வியாழன், 1 ஜூலை, 2021

வார்த்தைகள் போதும்

தனது மகனின் அண்மைய சாதனையொன்றை நண்பர் ஒருவர் வாட்ஸ்அப் வழியாக பெருமையுடன் பகிர்ந்திருந்தார்.  முகம் தெரியாத அந்த மகனுக்கு அகம் நிறைந்த வாழ்த்துச் செய்தி ஒன்றை பதிலாக அனுப்பிவிட்டு இந்தப் பதிவை எழுதுகிறேன்.  பதினாறு வார்த்தைகளே கொண்ட அந்த வாழ்த்து நண்பரின் மனதில் எத்துணை மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும், மகனுக்கு எவ்வளவு உற்சாகம் தந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன்.

வார்த்தைகள் வெறும் வார்த்தைகளல்ல!

அவற்றை நாம் இலவசமாகத்தான் கொடுக்கிறோம்.  ஆனால் அவை மற்றவர்களில் ஏற்படுத்தும் மாற்றங்கள் மகத்தானவை.

ஒரு நோயுற்றவரின் வலியை, துயரை  நம்மால் போக்க முடியாது.  ஆனால் ஒரு நலம் விசாரிப்பு மூலம், ஒரு ஆறுதல் வார்த்தை மூலம் அவர்கள் மனதை மயிலிறகு கொண்டு வருடிவிடலாம்.

ஏதாவது ஒன்றை முயற்சி செய்பவருக்கு நமது உற்சாக வார்த்தைகள் மூலம் உந்துதல் அளிக்கலாம்.

ஒன்றை சாதிப்பவரை பாராட்டி வாழ்த்தி பரவசப்படுத்தலாம்.

மறக்காமல் பிறந்தநாள், திருமண நாள் வாழ்த்து சொல்லி அவர்கள் மகிழ்ச்சியில் பங்கேற்கலாம்.

இப்படியாக நமது வார்த்தைகளை கொண்டு மற்றவர்கள் வாழ்க்கையில் மாயம் புரியலாம்.

ஆனால் நாம் தயங்குகிறோம். தவிர்க்கிறோம்.  தள்ளிப் போடுகிறோம். தள்ளிப் போடுவதால் மறந்துவிடுகிறோம்.

வாட்ஸ்அப் நமது வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்ட இந்தக் காலத்தில் நமது வார்த்தைகளை வழங்க தேவையானதெல்லாம் பெரிய மனதும், சிறிய மெனக்கெடலும் மாத்திரமே.

வார்த்தைகள் மூலம் மற்றவர் மனதை மலர்விக்க நம் எல்லோராலும் முடியும் என்பது எத்துணை பெரும்பேறு!

- சுப்ரமண்ய செல்வா -    #செல்வாசகம்


அகவரிகள் (பாகம்-1) வாழ்க்கை திசைகாட்டி அச்செறியுள்ள எனது இரண்டாவது நூல்.

இங்கு கிடைக்கும்  👇👇👇

https://notionpress.com/read/agavarigal

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

முற்றிலும் உண்மை அண்ணா...
முயற்சிக்க வேண்டும்.

psselvaratnam சொன்னது…

உண்மை என்று உணர்தலே மாற்றத்துக்கான முதல் படி. வாழ்த்துகள். / சுப்ரமண்ய செல்வா