வெள்ளி, 18 ஜூன், 2021

அச்சுகள் ஆயிரம்

கைதேர்ந்த அச்சு வார்ப்பவர்கள் நாம். பெற்றோர், பிள்ளைகள், உறவுகள் நண்பர்கள், சக பணியாளர்கள் என நம்மிடம் உறவு கொள்ளும் அனைவருக்கும் விதவிதமான அச்சுகளை  உருவாக்கி வைத்திருக்கிறோம்.  அவர்கள் அனைவரும் நாம் வார்த்து வைத்துள்ள அச்சுகளில் துல்லியமாக பொருந்த வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.  அப்படி நடக்காத பட்சத்தில் ஏமாற்றம் அடைகிறோம்.  இந்தப் புள்ளியில் ஆரம்பமாகின்றன எல்லா உறவுச் சிக்கல்களும்.  

பிறரின் அச்சுகளில் நாம் பொருந்துகின்றோமா என்கின்ற கேள்வியின் பதிலில் எமது எதிர்பார்ப்புகள் எவ்வளவு அர்த்தமற்றவை என்கின்ற உண்மை புரியும்.  

எண்ணூறு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கும் உலக மக்கள் தொகையில் உருவத்தால் ஒருவர் மற்றொருவரை போல் இல்லாத பொழுது உள்ளத்தால் ஒருவரைப் போல் இன்னொருவர் இருப்பது எப்படி சாத்தியம்?   ஒருவருடைய எண்ணம், சொல், செயல் என்பன அவருடைய பிறப்பு, வளர்ப்பு, கல்வி, வாழ்க்கை அனுபவம் என பலவித கலவைகளின் வெளிப்பாடு.  உடன்பிறந்த இரட்டையர்களுக்கு கூட அவை  ஒன்றுபோல் இருப்பதில்லை.  இந்த உண்மையின் வெளிச்சம் எம்முள் படர்ந்தால் நமது எதிர்பார்ப்பு இருள் அகலும்.

நமது அச்சுகளையும் அவை உருவாக்கும் எதிர்பார்ப்புகளையும் ஆழப் புதைத்துவிட்டு, மனிதர்களை அவர்களுடைய இயல்பான பலங்களுடன்,  பலவீனங்களுடன் நிபந்தனையற்று ஏற்றுக்கொள்ள முடிந்தால் எல்லா உறவுத் தொடர்புகளும் அர்த்தமிக்கதாய், நிறைவானதாய் இருக்கும்.

- சுப்ரமண்ய செல்வா -   #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

https://youtu.be/d6dBNwkekaU

கருத்துகள் இல்லை: