வெள்ளி, 21 மே, 2021

வேர்களின் வேதம்

கண்ணுக்குத் தெரியாத வேர்களின் தயவில் கண்ணுக்குத் தெரியும் மரங்கள் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றன. இரையைத் தேடி விரையும் விலங்கினைப் போல, மரத்தின் வேர் விரல்கள் நீண்டு நீண்டு சென்று நீரையும் கனிமங்களையும் தேடிக் கண்டுபிடித்து  மரத்திற்கு கடத்துகின்றன. 

செக்கோயா (sequoia)  மரங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கலிபோனியா செம்மரங்கள் என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய மரங்களான இவை 380 அடி உயரமும் 30 அடி சுற்றளவு வரை வளரக்கூடியவை. பல நூற்றாண்டுகள் உயிர் வாழ்பவை.  கலிபோர்னியாவில் உள்ள தேசிய செக்கோயா பூங்காவில் இருக்கும் 2300 முதல் 2700 வருடங்கள் வரை  பழமையானது என கருதப்படும் ஜெனரல்  ஷேர்மன் என்னும் பெயர் கொண்ட செக்கோயா மரம்தான் இன்று உயிர்வாழும் செக்கோயா மரங்களிலேயே மிகவும் பழமையானது. 

அவ்வளவு பெரிய மரங்கள், அத்தனை ஆண்டுகள் உயிர் வாழ வேண்டுமென்றால் செக்கோயா மரங்களின் வேர்கள் வெகு ஆழத்திற்கு சென்றிருக்க வேண்டும் இல்லையா?  ஆனால் அவை அவ்வாறு இல்லை என்பதுதான் பேரதிசயம்.  செக்கோயா மரங்களின் வேர்கள் ஆறு முதல் ஏழு அடி ஆழம் வரை மட்டுமே செல்கின்றன.  ஆனால் அவை 100 அடி வரை பக்கவாட்டில் படர்ந்து பக்கத்தில் இருக்கும் மரங்களின் வேர்களை பற்றிக் கொள்கின்றன.  இவ்வாறு புதிதாக வளரும் சிறு மரம் முதற்கொண்டு ஒவ்வொரு மரமும் தனது பக்கத்தில் இருக்கும் மரத்துடன் கைகோர்த்து முழு  செம்மர வனங்களும் தமது ஒன்றுபட்ட ஆற்றலினால் காலத்தை வென்று கம்பீரமாக நிற்கின்றன. 

இது இயற்கை கற்றுத் தரும் இன்னுமொரு பாடம். 

இரண்டு விரல்களுக்கு இடையே இடைவெளி இருப்பது இன்னொரு கரங்களின் விரல்களைப் பற்றிக்கொள்ள.

ஒன்றுபட்டு எழுந்தால் எந்த உச்சத்தையும் தொடலாம்.  

- சுப்ரமண்ய செல்வா -     #செல்வாசகம்


2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

பெயரில்லா சொன்னது…

Teamwork