திங்கள், 4 மார்ச், 2019

இலையாட்டம்

ஒன்றுபோல் நடனமிடுவதில்லை
ஒரு செடியின் எல்லா இலைகளும்
மேலும் கீழும்
வலமும் இடமும்
இடமும் வலமும்
முன்னும் பின்னுமாய்
எல்லா திசைகளிலும்
களிநடனம் புரிகின்றன
ஆம் என்றும்
இல்லை என்றும்
இருக்கலாம் என்றும்
காற்றோடு கலந்துரையாடுகின்றன
காற்றின் ஸ்பரிசத்தில் நாணி
காற்றோடு காதல் செய்து
காற்றோடு கலவி செய்து
களைத்துத் துயில்கின்றன
சில பொழுதுகளில்
எதிர்த்து நின்று தோற்றுப் போய்
காற்று கடந்ததும் தலைநிமிர்கின்றன
காற்றுத் தீண்டாத பொழுதுகளில்
அசைவற்று நிஷ்டையிலிருக்கின்றன
பிரிதொரு நாளில்
காற்றின் துணையோடே
உயிர்த் துறக்கின்றன.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி (03.03.2019)

கருத்துகள் இல்லை: