வியாழன், 15 பிப்ரவரி, 2018

வாழ்க்கையின் தருணங்கள்

வாழ்க்கையில் சில தருணங்களில் சிலரின் பிரிவு நம்மை அவ்வளவு பாதிக்கிறது, அவர்களை நாம் நம் கனவுகளிலிருந்து அள்ளியெடுத்து நிஜமாகவே ஆரத்தழுவ ஆசைப்படுகிறோம்.

ஒரு சந்தோஷக்கதவு மூடிக்கொள்ளும் போது இன்னொன்று தானாக திறந்து கொள்கிறது. ஆனால் நாம் அநேக வேளைகளில் மூடிய கதவையே பார்த்துக் கொண்டிருப்பதால் திறந்திருக்கும் கதவை கவனிக்க தவறிவிடுகிறோம்.

வெளித்தோற்றத்தில் மயங்கி விடாதீர்கள். அவை உங்களை ஏமாற்றிவிடும். செல்வத்தில் மயங்கி விடாதீர்கள். அவை கூட மறைந்து விடும். உங்களை புன்னகைக்க வைக்கக்கூடியவரை தேடுங்கள். ஏனெனில் புன்னகையால்தான் ஒரு இருண்ட நாளை ஒளிமயமாக்க முடியும். உங்கள் உள்ளங்களை புன்னகைக்க வைக்கக் கூடிய உறவைத் தேடுங்கள்.

விரும்பிய கனவுகளைக் காணுங்கள். விரும்பிய இடத்திற்கெல்லாம் செல்லுங்கள். என்னவாக விரும்புகின்றீர்களோ அவ்வாறே ஆகுங்கள். ஏனெனில் இவையனைத்தையும் செய்ய உங்களுக்கு இருப்பது ஒரு வாழ்க்கை, ஒரு வாய்ப்பு.

வாழ்க்கை உங்களை இனிமையானவராக்க இன்பத்தை தரட்டும்; வலிமையுள்ளவராக்க சோதனைகளைத் தரட்டும்; பணிவுள்ளவராக்க துயரங்களைத் தரட்டும்; மகிழ்ச்சிமிக்கவராக்க நம்பிக்கைகளைத் தரட்டும்.

எல்லா பெருமகிழ்ச்சிமிக்கவர்களும் எல்லா சிறப்புகளையும் பெற்றவர்கள் அல்ல; அவர்கள் கிடைத்ததை சிறப்பாக்கிக் கொண்டவர்கள்.

எப்போதும் மறக்கப்பட்ட கடந்தகாலத்திலேயே ஒளிமயமான எதிர்காலம் தங்கியிருக்கிறது. நேற்றைய தோல்விகளையும், வேதனைகளையும் சுமந்தவாறு நாளையை நோக்கி நடைபோட முடியாது.

நீங்கள் பிறந்தபோது நீங்கள் அழுதீர்கள்; சுற்றியிருந்தோரெல்லாம் புன்னகைத்தார்கள். நீங்கள் இறக்கும்போது நீங்கள் புன்னகையோடு விடைபெறக்கூடிய, உங்களைச் சுற்றியிருப்போரெல்லாம் அழக்கூடிய ஒரு வாழ்க்கையை இறுதிவரை வாழுங்கள்.

வருடங்களை கணக்கிடாதீர்கள்; நினைவுகளை கணக்கிடுங்கள்.

வாழ்க்கையின் அர்த்தம் எத்தனை முறை சுவாசிக்கிறோம் என்பதில் அல்ல, எத்தனை முறை மூச்சுவிட மறந்து வியந்து நிற்கிறோமோ அந்த அற்புதத் தருணங்களில் இருக்கிறது.

(வாசித்து சேமித்து வைத்தது. ஆங்கில மூலம் எழுதியது யாரென்று தெரியவில்லை.
தமிழிலில்: சுப்ரமண்ய செல்வா)

கருத்துகள் இல்லை: