செவ்வாய், 19 மார்ச், 2019

வாசல் வழி


மூன்று நாட்களுக்கு முந்திய இரவில்
இப்பெரும் பிரபஞ்சத்தில் பிரவேசித்த
பெண் சிசுவின் முதல் வருகை
உதிர்ந்த ஓர் உயிரின்
இறுதிப்பயணத்தின் தொடக்கம்
மணமுடித்த ஜோடி ஒன்றின்
மறுவீட்டு அழைப்பு
முன்ஜாமப் பொழுதொன்றில்
பூனையென வெளியேறும்
இளம்பெண்ணின் படிதாண்டல்
வன்ம வார்த்தைகள் வீசி
விரைந்து கடக்கும்
உறவோன்றின் பிரிவு
அறைந்து சாத்தப்பட்ட அவமானம்
ஊரடங்கிய ஓரிரவில்
உள்நுழையும் கள்வனின் அத்துமீறல்
இப்படியும் இன்ன  பிறவுமாக
எத்தனையோ சம்பவிக்கலாம்
வியர்வை பெருகும் கரங்கள் கொண்டு
தச்சன் உருவாக்கும்
இந்த வாசற்கதவு வழி!

(நன்றி: தினகரன் வாரமஞ்சரி - 17.03.2019)

கருத்துகள் இல்லை: