சனி, 9 ஜனவரி, 2010

ஆனந்த அழுகை

நல்ல மனிதரை
காணும் போதெல்லாம்
அழுதுவிடுகிறேன் நான்

பாலைவனத்தில்
சோலை கண்ட
பயணியின் பரவசம்
எனக்குள்

நாடி நரம்புகள்
துவண்டு 
உள்ளுக்குள் ஏதோ
உடைந்து
மூச்சும் பேச்சும்
மறந்து
விழிக்குளம் நிறையும்
சில நேரம்
கரைமீறும்

பேரூந்தில் புகையூர்தியில்
கர்ப்பிணிக்கும் இரங்கா
கயவர் மத்தியில்
சட்டென எழுந்து
இடம் தரும்
சக பிரயாணியின்
கருணையில் கரையும் 
என் மனம்

வீதி கடக்க பரிதவிக்கும்
விழியிழந்தவனுக்கு
பார்வை பிச்சையிடும்
வழிப்போக்கனின்
வாத்யல்சத்தில்
துளிர்க்கும் என் விழிகள்

அந்நியப்பட்ட புது இடத்தில்
அகதிபோல் தவிக்கையில்
முன்வந்துதவும்
முகம் தெரியா
அந்நியனின் அன்பில்
விம்மும் என் நெஞ்சம்

இப்படி இப்படி
இங்கும் அங்குமாய்
ஒருவர் இருவராய்
நல்ல மனிதரை
காணும்போதெல்லாம்
அழுதுவிடுகிறேன் நான்
- சுப்ரமண்ய செல்வா -
(நன்றி: மித்திரன் வாரமலர்)
Tamil Songs, Tamil Music, Tamil Films, Tamil music, download, Tamil Stories, Tamil literature

கருத்துகள் இல்லை: