செவ்வாய், 8 ஜூன், 2021

தீதற்ற செல்வம்

பணம் படைத்தவர்கள் அனைவரும் செல்வந்தர்கள் அல்லர்.  என்ன வியப்பாக இருக்கிறதா? பணம் அதிகமிக்கவர் பணக்காரர்.  செல்வம் அதிகமிக்கவர் செல்வந்தர்.  தாள்கள், நாணயங்கள், சொத்துகள் என எண்ணிக்கைக்குள் அடங்குவது பணம். 

எனின், எது செல்வம்? 

வங்கிகளில் இருக்கும் கோடிகளா? வாழும் மாடிவீடுகளா? வரிசைகட்டும் வாகனங்களா?  ஆடம்பர ஆபரணங்களா? 

அண்மையில் ஒரு கானொளி பார்த்து கண்கலங்கினேன்.  சொற்பமாய் சம்பாதிக்கும் ஒரு எளிய மனிதர் தனது ஒய்வு நேரத்தில் கழிவறைகளை கழுவி சம்பாத்தித்த பணத்தில் கடந்த 15 வருடங்களில் 1200 மாணவர்களின் கல்விக்கு உதவியிருக்கிறார்.  இவரை எந்த வகையில் சேர்ப்பது?

'அன்னயாவினும் புண்ணியம் கோடி  ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'

எனும் பாரதியின் அறிவுரையை  நடைமுறைப்படுத்திய, ஈகை மனம் என்னும் பெருஞ்செல்வம் படைத்த இந்த மாமனிதரும்  உண்மையில் செல்வந்தர் அல்லவா? 

பதினாறு செல்வங்களில் ஒன்று மட்டுமே பணத்தோடு பொறுந்தக்கூடியது; அதுவும் 'தீதற்ற செல்வம்'. மற்ற பதினைந்து செல்வங்கள் உடையோரும் செல்வந்தர்களே.  முக்கியமானது 'அழியாப் புகழ்'.  ஈகைச்செல்வம் மிக்கோரே அழியாப் புகழ் பெறுவர்.

பணத்தைக்கொண்டு செய்யும் தர்மங்கள் மட்டுமே ஈகையாகாது.  தனக்கு வாய்த்த அறிவைக்கொண்டு, உடல் உழைப்பு மூலம், தனது நேரத்தை செலவழித்து என ஒருவரால் இயன்ற வகையில் சக மனிதரை கைதூக்கி விட, மேம்படுத்த செய்யும் செயல்கள் அனைத்துமே ஈகை என்றே கொள்ளலாம்.  

ஆக செல்வந்தராக இருக்க பணம் படைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை அல்லவா! 

- சுப்ரமண்ய செல்வா - #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

YouTube: https://youtube.com/c/SubramanyaSelva


கருத்துகள் இல்லை: