ஞாயிறு, 14 அக்டோபர், 2018

இடம்பெயர்வு

ஒரு மலர்வனத்தின் மொத்த  சுகந்தத்தையும்
சுமந்து கொண்டிருக்கிறது
நீ விட்டுச்சென்ற
மல்லிகையின் ஒற்றையிதழ்

பறந்த பின்னும்
விரல்களில் ஒட்டியிருக்கும்
பட்டாம்பூச்சியின் நிறத் துகள்கள் போல்
உரசிச் சென்ற
உன் தாவணியின்  வண்ணங்கள்
என் மேனி எங்கும்

உன் ஓர விழி பாச்சிய
வெளிச்சத்தின் பிரவாகத்தில்
புலர்ந்தே கிடக்கின்றன
என் பொழுதுகள்

ஓயாது ரீங்கரிக்கும்
உன் கொலுசொலியின் நாதத்தில்
கிறங்கிக் கிடக்கின்றன
செவிகள்

நா வறண்ட பின்னும்
நீரருந்த மறுத்து
நீ தந்த தேனீர்ச் சுவையில்
திளைத்திருக்கிறது என் நா

எனதான சித்திரங்கள்
அத்தனையும் அழிக்கப்பட்டு
உன்னுருவம் மட்டுமே
வியாபித்திருக்கிறது
மனவெளியெங்கும்

எனதென்று சொல்ல
எனது உயிரை மட்டுமே
மிச்சம் விட்டாய்

அரை நிமிட அருகாமையில்
உன்னை விட்டுவிட்டு
என்னை எடுத்துச் செல்லும்
மாயவித்தையை
எங்கு கற்றாய்?

- சுப்ரமண்ய செல்வா -

நன்றி: தினகரன் வாரமஞ்சரி (18.11.2018)

கருத்துகள் இல்லை: