புதன், 28 மார்ச், 2018

பயணிக்காத பாதை

இலையுதிர்கால
எழில் வனமொன்றினில்
பிரிந்து நீண்டன
பாதைகள் இரண்டு

இரண்டிலும் ஒன்றாய்
பயணிக்க இயலா
பரிதவிப்பில் நான்
பார்த்து நின்றேன்
பாதை ஒன்றினை;
பார்வைக்கெட்டிய
புதர் நிறைந்த
வளைவுவரை.

பின்பு நான்
மறுபாதையினைத் தேர்ந்தேன்;
பாதங்கள் ஸ்பரிசிக்காத
பசும்புல் பாதையது.

அந்தக் காலை பொழுதினில்
சரிநிகராய் விரிந்தன
இருபாதைகளும்;
பாதங்கள் பட்டு சருகாகா
பச்சிலைப் பாதைகள் இரண்டு.

முன்னையப் பாதயினை
இன்னொரு நாளுக்கு
ஒதுக்கினேன்.
ஆயினும் நானறிவேன்
ஒருபாதையின் முடிவில்
வேறொரு பாதைத் தொடங்கும்
மாயப் பயணமிது.
இன்னொரு நாள் நான்
இவ்வழி வருவது ஐயமே.

யுகயுகங்களை கடந்து ஓர்நாளில்
பெருமூச்சுடன் பகர்வேன்;
எழில்வனமொன்றினில்
பிரிந்து நீண்டன
பாதைகள் இரண்டு
நான்
பயணம் குறைந்த
பாதையினைத் தேர்ந்தேன்.
அதனால் விளைந்தன
அனைத்து மாற்றங்களும்.

மூலம்: The Road Not Taken by Robert Frost
தமிழில்: - சுப்ரமண்ய செல்வா -

கருத்துகள் இல்லை: