திங்கள், 1 அக்டோபர், 2018

நீதியின் நிறம் கருப்பு

கருப்பு அப்பிக் கிடக்கின்றது
நீதிமன்றம் எங்கும்

குற்றம் செய்தவனும் 
குற்றம் சொன்னவனும்
காத்திருக்கிறார்கள்
கருத்த முகங்களுடன்

மழை நாளொன்றில் பூத்த சுவர் பாசிகள்
இந்தக் கொடு வெப்ப நாளில்
காய்ந்து கருத்துக் கிடக்கின்றன

கருப்பங்கி போர்த்தி
வழக்காடு பவரின்
கருவிழித் தூண்டில்கள்
காத்துக்கிடக்கின்றன
ஒரு கருப்பு மீன் இரைக்காக

கருப்பு சிறை வண்டியில்
வந்திறங்கிய
கைதிகளின் ஊர்வலம்

கருப்பு கம்பிகளின் பின்னே
அச்சத்துடன்
அலட்சியத்துடன்
துக்கத்துடன்
ஏக்கத்துடன்
கண்ணீருடன்
கவலையுடன்
அலைபாயும் கருவிழிகள்

கருத்த மேலுடை தரித்த
நீதிபதியின்
கருமை நிற எழுதுகோல்
கருப்பு மையில் எழுதிச் செல்கிறது
சில கருத்த தீர்ப்புகளை

வழக்குத் தொடுத்த
பாவத்திற்கு தண்டனையாக
நான்கு மணிநேரம்
கால்கடுக்க நின்று
வாய்தா சாபம் பெற்று
அந்த கருத்த நாளை
சபித்துச் செல்கிறான்
ஒரு வாதி

நீதிதேவதையின்
கண்களைச் சுற்றிய
கருப்புத் துணி
கொஞ்சம் விலகி இருக்கிறது
யாரேனும் இறுகக் கட்டி விடுங்களேன்.

- சுப்ரமண்ய செல்வா -
(27.09.2018)

(சில நாட்களுக்கு முன் நான் தொடுத்த வழக்கு நிமித்தம் நீதிமன்றம் சென்றிருந்தேன்)

நன்றி: தினகரன் வாரமஞ்சரி (21.10.2018)

கருத்துகள் இல்லை: