வியாழன், 30 மார்ச், 2023

கேள்விகளின் மகத்துவம்

 வளர்ச்சியை வசப்படுத்துவது எப்படி என்று நேற்று சிந்தித்தோம்.

ஆவல் மிக்க மனது தேடல் மிக்க மனிதர்களை உருவாக்குகிறது.  தேடலின் மூலம் வளர்ச்சி வசமாகிறது.

ஆர்வம் மிக்க மனதுக்கு அடிப்படையாய் இருப்பது கேள்விகள். கேள்விகளே ஆவலைத் தூண்டுகின்றன.  கேள்விகளே வளர்ச்சி பயணத்தின் கலங்கரை விளக்கங்கள்.

கற்கால மனிதனை தற்கால மனித நிலைக்கு உயர்த்தியிருப்பது கேள்விகளே.   காடு அதுவாக பற்றியெரிந்த பின் கிடைக்கும் விலங்குகளின் மாமிசம் சுவையாக இருக்கிறதே,  நெருப்பை எப்படி உருவாக்குவது? மீனைப் போல் நீந்தி வெகு தூரம் நீரில் நம்மால் ஏன் பயணிக்க முடியாது? ‌ பறவையைப் போல் எம்மால் ஏன் பறக்க முடியாது?  பகலைப் போல் இரவிலும் வீட்டுக்குள் எப்படி வெளிச்சத்தை கொண்டு வருவது? பல நூறு மைல்களை களைப்பின்றி எப்படி கடப்பது?  இப்படியாக அனைத்து அறிவியல் வளர்ச்சிக்கும் அடிப்படை காரணமாக இருப்பது ஏன்? எப்படி? என்னும் கேள்விகள்.

கிரேக்க மெய்யியலாளர் சாக்ரடீஸ் அவர்களின் கூற்று ஒன்று:

'ஆய்வுக்கு உட்படுத்தப்படாத (நமக்கு நாமே கேள்விகள் கேட்டுக்கொள்ளாத) வாழ்க்கை வாழத் தகுதியற்ற வாழ்க்கை'

கேள்விகள் கேட்பதன் மூலம் மாணவர்களின் அறிவுத்திறனை அதிகரிக்கலாம் என்று அறிந்து அதனை தனது கற்பித்தல் முறையாக நடைமுறைப்படுத்தியவர் பேராசான் சாக்ரடீஸ்.  அது இன்றும் 'Socratic Questioning' என்று அறியப்படுகிறது.

கேள்விகள் மனித வளர்ச்சியின் இன்றியமையாத அங்கம்.  அவை நம்மையும், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தையும் நன்கு புரிந்து கொள்ள வெகுவாக உதவுகின்றன. நாம் எதிர்கொள்ளும் தடைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக முன்னேற அவை நமக்கு கைகொடுக்கின்றன.

நாம் கேட்கும் கேள்விகளே நமது வளர்ச்சியையும், நமது உயர்வையும் தீர்மானிக்கின்றன.  

பிரெஞ்சு அறிவொளி இயக்க எழுத்தாளர் வோல்டயர் அவர்களின் கூற்று ஒன்று:

'ஒரு மனிதரை அவரது பதில்களை காட்டிலும் அவருடைய கேள்விகளைக் கொண்டு மதிப்பிடுங்கள்'

நாம் கேட்கும் கேள்விகள் நமது ஆர்வத்தையும் புதியவற்றை,  கற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற திறந்த மனதையும், வளர வேண்டும் என்கின்ற விருப்பத்தையும் வெளிப்படுத்துகின்றன.   

நாம் முகம் கொடுக்கும் மனிதர்களை, சூழ்நிலைகளை,  அறிந்து கொள்ளும் புதிய விடயங்களை அவற்றின் முக மதிப்பைக் கொண்டு ஏற்றுக் கொள்ளாமல், கேள்வி கேட்பதை நமது தன்னியல்பாக மாற்றிக் கொண்டால் வளர்ச்சி நிச்சயம்.

--------------------------
இந்த நாளும் இனிய நாளாகட்டும்!
என்றும் அன்புடன் / சுப்ரமண்ய செல்வா
(30.03.2023)

கருத்துகள் இல்லை: