ஞாயிறு, 27 ஜூன், 2021

மன்னிக்கும் மனம்...


மன்னிப்பு கேட்பதன் அவசியம் பற்றி பதிவிட்ட பிறகு மன்னித்தலின் மாண்பு பற்றி குறள் ஒன்று வாசிக்கக் கிடைத்தது ஒரு இனிய நிகழ்வுப் பொருத்தம்.


ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். (குறள்: 156)

கலைஞர் மு.கருணாநிதி உரை:

தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.

மன்னிப்பது இயலாமையின், பலவீனத்தின் அறிகுறியன்று.  அது வீரத்தின் அறிகுறி.  நமது தன்னம்பிக்கையின் வெளிப்பாடு.

மன்னிப்பு கேட்பவரை மன்னித்து விடுவது மனித குணமென்றால், மன்னிப்பு கேட்காதவரையும் மன்னித்து விடுவது மாமனித குணம்.  

மன்னித்து மறந்துவிட்டவர்களின் வாழ்க்கைப் பயணம் சுமைகளற்ற சுகப்பயணமாக இருக்கும்.

எனது கவிதையொன்று:

மன்னித்துவிடு
===============
வெறுக்கப்படுபவரைவிட 
வெறுப்பவர்க்கே 
வேதனை அதிகம்

வெறுப்புச் சுமை சுமந்து
நடக்கும் வாழ்வு கொடிது

சுமையிறக்கிய பறவையாய்
சுதந்திர வானில்
சிறகடித்துப் பறக்க ஆசையா...?

மன்னித்துவிடு.

மன்னிக்காமல்
மறத்தல் அரிது

முகம் பார்த்து மன்னிக்க 
முடியவில்லையா?
அகம் நிறைந்து மன்னித்துவிடு.

தன்னை தான் வெறுத்தலே
தாளாத சுமை
உன்னையும் சேர்த்து
மன்னித்துவிடு.

விதிவிலக்கல்ல நீ
எல்லா இதய வீட்டுக்குள்ளும்
இறுகப் பூட்டிய
இருண்ட அறைகள் உண்டு

இறந்தகாலம்
இறந்த காலம்
மற.

ஏனெனில் இங்கு
கடந்தகாலமற்ற ஞானியுமில்லை
எதிர்காலமற்ற பாவியுமில்லை.

-  சுப்ரமண்ய செல்வா  -

(தொடுதூரத்தில் விடிவானம் கவிதைத் தொகுதி)

இங்கு கிடைக்கும் 👇👇👇

https://notionpress.com/read/agavarigal



கருத்துகள் இல்லை: