திங்கள், 1 அக்டோபர், 2018

ஒரு ஒப்புதல் வாக்குமூலம்

(இன்று உலக சிறுவர்கள் தினம்)

உலகச் சிறார்களே
உங்களிடம் அளிக்க
எங்களிடம் பாக்கியிருக்கிறது
ஒரு ஒப்புதல் வாக்குமூலம்

உங்களிடம் தருவதாய்
உறுதியளித்து
எங்கள் பெற்றோரிடமிருந்து
பெற்றுக்கொண்ட
பொக்கிஷமொன்றை
காணாமலாக்கிவிட்டோம்
அறியாதல்ல
அறிந்தே செய்தோம்

அது

மாசற்ற மண்ணும்
பசுமரக் காடுகளும்
தூசற்ற காற்றும்
தூய நன்னீரும்
காசுக்கு விலைபோகா
மாசிலாமணிகள் ஆண்ட
உன்னத உலகம்

ஆம் அதை
தெரிந்தே தொலைத்தோம்

உங்களிடம் கையளிக்க
எங்கள் பாவக்கரங்கள் கொண்டு
ஒரு புதிய உலகை
உருவாக்கினோம்

மரங்களை வீழ்த்தி
மழையை விரட்டினோம்
வேதியுரம் கொண்டு
மண்வளம் அழித்தோம்
கரிவளி கக்கச் செய்து
காற்றை கறைபடுத்தினோம்
ஒசோன் போர்வையில்
ஓட்டைப் போட்டோம்
நெகிழிக் கயிறுகொண்டு
நிலமகளை தூக்கிலிட்டோம்

மதமென்றும் இனமென்றும்
மனிதரைப் பிரித்தாளும்
சதி பயின்றோம்

உன்னத தியாகிகளை
உதைத்து விரட்டிவிட்டு
காடையர்கள் பாராள
காரணமானோம்
வாழத் தெரியாதோர்
வாழும் உலகில்
ஆளத்தெரியாதோர்
ஆட்சிதானே நடக்கும்!

அன்புச் செல்வங்களே!
அசலைத் தொலைத்துவிட்டு
போலியை கையளித்த
பாவிகளை மன்னியுங்கள்

உங்கள் பூக்கரங்கள் கொண்டு
ஒரு புத்துலகை படைத்திடுங்கள்
உங்கள் பிள்ளைகளிடம் அதனை
உவப்போடு அளித்திடுங்கள்

போலியை மீண்டும் அசலாக்கும்
புனிதப் புரட்சி மலரட்டும்!

- சுப்ரமண்ய செல்வா -

கருத்துகள் இல்லை: