சனி, 19 ஜூன், 2021

தப்பெண்ணத்தை மாற்றுவது எப்படி ?


அண்மையில் வந்த கேள்வியோன்று:
ஒருவர் என்மீது கொண்டிருக்கும் தப்பெண்ணத்தை எப்படி மாற்றுவது?

பெரும்பாலான உறவுச் சிக்கல்களுக்கு காரணமாய் இருப்பது தவறான புரிதலால் ஏற்படும் தப்பெண்ணம் அல்லது தப்பபிப்பிராயம்.  தவறான புரிதல்களுக்கு காரணம் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளும்போது ஏற்படும் இடைவெளி (Communication Gap).   சொல்பவர் சொல்ல முற்படுவது ஒன்றாகவும், கேட்பவர் புரிந்துகொள்வது வேறொன்றாகவும் இருப்பது. 

பல வேளைகளில் தவறான வார்த்தைகளால் சரியான நோக்கம்கூட சரிந்துவிடுகிறது. சொல்லும் விதம் தவறாகும்போது சொன்னதனைத்தும் கேட்பவரிடம் சென்றடையத் தவறிவிடுகிறது.

கேட்பவரும் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ள முன்முடிவுகளுடன் செவிமடுக்கும்போது, சொல்பவரின் வார்த்தைகளுக்கு புதுப்புது அர்த்தங்கள் புலப்படுவதுண்டு.  எப்போதும் வார்த்தைகள் சொல்பவருடையவை; அர்த்தங்கள் கேட்பவருடையவை.

தீர விசாரிக்காமல் ஏற்றுக்கொள்ளப்படும் மற்றவர்களின் அபிப்பிராயங்களும் தப்பெண்ணங்களை ஏற்படுத்துவதுண்டு.

சரி,  ஏற்பட்டுவிட்ட தப்பெண்ணத்தை மாற்றுவது எப்படி?

இலகுவான வழி சம்பந்தப்பட்டவரிடம் நேரடியாக மனம் திறந்து பேசுவதுதான்.  பெரும்பாலும் நம் முன் எழுந்து நிற்கும்  நமது ஈகோ என்னும் பெருஞ்சுவர் நம்மை அந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க விடாமல் தடுக்கும்.  தைரியத்துடன் அதனைத் தாண்டிவிட்டால் தீர்வு கிட்டிவிடும் வாய்ப்புகள் அதிகம். சம்பந்தப்பட்டவர் நேரடி உரையாடலுக்கு தயாராக இல்லை என்றால், இருவருக்கும் பொதுவான ஒருவரின் உதவியை நாடலாம்.  அப்போதும் அவர் நமது நகர்வுகளை புறந்தள்ளினால் அப்போதைக்கு அந்த முயற்சியை கைவிடுவதே உகந்தது.  ஏனெனில் நம்மைப்பற்றிய தப்பபிப்ராயங்களை தொடர்ந்து வலிந்து சென்று மாற்றுவது கடினம். அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்தும் உண்டு. நமது தவறு என்று அவர்கள் நினைப்பதை நாம் நியாயப்படுத்த முயலுவதாக கருதப்படலாம். ஒரிருமுறை முயற்சி செய்துவிட்டு காலத்திடம் கையளிப்பதே சாலச் சிறந்தது. காலம் எல்லா காயங்களையும் ஆற்றும்; நம்மை புரிந்துகொள்ளும் பக்குவத்தை அவர்களுக்கு கொடுக்கும். நம் நியாயம் புலப்படும் நாளொன்று வரும்.  அதுவரை காத்திருத்தலே புத்திசாலித்தனம்.

- சுப்ரமண்ய செல்வா -   #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

https://youtu.be/orpxSTl9jlg

கருத்துகள் இல்லை: