செவ்வாய், 28 மார்ச், 2023

வளரக் கூடாதா?

 மாற்றத்தைப் பற்றி நேற்று எழுதியிருந்தேன்.  மாற்றத்தை போலவே வளர்ச்சியையும் நிலையானதாக ஆக்கிக் கொண்டால் (When growth becomes constant) மனிதர் வாழ்வு மதிப்பு மிக்கதாக, அர்த்தமுள்ளதாக மாறும்.

மரம் செடி கொடிகள் என அனைத்தும் வளருகின்றன.  மனிதர்கள் வளராமல் இருந்தால் எப்படி?  ஆனால் அவற்றுக்கும் எமக்குமடையே வளர்ச்சியில் வேறுபாடு இருக்கிறது.  தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும்  வளர்ச்சி புறமட்டத்தில் மாத்திரமே சாத்தியம்.

புறமட்டத்தில் மாத்திரமன்றி அகமட்டத்திலும் வளரக்கூடிய வாய்ப்பு ஆற்றலும் மனிதருக்கு மட்டுமே கிட்டியிருக்கும் பெரும் பேறு.  அந்த அக வளர்ச்சியே அல்லது அந்த அக மாற்றமே ஒரு மனிதரை மற்றவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

நாம் எப்போதும் பிறரை முந்தும் போட்டியிலேயே காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் நாம் முந்த வேண்டியது பிறரை அல்ல நம்மை.

கடந்த வருடத்தை, விட கடந்த மாதத்தை விட, கடந்த வாரத்தை விட, நேற்றை விட, ஏன் கடந்த நிமிடத்தை விட இந்த கணத்தில் நாம் எப்படி வளர்ந்து இருக்கிறோம் என்பதிலேயே எமது வாழ்க்கையின் அர்த்தம் தங்கியிருக்கிறது.  

ஒவ்வொரு நாளின் முடிவிலும் இன்று நாம் எதை சாதித்தோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.  அந்த சாதனை மிகச்சிறியதாகக் கூட இருக்கலாம்.  நம்மில் ஏற்பட்டுள்ள மாற்றம் அல்லது வளர்ச்சி அளவில் சிறியதாக இருக்கலாம். ஆனால் வளர்ச்சி ஏதாவது ஒரு வகையில் இருந்தேயாக வேண்டும்.

ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் கூற்று ஒன்று:

"நிறைய பணம் சம்பாதித்து பெரும் செல்வந்தனாக கல்லறைக்கு செல்வதை விட ஒவ்வொரு நாளும் 'இன்று மகத்தான ஒன்றை சாதித்தோம்' என்ற மனநிறையுடன் இரவு உறங்கச் செல்வதுயே நான் விரும்புகிறேன்"

தண்ணீர் தேங்கி இருக்கும் ஏரியை விட ஓடும் நதிக்கே உயிர்ப்பு அதிகம். 

அதுபோல் தொடர்ந்து வளரும் மனிதரின் வாழ்வே உயிர்ப்பு மிக்கதாக, ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சி மிக்கதாக இருக்கும்.

அந்த வளர்ச்சியை எப்படி வசப்படுத்திக் கொள்வது?

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

--------------------------

இந்த நாளும் இனிய நாளாகட்டும்!
என்றும் அன்புடன் / சுப்ரமண்ய செல்வா
(28.03.2023)

கருத்துகள் இல்லை: