செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

உங்கள் மீது பதிந்த சிறு விழிகள்...


அந்தச் சின்னஞ்சிறு விழிகள்
உங்களையே கவனிக்கின்றன
இரவும் பகலும் எப்பொழுதும்.

அந்தச் சின்னஞ்சிறு செவிகள்
திறந்தேயிருக்கின்றன
உங்களது ஒவ்வொறு சொல்லையும்
உடனுக்குடன் உள்வாங்க.

அந்தச் சின்னஞ்சிறு கரங்கள்
பரபரக்கின்றன
நீங்கள் செய்வதத்தனையையும் செய்வதற்காக.

அந்தச் சின்னஞ்சிறு மனது
கனவு காண்கிறது
உங்களைப்போல் உருவாகும்
அந்த ஒரு நாளுக்காக.

நீங்களே அவனின் நாயகன்; நீங்களே
அறிவாளிகளுக்கெல்லாம் அறிவாளி.
ஐயமேதும் இல்லை உங்களில்
அந்த சின்ஞ்சிறு நெஞ்சினில்.

முற்றுமுழுதாய் அவன் நம்புகின்றான்;
நீங்கள் சொல்வதனைத்தையும்
நீங்கள் செய்வதனைத்தையும்.
உங்களைப்போல் ஒருநாள் பெரியவனாகி
உங்களைப்போலவே பேசுவான்
உங்களைப்போலவே நடப்பான்.

அகல விழி திறந்த அந்தச் சிறுவன்
நம்புகிறான்
நீங்கள் எப்பொழுதும் சரியென்று.
உங்கள்
ஒவ்வொறு வாக்கும் திருவாக்கே
ஒவ்வொறு செயலும் நற்செயலே.

அந்த சின்ஞ்சிறு விழிகள்
திறந்தேயிருக்கின்றன.
இரவும் பகலும் எப்பொழுதும்
உங்களையே அவை கவனிக்கின்றன.

ஒவ்வொறு நாளும்
உங்கள் எல்லா செயல்களிளும்
தடம்விட்டுச் செல்கிறீர்கள் நீங்கள்.
உங்களைப்போல் வளரக் காத்திருக்கும்
அந்தச் சின்னஞ்சிறு கால்கள்
உங்கள் தடம்பற்றியே நடக்கும்.

(ஆங்கில மூலக்கவிதையை எழுதியது யாரென்று தெரியவில்லை.
தமிழில்: சுப்ரமண்ய செல்வா)

கருத்துகள் இல்லை: