வியாழன், 6 அக்டோபர், 2016

கற்றுத் தந்த கடவுளர்கள்...

தாய்
முதல் ஆசிரியை
ஆசிரியை
இரண்டாவது தாய்
ஆசிரியன்
தாயுமானவன்!

அன்னை தந்தைக்கு
அடுத்த தெய்வம்...
அருளியதனைத்தும்
அழியாச் செல்வம்

கருங்கற் பாறைகளை
கலைநயச் சிலைகளாய்
செதுக்கிய உளிகள்
ஒதுங்கிப் பார்த்து
உவகையுறும்

அறிவொளி காட்டி
அறியாமை இருளகற்றி
தடம் மாறும் தருணங்களில்
கரம்பற்றி வழிகாட்டி
நல்லதை ஊட்டி
அல்லதை அகற்றி
கனவுகள் விதைத்து - பெருங்
காட்சிகள் காட்டி...

இன்னொரு தாயாய்
இன்னொரு தந்தையாய்
ஒரு தாய் வழிப் பிறப்பாய்
உறவாய் நட்பாய்...

பிறப்பெத்தனை வேண்டும்
பெற்றதை ஈடு செய்ய

நாமறிந்த தமிழில்
'நன்றி' தவிர வேறில்லை!

--  சுப்ரமண்ய செல்வா  --

(06.10.2016 - ஆசிரியர் தினம்  -  நேற்றைய.. இன்றைய... நாளைய ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்)

கருத்துகள் இல்லை: