வெள்ளி, 25 ஜூன், 2021

மன்னித்துவிடு(ங்கள்)

 


'மன்னித்துவிடு(ங்கள்)'

எத்தனையோ காயங்களை ஆற்றக்கூடிய, பிரிவுகளை மாற்றக்கூடிய,  இடைவெளிகளை நிரப்பக்கூடிய ஒற்றைச் சொல்.  ஆனால் அதனை உச்சரிப்பதில்தான் எத்தனைத் தயக்கம்!  மனம் விரும்பினாலும் அது வாய்மொழியாவதை தன்முனைப்பு தடுத்து நிறுத்தும்.  

யார் முதலில் சொல்வது என்கிற போட்டியில் ஒரே நாளில் தீரக்கூடிய சிறு சச்சரவுகூட வாரக்கணக்கில், மாதக்கணக்கில், சிலவேளைகளில் வருடக்கணக்கில் நீண்டு தீராத பெரும் பகையாய் உருமாறும்.   

மன்னிப்பு கேட்பதன் அர்த்தம் 'நான் பிழை - நீ சரி' என்பதல்ல; 'நான் சிறியவன் - நீ பெரியவன் என்பதல்ல'.  அதன் அர்த்தம் 'நான் என் தன்முனைப்பைவிட (ego) உன் உறவை அதிகம் மதிக்கிறேன்' என்பதாகும்.

பல வேளைகளில் தவறு நமதாக இருந்தாலும் அதை ஒத்துக்கொள்ளும் போது நாம் பிறரிலும் தாழ்ந்து விடுகிறோம் என்கின்ற தவறான எண்ணம் மன்னிப்பு கேட்பதை தடுக்கின்றது.  நாம் எப்போதும் சரியானவர்கள், தவறு செய்யாதவர்கள் என்று நம்பவே நம் மனது விரும்புகிறது.  இந்த மாயையிலிருந்து வெளிவந்து, மனிதத் தவறுகளுக்கு நாமும் விதிவிலக்கல்ல என்பதை உணர்ந்து, நமது தவறுகளுக்கு தைரியமாக, மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்க முடிந்தால் எத்தனையோ இருகப்பூட்டிய மனக்கதவுகள் அகலத் திறந்து உறவுகள் தொடர்கதையாககும்.  

'மன்னித்துவிடு(ங்கள்)'  எனும் ஒரே வார்த்தையில் மறக்கப்படக் கூடிய தவறுகள் எத்தனை?  உலர்ந்துவிட்ட உறவும் நட்பும் மீண்டும் துளிர்க்கும் வாய்ப்புகள் எத்தனை?  தனிமரம் தோப்பாகாது.  ஒவ்வொரு தனிமனித வாழ்வின் உயர்விலும், தாழ்விலும் உறுதுணையாய் இருப்பது உன்னத உறவுகளும், உயர்ந்த சினேகங்களுமே.  

வாழ்க்கையில் வரப்பிரசாதமாய் கிடைத்த உறவுகளும், நட்புகளும் கைநழுவி போய்விடாமல் 'மன்னித்துவிடு(ங்கள்)'  என்ற ஒற்றை வார்த்தை காக்குமென்றால், நமது ஈகோவை விட்டு அதை உச்சரிப்பதில்தான  என்ன தவறு?  விடை காண வேண்டிய வினா.

- சுப்ரமண்யா செல்வா -  #செல்வாசகம்

https://youtu.be/SRITxY-GPMU

கருத்துகள் இல்லை: