திங்கள், 11 பிப்ரவரி, 2019

புதிய சுதந்திரம்

பெருசிறு பான்மையென்ற பேதங்கள் களைந்திங்கு
ஒரு நாடு ஒரு மக்கள் ஓருரிமையென்று
உருவாகும் ஓர் நாளின் உதயத்திலென்
திருநாடு அடைந்திடும் மெய்ச் சுதந்திரம்

எண்ணிக்கையினால் தாம் மேலோரெனும் - விஷ
எண்ணத்தை ஊட்டி  ஓரினத்தை
கண்ணுள்ள குருடராக்கும் கயவர் அழியுமோர்
நன்னாளில் என்னாடெய்தும் உண்மைச் சுதந்திரம்

சிம்மவழி வந்தோர்க்கே சொந்தமிந் நாடெனும்
வம்பு மொழி செப்புவோர் வாயடைத்து
எம்மதமும் எம்மொழியும் ஒன்றாகு மொருநாளில்
செம்மையா யுதித்துடும் சீரான சுதந்திரம்

சித்தமதில் காழ்ப்பழித்து  சீர்தூக்கி
புத்தம்போல் சைவ மிஸ்லாம் கிருத்தவமும்
ஒத்ததென இத்தரையில் உணரு மொருநாள்
புத்தம் புதிதாய் பூத்திடும் சுதந்திரம்

என் பாட்டன் என்னப்பன் யானும்தான்
இந்நாட்டில் பிறந்திட்டோம் எனினுமின்னும்
அந்நியனாய் எண்ணும் நிலை இல்லாதாகும்
பொன்னாளில் பூக்கும் புது சுதந்திரம்

ஈதெங்கள் நாடென்று இறுமாப்புடன்
இதயங்கள் இணைந்திங்கு ஒரு குரலில்
விதந்தோதும் பெருநாளின் புலர்பொழுதில்
இதமாக மலர்ந்திடும் புதிதாயொரு சுதந்திரம்

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (10.02.2019)

கருத்துகள் இல்லை: