சனி, 1 ஏப்ரல், 2023

மதிப்பீடுகள் மாறினால்...

 ஒரு ஆங்கில முதுமொழி இது:

ஒருவரை மதிப்பிடும் முன் அவருடைய காலணிகளில் ஒரு மைல்  தூரம் நடந்து பாருங்கள்.  (Before you judge a man, walk a mile in his shoes).

அந்த காலணிகள் பெரும்பாலும் நமக்கு பொருந்தாமலேயே இருக்கும். சில தளர்வானதாக, சில இறுக்கமானதாக, இன்னும் சில மிகவும் தேய்ந்து போய் அல்லது கிழிந்து போய் அதை அவர்கள் எப்படி அணிகிறார்கள் என்று ஆச்சரியம் தருவதாக இருக்கும்.  

நாம் எப்போதும் பிறரை நமது அளவுகோல்களை வைத்தே மதிப்பிடுகிறோம்.  

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு நாம் முகம் கொடுப்பது போல், எதிர்வினை ஆற்றுவது போல், பிறரும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.  

ஒருவர் கற்ற கல்வி, வளர்ந்த சூழ்நிலை, பெற்ற அனுபவங்கள், சந்தித்த சவால்கள், அவை ஏற்படுத்திய அக மாற்றங்கள் இப்படி பலவித கலவைகளால் ஆனதே ஒருவருடைய ஆளுமை.  எனவே ஒருவருடைய ஆளுமையின் வெளிப்பாடு இன்னொருவரைப் போல் இருப்பது சாத்தியமே இல்லை.  இந்தப் பேருண்மையின் வெளிச்சத்தில் நமது எதிர்பார்ப்பு எவ்வளவு நியாயமற்றது என்பது புலப்படும்.

பிறரின் மனநிலையில் இருந்து சிந்தித்து, ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கு அல்லது செயலுக்கு அவர்களுடைய நியாயத்தை அல்லது அவர்களுடைய உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொண்டால் பெரும்பாலான மனித உறவுச் சிக்கல்கள் இல்லாமல் போய்விடும்.

பிறரின் எண்ணத்தை சரியாக புரிந்து கொண்டால் தப்பான அபிப்ராயங்கள் துளிர் விடாது.

குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் இது மிக மிக அவசியம்.  நம்மீது அன்பு கொண்டோரின் பேச்சு அல்லது செய்கை நம் மீதான உண்மையான அக்கறையின், அன்பின் வெளிப்பாடு என்று ஆழமாக நம்பினால், அவை நமக்கு ஒரு தற்காலிக அசௌகரியத்தை கொடுத்தாலும், அங்கு முரண்பாடுகளுக்கு இடம் இருக்காது.  வாழ்க்கை இனிமை மிகுந்ததாக, அன்பு நிறைந்ததாக இருக்கும்.

மார்க் ட்வெய்ன் அவர்களின் கூற்று ஒன்று:

'வாழ்க்கை மிகக் குறுகியது - இங்கு சண்டைகளுக்கோ, மன்னிப்புகளுக்கோ, பொறாமைகளுக்கோ, பழிசுமத்தல்களுக்கோ நேரமில்லை.  அன்பு செலுத்தலுக்கு மட்டுமே நேரமிருக்கிறது; அதுவும் ஒரு கணப்பொழுது நேரமே!'

--------------------------
இந்த நாளும் இனிய நாளாகட்டும்!
என்றும் அன்புடன் / சுப்ரமண்ய செல்வா
(01.04.2023)

கருத்துகள் இல்லை: