வியாழன், 29 நவம்பர், 2018

எண்ணிய வண்ணம் வாழ்வு: பகுதி-2 எண்ணமும் சூழ்நிலைகளும் (தொடர்ச்சி...)

மூலம்:  As a Man Thinketh by James Allen        தமிழில்: சுப்ரமண்ய செல்வா

துன்பம் என்பது எப்போதும் ஏதோ ஒரு வழியில் தவறான எண்ணத்தின் விளைவே.  அது ஒருவன் தன்னோடும், தன் இருப்பின் மூலமான நியதியோடும் இசைவாய் இல்லை என்பதன் அறிகுறியாகும்.  துன்பத்தின் ஒரே உன்னத நோக்கம் தூய்மைப்படுத்துவதாகும்.  தூய்மையான பின்பு துன்பம் தொடர்வதில்லை.  அழுக்கை அகற்றியபின் தங்கத்தை மேலும் எரிப்பதில் அர்த்தமில்லை; முற்றிலும் தூய்மையான ஒருவன் துன்பப்பட முடியாது.

ஒரு மனிதன் எதிர்கொள்ளும் துன்பம் மிக்க சூழ்நிலைகள் என்பன அவன் தன் அகத்தோடு இசைவற்று இருப்பதன் விளைவே.  அதேபோல் ஒருவன் எதிர்கொள்ளும் இன்பகரமான சூழ்நிலகள் என்பன அவன் தன் அகத்தோடு ஒத்திசைவாய் இருப்பதன் விளைவே.  இன்பம் என்பது சரியான எண்ணத்தினதும், துன்பம் என்பது தவறான எண்ணத்தினதும் சரிசமமான பங்காகும்.  அங்கே உள்ளவன் இல்லாதவன் என்ற பாகுபாட்டுக்கு இடமில்லை.  ஒருவன் செல்வந்தனாக ஆனால் சபிக்கப்பட்டவனாக இருக்கலாம்.  இன்னொருவன் ஏழையாக ஆனால் ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருக்கலாம்.  செல்வமும் மகிழ்ச்சியும் ஒன்றாயிருப்பது அந்த செல்வமானது நேர்மையான விவேவகமான முறையில் பயன்படுத்தப்படும் போது மட்டுமே.  அதேபோல் ஏழை துன்பக்குழியின் கீழே போவது அந்த துன்பமானது தன் மீது அநியாயமாக சுமத்தப்பட்டு இருக்கிறது என்று கருதும்போதே.

வறுமையும் மிதமிஞ்சிய அனுபோகமும் இழிநிலையின் இரு எல்லைகளாகும்.  இவை இரண்டும் இயற்கைக்கு மாறானதும், மனநோயின் விளைவும் ஆகும்.  ஒருவனின் சரியான, இயல்பான நிலை என்பது இன்பமாய், ஆரோக்கியமாய், செழுமையாய் இருத்தலே.  அத்தகைய உன்னத நிலையை அடைவது என்பது அவன் தனது அகத்தோடும் புறத்தோடும், தன்னுள்ளும் தன் புற சூழலோடும் இசைவிணக்கமாய் இருத்தலின் விளைவே.

ஒருவன் உண்மையான மனிதன் ஆகத் தொடங்குவது புலம்பலையும், நிந்தித்தலையும் நிறுத்தி, தன் வாழ்வை ஒழுங்குபடுத்துகின்ற அந்த மறைந்துள்ள மாறாத நியதியை தேட ஆரம்பிக்கும்போது மட்டுமே.  அப்படி அவன் தன் மனதை அந்த ஒழுங்கமைப்போடு இணைக்கும்போது, தனது நிலைமைக்கு மற்றவர்களே காரணம் எனக் குற்றஞ்சாற்றுதலை நிறுத்துகிறான்.  உயரிய எண்ணங்களால் தன்னை கட்டி எழுப்புகின்றான்.  புறச்சூழலோடு போரிடுவதை நிறுத்தி, அச்சூழ்நிலைகளையே தனது துரித முன்னேற்றத்திற்கும், தன்னுள் மறைந்திருக்கும் அற்புதமான ஆற்றல்களையும், சாத்தியங்களையும் கண்டறிய உபயோகப்படுத்திக் கொள்கின்றான்.

குழப்பங்கள் அல்ல, ஒழுங்கமைப்பே பிரபஞ்சத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற அடிப்படைக் கோட்பாடு.  அநீதி அல்ல, நீதியே வாழ்வின் சாரமும், ஆன்மாவும் ஆகும்.  ஒழுக்கக் கேடல்ல, நேர்மையே நம்மை  வடிவமைக்கின்ற, முன்னோக்கித் தள்ளுகின்ற ஆற்றல்.  இந்நியதிக்கொப்ப, பிரபஞ்சம் சரியாக இருக்க வேண்டுமெனில் ஒருவன் தன்னை சரிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.  அப்படி தன்னை சரிப்படுத் கொள்கின்ற இந்நிகழ்வின் போது, ஒருவன் பிற பொருட்களை, பிற மனிதர்களை நோக்கிய தனது எண்ணங்களை மாற்றும்போது, அதற்கொப்ப தன்னை நோக்கிய பிற பொருட்களின், பிற மனிதர்களின் எண்ணங்கள் மாற்றம் அடைவதை அறிந்துக் கொள்வான்.

இந்த உண்மையின் சான்று ஒவ்வொரு மனிதருள்ளும் இருக்கின்றது.  அதனை அறிந்துக்கொள்ள தேவை முறையான சுய ஆய்வும்  சுய பகுப்பாய்வுமே.  ஒருவன் தனது எண்ணங்களை தீவிரமாக மாற்றிப் பார்க்கட்டும்.  அது அவன் வாழ்வில் ஏற்படுத்தும் சடுதியான மாற்றங்களைக் கண்டு வியப்படைவான்.  மனிதர்கள் எண்ணங்களை இரகசியமாக வைத்திருக்க முடியும் என்று எண்ணுகிறார்கள்.  ஆனால் அது சாத்தியமன்று.  எண்ணம் பழக்கமாக வெளிப்படுகின்றது.  பழக்கம் அதற்கொத்த சூழ்நிலையை உருவாக்குகின்றது.  கீழ்த்தரமான எண்ணங்கள் குடி, சிற்றின்பம் முதலிய பழக்கங்கள் ஆகின்றன.  அவை நோய், அழிவு மிகுந்த சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  ஒவ்வொறு விதமான தூய்மையற்ற எண்ணங்களும், வலிமையற்ற குழப்பம் மிகுந்த பழக்கங்கள் ஆகின்றன.  அவை திசை மாற்றுகின்ற, தீமை விளைவிக்கின்ற சூழ்நிலைகளை உருவாக்கின்றன.  அச்சமிக்க, தடுமாற்றமான, உறுதியற்ற எண்ணங்கள் பலவீனமான, கோழைத்தனமான, உறுதியற்ற பழக்கங்கள் ஆகின்றன.  அவை அதற்கு ஒத்த தோல்வி, வறுமை, அடிமைப்பட்ட சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  சோம்பேறித்தனமான எண்ணங்கள், அசுத்தமான, நேர்மையற்ற பழக்கங்கள் ஆகின்றன.  அவை முறைதவறுகின்ற, கொடுவறுமை விளைவிக்கின்ற சூழ்நிலைகள உருவாக்குகின்றன.  பிறரை வெறுக்கின்ற, கண்டிக்கின்ற எண்ணங்கள், வீண் பழி சுமத்துகின்ற, அடவடித்தனமான (வன்முறை) பழக்கங்கள் ஆகின்றன.  அவை மற்றவர்களை காயப்படுத்துகின்ற, துன்புறுத்துகின்ற சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  எல்லாவிதமான சுயநல எண்ணங்களும் தன்னலமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை அதற்கொத்த துயரமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  அதேபோல் எல்லாவிதமான அழகான எண்ணங்களும், தயை மிகுந்த, கருணைமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை அதற்கொத்த அன்பான, பிரகாசமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  தூய்மையான எண்ணங்கள், இச்சை அடக்கிய, சுயகட்டுப்பாடுமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை சாந்தமான, அமைதியான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  தைரியமான, தன்னம்பிக்கைமிக்க மற்றும் தீர்மானமான எண்ணங்கள் வீறுமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை அதற்கொத்த வெற்றிமிக்க, அபரிமிதமான, சுதந்திரமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  ஆற்றல்மிக்க எண்ணங்கள் தூய்மையான, செயலூக்கமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை ரம்மியமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  மென்மையான, பிழை பொறுக்கின்ற எண்ணங்கள், சாந்தமிக்க பழக்கங்கள் ஆகின்றன.  அவை பாதுகாப்பான, இதமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.  அன்பு மிகுந்த, சுயநலமற்ற எண்ணங்கள், தன்னலமற்ற பழக்கங்கள் ஆகின்றன.  அவை நிச்சயமான நிலையான சுபீட்சம் மற்றும் உண்மையான செழிப்புமிக்க சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.

நன்மையானதோ தீமையானதோ, விடாப்பிடியாக தொடர்கின்ற ஒரு எண்ணம், அதற்கொத்த விளைவுகளை ஒருவருடைய குணத்திலும் சூழ்நிலையிலும் கொடுக்கத் தவறுவதில்லை.  ஒருவன் தன்னுடைய சூழ்நிலைகளை நேரடியாக தேர்ந்தெடுக்க முடியாது.  ஆனால் அவனால் தன் எண்ணங்களை தேர்ந்தெடுக்க முடியும்.  அதன் மூலம் மறைமுகமாக, ஆனால் நிச்சயமாக, தனது சூழ்நிலைகளை வடிவமைக்க முடியும்.

இயற்கையானது ஒருவன் தன்னுள் அதிகமாக ஊக்குவிக்கின்ற எண்ணங்களை ஈடேற்ற உதவுகிறது.  நல்லதும் கெட்டதுமான எண்ணங்களை விரைவில் வெளிக்கொணர்வதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன.

ஒருவன் தனது பாவமிக்க எண்ணங்களை நிறுத்தட்டும்.  முழு உலகமும் அவனை நோக்கி கனிவோடு திரும்பும்.  அவனுக்கு உதவத் தயாராகும்.  அவன் தனது நலிந்த, ஆரோக்கியமற்ற எண்ணங்களை தூர விலக்கட்டும்.  ஆஹா.. அவனது உறுதியான முடிவுக்கு உதவுவதற்கு ஒவ்வொரு கரங்களிலிருந்தும் வாய்ப்புகள் பூக்கும்.  அவன் தன்னுள் நல்ல எண்ணங்களை ஊக்குவிக்கட்டும்.  எந்தத் தலைவிதியும் அவனை துர்பாக்கிய குழியினுள் தள்ளாது.  உலகம் என்பது ஒரு பல்வண்ணக் காட்சிக் கருவி.  அது அடுத்தடுத்து நகர்கின்ற கணங்களில் காட்டுகின்ற மாறுபட்ட பல வண்ணங்களின் கூட்டு என்பது வேறு எதுவுமன்று.  அவை சதா ஓடுகின்ற உங்கள் எண்ணங்களைக் கொண்டு மிக நேர்த்தியாக ஒழுங்குப்படுத்தப்பட்ட படங்களே.

ஆவாய் நீ நின் சித்தம்படி.
தோல்வி திருப்திபட்டுக்கொள்ளட்டும்
சூழ்நிலை எனும் அந்த மாய உலகில்.
ஆன்மா அதனை வெறுக்கின்றது.
ஏனெனில்அது சுதந்திரமானது.

அது
காலத்தை ஆள்கின்றது;  பரவெளியை வெற்றிகொள்கிறது.
சந்தர்ப்பம் எனும் வஞ்சகனை அடக்கியாள்கின்றது.
சூழ்நிலை எனும் கொடுங்கோலனை
வீழ்த்தி அடிமையாக்குகின்றது.

மனித சித்தம்
அந்த
பார்வைக்கு புலப்படா(த) பேராற்றல்
அழிவற்ற ஆன்மாவின் ஆசைக் குழந்தை
எந்த இலக்கை நோக்கியும்
எந்த தடையையும் தகர்த்துச் செல்லும்

எனவே
காலதாமத்தினால் கலங்காதீர் - (யாவும்)
அறிந்தவராய் காத்திருப்பீர்
ஆன்மா எழுந்து ஆணையிடும்போது
அனைத்து கடவுளரும்
பணிவிடைபுரிய பார்த்திருப்பர்.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (25.11..2018)

கருத்துகள் இல்லை: