வியாழன், 5 ஜூலை, 2018

புது விதி

எந்த மரத்தடியிலும்
கண்மூடி தியானிக்கவில்லை
ஆயினும் திடீர் தெள்ளறிவு

ஒரு முள்ளின் கீறலால்
எல்லா ரோஜாக்களையும் வெறுப்பதா?
நனவாகாத ஒரு கனவுக்காக
கனவுகளை துறப்பதா?
கசந்த ஒரு கனிக்காக
தருவை வேரறுப்பதா?
போதுமிந்த பேதைமை

என்னையழுத்தும் உன்
நினைவு கற்களால்
நான் கட்டப்போவது
காதலின் கல்லறையல்ல
யாவருக்குமான நிழற்குடை.

நீ மூட்டிச்சென்ற  பிரிவுத்தீயில்
என்னையெரித்து உயிர்த்தெழுகிறேன்
ஒரு ஃபீனிக்ஸ் பறவையாய்
உலகத்தை காதலிக்க
உன்னையும் சேர்த்து.

- சுப்ரமண்ய செல்வா -

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (02.09.2018)