திங்கள், 12 ஜூலை, 2021

என்ன செய்யப்போகிறோம்?

'வாழ்க்கை மிகக் குறுகியது - இங்கு சண்டைகளுக்கோ, மன்னிப்புகளுக்கோ, பொறாமைகளுக்கோ, பழிசுமத்தல்களுக்கோ நேரமில்லை.  அன்பு செலுத்தலுக்கு மட்டுமே நேரமிருக்கிறது; அதுவும் ஒரு கணப்பொழுது நேரமே!'      - மார்க் ட்வெய்ன் -

எத்தனை பெரிய உண்மை!

என்று தொடங்கியது இந்தக் காலம்? என்று முடியும்? ஆதியும் அந்தமும் அறியாத இந்த காலத்தின் நிகரற்ற நீட்சியில்  சின்னஞ்சிறு நுண் பொழுதே நம் வாழ்க்கை.  மனித ஆயுள் என்னும் அந்த  நுண் பொழுது நிமிடங்கள்,  மணித்தியாலங்கள், நாட்கள்,  வாரங்கள், மாதங்கள், வருடங்கள் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைந்துவிடுகிறது.  சில தினங்களுக்கு முன் 98 வயதில் ஒரு நடிகர் மறைந்தார்.  சில மாதங்களுக்கு முன் 50 வயதில் வேறொரு நடிகர் மறைந்தார்.  காலத்தின் கணக்கு யாராலும் புரிந்துகொள்ள முடியாது பெரும் புதிர்.

அந்த நுண் பொழுதின் பெரும்பகுதியை எப்படிக் கழிக்கிறோம்?

'அன்பு செலுத்துவதிலா,
வன்மம் வளர்ப்பதிலா?
சண்டை சச்சரவுகளிலா,
சமரச சகவாழ்விலா?
துன்பம் தருவதிலா,
துன்பம் போக்குவதிலா?
அலைகழிக்கும் மனதுடனா,
அமைதியின் அரவணைப்பிலா?'
என்பதில் தங்கியிருக்கிறது எமது இருப்பின் அர்த்தம்.

பாரதி கேட்பதுபோல்,

'தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே'

வீழ்ந்து விடைபெறுவதா நம் வாழ்வின் நோக்கம்? சிந்தித்து விடை காண வேண்டிய கேள்வி.

- சுப்ரமண்ய செல்வா -    #செல்வாசகம் 


அண்மையில் வெளிவந்துள்ள எனது புதிய நூல்கள் கீழ்காணும் இணைப்புகளில் கிடைக்கும்:

அகவரிகள் (பாகம்-1)
வாழ்க்கை திசைகாட்டி

https://notionpress.com/read/agavarigal

எண்ணம் என்ன செய்யும்?
மின்னூல் / eBook

Pustaka Digital Media
https://www.pustaka.co.in/home/ebook/tamil/ennam-enna-seyyum
Amazon India
https://www.amazon.in/dp/B0983KGBYT
Amazon International
https://www.amazon.com/dp/B0983KGBYT
Google Books
https://play.google.com/store/books/details/Subramanya_Selva_Ennam_Enna_Seyyum?id=1Pg1EAAAQBAJ
Scribd
https://www.scribd.com/book/513916259/Ennam-Enna-Seyyum

வியாழன், 1 ஜூலை, 2021

வார்த்தைகள் போதும்

தனது மகனின் அண்மைய சாதனையொன்றை நண்பர் ஒருவர் வாட்ஸ்அப் வழியாக பெருமையுடன் பகிர்ந்திருந்தார்.  முகம் தெரியாத அந்த மகனுக்கு அகம் நிறைந்த வாழ்த்துச் செய்தி ஒன்றை பதிலாக அனுப்பிவிட்டு இந்தப் பதிவை எழுதுகிறேன்.  பதினாறு வார்த்தைகளே கொண்ட அந்த வாழ்த்து நண்பரின் மனதில் எத்துணை மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும், மகனுக்கு எவ்வளவு உற்சாகம் தந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன்.

வார்த்தைகள் வெறும் வார்த்தைகளல்ல!

அவற்றை நாம் இலவசமாகத்தான் கொடுக்கிறோம்.  ஆனால் அவை மற்றவர்களில் ஏற்படுத்தும் மாற்றங்கள் மகத்தானவை.

ஒரு நோயுற்றவரின் வலியை, துயரை  நம்மால் போக்க முடியாது.  ஆனால் ஒரு நலம் விசாரிப்பு மூலம், ஒரு ஆறுதல் வார்த்தை மூலம் அவர்கள் மனதை மயிலிறகு கொண்டு வருடிவிடலாம்.

ஏதாவது ஒன்றை முயற்சி செய்பவருக்கு நமது உற்சாக வார்த்தைகள் மூலம் உந்துதல் அளிக்கலாம்.

ஒன்றை சாதிப்பவரை பாராட்டி வாழ்த்தி பரவசப்படுத்தலாம்.

மறக்காமல் பிறந்தநாள், திருமண நாள் வாழ்த்து சொல்லி அவர்கள் மகிழ்ச்சியில் பங்கேற்கலாம்.

இப்படியாக நமது வார்த்தைகளை கொண்டு மற்றவர்கள் வாழ்க்கையில் மாயம் புரியலாம்.

ஆனால் நாம் தயங்குகிறோம். தவிர்க்கிறோம்.  தள்ளிப் போடுகிறோம். தள்ளிப் போடுவதால் மறந்துவிடுகிறோம்.

வாட்ஸ்அப் நமது வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்ட இந்தக் காலத்தில் நமது வார்த்தைகளை வழங்க தேவையானதெல்லாம் பெரிய மனதும், சிறிய மெனக்கெடலும் மாத்திரமே.

வார்த்தைகள் மூலம் மற்றவர் மனதை மலர்விக்க நம் எல்லோராலும் முடியும் என்பது எத்துணை பெரும்பேறு!

- சுப்ரமண்ய செல்வா -    #செல்வாசகம்


அகவரிகள் (பாகம்-1) வாழ்க்கை திசைகாட்டி அச்செறியுள்ள எனது இரண்டாவது நூல்.

இங்கு கிடைக்கும்  👇👇👇

https://notionpress.com/read/agavarigal