திங்கள், 21 ஜனவரி, 2019

எண்ணிய வண்ணம் வாழ்வு: பகுதி-4 - எண்ணமும் குறிக்கோளும்

மூலம்:  As a Man Thinketh by James Allen         தமிழில்: சுப்ரமண்ய செல்வா

குறிக்கோளானது எண்ணத்தோடு இணைக்கப்படாதவரை எவ்வித அறிவார்ந்த சாதனையும் சாத்தியமில்லை.  பலர் தங்கள் வாழ்க்கை என்னும் கடலினில் எண்ணம் என்கிற பாய்மரக் கப்பலை வெறுமனே அலைய விட்டு விடுகிறார்கள்.  இலக்கில்லாமை என்பது ஒரு பெருங்குறையாகும்.  இடரினை, அழிவினை தவிர்த்து பயணிக்க விரும்புகிறவனின் வாழ்வில் இத்தகைய அலைக்கழிப்புகள் தொடரக் கூடாது.

தங்கள் வாழ்வில் எவ்வித மைய நோக்கமும் இல்லாதவர்கள்தான் எளிதில் அற்பமான கவலைகள், அச்சங்கள், பிரச்சினைகள் மற்றும் சுயபச்சாதாபத்திற்கு இரையாகிறார்கள்.  இவை அவர்களை -  திட்டமிட்டு செய்த பாவங்கள் போன்றே - பிறிதொரு வழியில் நிச்சயமாக தோல்வி, வருத்தம், இழப்பை நோக்கி இட்டுச் செல்கின்றன.  ஏனெனில் ஆற்றல் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும் இப்பிரபஞ்சத்தில் பலவீனம் நிலைத்திருக்க முடியாது.

மனிதன் தனது இதயத்தில் நியாயமான குறிக்கோள் ஒன்றினை சிருஷ்டிக்க வேண்டும்.  அக்குறிக்கோளினை நிறைவேற்ற புறப்பட வேண்டும்.  அந்த அக்குறிக்கோளினை தனது எண்ணங்களின் மையப் புள்ளியாக ஆக்க வேண்டும்.  அந்தக் குறிக்கோளானது அவனது தற்போதைய நிலமைக்கு ஏற்ப, ஆன்மீக இலட்சியமாக இருக்கலாம் அல்லது லௌகீக இலட்சியமாகவும் இருக்கலாம்.  அது எவ்வாறெனினும் அவன் தனது முழு எண்ண ஆற்றலையும் அந்த இலட்சியத்தின் மீது நிலையாக குவிக்க வேண்டும்.  தனது எண்ணங்களை நிலையற்ற மாயைகளிலும், ஆசைகளிலும், கற்பனைகளிலும் அலைய விடாமல், அந்தக் குறிக்கோளை தனது உயரிய கடமையாக ஆக்கி அதனை அடைவதற்கு தன்னை அர்பணிக்க வேண்டும்.  இதுவே சுயக்கட்டுப்பாட்டுக்கும் எண்ண ஒருமுகத்திற்குமான உன்னத வழியாகும்.  அந்த குறிக்கோளினை அடைவதில் அவன் மீண்டும் மீண்டும் தோல்வி அடையினும் (பலகீனத்தை வெற்றிக்கொள்ளும் வரை தோல்வி என்பது இயல்பானதே) அதனிலிருந்த அவன் பெற்ற ஆளுமையின் வலிமை என்பதே அவன் அடைந்துள்ள உண்மையான வெற்றியின் அளவுகோலாகும்.  அது அவனது எதிர்கால பலத்திற்கும் மிகப்பெரிய வெற்றிகளுக்குமான ஆரம்பப் புள்ளியாக அமையும்.

உயர்ந்த குறிக்கோள் மீதான அச்சத்தினால் அதற்கு தயாராய் இல்லாதவர்கள் தங்கள் கடமையை (அது எத்துனை சிறிய பணியாயினும்) குறையின்றி ஆற்றுவதில் தங்கள் எண்ணங்களை நிலைக்கச் செய்தல் வேண்டும்.  இதன் மூலம் மட்டுமே எண்ணங்களை ஒருங்கிணைத்து ஒருமுகப்படுத்த முடியும்; மன உறுதியையும், ஆற்றலையும் மேம்படுத்த முடியும்.  இதனை செய்யும்விடத்து சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.

ஆற்றலை முயற்சியினாலும் பயிற்சியினாலும் மட்டுமே மேம்படுத்த முடியும்.  தனது பலகீனத்தை அறிந்த மிகவும் பலகீனமான ஆன்மா கூட இந்த உண்மையை ஒப்புக் கொண்டு சிறிது சிறிதாக முயற்சியை, பொறுமையை, ஆற்றலை அதிகரிக்கும்போது, மேம்பாடும், இறுதியில் தெய்வீகமான ஆற்றலும் பெற்று உயரும்.

எப்படி ஒரு பலகீனமான உடலை உடையவன் கவனமும் பொறுமையுடனான பயிற்சியின் மூலம் தன்னை வலுப்படுத்திக் கொள்ள முடியுமோ, அதுபோலவே பலகீனமான எண்ணங்களை கொண்ட ஒருவன் சரியான எண்ணங்களைக் கொண்ட பயிற்சியினால் அவற்றை வலுப்படுத்திக் கொள்ள முடியும்.

வலியவர்கள் தோல்வியை தங்கள் இலக்கை அடைவதற்கான ஒரு பாதையாக மட்டுமே காண்கிறார்கள்.  எல்லா நிலைமைகளையும் தங்களுக்கு  சாதகமாக்கிக் கொள்கிறார்கள்.  உறுதியாக சிந்தித்து, அச்சமின்றி முயன்று அற்புதமாக சாதிக்கிறார்கள்.  பலகீனத்தையும், குறிக்கோளின்மையையும் ஓரங்கட்டி தனது குறிக்கோளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கும் ஒருவன் இவர்களில் ஒருவன் ஆகிறான்.

குறிக்கோளை சிருஷ்டித்தவுடன் மனிதன் அதனை அடைவதற்கான நேரான பாதை ஒன்றினை மனதினில் உருவாக்கிக் கொள்ளல் வேண்டும்.  வலமோ இடமோ நோக்காமல் அவ்வழியில் பயணிக்கத் தொடங்க வேண்டும்.  ஐயங்களும் அச்சங்களும் கண்டிப்புடன் களையப்படல் வேண்டும்.  ஏனெனில் அவை முயற்சி என்கிற நேர்க்கோட்டினை சிதைத்து அதனை வளைவான, வீணான, பயனற்றதாக ஆக்கி விடும்.  ஐயமும் அச்சமுமான எண்ணங்களால் எதனையும் சாதிக்க முடியாது.  அவை எப்போதும் தோல்வியை நோக்கியே இட்டுச் செல்லும்.  அவை உட்புகுந்தவுடன் நோக்கம், ஆற்றல், சாதிப்பதற்கான பலம் மற்றும் அனைத்து வலிமையான எண்ணங்களும் நின்று விடும்.

சாதிக்க வேண்டும் என்கிற மனவுறுதி சாதிக்க முடியும் என்கிற ஞானத்தின் மூலமே மேல் எழுகிறது.  ஐயமும் அச்சமும் அந்த ஞானத்தின் பரம எதிரிகள்.  அவற்றை அடிமைபடுத்தாமல் ஊக்குவிக்கின்ற ஒருவன் ஒவ்வொறு அடியிலும் இடையூறுகளை எதிர்கொள்வான்.

ஐயத்தையும் அச்சத்தையும் வெற்றிக் கொண்டவன் தோல்வியை வெற்றிக் கொள்கிறான்.  அவனதும் ஒவ்வொறு எண்ணமும் ஆற்றலோடு ஒன்றிணைந்து இருக்கும்.  எல்லா கஷ்டங்களும் தைரியமாய் எதிர்கொள்ளப்பட்டு விவேகமாய் வெற்றிக் கொள்ளப்படும்.  அவனது குறிகோள்கள் உரிய காலத்தில் பயிரிடப்பட்டு, மலர்ந்து, பருவத்தின் முன் வீழாத கனியைத் தரும்.

குறிக்கோளுடன் அச்சமின்றி ஒன்றிணைக்கப்பட்ட எண்ணமானது ஆக்கச் சக்தியாக மாறுகின்றது.  இதனை அறிந்த ஒருவன் வெறும் நிலையற்ற எண்ணங்களை, அலைபாயும் உணர்ச்சிகளைக் கடந்து உயர்ந்தவனாய், வலிமையானவனாய் ஆகத் தயாராகிறான்.  இதனை செயல்படுத்துகின்ற ஒருவன் தனது மனோ வலிமையை உணர்வுப் பூர்வமாக, புத்திசாலித்தனமாக கையாள்கிறவன் ஆகிறான்.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி / செந்தூரம் (21.01.2019)

கருத்துகள் இல்லை: