வியாழன், 5 அக்டோபர், 2017

பாலர்பாடம்

வெண்சீருடை சிறகடித்து
வெள்ளந்தி  சிரிப்புதிர்த்து
பள்ளிச்செல்லும் பாலகரை
பார்த்திருத்தல் பரவசம்

நேற்றைய கவலைகளில்லை
நாளைய பயங்களில்லை
இன்றைய வரங்களை
கொண்டாடும் குதூகலம்

இனமில்லை மதமில்லை
இகழ்ந்தொதுக்கும் குணமில்லை
ஏற்றமில்லை தாழ்வுமில்லை
வேற்றுமை வேறெதுவுமில்லை
பொதுமை அறம்
போற்றும் பருவம்

எதிர்ப்பார்ப்பு ஏதுமில்லை
புதிரான வாழ்க்கையில்லை
எதிரிகள் யாருமில்லை
சதிசெய்யும்  எண்ணமில்லை
புதிதாய் அன்றலர்ந்த
பூக்களின் தரிசனம்.

மாசுநிறை நெஞ்சமில்லை
பேசுமொழியில் கள்ளமில்லை
காசுநிறை மாந்தரை
பூசிக்கும் புத்தியில்லை
யோசித்து உறவாடா
நேசிக்கும் நெஞ்சம்.

முகமூடி ஏதுமில்லை
அகம் மூடி அலைவதில்லை
சுகம் தரும் உறவு தேடி
சுயம் தொலைத்து திரிவதில்லை
பள்ளமில்லா உள்ளமெங்கும்
எல்லையில்லா ஏகாந்தம்.

பள்ளிச்செல்லும் பாதைகளில்

பாடங்களை விட்டுச்செல்லும்

பிள்ளைச்செல்வங்களே

கற்கச் செல்லும் வழியில்

நீங்கள்

கற்பித்துச் செல்கிறீர்கள்

- சுப்ரமண்ய செல்வா -   #செல்வாசகம்

கருத்துகள் இல்லை: