வியாழன், 21 ஜனவரி, 2010

உறவும் நட்பும்...

இல்லாதவற்றை இருப்பதாக்கி
கடுகுத் தவறை கடலளவாக்கி
கலைந்துபோகும் உறவுகள்...

சின்னச் சின்னச் சிக்கல்களில்
சிதறிப்போகும் சிநேகங்கள்...

எத்தனை பிணக்குகள்
எத்தனை பிரிவுகள்...

உறவே நட்பே
ஒன்றுரைப்பேன்
நானும் நீயும்
நாளையேகூட
மரணித்துவிடலாம்

நம்மையும் மிஞ்சியா
நம் வெஞ்சினம்
வாழ்வது...?

காலம் நம்முன்னே
காணாமல் போகிறது
நாளையப் பொழுதுகள்
நம்வசம் இல்லை...

இன்றே விரைந்து வா
கைகுலுக்கி
கவலை மறப்போம்

மன்னிப்பு கேட்பதன் அர்த்தம் 'நான் பிழை - நீ சரி' என்பதல்ல; 'நான் சிறியவன் - நீ பெரியவன் என்பதல்ல'.  அதன் அர்த்தம் 'நான் என் தன்முனைப்பைவிட (ego) உன் உறவை அதிகம் மதிக்கிறேன்' என்பதாகும்.

"மன்னித்துவிடு" எனும் ஒரே வார்த்தையில் மறக்கப்படக் கூடிய தவறுகள் எத்தனை?  உலர்ந்துவிட்ட உறவும் நட்பும் மீண்டும் துளிர்க்கும் வாய்ப்புகள் எத்தனை? 

தனிமரம் தோப்பாகாது.  ஒவ்வொரு தனிமனித வாழ்வின் உயர்விலும் உறுதுணையாய் இருப்பது உன்னத உறவுகளும், உயர்ந்த சிநேகன்களுமே.

வாழ்க்கையில் வரப்பிரசாதமாய் கிடைத்த அற்புத உறவுகளையும் சினேகங்களையும் அற்ப விசயங்களுக்காய் அறுத்து விடுவது எத்தனை கொடுமை? சிந்திப்போம்.

==  சுப்ரமண்யா செல்வா ==

சனி, 9 ஜனவரி, 2010

ஆனந்த அழுகை

நல்ல மனிதரை
காணும் போதெல்லாம்
அழுதுவிடுகிறேன் நான்

பாலைவனத்தில்
சோலை கண்ட
பயணியின் பரவசம்
எனக்குள்

நாடி நரம்புகள்
துவண்டு 
உள்ளுக்குள் ஏதோ
உடைந்து
மூச்சும் பேச்சும்
மறந்து
விழிக்குளம் நிறையும்
சில நேரம்
கரைமீறும்

பேரூந்தில் புகையூர்தியில்
கர்ப்பிணிக்கும் இரங்கா
கயவர் மத்தியில்
சட்டென எழுந்து
இடம் தரும்
சக பிரயாணியின்
கருணையில் கரையும் 
என் மனம்

வீதி கடக்க பரிதவிக்கும்
விழியிழந்தவனுக்கு
பார்வை பிச்சையிடும்
வழிப்போக்கனின்
வாத்யல்சத்தில்
துளிர்க்கும் என் விழிகள்

அந்நியப்பட்ட புது இடத்தில்
அகதிபோல் தவிக்கையில்
முன்வந்துதவும்
முகம் தெரியா
அந்நியனின் அன்பில்
விம்மும் என் நெஞ்சம்

இப்படி இப்படி
இங்கும் அங்குமாய்
ஒருவர் இருவராய்
நல்ல மனிதரை
காணும்போதெல்லாம்
அழுதுவிடுகிறேன் நான்
- சுப்ரமண்ய செல்வா -
(நன்றி: மித்திரன் வாரமலர்)
Tamil Songs, Tamil Music, Tamil Films, Tamil music, download, Tamil Stories, Tamil literature