ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

மழை மாலைப்பொழுது

சட்டென வந்துவிட்டது மழை
அறிந்திருந்தால்
வெறுந்தேநீர் கருப்பட்டியுடன்
காத்திருந்திருப்பேன்
வெருட்டும் இடி மின்னலை விட்டுவிட்டு
தென்றலை மட்டும் கூட்டி வந்திருக்கலாம்
மழையைப்போல் தென்றலுக்கும் குளிர்மை குணம்
சந்தோஷ சப்தத்தோடு கொட்டித் தீர்க்கிறது.
சாளரத்தில் பட்டுத்தெறிக்கும் சாரல்
சருமத்தை ஸ்பரிசித்து சிலிர்ப்பூட்டுகிறது.
அடையாளச் சுமைகளை இறக்கிவிட்டு
கூச்சத்தை பறக்கவிட்டு
கொட்டும் மழையில் இலக்கற்று நடக்கும்
வேட்கை மிகுகிறது
தரையைத் தழுவும் மழைநீர்
கழுவிச்செல்கிறது
எல்லா அழுக்குகளையும்
மழை வரவின் ஆச்சர்யம் விலகி
மழை உணர்ந்து
மழையில் லயித்து
மழையாகும் வேளை
கிளம்பிச் செல்கிறது மழை
மழைப்பாடலை முணுமுணுத்திருக்கிறது தூவானம்
கண்ணீரைப்போல மழைநீராலும் முடிகிறது
மனதை ஈரமாக்கிச் செல்ல.
- சுப்ரமண்ய செல்வா -

கருத்துகள் இல்லை: