செவ்வாய், 2 அக்டோபர், 2018

குடிக்காதவன் குடியும் கெடுமோ?

குடி குடியைக் கெடுக்குமென்று
கூக்குரலிட்டவனின்
குரல்வளை நசுக்கப்பட்டு
கெட்டுக் கிடக்கிறது அவன் குடி

'காக்கிகள்
கசிப்பினை ஒழித்திருந்தால்
கணவர் பிழைத்திருப்பார்'
அவளின் அழுகுரல் எதிரொலிக்கிறது
அவன் சாய்க்கப்பட்ட
இறப்பர் மரக் காடெங்கும்

வருமுன் காத்தல்
சமூக நோய்களுக்கு
பொருந்தாது போலும்

'உள்ளூர் போலீஸ் முதல்
நாட்டின் அதிபர் வரை
சொல்லியும் பயனில்லையே'
புத்திர சோகத்தில்
புலம்பும் தந்தை

ஏழையின் குரல் எப்பொழுது அப்பா
ஆளும் செவிகளை எட்டியது?
நாட்டை ஆள்பவர்களுக்கு - உன்
தோட்டப் பிரச்சினை துச்சம்

கசிப்பரக்கனிடமிருந்து
சக மனிதரைக் காக்க
அவன் கொடுத்த விலை
மிகப் பெரிது

அதிகாரத்தின்
குருடான கண்களையும்
செவிடான செவிகளையும்
பிரிந்த அவன் உயிர் கொண்டு
உயிர்ப்பித்து
கள்ளச்சாராயம்
இல்லாதொழியும் ஓர் நாளில்
அவன் பிறப்பும் இறப்பும் அர்த்தம் பெறும்

- சுப்ரமண்ய செல்வா -

(கள்ளச்சாரயத்திற்கு எதிராக போராடி படுகொலை செய்யப்பட்ட பாம்கார்டன் தோட்ட சமூக போராளி விஜேரத்னத்திற்கு சமர்ப்பணம்)

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (14.10.2018)

கருத்துகள் இல்லை: