திங்கள், 14 ஜூன், 2021

வரங்களின் வரிசை

அபரிமித மனநிலை (abundance mentality)  வாழ்க்கையை அழகுமிக்கதாக மாற்றுகிறது.  குறை மனநிலை அல்லது பற்றாக்குறை மனநிலை (lack/scarcity  mentality) வாழ்க்கையை வரட்சிமிக்கதாக  வடிவமைக்கிறது.

இது ஈர்ப்பு விதி. 

எமது எண்ணங்களுக்கு ஏற்ற சூழ்நிலைகளை நாம் உருவாக்குகிறோம்.

எப்போதும் எம்மிடம் இல்லாதவற்றை பற்றியே எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது இல்லாமையை எம்மை நோக்கி ஈர்த்துக்கொள்கிறோம். 

எமது பிரார்த்தனைகளில் கூட எது எம்மிடம் இல்லையோ அவையே முன்னிலைப்-படுத்தப்படுகின்றன.  எனவே தொடர்ந்தும் அவை எமக்கு எட்டாக்கனிகளாகவே இருக்கின்றன.

அபரிமித மனநிலை நமது மனதில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்துகிறது.  நமது தேவைகள் நம்மை அறியாமல் மெல்ல மெல்ல பூர்த்தி செய்யப்படுகின்றன.

அந்த அபரிமிதமான மன நிலையை அடைவது எப்படி?

நம்மிடம் இல்லாதவற்றைப்  பற்றி மறந்துவிட்டு இருப்பவைகளுக்கு     மனதார நன்றி சொல்ல தொடங்குவது முதல் படி.  காலை கண்விழித்ததும்,  இரவு உறங்கச் செல்லும் முன்பும் ஒரு சில நிமிடங்கள் அதனை ஒரு பிரார்த்தனையாக செய்தால் இன்னும் சிறப்பு.

நேற்று உயிருடன் இருந்தவர் இன்று இல்லை.  குறிப்பாக இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் அது இயல்பான ஒன்றாக ஆகிவிட்டது.  நேற்றிறவு உறங்கச் சென்ற  பல்லாயிரம் பேர் இன்று கண்விழிக்கவில்லை.   அவர்களில் ஒருவராக நாம் இல்லை என்பது முதல் வரம்.  நோயற்ற உடல், உயிர்வாழ அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறையுள், அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள், உணர்வுத் தேவைகளான அன்பு, அமைதி, இன்பம் போன்றவற்றை பூர்த்தி செய்யும் பெற்றோர், உடன் பிறப்புகள், உறவுகள், வாழ்க்கைத்-துணை, பிள்ளைகள், நண்பர்கள் என  இயற்கை நமக்கு வாரி வழங்கியிருக்கும் வரங்களை வரிசைப்படுத்தத் தொடங்கினால் அந்தப் பட்டியல் முடிவற்று நீளும்.  அது ஏற்படுத்தும் நன்றிப் பெருக்கில் அபரிமித மனநிலை சாத்தியமாகும். 

நமக்கு கீழே உள்ளவர் கோடி என்கிற உண்மை புலப்படும்.  நிறை மனம் வாய்க்கும்.

ஒரு ஆங்கில கிறிஸ்தவப் பாடலின் தமிழாக்கம்:

உங்கள் வரங்களை கணக்கிடுங்கள் - அவை
ஒவ்வொன்றையும் உரத்துச் சொல்லுங்கள்...

- சுப்ரமண்ய செல்வா -    #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

YouTube: https://youtube.com/c/SubramanyaSelva

கருத்துகள் இல்லை: