வெள்ளி, 23 மார்ச், 2018

நின்றுபோன மனிதத்தின் இதயம்

(சிரியப் போரில் கொள்ளப்படும் பொதுமக்களில் நால்வரில் ஒருவர் ஒரு குழந்தை - அண்மையச் செய்தி)
===================================================================

குழந்தையும் தெய்வமும்
ஒன்றென்றால்
சிரியத் தெருக்களில்
தினமும்
சிதறிச் சாகின்றன
சிலநூறு தெய்வங்கள்.
தெய்வங்களைக் காக்கும்
தெய்வமெது?
*  *  *  *
வல்லாதிக்க அரக்கர்களின்
விளையாட்டு பூமியில்
உதைபடும் பந்துகளாய்
சிரியச் சிறார்களின்
பிஞ்சுத்தலைகள்.
*  *  *  *
மானுடமும் ஊடகமும்
வளர்க்கும்
மௌன நெருப்பில்
தீக்குளித்து
உயிர்த்துறக்கின்றன
சிரிய மொட்டுக்கள்.
*  *  *  *
மனிதவுரிமை வள்ளல்களின்
மரண மௌனத்தில் கிழிகிறது
மனிதத்தின் செவிப்பறை.
*  *  *  *
அன்று ஈழம்
இன்று சிரியா
அதே மௌனம்
அதே அலட்சியம்
அதே வேடிக்கை நோக்கு.
மரணம்
தம் வாசல் வரும்வரை
மௌனித்திருத்தலே
மானுடத்தின் பெருஞ்சாபம்.
*  *  *  *
எஞ்சியிருக்கும்
பிஞ்சு விழிகளின்
ஒரே கேள்வி...
எந்த அதிர்ச்சி வைத்தியம்
நின்றுபோன
மனிதத்தின் இதயத்தை
துடிக்கச் செய்யும்?

- சுப்ரமண்ய செல்வா -

கருத்துகள் இல்லை: