்தது மாற்றத்துக்கு முகம்கொடுக்க முடியாத, மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலை.  அதனால்   செய்ததையே திரும்பத் திரும்ப செய்துகொண்டு மாறுபட்ட பலனை எதிர்பார்க்கிறோம்.  ("Insanity is doing the same thing over and over again, but expecting different results." - Albert Einstein).

எப்போதும் எதிரி யாரென்று தெரிந்துகொண்டால் போரை வெல்வது எளிது. நமது எதிரி யார் என்ற தெளிவில் நமது வெற்றியும் எளிதாகும்.  

- சுப்ரமண்ய செல்வா -    #செல்வாசகம்


2 கருத்துகள்:

Unknown சொன்னது…

Super

பெயரில்லா சொன்னது…

Revolutionise our thoughts and actions