திங்கள், 11 பிப்ரவரி, 2019

காப்பியக்கோவுக்கோர் கவிமடல்

காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் 'வாத்தியார் மாப்பிள்ளை காவியம்' நூலை வாசித்து முடித்ததும் அவருக்கு எழுதியனுப்பிய கவிமடல்...
=====================

காப்பியக்கோ யாத்தளித்த - வாத்தியார்
மாப்பிள்ளை காவியமது
மூப்பில்லா  தமிழுக்கொரு - முத்தான
காப்பென்பேன் முழுவுண்மை

கால யந்திரத்தின் மீதேறி
மீள பலநாள் பின்சென்று
ஈழ மண்ணின் கீழ்க்கரையில்
வாழ வைத்த கவி வரிகள்

மருதமுனை யூர் சென்று
தெருக்களிலே நடைபயின்று
திருமணத்தில் பங்கேற்று
திரும்பி வந்த தோருணர்வு

ஆழ் கடலில் மீன் பிடிப்போர்
நீள் வயலில் ஏர் பிடிப்போர்
நூல் நூற்று ஆடை நெய்வோர்
வாழ்க்கையது வரிவடிவில்

அமிழ்து மின்சுவையும் என்று
தமிழு  மிஸ்லாமும் அன்று
இமியளவு மிணைபிரியா கதை
இமையதை ஈரமாக்கும்

வெள்ளந்தி மனிதர்களின்
கள்ளமிலா வாழ்வதனை - புது
வெள்ளம் கொண்டு போனதுவோ
நல்லதுவோ நவின்றுடுவீர்

மெல்லவே மீண்டு மங்கு
உள்ளங்கள் இணைந்தின்று
பள்ளி கோவில் பகுப்பழிய
பள்ளங்கள் விலகாதோ

கருத்துகள் இல்லை: