வெள்ளி, 28 மே, 2021

ஒரு பாறையின் கதை

 


பெருங்கற்கள் பல இருந்த ஓரிடத்தில் ஒரு பாறை மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. உளிகளும், சுத்தியல்களும் கொண்டு-வரப்பட்டன. சிற்பி தன் வேலையத் தொடங்கினார். பாறை அடிவாங்கத் தொடங்கியது. அதன் மேனியெங்கும் உளியின் கோரத்தாண்டவம். அதன் பல பகுதிகள் உடைபட்டு விலகிப்போயின. சுற்றியிருந்த மற்ற பாறைகளில் சில வெறுமனே வேடிக்கை பார்த்தன. சில தாங்கள் தப்பித்துவிட்டோமென அக-மகிழ்ந்தன. சில ஏளனப் பார்வை வீசின. சில அதன் வலி, வேதனை கண்டு உள்ளூர மகிழ்ந்தன. சில பரிதாபப்பட்டன. சில பரிதாபப்படுவதுபோல் பகல்வேஷம் போட்டன. நாட்கள் உருண்டோடின. சிதைக்கப்பட்ட பாறை அழகிய சிலையாய் உருவெடுத்தது. கோயிலின் கருவறையில் குடியேறியது. எல்லோரும் கைக்கூப்பி வணங்கும் கடவுளானது. எல்லா பாறைகளுக்கும் சிலையாகும் பேறு கிட்டுவதில்லை.  சிலையான பின்பு அவற்றை உளிகளும், சுத்தியல்களும் நெருங்குவதில்லை.   

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் தடைகளால்,  பிரச்சினைகளால்,  போராட்-டங்களால் நாம் உன்னத உயர்வுக்கு தயார்படுத்தப்படுகின்றோம்.  அவை நாமே அறியாத நமது ஆற்றல்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறன.  அவற்றின் நோக்கம் நம்மை உருக்குலைத்தல் அல்ல உருமாற்றுதல்.  பழைய இரும்பை உருக்குவது புதிய உரு கொடுப்பதற்காக. அசுத்தம் அகன்றபின் தங்கம் மேலும் புடம்போடப்படுவதில்லை.  பல்லாயிரம் ஆண்டுகளின் அழுத்தத்தினாலேயே சாதாரணக் கல்லும் வைரக்கல்லாய் வடிவெடுக்கிறது. நீண்ட தேடுதலுக்கும், தோண்டுதலுக்கும் பின்னேயே தங்கமும், வைரமும் தட்டுப்படுகின்றன. துன்பத்தின் படிப்பினையை கற்றாருக்கு துன்பத்திற்கே துன்பம் கொடுத்திடும் துணிவு பிறந்திடும். 

- சுப்ரமண்ய செல்வா -   #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

YouTube: https://youtube.com/c/SubramanyaSelva


கருத்துகள் இல்லை: