திங்கள், 4 மார்ச், 2019

இருமை இருப்பு

வாசல்களில் கழற்றி விடப்படும் காலணிகளைப் போல்
வேஷம் கலைந்து வீடடைகிறோம்
வெளியுலக ஆடைகளைந்து
அழுக்கு தீர குளித்து
உண்மை உடை தறிக்கிறோம்
முகமூடிகளைப் பத்திரப்படுத்துகிறோம்

சாதி கடந்தவர்கள் நாம்
எம் வாரிசுகளுக்கு
வாழ்க்கைத்  துணை தேடும் வரை

மதங்களை கடந்து மனிதரை நேசிக்கும்
மகாத்மாக்கள் நாம்
மதங்களின் பெயரால்
மனிதரை மாய்த்தாலும்
மௌனித்தே இருப்போம்

எமக்கில்லை
ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வு
நம் மாடி வீட்டு முல்லைக்கொடி
அயல்வீட்டு ஏழைக் கொம்பை
பற்றிப் படராத வரை

நாட்டுப்பற்றாளர் நாம்
நமது கட்டிலடி கறுப்புப்பணப் பெட்டிகள்
நம்மைக் காட்டிக் கொடுக்காத வரை

தமிழ் நமக்கு உயிர்
நம் பிள்ளைகளை
பன்னாட்டு பள்ளியில் சேர்க்க
பல லட்சம் செலவழிப்போம்
தங்கிலீஷில் பேசுவதே
இங்கிதம் எனக் கொள்வோம்

பெண்மையை போற்றுவோம்
நம் வீட்டுப் பெண்டிர்
தம்மாசைகளை ஆழப்புதைத்து
நம்மிஷ்டம்போல் இருக்கும் வரை

இப்படியாகவும்
இன்னும் பலவாகும்
இருமை இருப்பின்
மறுவடிவங்கள் நாம்

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (03.03.2019)

கருத்துகள் இல்லை: